Rudraprarthana
Well-Known Member
..
Last edited:
Superஅகனலர் – 28
அவிரன் மெல்ல மெல்ல ஐந்தாம் நாள் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப, அன்று அவனை பரிசோதித்த குழந்தைகள் நல மருத்துவரும்... நான்கு நாட்களாக இவர்களின் அரண்டு போயிருந்த முகத்தை பார்த்துக்கொண்டிருப்பவராயிற்றே..!! அதிலும் பல நேரங்களில் எதிர்படும் எழிலின் ஜீவனற்ற விழிகளும் சோர்ந்த முகமும் அவர் கண்ணில் பட பெற்றோராய் அவர்களின் பரிதவிப்பை நன்கு உணர்ந்தவர் இருவரிடமும் குழந்தைகளுக்கு இப்பருவத்தில் இது போல நடப்பது சகஜமான ஒன்று, கவலை கொள்ள தேவை இல்லை,என்று கூறி இன்னும் இரு வாரங்களுக்கு அவனுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளையும் கையாளும் முறையையும் விளக்கி அவிரனை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் எனவும் தான் அனைவரின் முகத்திலும் ஒளி பிறந்தது.
வீடு வந்து சேர்ந்த பின்பும் அலர் எழில் இருவரின் முகமும் மேலும் கலங்கி தெளியாதிருப்பதை கண்ட வளர்மதியும் நீலாவும் சென்னையிலேயே தங்கிவிட மற்றவர்கள் ஊருக்கு திரும்பினர்.
வீடு திரும்பிய சுடருக்கு, தங்கள் வீட்டின் முதல் வாரிசு அள்ளி அரவணைக்க பாட்டியும் இல்லாமல் சீராட்டி தாலாட்ட வேண்டிய அத்தையும் இல்லாமல் அல்லாடுவதை கண்டவளுக்கு மனம் நிலை கொள்ளாது தவித்தது. அனைத்திற்கும் மேலாக தம்பி மற்றும் அவன் மனைவியின் அரண்டிருந்த முகங்களே அவள் தூக்கம் பறிபோக போதுமானதாக இருந்தது.
தன் குழந்தைகளுக்கும் இது போன்ற சூழல் ஏற்பட்டிருந்தாலும் எவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவு சென்றதில்லை ஆராம்பகட்டதிலேயே மாமனார், நாத்தனார் அம்மா என்று அனைவரும் உடன் இருக்க எளிதாய் கடந்து விட்டவளுக்கு, ஒரு தாயாய் அலரின் நிலையும் ஏதும் செய்ய முடியா தன் நிலையையும் எண்ணி தத்தளித்தாள்.
அதிலும் மருத்துவமனையில் பிஞ்சுக்கரங்களில் வென்ப்லான் ஏற்றப்பட்டு ஓயாது அழுது கொண்டிருந்த அவிரனின் முகமே சுடரின் நினைவடுக்குகளை ஆக்கிரமித்து, அவள் அழுகையை பெருக்க மாமியாரிடம் ஒரு மூச்சு அழுது விட்டாள்.
சுடரின் கண்ணீரை கண்ட லக்ஷ்மி “என்னமா குழந்தை தான் சரி ஆகிட்டானே அப்புறம் ஏன் இந்த அழுகை” என்று வினவ, அலரின் நிலையை அவருக்கு விளக்கியவளுக்கு எவ்வாறு உதவ என்று தான் புரியவில்லை.
