யுகம் சுகம் தானே 9 2 17183 கண்ணம்மாவிற்கு வீட்டில் பெண்கள் இல்லாததால் டக்கென வந்த விஷயத்தை ஆரம்பிக்க முடியவில்லை. கணபதியை பார்க்க, புரிந்து கொண்ட அவர், “முதல்ல நாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறோம், உதய் இப்படி உங்ககிட்ட கலந்துக்காம கல்யாண விஷயம் வெளியே சொன்னதுக்கு..” என, “இல்லை.. இல்லை அப்படி பார்த்தா நான் தான் உங்ககிட்ட முதல்ல மன்னிப்பு கேட்கணும், நாலு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உங்களை கேட்காம நேரடியா உதய்கிட்ட என் ப்ரண்ட் வச்சு பேசினத்துக்கு..” “அப்போ எனக்கு முதல்ல உதய் விருப்பம் தெரிஞ்சுக்க தான் அவசரமா இருந்தது. உங்களுக்கு பிடிச்சு பிடிக்காம.. ம்ம்.. ஓப்பனா சொல்லிடுறேன் அப்போ உங்களை பத்தி நான் ரொம்ப தெரிஞ்சுக்கல, ஒரு வேளை எங்களோட வசதி வாய்ப்பு பார்த்து நீங்க உதய்கிட்ட பேசி.. அவர் விருப்பம் இல்லாம.. அதான் முதல்ல அவர்கிட்ட பேசலாம்ன்னு..” சொல்ல வந்தத நேருக்கு நேர் சொல்ல முடியாமல் தட்டு தடுமாறி சொல்லி முடித்தார். “புரியுதுண்ணா.. ஆனா இப்போவும் எங்களை அப்படி நினைச்சா..” “இல்லைம்மா.. அது அப்போ தப்பு தான், சாரி..” என்றுவிட, அதற்கு மேல் அதை பற்றி பேசவில்லை கண்ணம்மா. “விடுங்கண்ணா.. எது எப்போ நடக்கும்ன்னு நம்ம கையிலா இருக்கு..? முடிஞ்சதை விட்டு நடக்க போறதை பார்ப்போம், உதய் நேத்து சீக்கிரம் கல்யாணம் நடக்குங்குற மாதிரி சொல்லியிருக்கான், அதான் முடிஞ்சா அடுத்த மாசத்துக்குள்ள..” “ரொம்ப சீக்கிரமா தெரியுதேம்மா..” ஷாரா சொன்னதை வைத்து மறுக்க முயன்றார். “இவங்க தான் முடிவானதுக்கு அப்பறம் எப்போ வச்சா என்னண்ணா.. ?” “சரிதான்ம்மா..” ராம் யோசிக்க, அந்நேரம் உதய்.. ஷாராவுடன் அங்கு வந்தான். அவர்களின் வரவை இரு வீட்டு பெரியவர்களும் எதிர்பார்க்கவில்லை. “வாங்க..” ராம் உதய்யை வரவேற்க, அவன் தலை அசைப்புடன் கண்ணம்மா பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான். “வணக்கம் அங்கிள், வணக்கம் ஆன்ட்டி..” ஷாரா கணபதி தம்பதியினர்க்கு கை குவித்து வணக்கம் வைக்க, “நீயும் உட்காரும்மா..” என்றார் கணபதி. முதன் முதலாக பார்க்கிறார் மருமகளை. முகத்தில் திருப்தி. “ம்மா.. இப்போவே உறுதி முடிச்சுக்கலாம்..” உதய் கண்ணம்மாவின் காதை கடித்தான். “என்னடா சொல்ற..?” கண்ணம்மா கேட்க, “ம்மா.. புரிஞ்சுக்கோ..” உதய் கெஞ்சலுடன் கேட்டான். “நினைச்ச நேரத்துல அப்படி