அதிகார விளக்கம் :-
வினைத்திட்பம்
வினைத்திட்பமாவது வினை செய்யும்பொழுது திண்ணியராகிச் செய்யவேண்டும் என்பதைச் சொல்வது. ஒருவர் மேற்கொண்ட தொழிலின் மீது உறுதியான பிடிப்பு உண்டானால் அது வினைத்திட்பம் ஆகிறது. மன உறுதியுடன் தொழிலில் ஈடுபட்டால்தான் அதைச் செப்பமுறச் செய்து முடிக்க இயலும். ஒரு செயலைக் கையில் எடுத்துக்கொண்டபின் எது வந்தாலும் அதனை விடாது இறுதிவரை சென்று செய்து முடிக்கவேண்டும். திண்மை இல்லாமல் செயலை மேற்கொண்டால் இடையூறுகளும் தோல்விகளும் துன்பங்களும் வரும்போது எடுத்துக்கொண்ட பணிகளைக் கைவிட்டு விடுவர். அல்லது ஆற்றாமை காரணமாகச் சோம்பலின் வயப்படுவர். மனத்தளர்ச்சியும், உடல் சோம்பலும் எத்தகைய பெருமுயற்சியையும் முறியடிக்கும் ஆற்றலைப் பெற்று இருப்பதால் அவ்விரண்டும் வினையைப் பற்றாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்; வினையில் விட்டகலாப்பற்று கொண்டு மனத்திட்பத்துடன் மெய்ம்முயற்சியையும் இணைத்து வினையாற்றினால் அரிய செயல்களையும் எளிதில் நிறைவேற்றிக் காட்ட முடியும். மிகப்பெரிய இடையூறுகள் நேரும்போது அவற்றை விலக்க வினைத்திட்பமுடையோரையே எண்ணி நாடுவர். இறுதியில் பலருக்கு நன்மை பயக்கும் செயலை துன்பங்களைத் தாங்கிக்கொண்டு உறுதியுடன் செய்யவேண்டும். ஆராய்ந்து ஒரு தொழிலை ஏற்றுக் கொண்டவர் முதலிலிருந்து முடிவுவரை ஏற்படும் குறிக்கீடுகள், இடையீடுகள், தடுமாற்றங்கள் கண்டு கலங்காது-அசையாத மன உறுதியுடையவராய்ச் செயற்பட்டால் 'எண்ணியவாறே எண்ணியதை எய்துதல்' இயலும். வேறுபல திண்மைகள் ஒருவர் கொண்டிருந்தாலும் வினைத்திண்மை உள்ளவர்களையே இவ்வுலகம் ஏற்கும்.
'செயல் திட்பம்' என்ற பொருளைத் தரும் வினைத்திட்பம் என்ற சொல் குறளில் மட்டுமே அமைந்துள்ள சொல்லாகும் என்பர்.