அதிகார விளக்கம் :-
அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றவாறு இல்லறத்தில் நின்றொழுகி, ஒப்புரவறிந்து, ஈகையில் ஈடுபட்டு, புகழ் பெற்று, அதனையும் கடந்து அருள், தவ நோன்புகளை மேற்கொண்டு, நிலையாமை உணர்ந்து, துறவு நெறிநின்று, மெய்ப்பொருள் காண்கின்றனர் மாந்தர். அந்நிலையில் அவர்கள் அவாவை நீத்து இறைவனது மாணடி சேர ஆயத்தமாகின்றனர். பிறப்பு-வாழ்க்கை-இறப்பு என்னும் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து இவ்வுலக வாழ்க்கையின் இறுதிநிலையில் இருக்கின்ற மக்களுக்கான அதிகாரம் இது. உயிர்வாழ்வின் முதிர்ந்த நிலையில் முழுஅமைதி பெற அவா அறுத்தல் தேவையாகிறது என்பது குறள் காட்டும் அறம்.