மேலும் இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் அன்று அவிரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிகாலையே வீடு பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது தான் குளித்துவிட்டு வந்த எழிலன் முதலில் அவிரனை தயார் படுத்த தொடங்கினான்.
குழந்தைக்கு வேஷ்டி சட்டையை அணிவித்து கொண்டிருந்த எழிலை நெருங்கிய அலர் "இந்தாங்க மாமா" என்று அவிரனுடைய செயின், பிரேஸ்லெட்டை அவனிடம் அளிக்க அதுநேரம் வரை பிடித்து வைத்திருந்த தந்தையிடம் இருந்து நழுவியன் மீண்டும் மெத்தையில் குதிக்க தொடங்க அவனை பிடித்து நிறுத்தி அதை அணிவிப்பதர்க்குள் எழிலுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. "போதும்ப்பா விடுங்க" என்று அவனிடம் இருந்து ஓடிய அவிரன் தேடி சென்றது தன் தாயை தான்.
"கண்ணா ஓடாத பார்த்து போ" என்றவன் கதவை அடைத்து விட்டு தானும் உடை மாற்ற தொடங்கினான்.
அங்கு பூஜையறையில் பூஜைக்கான பொருட்களை சரி பார்த்து கொண்டிருந்தவளை நெருங்கிய அவிரன் அவள் கழுத்தை கட்டி கொண்டு, "அம்மா என்னோட கிப்ட் எங்க" என்று கேட்க அவனை முன்னே இழுத்து அவன் உச்சியில் முத்தமிட்டவள் அவனுக்காக வாங்கி வைத்திருந்த கிப்ட்டை கொடுத்து "ஹாப்பி பர்த்டே அப்பு" என்றிட,
அதை வாங்காமல் தாயையே அழுத்தமாக பார்த்து கொண்டிருந்தவன் அடுத்த கணமே அலரின் வயிறை கட்டிக்கொண்டு "ம்மா நீங்க சொன்னதை மறந்துட்டீங்களா..??" என்று கேட்க,
அவளோ புரியாமல் "என்ன சொன்னேன்..??" என்று கேட்க,
இப்போது அழுத்தமாக அவள் வயிற்றை முட்டியவன் இரு கரங்களையும் அவள் வயிற்றில் பதித்தவாறு நிமிர்ந்து அன்னையிடம், "என்னோட பர்த்டேக்கு சாமி உங்க வயித்துல பாப்பா வச்சிடுவாருன்னு சொன்னீங்களேம்மா" என்று எதிர்பார்ப்பும் ஏக்கமும் சரி விகிதத்தில் கலந்த குரலில் கேட்டவன் அவள் வயிற்றை தடவி பார்த்து கொண்டே, "வச்சிட்டாராம்மா..???" என்று என்னை ஏமாற்றி விடாதே என்பதான கலக்கத்துடன் கேட்க,
மகனின் கலங்கிய குரலை கேட்ட தாயின் நெஞ்சம் அவனினும் பெரிதாய் விண்டு போக உடனே மகனை இழுத்து தன் வயிற்றோடு இறுக அணைத்து கொண்டவள் விழிகள் செந்நீரை கண்ணீராக உகுக்க உணர்வுகளின் அழுத்தத்தில் பேச்சற்று போனாள். மகனின் வேண்டுதல் நிறைவேற எத்தனை எத்தனை வலி, வேதனை, போராட்டம் என்று கடந்து வந்த நாட்களை எண்ணி பார்த்தவளுக்கு மனம் மிகவும் பாரமாகி போனது.
ஆம் சென்ற வாரமே அலர் கருத்தரித்திருப்பதை எழிலும் அவளும் உறுதி செய்திருந்தாலும் இன்னும் யாருக்கும் சொல்லவில்லை, தங்கையின் வரவிற்காக காத்திருக்கும் மகனின் பிறந்த நாளன்று அதை கூற வேண்டியே அமைதி காத்திருந்தாள். இப்போது அவன் அதை கேட்கவும் உணர்வின் மிகுதியில் பேச்சுக்கு பதில் அவளின் கண்ணீர் மகனின் கேள்விக்கு பதிலாகி போனது ஆனால் ஐந்து வயது பாலகனுக்கு எவ்வாறு அதன் அர்த்தம் புரியும்..!!!
