"ராஜா, நம் அம்முவின் மகன் காதம். ஆதிரை, அம்முவின் கணவன் அரவிந்தின் தங்கை. ஆதிரைதான் இனி கஜாவின் குடும்பத்தில் யாருக்கும் ராஜாவைப் பற்றி சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள். அதற்கு காரணமும் உண்டு" என்றார் சேகர்.
“எனக்கு எல்லாம் குழப்பமாகிவிட்டது சேகர். அப்போது இந்திரபிரதேஷில் இருக்கும் அஸ்மிதா யாருடைய குழந்தை" என்று தலையை தடவியவாறு சொன்னார் காதம்பரன்.
“குழப்பம் வேண்டாம். அவளும் அம்முவின் குழந்தையே!. அம்முவிற்கு இரட்டைக் குழந்தை. " என்று கேட்டார் சேகர்.
" அவர்கள் இரட்டைக் குழந்தைகளா?" என்று ஆச்சரியமுடன் கூறினார் காதம்பரன்.
“ஆமாம். காதம். இவன் அஸ்மிதாவின் அண்ணன். அம்முவின் ஆசையினாலே இவனுக்கு ராஜேந்திர ராஜாவென்று பெயர் வைத்தது. சுருக்கமாக ராஜா என்று அழைப்பதுண்டு. ஆனால் ஆதிரை இவனைக் கண்ணா என்று அழைப்பதிலே ஆனந்த படுவாள். சிவசக்தி அம்மா அர்ஜுனை அழைப்பது போல்" என்று கற்பனையில் எண்ணி மெய்சிலிர்த்தார் சேகர்.
“எது எப்படி இருந்தாலும் , ஆதிரை ராஜாவை அவளுடன் வைத்துக் கொண்டது தவறு சேகர். அதற்கு சுயநலமற்ற பெண் என்றெல்லாம் சொல்லாதே!. அத்தினையும் சுயநலமென்று எனக்கு இப்போது தோன்றுகிறது. அவளுக்குத் துணை வேண்டுமென்று, இளவரசனாக வளர வேண்டியவனை இப்படி கஷ்டப்படும்படியாக வளர்த்து வருவது சரியாகாது.” என்று கடுமையாக பேசினார் காதம்பரன்.
"நடந்தது தெரியாமல் ஆதிரையைப் பற்றி தவறாக எண்ணாதே காதம். முதலில் இருந்து தெளிவாக சொல்கிறேன் கேள் காதம்" என்று அவருக்குத் தெரிந்த உண்மையைச் சொல்ல தொடங்கினார் சேகர்.
சுமார் மூன்று வருடத்திற்கு முன்பு..
ரிதிகா எங்கிற அம்மு சிதம்பரத்தில் அரவிந்தை மணம்புரிந்து கொள்ள போவதை சேகரிடமே முதலில் சொன்னாள். ராஜேந்திர ராஜாவின் குடும்பத்திடம் சொல்ல அவளுக்கு மிகவும் தயக்கம்.
முக்கியமாக அர்ஜூனிடம் சொல்ல அவள் பயந்துதான் போனாள். லண்டனில் வளர்ந்ததாலோ என்னமோ , அவனுக்குத் தமிழ் நாட்டின் மீது அப்போது ஆர்வம் இருந்ததில்லை. மூன்று வருடத்திற்கு முன் அவன் சென்னையில் நடந்து கொண்ட விதம் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. Social media -வின் தாக்கத்தால் பல பெண்களின் நட்பு கிடைத்தது. முதலில் நல்ல சினேகிதம் போலத் தொடர்ந்த நட்பு , பின் வேறுவிதமாக மாறியது.