அருகே இருந்தாலாவது ஏதேனும் செய்ய முடியும் என்று நினைத்தவள் அதையே மாமியாரிடமும் உரைக்க அவரோ , “ஏன் இப்போ மட்டும் என்ன..? முடியாதா” என்று அவளை பார்க்க,
என்ன சொல்றிங்க அத்தை புரியல என்று சுடர் அவர் முகம் பார்க்க,
“அலர் கைக்குழந்தையை வச்சிக்கிட்டு தனியே எதை தான் பார்க்க முடியும். அதிலும் இது முதல் குழந்தை வேறு அவளும் சின்ன பொண்ணு தானே , என்னதான் பலநேரம் போனிலும் சில நேரம் நேரிலும் சென்று நீங்க வழி நடத்தினாலும் குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. எல்லா நேரமும் ஒன்று போல் இருக்காது, பல நேரங்களில் குழந்தையை எப்படி கையால்வதுன்னு புரியாம திண்டாடும் நிலை வரும்.. எப்போதும் கூட யாராவது இருந்தா நல்லது, அதனால நீ போய் அலர் கூட இரு, குழந்தை நல்லா வளர்ந்த அப்புறம் திரும்பினா போதும்” என்று லக்ஷ்மி கூறிட,
சுடரோ இது சாத்தியமா..!! என்று நம்ப முடியாமல் அவரை பார்க்க, “நிஜமா தான்மா சொல்றேன், உன்னோட தவிப்பு எனக்கு நல்லாவே புரியுது. தேவையான நேர்த்தில் உதவாத சொந்தம் எல்லாம் என்ன உறவு..!! உன் தம்பி கிட்ட உனக்கு உரிமை மட்டும் இல்லை கடமையும் இருக்கு” என்றார்.
சுடருக்கோ தன் மனதில் இருந்ததை அவர் வார்த்தையாக கோர்க்க அதில் மகிழ்ச்சி தான் என்றாலும், தான் இல்லாமல் இவர்கள் எப்படி இருப்பார்கள் அதிலும் குழந்தைகள் என்று அவள் யோசிக்க...
அவள் எண்ண ஓட்டத்தை சரியே கணித்த லக்ஷ்மி, “அம்மாடி நீ இந்த வீட்டுக்கு வர முன்ன நான்தான் எல்லாமே கவனிச்சிட்டு இருந்தேன், நீ வந்தபிறகு கொஞ்சம் ஒய்வு கிடைச்சது. இப்போ என்ன ஒரு ரெண்டு மூணு வருஷம் தானே நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன், இப்போ நீ கிளம்பு குழந்தையை வளர்த்து கொடுத்துட்டு வா எங்களை பார்க்கனும்ன்னா வார கடைசி எல்லோரும் இங்க வாங்க” என்றார்.
இத்தகைய புரிதலுடனான மாமியாரை பெற்றதை எண்ணி உருகியவள் அவரை அணைத்து தன் நன்றியை வெளிப்படுத்தினாள்.
அன்று இரவு பாலனிடம் அனைத்தையும் பகிர்ந்தவள் “அத்தை சொல்ற மாதிரி செய்தாலும் குழந்தைங்க நான் இல்லாம எப்படி இருப்பாங்க.. உங்களால சமாளிக்க முடியுமா..? இது சரிப்படுமா?? நீங்க என்ன சொல்றிங்க” என்று அவன் முடிவை அறிய எதிர்பார்த்து காத்திருக்க,
சில நொடிகள் அமைதியாய் இருந்த பாலனோ எழிலுக்கு அழைத்து “குழந்தைகளுக்கு அங்கு நல்ல பள்ளியை தேர்வு செய்யுமாறு கூற, தாவி அவனை அணைத்து கொண்டவள் கண்ணீருடன் பாலனின் முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள்”.
**
அடுத்த வாரமே சுடர் தன் பிள்ளைகளுடன் எழிலின் வீட்டிற்கு செல்ல இவர்களின் வரவை எதிர்பார்க்காத அலர் எழிலின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அலர் 'நன்றி' எனும் ஒற்றை வார்த்தையை உரைக்க இயலாது, பெருமகிழ்ச்சியில் விம்மியவள் சுடரை கட்டிக்கொண்டாள்.
சுடரின் வரவில் அலரின் பொறுப்பை பகிரப்பட, ஆசுவாசமாய் உணர்ந்தாள்.
அவிரன் நடக்க துவங்கியதும் இருவரில் ஒருவர் எந்நேரமும் அவனுடன் இருந்தனர். பெரும்பாலும் அவிரன் அலரையே தேட, சுடரும் அவளை அவனுடனே இருக்குமாறு கூறி வீட்டு நிர்வாகத்தை, சமையலை பார்த்து கொண்டார்.