உடை மாற்றி வெளியில் வந்த எழில் இருவரின் நிலை கண்டு நெருங்க அவிரனோ மீண்டும் அவளிடம், "சொல்லுங்கம்மா..??? வச்சிட்டாரா..?? என்று கேட்கவும் அவன் உயரத்திற்கு குனிந்து முகம் முழுக்க முத்தம் பதித்தவள் கண்ணீரினூடே 'ஆம்' என்பதாக தலை அசைத்து அவனை இறுக கட்டிக்கொண்டு நிற்க மனைவியின் கண்ணீரில் எழிலின் விழிகளும் ஒரு கணம் வலி கொண்டாலும் தன்னை தேற்றியவனாக அவிரனை தூக்கி முத்தமிட்டவன், "ஆமா கண்ணா சாமி உன்னோட விஷ் நிறைவேத்திட்டாரு என்று கூறவும்,
அவிரனின் முகத்தில் கோடி சூரிய பிரகாசம், இதழ் கொள்ளா புன்னகையும் "நிஜமாவாப்பா" என்று கேட்க
"ஆமாடா நிஜமா..!!" என்றவன் அவன் பிஞ்சு கரத்தில் தன் கரத்தை வைத்து "ப்ராமிஸ், சாமி அம்மாவோட வயித்துல பாப்பா வச்சிட்டாரு சீக்கிரமே இந்த அண்ணனை பார்க்க உன்னோட குட்டி தங்கச்சி வந்துடுவாங்க" என்று கூறவும் உற்சாக மிகுதியில் தந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்தவன் 'தேங்க்ஸ்ம்மா' என்று அலருக்கும் முத்தம் வைக்க,
அலரின் பார்வை நன்றி பெருக்குடன் அகனவனை தான் அலசிக்கொண்டிருந்தது. எங்கே குழந்தையின் வரவை பற்றி கூறும்போது அவனிடம் துளி பதட்டமோ அச்சமோ தென்படுகிறதா என்று..!! இல்லை கடவுள் புண்ணியத்தில் அங்கு அவள் எதிர்பார்த்த எதுவும் இல்லை அவிரனின் வரவின் போது அவன் கொண்டிருந்த அதே பூரிப்பும், மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும் மட்டுமே.., அதை கண்டவளின் மனம் கொண்ட மட்டற்ற மகிழ்ச்சியில் தந்தை மகன் இருவருக்கும் முத்தம் வைத்தவள்,
"இப்படியே பேசிட்டு இருந்தா எப்போ பாப்பாவை கொடுத்த சாமிக்கு நாம தேங்க்ஸ் சொல்றது..???" என்றவள் கடிகாரத்தை பார்த்தவாறே நேரம் ஆகுது பாருங்க என்று கூற அடுத்த சில நிமிடங்களில் மூவரும் கோவிலுக்கு கிளம்பி இருந்தனர்.
****
கோவில் வாசலில் வண்டியை நிறுத்தவுமே அவர்களுக்காக காத்திருந்த கதிர் "ஹாப்பி பர்த்டே ஹீரோ, ட்ரெஸ் சூப்பரா இருக்கே" என்றவாறே அவிரனை தூக்கி கொள்ள...,
"மாமா உங்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லட்டா" என்ற அவிரன் குதுகலத்துடன் தங்கையின் வரவை கதிரிடம் தம்பட்டம் அடிக்க தொடங்கி இருந்தான்.
"முதல்ல பூஜை முடிச்சிட்டு வந்துடலாம் வாங்க" என்று அவர்களுடன் கோவிலுக்குள் சென்றவன் பூஜை முடிந்து பிரகாரத்தை வலம் வந்த பின் மண்டபத்தில் அமர,
எதுக்கு மாமா இவனை வர சொன்னீங்க..??