அர்ஜூன் லண்டனிலிருந்து வந்தவன் தெரிந்த பின்னே பல பெண்கள் அற்று மீறி நடக்கச் செய்தனர். அப்படிப் பட்ட மோசமான பெண்களினால் ஒட்டு மொத்த தமிழ் பெண்களிடமும் அர்ஜூன் நல்ல அபிப்ராயம் இழந்திருந்தான். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஊரில் எல்லாப் பெண்களும் இப்படிதான் போல என்று எண்ணிவிட்டான். 'பாட்டி சொன்னது போல இந்த ஊர் பெண்கள் இல்லையே அக்கா'வென்று சில நேரங்களில் அர்ஜூன் ரிதிகாவிடம் கூறியதுண்டு. அப்படிப்பட்ட பெண்களின் சகவாசத்தால் தமிழ் நாட்டின் ஆண்களை பற்றியும் அந்த மோசமான பெண்களின் வாயால் அறிய நேர்ந்தது. ஆக ஆண்களும் உத்தமன் இல்லையென்று ஒரு திரை விழுந்தது போல தவறாக எண்ணிவிட்டான். அதனால் அர்ஜூன் ரிதிகாவின் காதலை ஏற்கவில்லை. அவள் காதலிப்பது தவறில்லை. ஆனால் இந்த ஊர் ஆணைக் காதலிப்பதை அவனால் ஏற்க முடியாது. என்று விளையாட்டாகப் பேசும் போது ரிதிகா அறிந்திருந்தாள்.
இதனால் ரிதிகா சேகரிடம் "அங்கிள் நான் இரகசியமாகச் சிதம்பரத்தில் திருமணம் செய்து கொள்ள போகிறேன் , என் வீட்டுச் சார்பாக நீங்கதான் முன்னிருந்து திருமணம் செய்து வைக்க வேண்டும்" என்று கேட்டாள். சேகர் முதலில் மறுதலித்தாலும் , ரிதிகாவின் கண்ணீர் அவரைக் கரைத்தது. கசேந்திரனிடம் பேச முயன்று தோற்றபின் சேகர் ரிதிகாவை சந்திக்கச் சிதம்பரம் சென்றார்.
அப்போதுதான் சேகர் முதல் முறையாக ஆதிரையைப் பார்த்தது. இப்போது போல் அல்லாமல் அப்போது ஆதிரை துரு துருவென்று சுற்றிக் கொண்டிருந்தாள். அவள் உண்டு அவள் படிப்பு உண்டு என்று இருந்தவளுக்கு அவளது அண்ணனின் திருமணம் உற்சாகத்தைத் தந்திருந்தது. ரிதிகாவின் வாயால் ரிதிகாவின் தம்பி(அர்ஜூன்) பற்றி ஆதிரைக்கு நல்ல அபிப்ராயம் தொலைந்து போய்விட்டிருந்தது. அது எப்படி ஒரு பெண்ணோ, ஆணோ தவறு செய்தால் ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் ஆண்களையும் தப்பு என்பது. மிகவும் தவறு அண்ணி. உங்க தம்பி இப்படியே பேசிக் கொண்டு தமிழ் நாட்டில் சுற்றிக் கொண்டிருந்தால் எந்தப் பெண்ணிடமோ ஆணிடமோ வடிவேலு அடிவாங்குவது போல அடிவாங்கி கட்டிக் கொள்ள போகிறார்" என்று விளையாட்டாக சொல்லிக் கொண்டு கண்ணாலே சிரித்து அங்கிருப்பவர்களையும் சிரிக்க செய்தாள்.
தம்பியைச் சொன்னதும் ரிதிகாவின் முகம் மாறுவதைப் பார்த்துவிட்டு , “சும்மா, விளையாட்டுக்குச் சொன்னேன் அண்ணி. உங்க தம்பி தங்கக் கம்பிதான். கூடா நட்பு அவருக்கு கெட்டபாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. என்னை அவரிடம் ஒருமுறை அழைத்துச் செல்லுங்கள். அவரின் நட்புவட்டாரத்தை தூர் வாரி சுத்த படுத்திவிடுகிறேன். பிறகு பாருங்கள் நம் தமிழ் நாட்டின் பெருமையை ஊர் உலகம் முழுக்க பரப்புவார்" என்று ஆதிரை செய்கையுடன் சொல்ல எல்லோரும் வேடிக்கையாகச் சிரித்தனர் ரிதிகாவும் உட்பட.