சுடர் வருவதற்கு முன் அவிரனை கவனிப்பதில் நேரத்திற்கு சமைக்க கூட முடியாமல் தவித்து, பல வேளைகள் வெளியில் இருந்து உணவு வரவழைத்து உண்டவர்கள்.. இப்போது சத்தான ஆகாரம் எடுக்க துவங்க அவிரனுக்கு இருந்த சிறு சிறு உபாதைகள் கூட முழுதாய் நீங்கியது.
அனைத்திற்கும் மேலாக தனித்து குழந்தை வளர்க்கும் சூழல் மாற்றத்தாலும் தூக்கமின்மையாலும் ஏற்பட்ட மனச்சோர்வில் இருந்து அலரும் மெல்ல மெல்ல விடுபட துவங்கினாள்.
சர்வேஷும் வேதாவும் பள்ளி சென்று வந்ததும் அவிரனுடன் விளையாடுவதையும் அவன் மழலை பேச்சில் கலந்து கொள்வதையும் வழக்கமாக்கி கொண்டனர். பத்து வயதான வேதா அலருக்கு உற்ற துணையாகி போனாள்.. குழந்தைக்கு தேவையான சிறு சிறு செயல்களை செய்பவள் அலருடனே ஒட்டி திரிவாள்.
அவிரன் உறங்கும், விளையாடும் சமயங்களில் வேதாவிற்கு புரியாத பாடங்களை சொல்லி கொடுப்பது அவளுக்கு வித விதமான ஹேர் டூ செய்வது மெஹந்தி இடுவது என்று இருவரிடையே அழகான பந்தம் உருவானது. குழந்தைகள் இருவருக்கும் சுடரின் சமையலை விட அலரின் சமையலே அலாதி விருப்பமாகி போனது, அவளும் இவர்களுக்காகவே யூ டியுப் பார்த்து புது வகைகளை முயற்சிப்பாள்.
சர்வேஷ் மற்றும் வேதாவின் அருகாமையில் தான் அலரை விட்டு விலகி இருப்பான் அவிரன். அதுபோன்ற சமயங்களில் சர்வேஷ், தான் அன்று பள்ளியில் கற்ற புது வார்த்தைகளை படங்கள் கொண்டு அவனிடம் பகிர.. அவிரனின் கவனம் புத்தகத்தில் இருக்கும் தருணத்தை பயன்படுத்தி வேதாவே அவனுக்கு உணவை ஊட்டி முடித்து விடுவாள்.
அலர் வெளியில் செல்லும் சமயங்களில் அவிரனுக்கு சர்வேஷ் உடனிருந்தால் போதும், மாமா என்று அவனையே சுற்றி வருபவனுக்கு அவன் மீதான யானை சவாரி என்றால் கொள்ளை ப்ரியம்.
கடந்த ஐந்து மாதங்களாக இருந்த நிலை மாறி இங்கே இவர்களின் வரவால் ஏற்பட்ட மாற்றம் அலரை உயிர்ப்போடும் புத்துணர்வோடும் வைத்துக்கொண்டது.
*
நினைவுகளில் இருந்து மீண்ட எழில் அலரின் கலங்கி சிவந்திருந்த விழிகளை காணவும், தன் மருமகளுக்காக ஒவ்வொன்றையும் ரசித்து சமைத்தவளை தன் வார்த்தைகள் நிச்சயம் காயபடுத்தி இருக்கும் என்று அறிந்தவன்
“ஏய் என்னடி இது..! என்று அவள் கண்ணீரை துடைத்தவாறு தொடர்ந்தவன், "நீ சுட்டுகிட்டு வலியில் துடிச்சதை பார்க்கவும் கட்டுபடுத்தமுடியாமல் ஏதோ பேசிட்டேன்.
இதுக்கு எல்லாம் போய் கண்கலங்கிகிட்டு” என்றவன் அவள் கண்ணீர் நின்றாலும் வேதனை சுமந்த விழிகள் அவனை இம்சிக்க, 'சாரிடி' ப்ளீஸ் என்றான்.