"அவிரனை கூட்டிட்டு போக"
'எதுக்கு'
"என்ன கேள்விடி இது ..??? பிறந்த நாள் அதுவுமா குழந்தைக்கு பெரியவங்க ஆசிர்வாதம் வேண்டாமா..?? நீயும் அங்க போக மாட்டேன்னு சொல்லிட்ட அதான் இவனை வர சொன்னேன்" என்றவன் கதிரிடம்,
"நீ கூட்டிட்டு போய் வாடா" என்று கூற,
'சரி மாமா' என்று அவிரனுடன் கதிர் கிளம்பி இருந்தான்.
கதிர் கிளம்பிய பின்பும் இன்னுமே அவன் பதிலில் எழுந்த பிரமிப்பு மாறாமல் ஒருவித சிலிர்ப்புடன் அகனெழிலனை பின்தொடர்ந்தாள் அலர்விழி.
வழியில் காலை உணவை முடித்து கொண்டவர்கள் மதிய சமையலுக்கான பொருட்களுடன் வீடு திரும்பி இருந்தனர். ஆம் இன்று குழந்தையின் பிறந்த தினத்தை முன்னிட்டு இருவருமே விடுப்பு எடுத்திருந்தனர். அவிரன் பிறந்த இத்தனை வருடத்தில் அவர்கள் கொண்டிருக்கும் வழக்கம் இது, வருடத்திற்கு ஒருமுறை வரும் அவனுக்கு பிரத்யேகமான இத்தினத்தில் எத்தனை முக்கியமான வேலை இருந்தாலும் அனைத்தையும் ஒதுக்கி விட்டு குழந்தைக்கு அன்றைய நாளின் இனிமையை கூட்டும் விதமாக இருவருமே அவனுடன் இருந்து இந்நாளை சிறப்பிப்பர்.
வீட்டிற்குள் நுழையவுமே நேராக சமையலறைக்கு சென்றவன் அவிரனுக்கு பிடித்த மஷ்ரூம் பிரியாணி செய்ய ஆயத்தமாக.., என்றும் போல் இன்றும் அகனெழிலனின் அகத்தின் எழிலில் சொக்கி போனவளாக அவனை பின்தொடர்ந்தவள் அங்கிருந்த மேடையில் அமர்ந்து இமைகொட்டாமல் அணு அணுவாக தன்னவனை ரசிக்க தொடங்கி ஒருகட்டத்தில் விழிவழியே அவனை சிறுகசிறுக சிறை பிடித்து தன் மனப்பெட்டகத்தில் கிடைப்பதற்க்கரியா பொக்கிஷமாய் நிறைக்க தொடங்கியிருந்தாள்.
தேவையான பொருட்களை எடுத்து வைத்து விட்டு மும்முரமாக வெங்காயத்தை வெட்டி கொண்டிருந்தவனுக்கு அப்போதுதான் தன்னுடன் உள்ளே நுழைந்தவளிடம் இருந்து அரவம் அற்று போனதை உணர்ந்து திரும்பி அவளை பார்க்க,
ஒரு நொடி மூச்சடைத்து போனான் அகனெழிலன்...!!! ஆம் அங்கே அலரின் விழிகளில் வழிந்த ரசனையும், காதலும், எல்லையில்லா பெருமிதமும் போட்டிபோட்டு கொண்டு அவனை திணறடிக்க அவன் அதரங்களிலும் இப்போது அவளுக்கு நிகரான மென்னகை.