இப்படி பேசிக் கொண்டிருந்த போதுதான் சேகர் ஆதிரையைப் பார்த்தது. எந்த வித கவலையும் இல்லாமல் , மோசமான எண்ண அலைகளையும் சிரிப்பலைகளாக மாற்றிக் கொண்டிருந்தாள் ஆதிரை. சேகர் வந்ததும், விரைவாகவே திருமண வேலைகள் நடைபெற்றது. 23 வயது என்ற போதும் 40 வயது அனுபவத்துடன் அண்ணனின் திருமண வேலைகளை எடுத்துச் செய்தாள் ஆதிரை. அவள் அண்ணன் அரவிந்த் உதவ முயன்றாலும் , "திருமணம் உனக்கு அண்ணா! நீ இளவரசனைப் போல எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க செய். அண்ணியிடம் honeymoon எங்க போகலாம் என்பதைப் பேசி முடிவெடு. அதை விடுத்து என் வேலையைக் கெடுக்காதே" என்று விளையாட்டாக பேசிக் கொண்டே திருமணத்தை இனிதே முடித்தாள்.
ஆதிரையின் சுட்டித்தனமும், சமயோஜித்த அறிவும் சேகரை மிகவும் கவர்ந்தது.அதனால் சேகர் ஆதிரையை தன் இளைய மகனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணினார். அதற்காக அரவிந்திடமும் சொல்லி வைத்திருந்தார். "ஆதிரையின் MS படிப்பு முடிந்ததும் ஆதிரையிடம் நீங்களே கேளுங்க அங்கிள். அவள் விருப்பம்தான் முக்கியம்" என்று அரவிந்து சொல்லியிருந்தான். நாம் ஒன்று நினைக்க, நடப்பது இன்னோன்றாக இருந்தது.
ரிதிகாவிற்கு இரட்டைக் குழந்தை உண்டானதும் அதிக கவனிப்பு தேவைப்பட்டது. MS படிப்பை தொடர்ந்து கொண்டே ரிதிகாவை பார்த்துக் கொள்ளா முடியவில்லை. அதனால் , ஒரு வருட விடுப்பு கேட்டுக் கொண்டு ஆதிரை ரிதிகாவுடனே இருந்து அவளை நங்கு பார்த்துக் கொண்டாள். ரிதிகா கருவுற்ற பின்னும் கஜேந்திரன் இறங்கி வராதது ரிதிகாவின் உடல் நலத்தை முகவும் குழைத்துவிட்டது. அதற்கும் சேர்த்து ஒரு அம்மாவைப் போல ஆதிரை ரிதிகாவை பார்த்துக் கொண்டாள். அதனாலோ என்னமோ, ரிதிகாவும் ஆதிரையும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நெருக்கமாகினர்.
என்ன இருந்த போதும் ரிதிகாவின் தம்பியின் மீது ஆதிரைக்கு நல்ல அபிப்ராயம் வராததால் அவனைப் பற்றி பேசுவதை பொதுவாக இருவருமே தவிர்த்திருந்தனர்.
மிகப் பெரிய போரட்டாத்திற்கு பின் ரிதிகாவிற்கு குழந்தை பிறந்தது. ஆதிரையின் முதல் பிரசவம் அதுவே. மிகவும் லாவகமாக கையாண்டு இரு குழந்தைகளையும் சுகப்பிரசவம் மூலமாக ரிதிகாவை பெற்றெடுக்க செய்தாள்.
அப்படி பிறந்த ஆண் குழந்தையின் பெயர் ராஜேந்திர ராஜாவென்றும், பெண் குழந்தையின் பெயர் அனாமிகா என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அவ்வப்போது ராஜேந்திர ராஜா தாத்தாவிடமும் சிவசக்தி பாட்டியிடமும் பேசிக் கொண்டிருந்தபோதும் ரிதிகா அவர்களைச் சந்திக்க சென்றதில்லை. கஜேந்திரன் கோபம் குறைவதற்கு காத்திருந்தாள்.
குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் லண்டனிலிருந்து ரிதிகாவின் தம்பி அர்ஜூனிடமிருந்து ரிதிகாவிற்கு phone வந்தது.
Last edited: