யுகம் சுகம் தானே 16 2 15956 மகளிடம் அதை பற்றி பேச, “அவள் பார்த்துக்கலாம்ப்பா, உங்களுக்கு முதல்ல சரியாகட்டும்..” என்றுவிட்டாள். அதற்காகவே இன்னும் தன் உடல் முன்னேற்றத்தில் கவனம் எடுத்து கொண்டார் தந்தை. “உதய்க்கு போன் பண்ணியா ஷா..?” ராம் எப்போதும் போல இப்போதும் மகளிடம் விசாரித்தார். அவளும் இப்போதும் பேசிட்டேன்ப்பா என்றாள். ஆனால் உண்மைக்கும் அவள் போன் செய்து பேசுவதில்லை. உதய் போன் செய்தால் பேசுவாள் அவ்வளுவே. “சரிம்மா.. இன்னிக்கு வராரா..?” நேற்று வராததால் இன்று வருவான் என்று கேட்டார். “வருவாங்கன்னு தான் நினைக்கிறேன்ப்பா.. வேலை பொறுத்து தானே..” அவளே சொன்னாள். “சரிம்மா.. ஜித்தன்க்கு சொல்லிடு இன்னிக்கு மீட்டிங்ல பேசறதை பத்தி, முடிஞ்சா நீ வீடியோ கால்ல மீட்டிங் அட்டென்ட் பண்ணு..” ஆபிஸ் விஷயங்கள் பேச, உதய் வந்தான் அதுவும் குடும்பத்துடன். “வாங்க.. வாங்க..” அப்பா, மகள் வரவேற்று உபசரித்தனர். “இப்போ எப்படி இருக்குண்ணா..?” கண்ணம்மா கேட்க, “நல்லா இருக்கேன்ம்மா.. அடுத்த செக் அப் போயிட்டு வந்துட்டா எப்போவும் போல வேலை பார்க்க ஆரம்பிச்சுடலாம்..” என்றார் ராம். “இன்னும் கொஞ்ச நாள் கூட ரெஸ்ட் எடுங்க.. அப்பறம் பொறுமையா வேலை பார்க்கலாம், நம்ம உடம்பு முக்கியம்..” கணபதி சொல்ல, சரிங்க.. என்று ஏற்று கொண்ட ராம், அனிதா குடும்பத்துடன் பேசினார். ஷா கிட்சன் சென்று ஜோதியிடம் எல்லோருக்கும் காலை டிபன் ஏற்பாடு செய்ய சொன்னவள் வெளியே வர, உதய் அவளை பார்த்து அமர்ந்திருந்தான். “இங்க உட்காரு..” மனைவிக்கு தன் பக்கத்தில் அமர கண் காட்ட, மனைவி முறுக்கி கொண்டாள். நேற்று அவன் வராத கோவம். “உட்காருடி..” உதட்டசைக்க, பார்வையாலே பிகு செய்தாள் மனைவி. “பார்றா..” புருவம் தூக்கிய உதய், “ஷா என் பைல் ஒன்னு உன் ரூம்ல விட்டுட்டேன் போல, எடுத்து கொடு வா..” என்று ரூமிற்கே கூட்டி சென்றுவிட்டான் கள்வன். “என்னடி புருஷன் பக்கத்துல உட்கார சொல்லி கூப்பிட்டா ரொம்ப தான் கிராக்கி பண்ற..” ரூம் உள்ளே சென்றவுடன் இடை வளைத்து தன் நெஞ்சில் முட்ட வைத்து கேட்டான். ஷா சிறிதும் அசையாமல் அவனின் நெஞ்சில் முகம் தேய்த்து வாசம் பிடித்தாள். அவளின் கைகள் அவனின் இடை வளைத்தது. “ஹலோ மேடம்.. என்ன அங்க முட்டிகிட்டு இருக்க, என்னை கொஞ்சம் பார்க்கிறது..” நிமிர்த்தி மனைவி முகம் பார்த்தான். புது கணவன் தானே, மனைவி அருகாமை, நெருக்கத்திற்கு அவனும் ஏங்கி தான் போனான். ஒரு வார திருமண வாழ்க்கை இரவு நேரத்தில் அவனை இம்சிக்க தான் செய்தது. ஆனால் அவளின் சூழ்நிலை உணர்ந்து தன்னை தானே கட்டுப்படுத்தி கொண்டான். மிகவும் சிரமமாக தான் இருந்தது. வேறு வழி இல்லை. ராமின் ஆப்பரேஷன், அவரை பற்றிய கவலையில் ஷா இருக்க, எப்படி அவளை