எல்லாம் செய்ய முடியாது உதய்..” திடீரென சொல்லும் மகனை பார்த்து பல்லை கடித்தார் கண்ணம்மா. “ம்மா.. ப்ளீஸ்.. இன்னிக்கு உறுதி முடிச்சுக்கலாம், அதான் பூ, சுவீட் எல்லாம் வாங்கி வந்திருக்கீங்க இல்லை..” டீபாய் மேல் இருந்ததை பார்த்து சொன்னான். “நீ முடிவெடுத்துட்டன்னு சொல்லு..” கண்ணம்மா முகம் திருப்பி கொண்டார். “என்ன ஆச்சும்மா..?” ராம் கவனித்து கேட்க, “இல்லைண்ணா.. வந்ததும் வந்துட்டோம், பவ்யாவும் இருக்கா, அதான் இப்போவே பூ வச்சுரலாம்ன்னு..” என, பவ்யா உதய்யை தான் பார்த்தாள். அவனின் வேலை தான் என்று புரியாமல் இல்லை. ராம் மகளை பார்க்க, அவளின் அமைதியில் அவரின் முகம் யோசனையை காட்டியது. “பவ்யா.. உனக்கு ஓகே தானேம்மா..” கண்ணம்மா நேரடியாக அவளிடமே கேட்க, ஷாரா தலை ஆட்டிவிட்டாள். “ஷா..” ராம் மகளை கூப்பிட, “ப்பா..” ஓட்ட வைத்த சிரிப்புடன் தந்தையை பார்த்தாள். “உனக்கு ஓகே தானே.. இல்லை இன்னும் டைம் வேணும்ன்னாலும் சொல்லு..” “ஓகே தான்ப்பா..” என்றுவிட, அதற்கு மேல் ராமாலும் மறுக்க முடியவில்லை. ஒத்து கொண்டார். உதய் நேரில் பேசி சம்மதிக்க வைத்திருப்பார் என்று நினைத்து கொண்டார். சம்மதம் கிடைத்தவுடனே கண்ணம்மா தான் வாங்கி வந்த பூவை ஷாரா தலையில் வைக்க சென்றார். அவள் ப்ரீ ஏர் விட்டிருக்கவும், “இரும்மா..” தானே அவளின் முடியை பின்னி ஜோதியிடம் பேண்ட் கேட்டு வாங்கி போட்டவர், அதற்கு பின்னே பூ வைத்தார் மருமகளுக்கு. அதிலே அப்பா, மகளுக்கு லேசாக கண்கள் கலங்கிவிட்டது. அடுத்து எழுந்த உதய், “உடனேன்னு நகை எதுவும் வாங்க முடியவில்லை..” என்றவன் அவனின் கழுத்தில் இருந்த செயினை கழட்டி ஷாரா கழுத்தில் போட்டுவிட்டான். அவனின் கழுத்தில் இத்தனை வருடமாக உரசி கொண்டிருந்த செயின் இன்று அவளின் கழுத்தை உரசி கொண்டிருந்தது. அவனின் சுய சம்பாத்தியத்தில் முதன் முதலாக வாங்கிய செயின் அது. இருவரின் கண்களும் அழுத்தமாக ஒருவரை ஒருவர் பார்த்தது. “ஜோதி சுவீட் எடுத்துட்டு வா..” ராம் சொல்ல, உறுதியை கொண்டாடும் விதமாக சுவீட் பரிமாற பட்டது. “ண்ணா.. நீங்க உங்களுக்கு தெரிஞ்ச ஜோசியர்கிட்ட கேட்டு சொல்லுங்க முகூர்த்தம் எப்போ இருக்குன்னு..?” கண்ணம்மா சொல்ல, “நீங்களே உங்க ஜோசியர்கிட்ட பார்த்து சொல்லுங்கம்மா..” என்றுவிட்டார் ராம். “சரிங்கண்ணா.. அடுத்த மாசத்துக்குள்ள பார்த்துடலாம்..” கிளம்ப எழுந்து நின்றனர். “வரோம்மா.. உன்கிட்ட போன் நம்பர் வாங்கியும் பேச