அதிகார விளக்கம் :-
ஊழ்
உலக வாழ்வில் பல நிகழ்வுகள் காரணம் தெரியாமலே நடக்கின்றன; ஒன்றை நினைத்துச் செய்தால், அதுவன்றி வேறொன்று விளைவதும், அவ்வொன்றே விளையாது போவதும், முற்றிலும் நினையாததொன்று வந்து நேர்ப்படுவதும் பிறவும் நாம் அவ்வப்பொழுது உணர்வனவே. காரணம் புலப்படாது நிகழ்ந்த நிகழ்ச்சிகளாலும் இன்பமும் துன்பமும் பயனாய் விளைகின்றன. ஒரு செயலுக்கு ஏதுவாகத் தொல்காப்பியர் முதலிய சான்றோர் வினை, செய்வது, செயப்படும் பொருள், இடம், காலம், கருவி, நோக்கம், பயன் என எண்வகையான காரணங்களை கண்டிருந்தனர். இவை மூலமும் மேலே கூறிய நிகழ்ச்சிகளுக்கும் விளக்கம் பெற முடியவில்லை. அவை காரணம் புலப்படாவகையில் நிகழ்ந்துவரக் கண்ட முன்னோர், புலப்படாத அக் காரணத்தை அறியும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டனர். இன்றைய தலைமுறையினரும் ஈடுபடுகின்றனர். நாளையும் ஈடுபடுவர். ஊழுக்குப் 'உலகத்தியற்கை' (373) என்றும் பெயர் உண்டு; அது ஓர் ஒழுங்குக்கு உட்பட்டுத்தான் உருப்பெறுகின்றது. ஊழின் தோற்றத்துக்குக் காரணம் பலப்பல. எனினும், அதனைக் கணிப்பது நமக்கு எளிதன்று. இடத்தானும் காலத்தானும் அரசாலும் சமூகத்தானும் சுற்றுப்புறமக்களாலும் வரும் புறநிலைப் பாங்கனைத்தும், முடிவில் -ஊழாய் மாறி நிற்குமது மக்கள் கணிப்பிற்கு அப்பாற்பட்டது. நமது கணிப்பு தவறும்போதும் காரணம் புலப்படாதபோதும் 'தெய்வச் செயல்' என்று அமைதி கொள்கிறோம். இதுதான் ஊழின் விளையாட்டு!
மாந்தர் வாழ்வியலில் நிகழ்பவற்றுக்குத் தெளிவான காரணம் சொல்ல முடியவில்லையென்றால் முந்தைய பிறவிகளில் நிகழ்ந்தவற்றைக் காரணமாக்குவது; நம்மால் வெற்றிகரமான முயற்சி என்று நம்பப்பட்டவை விளக்கமுடியாத வகையில் தோல்வியில் முடிவது; நாம் தோல்வியில் முடியும் என்று நினைத்தது எதிர்பாராமல் வெற்றியடைவது;
இவைபோன்ற நிகழ்வுகளுக்கான காரணங்களை விளக்க இயலாதபோது 'கர்மா' கோட்பாடு சொல்லப்படுகிறது.
உயிர்கள் தமது செயல்களின் பயனை அடைந்து அனுபவிக்கும்படி செய்யும் நியதிக்கு வினைப்பயன் எனப் பெயரிட்டனர் சமயச்சார்புடையோர். வினையிலிருந்து விடுதலை பெறாத உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும்; அப்படிப் பிறக்கும்போது முன் பிறப்பில் செய்த வினைகளும் அதற்கு முன்னுள்ள பிறவிகளில் செய்து சேர்ந்துள்ள வினைகளும் அந்த உயிரைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன; அதனால் அந்த வினைகளுக்குத் தக்கபடி இந்தப் பிறப்பில் இன்பதுன்பங்கள் அமைகின்றன. ஊழ் என்பது, ஒரு நிழல், அவனையே பற்றி நிற்பது போல, அவனவன் செய்த நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் அவனவனையே பற்றி நிற்கச் செய்வதாகிய முறை. இவை சமயவாதிகள் தரும் விளக்கங்கள்.
இக்காலச் சிந்தனையாளர்கள் ஊழுக்கு உலகச்சூழல், உலகமுறை, உலக இயல்பு எனப் பெயரிட்டுப் புது விளக்கம் தருகின்றனர்.
வள்ளுவரின் ஊழ்க் கொள்கையில் முற்பிறப்பு, பழவினை, துறக்க உலகம் இவைபற்றிய குறிப்புகள் சிறிதளவும் காணப்படவில்லை, அதிகாரத்துக் குறள் எதிலும் இத்தகைய கருத்துக்கு எந்தவொரு குறிப்புச் சொற்கூட இல்லை. வினைக்கொள்கைக்கும் ஊழ் என்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதை நாம் முதலில் மனதில் இருத்த வேண்டும். ஏனெனில், இவை இரண்டும் ஒன்றெனக் கருதி விளக்கப்படுதலும் விளங்கிக் கொள்ளுதலும் பலகாலமாக நிகழ்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஊழ் என்பதுடன் வினை என்பதையும் சேர்த்து ஊழ்வினை என்று இன்று இயல்பாக வழங்கப்பட்டாலும் ஊழ் என்பதும் வினை என்பதும் வேறுவேறானவை. 'ஊழ்வினை' என்ற சொல் குறளில் எங்கும் இடம் பெறவில்லை.
எவ்வாறே ஆயினும் எல்லோரும் ஒப்புக் கொள்வது ஊழின் வல்லமை பெரியது; அதை மக்கள் இகழாகாது என்பதே.
ஊழினும் வல்லமை பொருந்தியது உண்டா என்று வினா எழுப்பி அதன் வன்மையைப் வியக்க வைக்கிறார் வள்ளுவர்.