அவன் வார்த்தையில் தன்னிலை மீண்டவள் மெல்லிய குரலில் “மாமா உனக்கே நல்லா தெரியும் கடமைக்காக செய்யணுமேன்னு ஹோட்டல்ல வாங்கிட்டு போறதுல எனக்கு உடன்பாடு இல்லை, செய்ற எதையும் ஆத்மார்த்தமா முழுமனசோட செய்யணும் இல்லை செய்யவே கூடாது. அவளுக்கு என்னோட சமையல் ரொம்ப பிடிக்கும் அப்படி இருக்கும் போது அதை கூட செய்ய முடியாமல் எப்படி சொல்லுங்க” என்றவள் தொடர்ந்து,
“நமக்கு பிடிச்சவங்களுக்கு, அவங்களுக்காக நாம நேரம் ஒதுக்கு செய்யிற எல்லாமே ஸ்பெஷல் தான், அது கடையில் இருந்து வாங்கும் பொருட்கள் கொடுத்துடாது” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.
என்னதான் அலர் பலநேரங்களில் யதார்த்ததுடன் பயனிப்பவளானாலும் உறவுகள் என்று வரும்போது அவள் ஒவ்வொன்றையும் உணர்வுபூர்வமாய் அணுகுபவள் என்பதை அவனும் நன்கு அறிந்தவன் தான். ஆனால் அவள் முன் தன் சிந்தனை சிதறடிக்கப்பட்டு அவள் மட்டுமே பிரதானமாகி போவதை அவனும் எங்கனம் தான் தடுக்க..!!! இதோ இப்போதும் அத்தகைய சூழலில் சிக்கிக்கொண்டு தன்னவளின் கண்ணீருக்கு தானே காரணமாகி போனோமே என்று தன்னையே நிந்தித்து கொண்டிருக்கிறான்,
அவளது குரலே அவள் இன்னும் சமாதானம் ஆகாததை உணர்த்த “குள்ளச்சி இதுல இவ்ளோ விஷயம் இருக்கிறது எனக்கு தெரியாதுடி நான் அப்படி சொல்லி இருக்க கூடாது, தப்பு தான்” என்று அவள் கரம் பற்றவும் அதிலிருந்த காயத்தை கண்டவள்,
“நான் சமைக்க ஆரம்பிச்ச புதுசுல படாத காயத்தை விடவா இது அதிகம்” என்பதாய் அவனை ஒரு பார்வை பார்க்க, அவனோ மறுபடியும் “நான் பேசினதை மறந்துடுடி என்று அவள் முகத்தை கரங்களில் ஏந்தியவன் என்ன நினைத்தானோ மறுநொடியே 'சாரிடி' என்றவாறு தோப்புகரணம் போட அவன் செய்கையில் அவள் முகம் மென்னகையில் மலர்ந்தது.
அவர்கள் சாலையின் ஒதுக்கு புறத்தில் ஆள் அரவமற்ற இடத்தில் இருந்தாலும் அவன் செயலை தடுத்து நிறுத்தி “மாமா என்ன பண்ற யாராவது பார்க்கபோறாங்க” என்றவளின் முகத்தில் புன்னகையை காணவும் தான் வண்டியை எடுத்தான்.
சிறிது தூரம் செல்லவும் மறுபடியும் “மாமா” என்று அலர் அழைக்க பாதையில் பதிந்திருந்தவனின் கவனம் அவள் அழைப்பில் சிதற கண்ணாடியில் அவள் முகம் பார்த்து என்ன என்பதாய் புருவம் உயர்த்திட “பூவும் பழமும் வாங்கணும் மறந்துடீங்களா..?” என்றாள்.
உடனே அருகே இருந்த கடையில் தேவையானதை வாங்கியதும் வண்டியை கிளப்பினான்.