முடியல, இனி அடிக்கடி பேசிப்போம்.. வரேன்..” கண்ணம்மா ஷாராவிற்கு சொல்லி கொண்டு கிளம்ப, “வரேன்ம்மா..” கணபதியும் மருமகளுக்கு சொல்லி கொண்டு கிளம்பினார். “வரேன் அங்கிள்..” உதய் ராமிற்கு சொன்னவன், ஷாராவின் அருகில் வர எல்லோரும் கார் பார்க்கிங் சென்றனர். “நீங்க சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கட்டும்..” ஷாரா கூர்மையாக சொல்ல, “மறக்க மாட்டேன்.. பேச்சு மாறவும் மாட்டேன்..” சொன்னவன், அவளின் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த செயினை பார்த்தான். “இது என்னோட பர்ஸ்ட் சம்பாத்தியத்துல வாங்கினது.. கழட்ட மாட்டேன்னு நினைக்கிறேன்..” என, ஷாரா முகம் திருப்பினாள். உதய் கிளம்பிவிட, இவள் ரூமிற்க்கு சென்றுவிட்டாள். முகம் வெறுமையாக இருந்தது. கட்டாயத்தோடு இங்கு கூட்டிவந்த உதய்யால் தான் வெறுமை. இவள் வீட்டிற்கு கிளம்பவில்லை என்று தெரிந்து உதய் அவளின் ஆபிஸிற்கே சென்றுவிட்டான். “மேம்.. உதய் சார் வந்திருக்கார்..” ஜித்தன் சொல்ல, எதற்கு வந்திருப்பான் புரிந்து கொண்ட ஷாரா, உள்ளே வர சொன்னாள். உதய் வந்தவன், “வீட்டுக்கு போலாமா..?” என்றான் எடுத்தவுடன். “எனக்கு வேலை இருக்கு..” என்றாள். “கொஞ்ச நேரம் தான் வந்துடலாம்.. கிளம்புப்பா..” என்றான். “எனக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு..” அவளின் போனை எடுத்து ஜித்தனுக்கு அழைத்தவன், “மீட்டிங் கேன்சல் பண்ணிடுங்க..” என்றான் அவனே. “ஏன் இப்படி பண்றீங்க..?” “நீ ஏன் இப்படி பண்ற..? ஊர் உலகத்துக்கு நம்ம மேரேஜ் பத்தி அன்னோன்ஸ்மென்ட் கொடுத்ததுக்கு அப்புறமும் வேணாம்ன்னு என்னை ஒதுக்கினா என்ன அர்த்தம்..?” “நான் உங்களை கொடுக்க சொல்லலை.. இன்பேக்ட் என்னோட கலந்துக்காம நீங்களே சுயமாய் எடுத்து முடிவுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்..?” “எனக்கு தெரியும் இந்த பதிலை தான் சொல்வன்னு.. அண்ட் எனக்கு அப்போ வேற எதுவும் தோணல.. அதான் சொல்லிட்டேன்..” மனதார பொய் சொன்னான். ஷாரா கை கட்டி எங்கோ பார்த்தாள். “இங்க பாருப்பா.. நான் சொன்னது சொன்னது தான், அதுல இருந்து என்னால பேக் அடிக்க முடியாது.. நம்ம கல்யாணம் நடந்தே ஆகணும், அதுக்கு நீ ஒத்துழைப்பு கொடுத்தே தான் ஆகணும்..” “முடியாது சொன்னா..?” “சொல்லாத.. இது உனக்குமே ஏத்த முடிவு தான்..” என்றான். ஷாரா கேள்வியாக பார்க்க, “RK சார் அவரோட பைபாஸ் சர்ஜரி செய்யாம