உள்நாட்டு அமைதிக்கு ஊறு நேராதவாறு தடுப்பதற்கும் வெளிநாட்டுக்கு அடிமைப்படாமல் உரிமையுடன் வாழ்வதற்கும் மிகுந்த ஆற்றல் உள்ள படை ஒர் நாட்டிற்கு இன்றியமையாததாகிறது. ஒரு நாட்டின் செல்வ வளம் சிதைவுபடாமல் இருக்க வேண்டுமானாலும், அந்நாட்டிலே போதுமான படைபலம் இருக்க வேண்டும். இவ்வாறு அமைதியையும் வளத்தையும் படை பாதுகாக்கின்றது. அப்படையின் பண்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை இத்தொகுதியில் விளக்கமாக உரைக்கின்றார் வள்ளுவர். உயர்ந்த நாட்டுப்பற்றுடன் கூடிய வீரம் காட்டி நாட்டின் இறையாண்மையைப் படைதான் காப்பாற்றுகிறது. எனவே படை அரசின் தலைமைச் செல்வமாம். படைமாட்சி என்பது படைவீரர்களின் மாட்சியையும் குறித்தது.