அவள் பார்வை வீச்சில் கொள்ளை போகும் மனதை இழுத்து பிடித்தவன் தலையை பலமாக குலுக்கி இதழ்களை குவித்து மூச்சை வெளியிட்டு மீண்டும் வெங்காயத்தை நறுக்கியவாறே "உத்து உத்து பார்த்தே என்னை கரைச்சிடுவ போல நிஜமாவே வெட்க வெட்கமா வருது, போதும்டி" என்றான்
எங்கே இமைக்கும் நொடி கூட அவனை தரிசிக்க தடையாகி போகுமோ என்று எண்ணியவளாக இமை சிமிட்டாது அவனை அணுஅணுவாக தன்னுள் நிரப்பி கொண்டிருந்தவள், "எனக்கு போதலையே மாமா..!! ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்னு புதுசா பார்க்கிறேன்" என்று ஆச்சர்ய குரலில் கூறியவள், "இன்னும் எனக்கே தெரியாத எத்தனை நீ உனக்குள்ள இருக்காங்க" என்று கேட்க,
அவள் அவ்வாறு கேட்கவும் எழிலின் தன் செய்கையை நிறுத்தியவன், "அப்படியா புதுசாவா தெரியுறேன்..??" என்று புருவம் நெறிபட கத்தியை கீழே வைத்தவன் அடுத்த கணமே அவளை நெருங்கி, "நான் என்னைக்குமே எதையும் உன்கிட்ட மறைச்சதில்லையேடி, என்னை தான் உனக்கு முழுசா தெரியுமே அப்புறமும் எப்படி இந்த கேள்வி கேட்கிற..??? என்று குறும்புடன் அவள் நெற்றியை முட்ட,
அவன் கேள்வியில் முகம் சிவந்தவள் 'ச்சீய் வெட்கம் கெட்ட மாமா நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்டா' என்று சிணுங்க,
"நானும் சீரியஸா தான்டி கேட்கிறேன் கல்யாணம் ஆகி ஆறு வருஷமாகியும் இன்னும் என் பொண்டாட்டிக்கு என்னை தெரியாதுன்னு சொல்றா..?? புதுசா இருக்கேன்னு வேற, அது எவ்ளோஓஒ சீரியஸான விஷயம் தெரியுமா...??? என்று மீசை துடிக்க புருவம் ஏற்றி இறக்கிட,
வாயடைத்து போனவள் ஒரு நொடி என்ன பேசுவது என்று புரியாமல் அலமலந்து அவனை பார்க்க,
அந்நொடியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவளை காற்று புகாதவாறு இறுக கட்டிக்கொண்டு அவள் செவி மடலில் தன் அதரங்களை பொருத்தியவன், "இந்த மாதிரி சந்தேகத்தை எல்லாம் வளர விடறது ரொம்ப தப்புடி செல்லம்" என்றவனின் அதரங்கள் செல்லமாக மடலை கடித்து பின் மெல்ல நகர்ந்து அவள் கன்னத்தில் அழுத்தமாக புதைந்திட அங்கு தன் முதல் அச்சாரத்தை பதித்தவன் "வா இப்பவே தீர்த்து வைக்கிறேன்" என்றிட,
அவன் கூற்றில் விழி விரித்தவள் சட்டென அவனிடம் இருந்து நழுவி கீழே இறங்கி இருகரங்களையும் இடையில் பதித்து, "டேய் மாமா நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசிட்டு இருக்க..??" என்று அரும்பாடுபட்டு அவனை முறைக்க முயல,
"சரியா தான்டி பேசுறேன், இன்னமும் என் பொண்டாட்டிக்கு என்னை தெரியலைன்னு சொல்றது எனக்கு எவ்ளோ பெரிய அவமானம் தெரியுமா..?? இந்த அவமானத்தோட இனியும் என்னால நடமாட முடியாது அதனால நீ வா..!!: என்று அவள் கையை பிடித்து இழுக்க அவன் மார்பில் வந்து விழுந்தவள் உடனே அவன் வாயை பொத்தி,
"போதும் போதும் முடியலை... எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றவள் அவன் மார்பில் முகம் புதைத்து இறுக கட்டிக்கொண்டு "எனக்கு உன்னை நல்லாவே தெரியும் போதுமா..?? என்று மெல்லிய குரலில் கூற,
அட்டகாசமாக சிரித்தவன் "அப்படி வழிக்கு வாடி குள்ளச்சி" என்று அவளை ஒருமுறை இறுக அணைத்து விடுவித்தவன் கேரட்டை கழுவி அவளிடம் கொடுத்துவிட்டு மீண்டும் சமையலை தொடர்ந்தவன் இப்போது விளையாட்டை கைவிட்டு , 'சரி சொல்லு என்ன தெரியனும்' என்றிட,
கேரட்டை மென்றவாறே, "எங்க அப்பா பேசினது எவ்ளோ பெரிய தப்புன்னு எனக்கு தெரியும் அப்படி இருந்தும் எப்படி மாமா உன்னால.., என்று அவனை பார்த்தவள், நிஜமாவே உனக்கு அவர் மேல கோபம் இல்லையா..?? அவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கனும்ன்னு எனக்கே தோணலை ஆனா நீ எப்படி அவங்களுக்காகவும் யோசிக்கிற" என்றிட,
அவள் பேசி முடிக்கவுமே, "ரொம்ப சிம்பிள்டி, அன்னைக்கு நடந்த பிரச்சனையை நான் உங்க அப்பாவோட நிலையில் இருந்து பார்த்தேன் அதான் அவரை அவரோட தப்பை மன்னிக்க முடிந்தது, ஆனா இன்னும் அது ஒரு ஓரத்துல உறுத்திட்டு தான் இருக்கு இல்லைன்னு சொல்ல மாட்டேன்" என்றான்.
