dhanuja senthilkumar
Well-Known Member
களவு கொண்டனாடி தில்லையிலே
சில வருடங்களுக்குப் பிறகு...................
நாச்சியின் வீடு பரப்பாக இருந்தது வீட்டின் வாயிலில் அவ்வீட்டுப் பெண்கள் நின்று நாச்சியின் நினைவாக அவரது பெயர் பொறிக்கப் பட்ட சில்வர் டப்பாக்களை விநியோகித்துக் கொண்டு இருந்தனர்.மற்ற பெண்கள் அனைவரும் உள்ளே வேலை செய்து கொண்டு இருந்தனர்.
இடுப்பில் மூன்று வயதே ஆன ஆண் குழந்தைக்கு உணவூட்டிக் கொண்டு இருந்தாள், அம்பலத்தான் – சிவகாமியின் தவப்புதல்வி நாச்சியம்மை. பேத்திக்கு பாட்டியின் பெயர் என்பது வழமையில் உள்ளதால், பெரிய நாச்சியின் பெயரையே சூட்டி விட்டார்கள்.
அம்பலத்தானின் உடல்வாகு கொண்டு சிவகாமியின் நிறத்தைப் பெற்று நாச்சியின் துணிவு துணிவை ஏந்தி நின்றாள் பதின் வயதை நெருங்கிக் கொண்டு இருக்கும் துடுக்கான சின்ன நாச்சி.
இப்பெண் அடுத்தச் சரித்திரம் படைப்பாள் என்று எண்ணி தனது தலைமுறைக்கு வித்திட்டு, கடமையை முடித்துக் கொண்டார் போலும் பெரியநாச்சி.
ஆம், நூறு வயதை பூர்த்திச் செய்துவிட்டு தனது வாழ்க்கை பயணத்தை இனிதே முடித்துக் கொண்டு சிவனடி சேர்ந்து விட்டார் நாச்சி., இன்று காலையில் தான் அனைத்துக் காரியங்களும் முடிந்தது.
வீடே உறவினர்களால் நிறைந்து இருக்க, பெரியவர்கள் ஆளாய்ப் பறந்து வேலைகள் செய்யச் சுப்பு – வாசுகியின் மகனது வயித்துப் பாட்டைக் கவனித்தாள், இன்னொரு அன்னையான சின்ன நாச்சி பொறுப்பில் இரு பெண்களையும் கொண்டு போலும்.
ஏதோ ஒரு வேலையாக வெளியில் வந்த அம்பலமும், சுப்புவும் சின்ன நாச்சியைப் பார்த்து ஓர் நிமிடம் அசந்து நின்றனர் தாயின் விம்பம் அல்லவா அவள்.
அம்பலத்தான்,“சின்னப் பொண்ணு உங்க அம்மை எங்கன போனாக! அம்புட்டு சனமும் உண்டாச்சு. அவுக வந்தாகனா, வூட்டு ஆளுக சாப்பிட வேண்டியது தான்.”
“அப்பா, நான் அம்புட்டுத் தூரம் சொல்லிப்புட்டுதேன் வந்தேன்.ஆச்சி அறையவிட்டு வரமாட்டேன்னு இருக்காக என்ன செய்ய!”
“உங்க அம்மைய இன்னும் என்ன சொல்லி நான் சமாளிக்க? சரி பார்த்திக்கிடுறேன் தம்பிக்கு வெரசா ஊட்டிடு வாக”என்று திரும்பிவரை நோக்கி, வேகமாக வந்தார் மீனம்மாள்.
“அண்ணே! என் பொறுமையை ரொம்பச் சோதிக்கிறாக! அண்ணி.”
“விடுமா.நீ நம்ப வூட்டு ஆளுங்கள உட்காரவை. அடுத்த பந்தி போட்டுக் கிடலாம்.”
“சரிண்ணே..”என்றவரும் சிவகாமியை எண்ணி புலம்பிக் கொண்டே சென்றார்.
“என்ன பொண்ணு இவுக. யாருக்கு தான் சோகமில்லை!” என்றவர் தனது அண்ணையை எண்ணி வேலை கண்ணீர் பெறுக, தன்னை சமாளித்து கொண்டு வேலையைக் கவனித்தார்.