****
இவர்களுக்காக வாயிலிலேயே காத்திருந்த சுடரும் பாலனும் வரவேற்க, பரஸ்பர நல விசாரிப்புகள் முடிய "அண்ணி வேதா எங்க" என்று அலர் தேட,
அவளை மாடி வளைவில் இருந்த அறையில் உட்கார வைத்திருப்பதாக கூற அங்கே வந்த சர்வேஷ் “வாங்க மாமி நான் அக்காகிட்ட கூட்டிட்டு போறேன்” என்று அவளை அழைத்து சென்றான்.
அவர்களை பின்தொடர்ந்து எழிலும் செல்ல, உள்ளிருந்த வேதவியாசினி இவர்களை கண்டதும் ஓடி வந்து அலரை கட்டிக்கொண்டு, “ஏன் மாமி இவ்ளோ லேட், உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா” என்றவளின் முகம் தன்னை கண்டதும் மகிழ்ந்து பின்பு வாட...
இல்லடா எனக்கு முக்கியமான கேஸ் ஹியரிங் தவிர்க்கவே முடியாத சூழ்நிலை, ரெண்டு நாள் எங்கேயும் நகர முடியலை சரி எல்லாம் முடிச்சிட்டு கிளம்பலாம்ன்னு உங்க மாமாவை கூப்பிட்டா அவர் ட்ரான்ஸ்பர் ஆர்டருடன் வந்து நிக்கிறார். இன்னும் நாலு நாளில் ஊருக்கு கிளம்புறோம் அப்போ போகலாம்ன்னு சொல்லிட்டார் எனவும்,
எழிலிடம் சென்ற வேதா “உண்மையாவா மாமா இனி நீங்க எல்லோரும் இங்கேதான் இருக்க போறிங்களா..” என்று கேட்க அவளின் குதுகலம் அவனையும் தொற்றிக்கொள்ள ‘ஆமாடா இனி எப்போ வேனும்னாலும் நீ உன் மாமி கூடவே சுத்தலாம்’ என்றான்.
இதை கேட்ட வேதாவின் முகத்தில் தோன்றிய பிரகாசமே, அவளின் ஈடிணையில்லா மகிழ்வை பறைசாற்ற.. அலரின் கண்ணீர் அர்த்தமானதே என்றுதான் எழிலுக்கு தோன்றியது.
‘ஆமாடா இனி எப்போதும் நாங்க இங்கே தான் இருப்போம். நீ நினைச்ச போது எங்களை எல்லாம் பார்க்கலாம்’ என்ற அலர் ‘முதலில் உட்கார்’ என்று அமரவைத்து சர்வேஷை தேட, அவன் அங்கு இல்லை.
வேதாவின் முன் இலை விரித்து ஒவ்வொன்றையும் பரிமாற, பருவம் அடைந்தாலும் இன்னும் குழந்தை மனம் மாறாது இருந்தவளின் விழிகள் பதார்த்தங்களை கண்டதும் ஆச்சரியத்தில் விரிந்தது.
தனக்கு பிடித்த அனைத்தும் இருப்பதை கண்டவள் ஆசையாக உண்ண தொடங்கி ஒரு கணத்தில் நிறுத்தி “செம்மயா இருக்கு மாமி, அதிலும் பன்னீர் கிரேவி வேற லெவல்” அம்மா செஞ்சி கொடுத்தாலும் உங்க டேஸ்ட் வரல என்று ஒவ்வொன்றையும் ரசித்து பாராட்டி உண்டாள். அலர் இதை எழிலுக்கு சுட்டி காண்பிக்க அவனும் அதை புரிந்தவனாய் கண் மூடித் திறந்தான்.
வேதா உண்டு முடிக்க அவளுடன் பேசியவாறு அவளுக்கு தலை பின்னி பூச்சூடி அவள் இருக்கரங்களிலும் மருதாணி இட்டு முடிக்க அவிரனின் குரல் கேட்கவும் வெளியே வந்தாள்.
