வலியறிதல்
பொதுவாக வலியறிதல் போர் மேலாண்மை பற்றியதாகவே அறியப்படுகிறது. போர்க்காலத்தில் மட்டுமன்றி போர் இல்லாத காலத்தும் மற்ற துறைகளுக்குமான செயல்களுக்கும் பொருந்துவாதாகவே இவ்வதிகார்த்துப் பாடல்கள் அமைந்துள்ளன.
ஒரு செயலில் முனைப்புடன் ஈடுபட வேண்டுமென்று அறிவுரை பகர்கிறது ஒரு பாடல். வறிதே மனஎழுச்சியின் காரணமாக செயல் தொடங்கி இடையிலே முடிக்க முடியாமல் போவதாக இருக்கக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்கிறது இன்னொரு குறள். தன் உண்மையான வலிமை அறியாமல் தன்னை மிகையாக மதிப்பிட்டு செயலைக் கெடுக்க வேண்டாம்; மயிலிறகே ஆனாலும் மிகையாக ஏற்றினால் பாரவண்டியின் அச்சு முறிந்து போவது போல் போட்டியாளர்கள் மிகையானால் தம் வலி குறைகிறது என்று உணரவேண்டும். -நுனிக்கொம்பில் ஏறியவன் இன்னும் மேலே போக முயலக்கூடாது போல மேற்கொண்ட செயலின் முறிநிலை அறிந்து உகந்த வேளையில் நிறுத்திவிட வேண்டும் எனவும் இவ்வதிகாரத்துப் பாடல்கள் கூறுகின்றன. பொருள்வலி பற்றி நான்கு பாடல்கள் ஆய்கின்றன. கொடுப்பது கூட பொருள்நெறி அறிந்து கொடுக்க வேண்டும்; வருவாய் வரும்வ்ழியின் மேல் ஒருகண் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கவேண்டும்- வரவு மீறிய செலவினங்கள் ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் எல்லாம் இருந்தன போல் தோன்றியன ஒன்றும் இல்லாமல் போய்விட்டதை உணரவேண்டியிருக்கும். ஒப்புரவே ஆனாலும் அளவறிந்து செய்யாவிட்டால் அந்த ஒப்புரவுக்கும் கூட வளம் இல்லாமல் போய்விடும். இவை இவாதிகாரம் தரும் செய்திகள்.