"அது எப்படி மாமா அப்பாவாவே இருந்தாலும் அவர் நம்ம விஷயத்தை பொதுவில் பேசினது பெரிய தப்பு" என்றிட,
"நிச்சயமா அவர் பேசின விதம் தப்பு ஆனா அவர் பேசின விஷயமே தப்பில்லையே..!! கொஞ்சம் யோசிச்சி பார்த்தா அவர் பக்க நியாயமும் புரிபடும்..",
உங்களை தப்பா பேசினதுல என்ன மாமா நியாயம் இருந்திட போகுது..??
அமுலு நடந்த பிரச்சனையில நம்ம பக்கத்து நியாயத்தை மட்டுமே பார்த்த நாம அவர் பக்கத்து நியாயத்தை பார்க்க தவறிட்டோம். அவிரன் பிறந்தப்போ என்ன நடந்ததுன்னு நமக்கு தெரியும் ஆனா அவருக்கு தெரியாதே..!! நம்ம பட்ட கஷ்டம் பத்தி எதுவுமே தெரியாத அவர் நம்மை சரியா புரிஞ்சிருக்கனும்ன்னு நாம எதிர்பார்க்கிறது எந்த விதத்துல நியாயம்..?? அன்னைக்கு கடையில் அவிரன் நடந்துகிட்ட விதம், ஏக்கத்தோட பேசினது, அடம் பிடிச்சது எல்லாம் சேர்ந்து தானே சொல்லபோனா நம்ம பையனுக்கான உங்கப்பாவோட பாசம் தானே நம்ம மேல ஆதங்கமா, கோபமா உருமாறி இருக்கு. அதுல என்ன தப்பிருக்கு..??? என்று கேட்க,
அலரோ பதிலின்றி அவனை பார்த்திருந்தாள்.
இங்க பல உறவுகளோட சிக்கலுக்கு காரணம், ஒரு பிரச்சனையோ புரிதலின்மையோ வந்துட்டா யாருமே அடுத்தவரோட நிலையில் இருந்து யோசிக்க, அதை உணர தயாரா இல்லை, "அப்படி என்ன என்னை விடன்னு..??" யோசிக்க விடாம அவங்க ஈகோ வந்து முன்னாடி நின்னுடுது. இங்க உங்க அப்பா பிரச்சனையும் அதேதான் "அப்படி என்ன என் பொண்ணுக்கு என்னை விட அவன் முக்கியமா போயிட்டான்" என்ற ஈகோ தான் எல்லாத்துக்கும் அடிப்படை காரணம் அதோட சேர்த்து எங்க நீ அவர் கைவிட்டு போயிடுவியோ என்ற பாதுகாப்பின்மையும் ஒரு காரணம் என்றவன் குக்கரின் மூடியை போட்டுவிட்டு அவளருகே வந்து அமர்ந்தான்.
"எப்படி மாமா சொல்றீங்க..??"
