அத்தியாயம் 20
தோட்டத்தில் நின்ற காரை வர சொல்லி பெண்கள் அதில் ஏறினர். காமாக்ஷி வரவில்லை என்றுவிட, மற்றவர்கள் தோட்டத்திற்குக் கிளம்பினார்கள். ராதிகா அவளும் வரவில்லை என, அன்று யாரும் அவளை வருந்தி அழைக்கும் மனநிலையில் இல்லை.
மறுநாள் காலை வெண்ணிலா இறங்கி வரும் போது வீடு வழக்கத்திற்குத் திரும்பி இருந்தது. குழந்தை உண்டாகி இருப்பதால்… மேலே கீழே என அல்லாடாமல் ஒரு இடத்தில் இருக்கும்படி பெரியவர்கள் சொல்லி இருக்க, காலையில் எழுந்து முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் மொத்தமாக முடித்து விட்டு ஜெய் அலுவலகம் செல்லும் போது, அவனுடனே கீழே வந்து விட்டாள்.