அப்போது வெளியே சென்றிருந்த சுடரின் மாமியாரும் மாமனாரும் உள்ளே நுழைய அவர்களிடம் பேசிவிட்டு எழில் பாலனுடன் வெளியே கிளம்பி சென்றான். அலர் சுடரை தேடி சென்று 'அண்ணி எல்லா அரேஞ்மெண்டும் முடிஞ்சதா' என்று கேட்க,
"ஹ்ம்ம் ஓரளவுக்கு முடிஞ்சது", என்று செக் லிஸ்ட்டை பார்த்தவாறு கூறியவள் மீதமிருந்த வேலைகளை குறிப்பெடுத்து இருவரும் செய்து முடிக்க மாலை ஆகிற்று.
மாலை எழில் வந்ததும் இவர்கள் கிளம்ப தயாராயிருக்க, சர்வேஷும் வேதாவும் அவர்களை விடுவதாய் இல்லை. அங்கேயே தங்க சொல்லி அடம்பிடிக்க,
"சரி நைட் மாமியும் அவியும் உங்ககூட தான் இருப்பாங்க ஆனா இப்போ ஒரு சின்ன வேலை, அதை முடிச்சிட்டு வந்திடுறோம்" என்றவன் இருவரையும் அழைத்துக்கொண்டு தாயம்மாளிடம் சென்றான்.
இவர்களின் வரவை கண்ட தாயம்மாளுக்கு உள்ளம் குளிர்ந்து போனது, அதிலும் அவிரன் ஓடி வந்து தன்னை அணைத்து கொண்டதும் அவர் கண்களில் நீர் பெருக்கெடுத்து.
‘எப்படி இருக்கிற ஆயா’ என்ற எழில் அவருக்கு விருப்பமான சீவல் கட்டையும் பழங்களையும் அவரிடம் நீட்ட, அவனை உச்சி முகர்ந்து அணைத்து கொண்டவர்..
நான் நல்லா இருக்கேன் ராசா, எனக்கென குறை இருந்திட போகுது என்றவரின் விழிகள் ஏக்கமாய் அலரை வருடி பின் கேள்வியாய் எழிலை நோக்க, அம்மூதாட்டியின் விழிகளில் வழிந்த எதிர்பார்ப்பை எதிர்கொள்ள முடியாமல் வெளியே சென்றுவிட்டான்.
இதை பார்த்துகொண்டிருந்த அலர்விழி தாயம்மாளின் கரங்களை பற்றி வருடியவாறு ‘ப்ச் விடு அப்பத்தா எதுவும் கேட்டு கஷ்டபடுத்தாத’ என்று வெளியே சென்றவனையே பார்த்துகொண்டு கூற,
மறுத்து ஏதோ கூற வந்த தாயம்மாளின் வாயின் மீது கரம் வைத்து தடுத்தவள், “வேண்டாம் அப்பத்தா, போதும்.. உன் பேரன் மனசு மாறும் வரைக்கும் பொறுத்திருப்போம்” என்றாள்.
சிறிது நேரத்திலே வளர்மதியும் கதிருடன் அங்கு வர, அவர்களிடம் வீட்டு சாவி பெற்றுக்கொண்டு கிளம்பினர்.
வீட்டிற்கு சென்று அவர்கள் இருவருக்கும் தேவையான உடைகளை எடுத்து கொண்டு சுடரின் வீட்டில் அவர்களை விட்டுவிட்டு வந்தவனை தாயம்மாளின் பார்வை துரத்த எதிலும் கவனம் செலுத்த முடியாது போனான்.
---------------------------------------------------------------------
இரவு பத்து மணியளவில் எழிலுக்கு அழைத்த அலர் ‘சாப்பிட்டிங்களா’ என்க,
“ஹ்ம்ம் நீங்க” என்றவனிடம்,
நாங்க இப்போதான் சாப்பிட்டோம் என்றவள் அண்ணி கூப்பிட கூப்பிட வேண்டாம்ன்னு சொல்லிட்டு கிளம்பிடிங்க, ஏன்..? எனவும்,
ஒண்ணுமில்லைடி அப்போ தோணலை அதான் வந்துட்டேன். இங்க வரவும் மாமி கதிர்கிட்ட கொடுத்து விட்டுடாங்க, எப்படி வேஸ்ட் பண்ண அதான் என்றவன், சரி அதை விடு காலைல ஒன்பது மணிக்கு ரெடியா இருங்க, நான் வரேன் என்றவாறே வீடியோ காலுக்கு மாற,
“இங்க எவ்ளோ வேலை இருக்கு... விட்டுட்டு வர சொன்னா எப்படி” என்ற அவள் முறைப்பை கண்டவன்,
“அடியேய் சொல்றதை முழுசாய் சொல்ல விடுடி... வேதாவுக்கு புடவை, நகை, சீர் வாங்கணுமே அதுக்கு தான் ரெடியா இரு” என்றான்.