"ஏன்னா இன்னமும் உங்கப்பா உன்னை விட்டு கொடுக்க தயாரா இல்லை. வழக்கமா இது அம்மாங்க பசங்க மேல வச்சி இருக்க கூடிய அதிகப்படியான பற்று அதாவது பொசஸிவ்னஸ் ஆனா இங்க உங்கப்பாக்கு உன் மேல அது அதிகமாவே இருக்கு, அது தான் எதையும் சிந்திக்க விடாம தடுக்குது நிதர்சனத்தை ஏத்துக்க மறுக்குது அதுவே என்மேல கோபமா உருமாருது" என்றவன்,
"ஆனா உங்க அப்பாக்கு ஒரு விஷயம் புரியலடி"
'என்ன' என்பதாக அலர் அவன் முகம் பார்க்க,
"அப்பா என்ற ஸ்தானத்துக்கு ஒரு எல்லை இருக்கு, அவரால என்னைக்குமே உனக்கு நல்ல அப்பாவா மட்டும் தான் இருக்க முடியும் ஆனா என்னோட ஸ்தானத்துக்கு எல்லையே இல்லை என்னால கணவனா, தோழனா, உன்னோட எல்லாமுமா அதாவது அப்பாவாவும் இருக்க முடியும். இது அவருக்கு புரியலை, புரிஞ்சாலும் ஏத்துக்க தயாரா இல்லை அன்னைக்கு அவர் குழந்தை பத்தி பேசினப்போ நீ என்னை பயத்தோட பார்த்த பார்வையும் பேசின பேச்சும் அவருக்கு கோபத்தை இன்னும் அதிகபடுத்தி இருக்கும் அதுவே என் பொண்ணு என்னை விட இன்னொருத்தனை பெருசுன்னு கொண்டடுறதா..??" என்ற ஈகோ முன்னாடி வந்து அவரை கண்மூடித்தனமா பேச வச்சிடுச்சி.
"எப்படி மாமா எங்கப்பா மனசை படிச்ச மாதிரி சொல்றீங்க..??"
அவளை தோளோடு தோள் சேர்த்தவன், "ஹேய் உனக்கு முன்னாடி இருந்து அவரை பார்த்துட்டு இருக்கிறவன்டி நான்..!!" என்றவனின் முகத்தில் இளம் முறுவல் படர தொடர்ந்தவன், "அதனால உன்ன விட அவரை அவரோட நல்ல மனசை பத்தி எனக்கு நல்லா தெரியும் இன்னிவரையிலுமே அவரோட பலவீனமே குடும்பம், கவுரவம், கண்மூடித்தனமான பாசம், அப்புறம் முன்கோபம் இதெல்லாம் தான், அன்னைக்கு அப்படி பேசுவோம்ன்னு அவரே எதிர்பார்க்கலை அது கோபத்துல வந்த வார்த்தையே தவிர அதுல எந்த உள்நோக்கமும் இல்லை..., அதான் தப்பை உணர்ந்து உடனே என்னை கூப்பிட்டாரு"
"எனக்கும் அது புரிஞ்சது மாமா ஆனா என்ன காரணம் சொன்னாலும் அவர் பேசினது தப்பு என்னால ஏத்துக்க முடியலை..!!"
தனக்கான அவளின் வேதனையை உணர்ந்தவன், "அமுலு உனக்கும் தெரியுமேடி கோபம் இருக்க இடத்துல குணம் இருக்கும்ன்னு", யாரும் சும்மா சொல்லிடலை அதுக்கு உதாரணமா உங்கப்பாவையும் உன்னையும் பார்த்துட்டு இருக்கவன், உண்மையா இருக்கிறவங்க சட்டுன்னு கோபப்படுவாங்க ஆனா அவங்களை நாம தாராளமா நம்பலாம் ஏன்னா அவங்களோட பேச்சுல உள்நோக்கம் இருக்காது.., பல நேரங்கள் அந்த கோபம் எதிர்புறம் இருக்கிறவங்க மேல இருக்கிற அன்பு, அக்கறையின் வெளிப்பாடாதான் இருக்கும். அவங்களுக்கு நம்பினவங்களுக்கு துரோகம் செய்ய தெரியாது, யாரையும் முதுகுல குத்த மாட்டாங்க, பேச்சுல நாணயம் இருக்கும் அவங்க மேல நாம வச்சிருக்க நம்பிக்கைக்காக எதையும் இழப்பாங்களே தவிர நம்முடைய நம்பிக்கையை இழப்பதை விரும்ப மாட்டாங்க. இங்க உங்க அப்பாவும் அப்படிதான்..!!"
