அஜய் அங்கு வருவது இதுவே முதல் தடவை. தம்பியின் வளர்ச்சியில் அவனுக்கு சிறிதும் பொறாமை இல்லை. சிறு வயதில் தான் நடந்து கொண்டதை எண்ணி வருந்தி மன்னிப்பும் கேட்டிருக்கிறான். ஆனால் அக்ஷைதான் அவனிடமிருந்து ஒதுங்கி போகிறான். புரிந்துக் கொண்டு அவனே வருவான் என்று அஜய் காத்திருக்க, இன்று மதியின் மூலம் அது நடந்ததில் சந்தோசம்.
ஹோட்டல் தளத்தை சுற்றி காண்பித்த அக்ஷய் மதியோடு தனியாக பேசட்டும் என்று காரியாலய அறைக்குள் நுழைந்து கொள்ள இவர்கள் வாசலில்தான் அமர்ந்து பேசலாயினர்.
"சொல்லுங்க மாமா. முதல்ல இருந்து சொன்னாத்தானே எனக்கு என்ன பண்ண முடியும்னு யோசிக்க தோணும்" மதியழகி பேச்சை ஆரம்பிக்க,
இடது கையின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் தாடையை பிடித்தவாறு சிறிது நேரம் யோசனையில் அமர்ந்திருந்த அஜய் பேச ஆரம்பித்தான்.
"மதி நீயும் இப்போ எங்க குடும்பத்தில் ஒருத்தியாகிட்ட. அதனால உன் கிட்ட மறைக்க கூடாது. அக்ஷய் சொன்னானோ இல்லையோ நான் சொல்லணும். என் மனசுல இருக்குற அனைத்தையும் சொல்லணும்" என்றவன்
"எங்கம்மா எங்கப்பாவுக்கு இரண்டாம் தாரம். அதுவும் மூத்த தாரம் இருக்கும் போதே கர்ப்பமாகி அத காரணம் காட்டி அவங்கள விவாகரத்து பண்ணி எங்கம்மாவை மணந்து கிட்டாங்க"
மதி ஒரு போலீஸ் என்பதால் அவள் இந்த மாதிரி சம்பவங்களை கண்கூடாக கண்டிருக்கிறாள். கள்ளக் காதலால் முதல் மனைவி கொலை. இங்கே கொஞ்சம் வித்தியாசம். மூத்த மனைவிக்கு குழந்தைகள் இல்லை. அதை காரணம் காட்டி அவரை விவாகரத்து செய்து இன்னொருவரை மணந்து இருக்கலாம் அசோக் சாம்ராட். அதை விட்டு விட்டு மனைவி இருக்கும் பொழுதே வேறொரு பெண்ணோடு தொடர்பு
அவருடைய பணம் தான் முக்கியம் என்று சமேலி குழந்தையை சுமந்து அவரை மணந்தது நன்றாக புரிகிறது. மூத்த தாரம் அவ்வளவு இலகுவில் விவாகரத்து கொடுத்து விட்டுட்டாரா? அது மட்டும் மதிக்கு புரியவில்லை.
"பெரியம்மாவை அப்பா மணந்தது வீட்டார் விருப்பம். அவர் இஷ்டமில்லாம மணந்தவங்களோடு அவர் வாழவே இல்ல. அது போல அவங்களும் வேறு ஒருத்தர விரும்பினாங்க, இத பயன் படுத்துக்கிட்டா எங்கம்மா நடுவுல புகுந்துட்டாங்க. சொல்ல போனா பின் வாசல் வழியா உள்ள புகுந்துட்டாங்க" என்றவன் மதியை பார்க்க அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
போலீஸ்காரியல்லவா என்ற எண்ணம் ஒரு நொடி அஜய்யின் மனதில் உதிக்க புன்னகைத்தவன் தொடர்ந்தான். "எங்க வாழ்க்கைல எந்த பிரச்சினையும் இருக்கல அக்ஷய் வரும் வர. எனக்கு பத்து வயசு இருக்கும் பொழுது தான் அக்ஷய் எங்க வீட்டுக்கு வந்தான். அவனுக்கும் அஜித்துக்கும் பத்து மாசம்தான் வித்தியாசம். அப்போ எனக்கு ஒன்னும் புரியல. அம்மாக்கு அவனை பிடிக்கல. அதனாலயே எங்களுக்கும் அவனை பிடிக்கல. அவனை கொடும படுத்த ஆரம்பிச்சோம்" என்றவன் தாங்கள் செய்த அனைத்தையும் விலாவரியாக சொல்லலானான்.
"ஒருநாள் அப்பா பாத்துட்டாரு. அப்பொறம் அக்ஷய அமேரிக்கா அனுப்பி படிக்க வச்சாரு. அப்பொறம் அவனை பேமிலி பங்க்சன்ல தான் சந்திப்பேன். வளர்ந்த பிறகுதான் பெரியம்மா பத்தி தெரிஞ்சி கிட்டேன். அம்மா எப்படி வந்தாங்கனும் புரிஞ்சி கிட்டேன். என் பொறப்பே கேவலமா இருக்கு, இதுல நான் அக்ஷய பேசி இருக்கேனு நினைக்கும் போது நொந்துட்டேன். அவன் கிட்ட பல தடவ மன்னிப்பு கேட்க முயற்சி பண்ணேன். அவன் பேசவே இல்ல.
அக்ஷையோட அம்மா இந்திரா. இந்திராவதி சாதாரண குடும்பத்து பெண். காலேஜ் படிக்கும் பொழுதே அப்பாக்கு அவங்க மேல காதல். இவர் பணக்காரர் என்று சொல்லாமலையே காதலிச்சு இருக்காங்க. அத தெரிஞ்ச பிறகு அவங்க விலகி போய்ட்டாங்கனு கேள்வி பட்டேன்.
போனவங்கள பல வருஷம் கழிச்சு சந்திச்ச அப்பா வலுக்கட்டாயமாக கல்யாணம் பண்ணி இருக்காரு. அக்ஷய் பிறந்த பிறகு அவங்க கேன்சர்ல இறந்துட்டாங்க. இதுதான் நான் திரட்டிய தகவல். எங்கம்மா நடுவுல வராம இருந்திருந்தா அக்ஷய் மட்டும் அப்பாக்கு மகனா இருந்திருப்பான்" என்றவன் பெருமூச்சு விட அறையிலிருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அக்ஷய்க்கு இந்த செய்தி புதிது.