மறந்து போ என் மனமே

அத்தியாயம் 2

வெண்மதியின் அம்மா சில மாதங்களுக்கு முன்பு திடிரென்று தவறிவிட… மூத்த மகள் கஜலக்ஷ்மியை மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு சில நாட்கள் அவள் அங்கே பிறந்த வீட்டிலேயே தங்கி, அவள் அப்பாவை பார்த்துக் கொண்டாள். 


இவள் இருப்பது திருவெற்றியூர் அவள் அம்மா வீடோ தாம்பரத்தில்…. தினமும் போய் வரும் தூரம் இல்லையென்பதால்…  அங்கேயே அப்பாவுக்கு ஆறுதலாகத் தங்கி இருந்தாள். 


சில நேரம் கணவனை அழைத்துப் பேசலாம் என அவள் அவன் கைபேசிக்கு முயன்றால், அவன் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருப்பான். ஒருமுறை பேசும் போது, “அப்படி யாருகிட்டங்க பேசுவீங்க? எப்ப போன் போட்டாலும் பிஸியா இருக்கு.” என்றதற்கு வாடிக்கையாளர்கள் கிட்ட தான், வேற யார்கிட்ட பேசுவாங்க என்றான். பிறகு இவள் அழைக்கும் சமயங்களில், அவன் இவள் அழைப்பை உடனே ஏற்றான். 


அவள் அப்பா இனி அவள் அக்காவோடு மதுரையில் சென்று தங்குவதாக இருந்தது. அவருக்கு ஏற்கனவே நெஞ்சு வலி இருப்பதால்… தனியாக விட அவரின் பெண்கள் விரும்பவில்லை. 


இங்கே இவள் கூட்டுக் குடும்பமாக இருப்பதால், அவள் அப்பாவை இங்கே வைத்துப் பார்த்துக்கொள்ள முடியாது. அவள் அக்கா தனிக்குடித்தனம் தான். அதனால் அவள் பார்த்துக்கொள்வதாகச் சொன்னாள். 


அம்மாவின் காரியம் முப்பதாவது நாள் முடிய… பிறகே எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தனர். வாடகை வீடுதான் இருந்தாலும், பல வருடங்களாக இருந்த வீடு…. சாமன்களை எல்லாம் பிரித்துக் கட்டுவது. பிறகு இருந்த மற்ற வேலைகளை எல்லாம் முடித்து, அவளின் அப்பா அவரின் மூத்த மகள் வீட்டிற்குச் செல்ல… பிறகே வெண்மதி இங்கு வந்தாள். 


வீட்டிற்கு வந்தபிறகு கணவன் தன்னிடம் மிகுந்த அன்பாக இருக்க… ஒருவேளை இத்தனை நாள் பிரிவு தங்கள் அன்பை அதிகரித்ததாகவே நினைத்து மகிழ்ந்து போனாள். ஆனால் தான் செய்யும் தவறு அல்லது  துரோகத்தை மறைக்கவே கணவன் தன்னிடம் அன்பாக நடந்து கொள்கிறான் என அந்தப் பேதைக்குப் புரியவில்லை. 


வீட்டில் மாமியார் நாத்தனார்கள் ரகசியம் பேசுவதும், பிறகு இவள் வந்ததும் முகத்தைப் பாவமாக வைத்துக்கொள்வதைப் பார்த்துக் குழப்பமாக இருந்தது. இவர்கள் ஏன் தன்னைப் பரிதாபமாகப் பார்க்கிறார்கள் எனப் புரியவில்லை. 


ஒருநாள் பிள்ளைகள் பள்ளி சென்றதும் மார்க்கெட் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது இளமாறனின் நண்பன் டேவிட், “உன்கிட்ட ஒன்னு சொல்லணும் வெண்மதி.” என்றான். அப்போதும் அவள் பெரிதாக ஒன்றும் நினைத்து விடவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் டேவிட் அவள் தலையில் இடியை இறக்கி இருந்தான். 


“இளமாறனின் நடவடிக்கை சரி இல்லை. அவன் வேற ஒரு பொண்ணு கூட அடிக்கடி போன்னில் பேசுறான். எந்த அளவுக்குப் பழக்கம் தெரியலை. நீ எதுக்கும் பார்த்து இருந்துக்கோ.” என எச்சரித்து விட்டுச் சென்றான். 


எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்றே தெரியாது. வெண்மதிக்கு இருப்பே கொள்ளவில்லை. வீட்டில் ஒரு இடத்தில் இருக்காமல் நடந்து கொண்டே இருந்தாள். 


அவள் பெற்றோர் வீட்டில் இருந்து அழைத்தபோது, அவன் எண் எப்போதும் பிஸியாகத் தானே இருக்கும். ஓ… இதுதான் காரணமா என நினைத்தவள், கைப்பேசியில் கணவனை அழைத்து, “உடனே வீட்டுக்கு வாங்க.” என்றாள். 


“இப்ப வர முடியாது சாப்பாடுக்கு வரேன்.” என வைக்கப் போனவன், 


“இப்ப நீங்க இங்க வரலைனா… நான் அங்க வருவேன்.” என்றதும், உடனே கிளம்பி வீட்டிற்கு வந்திருந்தான். 


வெண்மதி அவர்கள் அறையில் இருக்க…. இளமாறன் வந்ததும் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். 


“நீங்க என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க. எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா… யாரு அவ?” என எடுத்ததும் வெண்மதி நேரடியாகக் கேட்க, 

“யாரு? என்ன உளர்ற?” என இளமாறன் புரியாதது போலக் கேட்க, 


“எதோ புதுப் பழக்கம் இருக்காமே… நான் ரெண்டு மாசம் எங்க அம்மா வீட்ல இருந்ததுகுள்ள… இங்க வேற ஒரு பொண்ணு பார்த்தாச்சு…. உங்களுக்கு வெட்கமா இல்லை… இதையே நான் செஞ்சா ஒத்துபீங்களா?” எனக் கேட்டதும், இளமாறன் சட்டென்று வெண்மதியின் கன்னத்தில் அறைந்து விட… 


“வெறும் வாய் வார்த்தையா சொன்னதுக்கே வலிக்குது இல்ல…. எனக்கு எப்படி இருக்கும்? யாரு அவ? எங்க இருக்கா?” என வெண்மதியின்  கோபத்தைப் பார்த்து இளமாறன் அரண்டு போனான் என்றால் மிகையல்ல… 


“அப்படியெல்லாம் எதுவும் கிடையாது, யாரு சொன்னா உனக்கு?” என, வெண்மதி அவனை நம்பாமல் பார்க்க… 


“அதெல்லாம் எதுவும் இல்லை.” எனச் சாதித்தவன், 


“சாப்பாடு எடுத்து வை, சாப்பிட்டே கடைக்குப் போறேன்.” எனச் சென்று கட்டிலில் படுத்துவிட… வெண்மதி இருந்த மனநிலையில் எதுவும் சமைக்கவில்லை. சாதம், ரசம் வைத்து முட்டை ஆம்லெட் மட்டும் போட… இளமாறன் உண்டுவிட்டு கடைக்குச் சென்றுவிட்டான். 


வெண்மதிவுக்கு இவனை நம்புவதா வேண்டாமா என ஒரே குழப்பம். அவர்கள் இருவரும் அறைக்குள் சண்டையிட்டது வெளியே வரை கேட்டிருக்க… சண்டைக்கான காரணமும் விளங்கியது. வசந்தா உடனே அதைத் தன் இரு மகள்களுக்கும் கைப்பேசியில் அழைத்துச் சொல்லிவிட்டார். 


“அவளுக்கு எப்படி மா தெரிஞ்சது?” மணிமேகலை கேட்க, 


“நம்மகிட்ட சொன்ன மாதிரி அவகிட்டையும் யாராவது சொல்லி இருப்பாங்க.” என்றார். 


அன்று இரவு வீட்டிற்கு வந்தவனுக்கு வெண்மதியே உணவுப் பரிமாற… தன்னை நம்பிவிட்டாள் என இளமாறன் நினைத்திருக்க… ஆனால் நடந்ததோ வேறு…. படுக்க அறைக்கு வந்தவனை, உறங்கிக் கொண்டிருந்த மகள்களின் தலை மீது கை வைத்து, வேறு எந்தத் தொடர்பும் இல்லையெனச் சத்தியம் செய்யச் சொல்ல…. இளமாறனுக்கு மிகுந்த அதிர்ச்சி. 