"என்ன ஒன்னும் கோபம் வந்துட்டா என்ன ஏதுன்னு ஆராயவோ பொறுமையா அதை விசாரிக்கவோ தவறிடுறாரு அதனாலேயே பல பிரச்சனைகள்" என்று கூற தந்தையை பற்றிய அவன் புரிதலில் சிலிர்த்தவள் அவனை இறுக கட்டிக்கொண்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து 'லவ் யு மாமா' என்றிட,
மெல்லிய புன்னகையுடன் சிறு தலையசைப்பில் அதை ஏற்றவன் குக்கரை நிறுத்துவதற்காக இறங்க,
தன் வார்த்தைகளுக்கு அவனிடம் இருந்து எவ்வித பிரதிபலிப்பும் இல்லாது போக செல்லும் அவனையே பார்த்து கொண்டிருந்தவள், "ஏன் நான் சொன்னதுக்கு நீ திரும்பி சொல்லமாட்டியா..??" என்று கேட்க,
ஒரு நொடி நடை தடைபட அவளை திரும்பி பார்த்தவன், "சொன்னால் தான் காதலா...???"
இதழ் சுழித்தவள், "ஏன் சொன்னா முத்து உதிர்ந்திடுமா..???"
அடுப்பை அணைத்தவன், அவளை நெருங்கி, "சொல்லி புரியவைக்கிறதுக்கு பேர் காதலா..??" என்று கேட்க,
"அது , அப் அப்படி இல்லை, ஆனா ஆனா .. என்றவளுக்கு அப்போது தான் நினைவு வர, "டேய் மாமா நீ இதுவரை என்கிட்டே ஐ லவ் யு சொன்னதே இல்லையேடா, அன்னைக்குகூட உன்னை கல்யாணம் பண்ணிப்பேனா இல்லையான்னு தானே கேட்ட" என்று வியப்புடன் கேட்க,,
"ஆம் என்பதாக அவன் இமை மூடி திறக்கவும்,
ஏன்...??
"எனக்கு வார்த்தையில பெருசா நம்பிக்கை இல்லை"
"ஏன்..??"
"நீ என்னை எவ்ளோ லவ் பண்ற..??" என்று திருப்பி அவளை கேட்க,
"எவ்ளோன்னு கேட்டா..??? என்னோட எல்லாமே நீதான் மாமா ஆனா எனக்கு அளவு சொல்ல தெரியலை, அளவுக்கு அதிகமா, இல்லல்ல அளவே இல்லை மாமா"
"அதேதான்..!! ஏன்னா காதலோட சுகம் சொல்லில் அடங்காதது..!! எனக்கு அதை சொல்றதை விட செயல்களால் உணர்த்த தான் பிடிக்கும்..., என்னை பொறுத்தவரை காதல்ன்னா நம்பிக்கை..!!! உனக்காக எப்பவும், என்னைக்கும், எந்த நிலையிலும் உடன் இருப்பேன் என்ற நம்பிக்கையை கொடுக்குறது தான் காதல்ன்னு நம்புறவன்" என்று கூற இந்த நிமிடம் வரை அவன் காதலை உணர்ந்து அனுபவித்து கொண்டிருப்பவளுக்கு அல்லவா தெரியும் அவன் வார்த்தைகள் எத்தனை நிஜம் என்று..!!
அது மட்டுமில்லைடி "இங்க சொல்லப்படாத காதலை விட உணரப்படாத காதலும் உணர்த்த முனையாத காதலும் தான் அதிகமா தோல்வி அடையுது" என்று கூற அவன் பார்வையை அலரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.
அவன் கழுத்தில் கரம் கோர்த்து அவன் விழியோடு விழி சேர்த்தவள், ஆனா எனக்கெல்லாம் சொன்னாதான் திருப்தி கிடைக்கும் 'ஐ லவ் யு மாமா' என்று சொல்லால் அவள் உணர்த்த அவளை தன்னோடு நெருக்கிய எழிலன் அவள் நெற்றியோடு முட்டியவனின் பார்வை முதலில் அவளை கொள்ளை கொள்ள அடுத்து கரங்கள் அதை தொடர என்று அடுத்தடுத்து தன் அதிரடியால் அவளுக்கு தன் காதலை உணர்வு பூர்வமாக உணர்த்தியிருந்தான்.