அதிகார விளக்கம் :-
கேள்வி
கல்வியறிவை இரண்டு வகையாகப் பெறலாம். நூல்களின் மூலமாகக் கற்றறிவது ஒன்று. கற்றார் மூலமாகக் கேட்டு அறிந்து கொள்வது மற்றொன்று. இவ்வதிகாரம் இரண்டாம் வகையைச் சேர்ந்த அறிவுபெறும் முறையைப் பேசுகிறது. கேள்வியறிவினைக் கற்றோர், கல்லாதோர் ஆகிய இருவகையினரும் பெற்றுப் பயன் பெறுவர் என்பது அறியக் கூடும்.
கற்கும் ஆற்றலும் வாய்ப்பும் இருந்தும் கல்லாதவனுக்கு மாற்று வழியாக கேள்வி அமைகிறது. கல்வி வாயிலாக அறிவைப் பெறும் முயற்சியை விட கேள்வி வாயிலாக அறிவை எளிதிலும் கூடுதலாகவும் பெறலாம். எந்தத் துறையைப் பற்றிய செய்தி வேண்டுமானாலும் அந்தத் துறையின் நுட்பங்களை ஒருவன் தானே முயன்று, நூற்களை ஆராய்ந்து அறிந்து கொள்வது கடினம். அந்தத் துறையை நன்கு அறிந்தவர்களிடம் கேட்டு அறிவது எளிதானது. அதனால் காலச்செலவும் குறையும். கேட்பது கற்றலைவிட மனத்தில் நன்கு பதிந்து பயன் தரும். கற்றலின் எல்லை ‘சாந்துணை’யும் நீண்டுகிடப்பதுபோல கேட்டலின் எல்லையும் நெடியதே.
என்ன கேட்பது என்பது பற்றி குறள் குறிப்பாகவோ வெளிப்படையாகவே சொல்லவில்லை. கேள்வி அதிகாரம் சொல்வதெல்லாம் எதுவாயினும் நல்லவை கேடக என்பதுதான். குறள் கூறுவது சொற்சுவை, பொருட்சுவை உடைய நூல்கள் என்று உரையாசிரியர்கள் கொள்வர். நூற்பொருள்கள் தவிர்த்து இசையையும் கேள்விப் பொருள்களில் சிலர் சேர்த்துக் கொள்வர்.
பழைய உரையாசிரியர்கள் அன்றிருந்த ஊடகமான நூல்கள் பற்றி மட்டும் பேசினார்கள். ஆனால் குறளின் பொதுத்தன்மை இன்றைய ஊடகங்கள் வழி அறியும் செய்திகளுக்கும் இடம் தருகிறது. மனிதனுக்கு ஓய்வு குறையக் குறைய கேள்வியின் தேவையும் வளர்ந்துகொண்டே செல்கிறது. அதற்கு இணையாக இன்று வானொலி, டிவி, திரைப்படம், ஒலி-ஒளித்தட்டு, இணையம் போன்று பல கேள்விக் கருவிகள் நமக்கு உண்டு.
இவற்றுள் தேர்ந்து தெளிந்து நல்லனவற்றை கேட்கப் பயின்றுவிட்டால் அவையும் சிறந்த செவிச்செல்வமாக அமையும்.