தள்ளி போட நம்ம கல்யாணமும் ஒரு காரணம் எனக்கு தெரியும்..” ஷாரா முகம் சிவந்து போனது ஆத்திரத்தில். “என்ன பிளாக் மெயில் பண்றீங்களா..?” “இருக்கலாம்.. இல்லாமலும் போகலாம், நீ எடுத்துகிறதுல தான் இருக்கு..” “நீங்க சொன்னதுக்கு நான் ஒத்துக்க முடியாது, என் அப்பாக்கு எப்படி சர்ஜரி பண்ணனும்ன்னு எனக்கு தெரியும்..” “கண்டிப்பா உங்கப்பா உனக்காக பண்ணிப்பார் தான், ஆனா அவருக்காக நீ என்ன பண்றேன்னு யோசி.. அவரோட ஒரே ஆசை நம்ம கல்யாணம், அந்த சந்தோஷத்தை, நிம்மதியை அவருக்கு கொடுக்கலாம் தானே..” ஷாராவிடம் பதில் இல்லை. “நம்ம ரெண்டு பேர் டிஃப்ரண்ஸ் நம்ம பேமிலியை ஏன் பாதிக்கணும்..? இத்தனை வருஷம் நம்ம விருப்பத்துக்கு மரியாதை கொடுக்கிற அவங்களுக்கு நாமும் எதாவது செய்யணும் இல்லை.. ஒத்துக்கோப்பா..” முழு அமைதி. “சொன்னபடி நம்ம கல்யாணம் நடக்கலேன்னா எனக்கு தானே அவமானம்..? அது தான் உனக்கு வேணுமா.? என் கையால ஒரு மஞ்சள் கையிறு வாங்கிக்க இவ்வளவு பிடிவாதமா..?” உதய் குரலில் காரம் கூடியது. “மஞ்சள் கையிறு கட்டுறதால மட்டும் எல்லாம் தீர்ந்துடுமா..?” ஷாரா தீர்க்கமாக கேட்க, “தீரவே வேண்டாம்.. தாலி கட்டிக்கிட்டும் நீயே அப்படியே இரு, நான் இப்படியே இருந்துகிறேன்..” என்றுவிட்டான். ஷாரா கண்கள் விரிந்தது. உதய்யை பார்த்தாள். “என்ன பார்க்கிற..? சொன்னது உண்மை தான், நம்ம கல்யாணம் மட்டும் முடியட்டும், அதுக்கு அப்பறம் நீ எப்போவும் போல இருந்துக்கலாம்.. என் மனைவியாய் உனக்கு எந்த கடமையும் இருக்காது, என் வீட்டுக்கும் வர தேவையில்லை, உன் வீட்ல நீ இருந்துக்கலாம்..” சொல்லிவிட்டான். ஷாராவிடம் விரக்தியான சிரிப்பு. “நீங்க சொல்றது உண்மையா..? நம்பலாமா..?” “எனக்கு சத்தியம் பண்ற பழக்கம் கிடையாது.. என் வார்த்தையை நம்பலாம்..” என்றான் அழுத்தமாக. அதற்கு பிறகே கிளம்பி வந்தனர். அவனும் உறுதி முடித்து கிளம்பிவிட்டான். ரூமிற்கு வந்த ஷாரா கண்ணாடி முன் நின்று தன் கழுத்தில் இருந்த உதய் செயினை வருடினாள். “எப்போவும் நீங்க என்னை புரிஞ்சுக்க போறதில்லை..” இவ்வளவு நேரம் இருந்த திடம் குறைந்து மறைந்து காணாமல் போனது. எப்போதும் போல மனமும், கைகளும் ஷாக்க்ஷியின் புடைவையை தேடி எடுத்தது. அணைத்து கொண்டு அதில் முகம் புதைத்தாள். “ம்மா.. உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்ம்மா.. வந்துடுங்களேன் என்கிட்டயே..” கண்ணீர் வழிய அம்மாவை தேடினாள் மகள்.