“குழந்தைங்க மேல எல்லாம் சத்தியம் கேட்பியா? அவ்வளவு கூட நம்பிக்கை இல்லையா… நான் பண்ண மாட்டேன்.” என்றவன், கோபித்துக் கொண்டு மாடியில் இருந்த அறையில் சென்று படுத்துக் கொண்டான். 


தன் மீது தவறு இல்லையென்றால் சத்தியம் செய்வதற்கு என்ன? அவனைப் பற்றித் தான் கேள்விபட்டது உண்மை தானோ என வெண்மதிக்கு சந்தேகம் வந்தது.  


கணவனின் துரோகத்தைத் தாங்க முடியாது… இரவெல்லாம் அழுதே கரைந்தாள். தான் இருக்கும் போதே தன் கணவன் இன்னொரு பெண்ணை நாடுகிறான் என்றால்… ஒரு மனைவியாகத் தான் தோற்று போனதாகவே நினைத்தாள். 


வாழவே பிடிக்கவில்லை. ஆனால் தன் இரு மகள்களுக்காக வாழ வேண்டுமே அடுத்து என்ன செய்வது என ஒன்றும் புரியாத நிலை. 


மறுநாளில் இருந்து இளமாறன் எப்போதும் போலவே இருந்தான். முன்தினம் அவர்களுக்கு இடையே எதுவும் வாக்குவாதம் நடந்தது போலவே அவன் காட்டிக்கொள்ளவில்லை. அவன் வீடு கடை என்று மட்டும் இருக்க… அவன் மீது எப்போதும் கண்ணை வைத்திருந்த வெண்மதிவுக்கு ஒருவேளை டேவிட் தான் தவறாகச் சொல்லிவிட்டானோ என்று கூட நினைத்துவிட்டாள்.
ஆமாம் அப்படித்தான் இருக்கும் எனத் தனக்கே சமாதானம் செய்து கொண்டாள். 


இனியும் கணவன் வேறு யார் பக்கமும் போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் இளமாறனுக்குப் பிடித்த வகையில் உணவு சமைத்து, வீட்டில் இருக்கும் போதும் புடவை கட்டி எனக் கணவனுக்குப் பிடித்த விதமாக நடந்துகொள்ள… கணவனும் மனைவியிடம் மிகவும் அனுசரணையாகவே நடந்து கொண்டான். 


பிள்ளைகளுடன் ஒரே அறையில் உறங்குவதால்… அவர்கள் கூடல் என்பது இருட்டுக்குள் அவசரமாக நடந்து முடிந்து விடும்.

வீட்டில் மாமனார் மாமியார் இருப்பதால் பகலில் தனிமையை நாடி அவர்கள் அறைக்குச் செல்ல மாட்டார்கள். அதுவும் வசந்தா சரியாக இளமாறன் வரும் நேரம் ஹாலில் தான் உட்கார்ந்து இருப்பார். இத்தனைக்கும் முன்பே உண்டு முடித்திருப்பார். ஆனாலும் டிவி பார்ப்பது போல, மகன் மருமகள் என்ன பேசுகிறார்கள் எனக் காதை இங்கே தான் வைத்திருப்பார். 


அன்று அதையெல்லாம் பார்க்கும் நிலையில் அவள் இல்லை. மதிய உணவுக்கு வந்த கணவனை உண்டு முடித்ததும், கடைக்குச் செல்ல வெண்மதி விடவில்லை. 


உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் எனச் சொல்லிவிட்டு வந்தவள், அவன் அறைக்கு வந்ததும் கதவை சாற்றித் தாழிட்டாள். கணவனோடு கட்டிலுக்குச் செல்ல…. என்னவோ எனப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குப் புரிந்து விட்டது. 


“இப்பவா? வெளிய அம்மா இருக்காங்க. அதுவும் இப்ப தானே சாப்பிட்டோம்.” என அவன் சொன்ன காரணங்கள் எல்லாம் ஏற்கப்படாமல் போக… மனைவியின் விருப்பதிற்காகக் கூடலை ஆரம்பித்தவன், பிறகு அவளில் மூழ்கியே போனான். 


அவனின் விருப்பத்திற்கு எல்லாம் வளைந்து கொடுத்து, கணவனின் மகிழ்ச்சி குறையாமல் பார்த்துக் கொண்டாள்.