நாச்சி பெற்ற செல்வங்கள் அனைத்தும் நாச்சியை மனதில் தக்க வைத்து அவரது இறப்பை கடக்க முயல.
சிவகாமி அதனைச் செய்ய முடியாமல், மறுகி நின்றாள்.தனது உடலில் உள்ள அனைத்து சக்தியையும் நாச்சியுடனே சென்று விட்டது போல் பிரம்மை இப்பெண்ணுக்கு.
சிவகாமி தாய் தந்தை இறப்புக்குக் கூட மனம் வருந்தி நின்றாளே தவிர, மறுகி நிற்கவில்லை. ஆனால் நாச்சியின் இறப்பு....
நாச்சியின் அறையில் உள்ள அவரது புகைப்படத்தின் கீழ் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டு இருந்தாள், பெண்.பக்கத்தில் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள்,வாசுகி எண்ணம் முழுவதும் நாச்சியின் சொல்லே.
சுப்பு வாசுகிக்கு ஆண் வாரிசு தான் அன்று அவர் வாக்கு பலித்து விட்டது.. கண் கொண்டு பார்த்து, கை கொண்டு தீண்டி அரவணைத்து உச்சி முகர்ந்து,பதினாறு வருட ஏக்கங்களைத் தீர்த்துக் கொண்டார் நாச்சி.வெகு வருடங்கள் சென்று கிட்டிய வரம் என்றாலும் வரம் தானே!
சிவகாமியோ,‘என்ன பெண்மணி இவர்,என் வாழ்க்கையில் வந்த வசந்தம் கண்ட நாள் முதல் அவரது இறுதி நொடி வரை நிகழ்ந்ததை அனைத்தும் கனவாக மனப்பாடமாக’அவரது எண்ணத்தில் ஓடியது மெய் சிலிர்த்துப் போனாள்,சிவகாமி.
வாழ்ந்தாலும் பொன் வீழ்ந்தாலும் பொன் என்ற கூற்றுக்கு ஏற்ப, நாச்சி வாழ்ந்த போதும் பெருமையை அள்ளி கொண்டார். வீழ்ந்த போதும் தனது முத்திரையை ஆழமாகப் பதித்து விட்டு தான் சென்றார்.
அவரது இறுதிச் சடங்கைப் பற்றிப் பேசாதவர் ஊரில் இல்லை.தில்லையே அதிசயித்த பெண்மணி ஆகிப் போனார்,ஆச்சி.
தேவாரம் திருவாசம் பாட தில்லைநாதன் கோவில் சார்பாக மாலை வர, மகன் - மருமகள்,மகள்-மருமகன், பேரன்-பேரன்மனைவிகள்,பேத்தி-பேத்திமார்கணவன்கள், கொள்ளுப் பேத்தியென, சுமார் நாற்பது மக்கள் முறை செய்ய…
இரு மூட்டை விபூதி கமகமக்க, காசி தீர்த்தம் கொண்டு நீராடி, காஞ்சிபுரப் பட்டு உடுத்தி மகன் -மருமாளுடன் ஸ்ரீ தேவி பெற்று, பேரன் பேத்திகள் நெய் பந்தம் பிடிக்க, அம்பலத்தான் கொல்லி ஏந்தி வர, இறுதிப் பயணத்தைக் கூடக் கம்பீரமாக முடித்துக் கொண்டார், பெரிய நாச்சி அம்பலத்தான் துணையுடன்.
தனக்குப் பின் சிவகாமி என்றாலும், அம்பலத்தானை கொண்டே சிவகாமி என்பது மறை பொருள் இங்கே, புரியாத வயதில் குடும்பப் பாராத்தை சுமந்து நேர் வழி சென்ற முதல் மகனே அனைத்தும் ஆதாரம். இரு பெண்களுமே அதனை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் அதனை அம்பலத்தான் அறிந்து கொண்டார்.
காலம் தாண்டியும் தனது புகழ் பேசும் படி வாழ்ந்து சென்ற அன்னையின் இறப்பு கொடுமையாக இருந்தாலும், தன்னைக் கொண்டே தனது குடும்பம் என்று தேறிக் கொண்டு பொறுப்புகளை அழகாகக் கையாண்டார் அம்பலத்தான்.