“ஒஹ்ஹ்ஹ்ஹ” என்று விழி விரித்து, தலை சாய்த்து, உதடு குவித்து அவள் இழுக்க, அலரவளில் செவ்விதழின் வரிகளில் கவி எழுதிடும் வேகம் எழுந்தாலும் இருவருக்குமான தூரத்தை நிந்தித்தவன், அவள் குரலில் வழிந்த எள்ளலை உணர்ந்து ‘என்னடி நக்கலா..?’ என்றிட.
‘ச்சேச்சே நான் அப்படி எல்ல்ல்லாம் நினைப்பேனா “இதேதுடா என்னைக்கும் இல்லாம திடிர்ன்னு நம்ம புருஷனுக்கு இவ்ளோ கடமை உணர்வான்னு வியக்குறேன்டா” என்றவள் இதழ்கள் புன்னகையில் துடிக்க,
'ஐ ஸ்வேர்.. இங்க பார் புல்லரிக்குது' என்றாள் இடக்கரத்தை அவன் பார்வையில் படுமாறு நீட்டி.
பின்னே அவள் ஒரு வாரமாக சென்னையில் இவை அனைத்தையும் வாங்கலாம் என்று முடிவு செய்திருக்க, செய்ய முடியாத நிலையில் கொண்டு நிறுத்தியவன் அல்லவா, அதனால் தான் அலர் இவனாக இதை முன்னெடுக்கட்டும் என்று அமைதி காத்தாள்.
“ஏய் அடங்குடி, ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க என்று பற்களுக்கிடையில் வார்த்தையை துப்பியவன், அதெல்லாம் எனக்கு நிறையவே இருக்கு, சூழ்நிலை அப்படி அதுக்காக, அதை வச்சே ஓட்டுவியா” என்றான்.
ஆம் எப்போதும் எதிலும் கவனமுடன் இருப்பவன், இம்முறை பணியிட மாற்றம் காரணமாக அவனால் எதையும் முன்னெடுக்க முடியாது போக அலர் அதை செய்து கொண்டிருக்கிறாள். அவன் கூற்றின் உண்மை உணர்ந்தவள் விளையாட்டை கைவிட்டு சரி ‘வேலை முடிஞ்சதா’ என்றாள்.
ஓரளவுக்கு முடிச்சிட்டேன் என்றவன் “அவி எங்கடி காணோம், தூங்கிட்டானா..?” என்று அவள் அருகே இல்லாத மகனை கேட்க..
அவள் அவிரன் சர்வேஷுடன் தொலைகாட்சியில் மூழ்கி இருப்பதை காண்பிக்க, ரொம்ப நேரம் பார்க்க விடாத என்றவன் காலைல ரெடியா இருங்க, என்றான்.
ஹ்ம்ம் சரி, என்றவள் அவிரனை அழைத்து வந்து உறங்க வைத்து, அடுத்த நாள் காலை அவனுக்காக காத்து நின்றாள்.
ஹாய் செல்லகுட்டீஸ்...
இதோ 'நெஞ்சமெல்லாம் அலரே !!' 27 & 28 அத்தியாயம் பதித்துவிட்டேன் படித்து கருத்துக்ககளை பகிர்ந்து கொள்ளுங்கள். 1 - 24 வரையிலான முதல் பாகம் புதன் காலை நீக்கப்படும் இதுவரை படிக்காதவர்கள் படித்து முடித்து விடுங்கள் நாட்கள் நீட்டிக்க பட மாட்டாது.
நன்றிகள்
ருத்ரபிரார்த்தனா