நெருங்க..? “ஏன் ரொம்ப டல்லா தெரியுற..? நைட் தூங்கலையா..?” என்னை மாதிரி.. என்பதை மட்டும் மனதில் சொல்லி கொண்டான். ஒரு வேளை வெளியே சொல்லியிருந்தால் கணவன் தன்னை தேடுகிறான் என்பது ஷாவிற்கு புரிந்திருக்குமோ..? “புக் படிச்சிட்டு இருந்தேன்..” என்றுவிட்டாள் அவள். கணவனை நினைத்து வெகு நேரம் தூங்காமல் இருந்ததை மறைத்து. “சரி.. இனி இப்படி ரொம்ப நேரம் முழிச்சிருந்து படிக்காத..” என்றவன் அவளின் நெற்றியில் அழுத்தமான முத்தம் வைத்தவன், அவளின் முகம் பார்த்தான். மனதில் தன்னை போல பாடல் உதிர்த்தது. அவளின் நெற்றியில் முட்டியவன், “ஏன் என் தலைக்கேறுற.. பொன் தடம் போடுற.. என் உயிராடுற.. என்னடி மாயாவி நீ..?” மெல்லிய குரலில் பாட, ஷா பாடல் வரிகளை கவனிக்காமல் அவனின் அடுத்த இதழ் முத்தம், நெருக்கத்தை எதிர்பார்த்து காத்து நின்றாள். அவனோ திரும்பவும் ஒருமுறை நெற்றி முத்தம் வைத்தவன், மீண்டும் கட்டி கொண்டான். “நான் தான் அவருக்காக அலையறனோ..?” நினைத்துவிட்டவள் அவனின் அணைப்பில் இருந்து வெளியே வந்துவிட்டாள். உதய்யும் அவளையும் திரும்ப நெருங்கவில்லை. நெருங்கினால் எல்லை மீறிவிடுவான் என்று தெரிய, “வா போலாம்..” என்று கையில் ஒரு பைலுடன் கீழிறங்கிவிட்டான். “சாப்பிடலாம்..” ஜோதி அழைக்க, சாப்பிட்டு கிளம்பி வந்திருந்ததால் மறுக்க முடியாமல் கொறித்து வைத்தனர். “ம்மா.. நீங்க பார்த்திட்டு கிளம்புங்க.. எனக்கு முக்கியான மீட்டிங் இருக்கு..” என்ற உதய் எல்லோருக்கும் சொல்லி கொள்ள, மனைவியின் முகம் பார்த்தான். ஏதோ போல இருந்தாள். “ஈவினிங் வந்து என்னன்னு கேட்கணும்..” நினைத்து கொண்டவன் கிளம்பிவிட்டான். உதய் குடும்பமும் மதிய உணவு வரை அங்கேயே இருந்து கிளம்ப, ராம் மதிய தூக்கத்திற்கு சென்றார். ஷா வெறுமையான முகத்துடன் படுத்திருந்தாள். அப்பா பற்றிய கவலை நீங்கி, மனம் இப்போது கணவனது தேடுவது புரிந்தது. ஆனால் அவர் என்னை தேடலை அவளே நினைத்து கொண்டாள். ராம் தூங்கி எழுந்து வர மாலை நேர நடை பயிற்சிக்கு சென்று வா, ஜோதி இருவருக்கும் ஸ்னேக்ஸ், ஜுஸ் எடுத்து வந்து கொடுத்தார். “ஷா.. அனிதா இன்னும் இரண்டு வாரத்துல கிளம்புறா போல, நீ இந்த வாரம் அவங்களோட போய் இரு..” என்றார். “இல்லைப்பா.. உங்க செக் அப் இருக்கே..” “இருக்கட்டும்மா.. என்னையே பார்த்திட்டு இருந்தா எப்படி..? உனக்கு கல்யாணம் ஆகிருச்சு, உனக்கான பொறுப்பு, கடமை இருக்கு இல்லை..” “இதுக்கு தான் நான் முதல்லே உங்களை வீட்டோட மாப்பிள்ளை பார்க்க சொல்லி கேட்டேன்.. இப்போ அங்க போ, இங்க போ, அதை செய், இதை செய்ன்னு என்ன படுத்த வேண்டியது இருந்திருக்காது இல்லை..” மனதின் அழுத்தம் வார்த்தையை விட வைத்தது. அவளின் நேரம் அப்போது தான் வீட்டிற்குள் வந்த உதய் காதிலும் அது