தீண்டல் - 7
“அம்மா செஞ்சதுக்கு நீங்க நியாயப்பத்திரம் வாசிக்கிறீங்களா? மேட் பார் ஈச் அதர் ப்பா...” என்று சில்லாகிக்க,
“கண்ணுபோடாத. உனக்குமே அமையும்...” என சொல்லிவிட்டு குகன் அந்த பேக்கை தூக்கிக்கொண்டு வாசலுக்கு செல்ல சந்நிதியின் முகம் அவனின் அகத்தினுள் ஒளிர்ந்தது.
“அவக்கிட்ட என்ன புடிச்சிருக்குன்னே தெரியலை. அவளை பத்தி எதுவும் தெரியலை. ஆனாலும் அவ வேணும்னு என்னவெல்லாம் ப்ளான் பண்ண வேண்டியதிருக்கு?” என நினைத்துக்கொண்டே நடு ஹாலில் அப்படியே நிற்க இரண்டுமுறை மகனை அழைத்த அம்பிகா அருகில் வந்து அவனை கிள்ளியவர்,
“வீட்டை பத்திரமா பார்த்துக்கோ. காலையில உனக்கு மட்டும் தேவையான பாலை வாங்கிக்கோ. நிறைய வாங்கி வேஸ்ட் ஆகிடும்...” என சொல்லிக்கொண்டே திரும்பியும் பார்க்காமல் செல்ல அவரின் அலம்பலில் இவனின் டென்ஷன் எகிறியது.
“போறதே எனக்காக. இதுல என்னை விட்டுட்டு போறாங்களாம்...” என நொந்துகொண்டவன்,
“என்னை வச்சு செய்ய அம்மாவே போதும்...” என்ற புலம்பலுடன் கதவை பூட்டிவிட்டு வாசல் கூர்க்காவிடம் ஆயிரம் பத்திரங்கள் சொல்லிவிட்டு வேனில் ஏறிக்கொண்டான்.
“வாட் எ கோ இன்சிடேன்ஸ்?...” வசீ சொல்ல சந்தியா முகம் திருப்ப சந்நிதி முறைப்பாய் பார்த்தாள்.
“என்ன இந்த பக்கம்?....”
“கோவிலுக்கு சாமி கும்பிட வந்தோம்...” பதில் சொல்லக்கூடாது என நினைத்தலும் சந்நிதியின் வாய் அவளுக்கு எதிராக செயல்பட்டது.
“கோவிலுக்கு சாமிகும்பிடத்தான் வருவாங்க. இல்லைன்னு யார் சொல்லுவா?...”
“பின்ன ஏன் கேட்டீங்க? பரிகாரம் செய்ய வந்தோம் போதுமா? உங்களால எங்கக்காவை கோவில் கோவிலா கூட்டிட்டு பரிகாரம் செய்யறார் எங்கப்பா...” சந்நிதி சொல்லிவிட சலனமின்றி பார்த்தான் வசீகரன்.
“வசீ வா போகலாம்...” சூர்யா அழைக்க அசையாமல் நின்றவன் இரு பெண்களையும் துளைக்கும் பார்வை பார்த்தான். அவனுக்கு தான் தெரியுமே ஏன் இதை முனீஸ்வரன் செய்கிறார் என்று.
தன்னை கொண்டு அவர் அவரின் பெண்களை துன்பப்படுத்துவது தெரிந்தாலும் அமைதியாக இருந்தவன் இன்று சந்நிதி தன்னை குற்றம் சாட்டவும் கோபம் வந்துவிட்டது.
“இப்ப சந்தோஷமா உங்களுக்கு? போங்க...”
“நீங்க நீங்க அன்னைக்கு என்னை பார்த்தீங்க தானே?...” என கேட்கவும் புன்னகை மீண்டது இவனின் முகத்தில். அடர்ந்த மீசைக்கடியில் பூத்த மெல்லிய சிரிப்போடு,
“ஆமாம் பார்த்தேன்...” என்றான்.
“ஏன் எதுக்கு என்னை பார்த்தீங்க?...”
“எனக்கு க்ரீன் கலர் ரொம்ப பிடிக்கும். அன்னைக்கு நீ போட்ருந்த ட்ரெஸ் ரொம்ப அழகா இருந்தது. சோ பார்த்தேன்....” பளிச்சென அவன் சொல்ல இதை எதிர்பார்த்திராத நிதி என்ன பேசுவதென தெரியாமல் விழிக்க இதழ்கடையில் உதித்த புன்னகையை அடக்கியவன்,
“நீயும் கூட தான் என்னை பார்த்து ஒளிஞ்ச. நான் எதுவும் கேட்கலையே....”
“அது அது நீங்க என்னை பார்த்தது, அதான் பயந்து...”
“சும்மா பார்க்க தானே செஞ்சேன். பக்கத்துல வந்தேனா? பேசினேனா? எதாச்சும் பண்ணினேனா?...”
“ஆங்...” என விழியை அகற்றியவளின் பார்வையில் இவன் தான் விலகிக்கொள்ளவேண்டியதாக இருந்தது.