அவ்வப்போது அவர் எண்ணுவதுண்டு எதற்கு இந்த மணம், பிரிவு, இணைவு, அன்பு என்று அனைத்துக்கும் விடை இன்று வரையில் கிட்டவில்லை.
பதில் கிட்டவில்லை என்றாலும் நிறைவு கொண்ட வாழ்க்கை அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ள விடவில்லை.இதோ தங்கள் குடும்பம் மீனம்மாள், அன்பு, சங்கரி, சக்தி, உலகம்மை, சரசு அவர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து, அவர்களுக்கு இரு பிள்ளைகளென வீடே நிறைந்து நின்றது.
ஆசைக்கு ஒரு பெண் என சின்ன நாச்சியும், ஆஸ்திக்கு ஒரு மகன் என சிவசும் இருக்க, அம்பலத்தான் குடும்பத்துக்கு ஏது குறை?
பெரிய நாச்சி சிவகாமி தற்போது அவரது மகள் என்று இம்மூன்று பெண்களும், அவரது வாழ்க்கையில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டனர்.
நாச்சியின் அறைக்கு அம்பலத்தான் வர, அவரது அரவம் கேட்டு எழுந்து கொண்டாள் வாசுகி.
அம்பலத்தான் வந்தவர் எந்த வித பேச்சுகளும் இல்லாமல், சிவகாமியை கையில் அள்ளிக் கொண்டு தனது அறைக்கு விரைந்தார்.
இதை யாரும் கருத்தில் கொள்ள வில்லை. அவரும் கவனத்தில் வைக்கவில்லை. இளைய பிள்ளைகள் மட்டும் இதழ் பிரியாமல் சிரித்துக் கொண்டனர்.
மாமன் மாமியின் காதல் செவிவழி தீண்டல் என்றாலும், சில நிகழ்வுகளை நேரில் பார்க்கும் போது மலைப்பாக இருந்தது இளசுகளுக்கு.
தங்களது அறையில் விட்டவர் நின்றவாக்கிலே மகளுக்கு குரல் கொடுத்தார், “சின்னப் பொண்ணு அம்மாக்கு சாப்பிட எடுத்து வாக.”என்க
அவர் சொன்ன அடுத்த நொடி கையில் தட்டினை ஏந்தி வந்தாள், சின்னநாச்சி. எந்த வித பேச்சுகளும் இல்லாமல் அவள் செல்ல. உணவைப் பிசைந்து ஊட்ட ஆரம்பித்து விட்டார். எந்தவித மறுப்புகளும் இல்லாமல் கண்ணில் நீர் வழிய அதனை ஏற்றுக் கொண்டாள்,சிவகாமி.
இருக்காதா பின்னே ,நாச்சி தனக்காகக் கொடுக்கப் பட்ட வரம் சிவகாமி. அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அதே போல் நாச்சி இல்லையென்றாலும், அவர் தனக்காக விட்டுச் சென்ற பொக்கிஷம் அம்பலத்தான் அல்லவா?
இமைக்காமல் அம்பலத்தானை பார்த்துக் கொண்டு இருந்தவள், அதற்கு மேல் முடியாமல் தாவி அணைத்துக் கொண்டாள். தனது கையில் உள்ள தட்டை மேசை மேல் வைத்தார். தானும் எந்தவித பேச்சுகளும் இல்லாமல் தனது வரத்தை இறுக்கி அணைத்துக் கொண்டார்.அங்கனம் வென்று நின்றார் பெரிய நாச்சி.
நாளும் தெரிந்து
நல்லது அறிந்து
நற்பண்பு வளர்த்த
தாய் இங்கு…
தெய்வமாய் நின்றாலும்
தன் பிம்பம் வார்த்துவிட்ட
ஆரணங்கு…
கிள்ளையாய் வந்தாலும்
கொள்ளை அன்பில் உயிர்த்து
எல்லையாய் காத்து நிற்க…
சக்தியவள் போதனைகள்
சிவனவனின் சாதனைகளே!
சுபம்