விழுந்து விட்டது. “என்ன ஷா பேசுற..? இன்னும் இதை விடலையா நீ..?” ராம் மகளிடம் அதிருப்தியாக பேசியவர், மருமகன் வரவும் அப்பா, மகள் இருவரும் சங்கடம் கொண்டனர். அவனின் முகம் பார்க்க ஒன்றும் தெரியவில்லை. “எப்படி இருக்கீங்க மாமா..?” அவரிடம் நலம் விசாரித்து அமர்ந்தான். ஜோதி தண்ணீர் எடுத்து வர, வாங்கி வைத்துவிட்டவன் ராமின் நலம் விசாரிக்க, ஷாக்கு தான் முகம் இல்லை அவனிடம் பேச. அவளின் மனசாட்சியே அவளை குத்தியது. யார் விடுவார் இப்படி..? திருமணம் முடிந்த கையோடு அப்பா வீடு வந்தவள் இன்று வரையிலும் அங்கு தான் இருக்கிறாள். திருமணத்திற்கு பிறகு நடக்கும் எந்த பங்க்ஷனும் இவர்களுக்கு நடக்கவில்லை. குலதெய்வ வழிபாடு இல்லை. உறவினர் வீட்டுக்கு செல்லவில்லை. சம்மந்தி விருந்து இல்லை. எதுவும் இல்லை. இன்று வரையிலும் அவளின் புகுந்த வீடு அதை பற்றி பேசவில்லை. கேட்கவில்லை. ராமின் உடல்நிலை புரிந்து மௌனம் காக்க, ஷா தன் வார்த்தையால் அடித்துவிட்டாள். “தம்பி காபி..” ஜோதி வர, “வேண்டாம்க்கா.. இப்போ தான் ஆஃபிஸ்லே குடிச்சிட்டு வந்தேன்..” என்றவன் போன் அடிக்க எடுத்து பேச ஆரம்பித்தான். ஷா கணவன் முகத்தையே பார்க்காமல் பார்க்க, ராம் மகளை கோபத்துடன் பார்த்தார். போன் பேசி வைத்த உதய், “எனக்கு கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க் மாமா.. கிளம்பனும்..” என்று எழ, இருவருக்கும் புரிந்து போனது. “உதய் அது..” “உங்க உடம்பு பார்த்துக்கோங்க மாமா..” அவரின் பேச்சை தடை செய்தவன், கிளம்பியும்விட்டான் மனைவி பக்கம் திரும்பாமலே. அதிலே அவன் கோவம் புரிந்தது. “என்ன ஷா இது..? உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்ப்பார்கல..” ராம் கோபத்துடன் பேசி கொண்டிருக்க, ஷா கணவன் பின் வேகமாக சென்றாள். அவன் பார்க்கிங்கில் கார் எடுக்க போக, முன் சென்று நின்றவள், “சாரிங்க.. அது..” “பேசாத..” “நான் சொன்னது தப்..” “ஜஸ்ட் ஷட் அப்.. பேசாதன்னா பேசாத..” அப்படி ஒரு அதட்டல். ஷா அவனின் கோவத்தில் தூக்கி போட ஒரு அடி பின் சென்றாள். அவளை திரும்பியும் பார்க்காமல் கார் எடுத்தவன் இங்கிருந்தே ஹார்ன் அடித்த படி வேகமெடுக்க, வாட்ச்மேன் அவசரமாக ரிமோட் மூலம் கேட்டை திறந்தான். ஒரு நொடி மிஸ் ஆகியிருந்தாலும் உதய் கண்டிப்பாக கேட்டை பறக்க வைத்து இருப்பான். அப்படி ஒரு வேகம். ஷா அப்படியே நின்றுவிட்டாள். அவளின் அந்த பொல்லாத காதல் தான் அவளை இப்படி பேச வைத்தது என்று கணவனுக்கு எப்படி புரிய வைப்பாள்..? ஆணின் இனம் அது கிளை மாதிரி.. பெண்ணின் இனம் அது வேர் மாதிரி.. கிளை பேசினால் ஊர் கேட்குமே.. வேர் பேசினால் அதை யார் கேட்பது..? எல்லாம் இந்த காதல் செய்யும் மாயம்.. வெண்ணிலவும் என்னை போல தேயும்..