மஞ்சள் காட்டு மைனா 27 1 9199 மஞ்சள் காட்டு மைனா 27 ‘இப்போ இவளுக்கு இந்த பேர் வைச்சது தான் பிரச்சனையா என்ன?’ தேவா நம்ப முடியாமல் மனைவியை பார்த்தான். துளசி மனது ஆறாமல், “இதெல்லாம் பேரா? போந்தா கோழியா நான் உங்களுக்கு? இதுல நீங்க என்னை காதலிச்சேன்னு வேற சொல்றீங்க?” என்று கேட்க, ‘காதலிச்சேனா? ஏன் இப்போ நான் அவளை காதலிக்கலையா?’ கணவனுக்கு முகம் உர்ரென ஆனது. “ஏய். அவன் உன்னை ஏமாத்துறான்னு சொல்றேன். நீ அவன் வைச்ச பேரை பத்தி பேசிட்டு இருக்க? உனக்கு இதுவா இப்போ முக்கியம்” என்று சுந்தரம் கடுப்பாகி கேட்க, “எனக்கு இது தான் முக்கியம்” என்றாள் துளசி. “உனக்கு போய் இத்தனை சொத்தை எழுதிவைச்ச அந்த கிழவன் மட்டும் கையில் கிடைச்சா?” என்று சுந்தரம் பல்லை கடிக்க, “தாத்தாவை மரியாதை இல்லாம பேசாதீங்க” என்று எச்சரித்தாள் துளசி. “உன்பேர்ல இருக்கிற சொத்துங்களோட மதிப்பு தெரியுமா உனக்கு? கேவலம் பேருக்கு போய் சண்டை போட்டுட்டு இருக்க? பணத்தை தூக்கி போட்டா உலக அழகியே நீதான்ன்னு சொல்ல வைக்க முடியும். அந்தளவு கூட அறிவு இல்லாம“ “நாக்கை அடக்குங்க சுந்தரம்” என்றான் தேவா. “உங்களுக்கு அறிவு இருந்திருந்தா நீங்க இன்னைக்கு இப்படி நின்னிருக்க மாட்டீங்க” என்றுவிட, “தேவா” என்று சுந்தரம் கோவத்தில் கொதித்தார். “கேட்பேன். என் பொண்டாட்டியை பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கணும். லாயர் துளசி. அவள் போட்டிருக்குற கருப்பு கோர்ட் ஒன்னு போதும், உங்களை காலத்துக்கும் கம்பி எண்ண வைக்க முடியும்” “என்ன மிரட்டுறியா? உன் பொண்டாட்டி போட்டிருக்கிற கருப்பு கோர்ட்டை கழட்ட வைக்கிறேன் பார்க்கிறியா?” “அதுக்கு முதல்ல நீங்க சுதந்திரமா நடமாடணும். எல்லாம் ரெடி பண்ணியாச்சு. இனியும் உங்களை விட்டு வைக்க மாட்டேன். உங்க விரல் வைச்சே உங்க கண்ணை குத்தி காட்டுறேன்” என்றவன், “இவர்கிட்ட கடைசியா எதுவும் பேசணும்ன்னா பேசிக்கோ. எந்த ஜெயிலுக்கு போக போறார்ன்னு தெரியாது” என்றான் மனைவியிடம். “நன்றி மட்டும் சொல்லணும்” என்றாள் துளசி. எந்த காலத்திலும் இவர் யாருடைய நன்றிக்கும் தகுதியில்லாதவர் ஆயிற்றே! “என் அப்பாவோட கணக்கு என்னைக்கும் தப்பாதுன்னு நிரூபிச்சதுக்கு நன்றி” என்றாள் துளசி. “அப்பா பொண்ணுடி நீ!” தேவா மனைவியை மெச்சினான். “ம்ஹூம். அவர் பொண்ணா இருந்திருந்தா நான் ஏமாந்திருக்க மாட்டேன். என் அப்பா தள்ளி வைச்ச உறவை நான் தேடி போயிருக்க கூடாது” என்றாள் துளசி. “நீ தேடி போகலை. அவங்க தான் உன்னை தேடி வந்தாங்க. புதையலை கண்டிபிடிச்சா மட்டும் போதாது. பாதுகாக்கவும் தெரியணும்” என்றான் தேவா. சுந்தரம் எதுவும் பேச முடியா நிலை. துளசி நிச்சயம் அவரின் புதையல் தான். அதனாலே அவசரத்தில் எடுத்த முடிவு மகனை விட்டு துளசியை வற்புறுத்தியது. ஆனால் அதுவே அவருக்கு வினையாகியும் போனது. “கூடிய சீக்கிரம் சந்திப்போம். என்னோட கிளையண்டா இல்லை. குற்றவாளியா!” என்ற தேவா மனைவியுடன் வெளியே வர, கதவுக்கு அருகிலே பசுபதி, வைரவேல் நின்றிருந்தனர். உடன் சில ஆட்களும். “நினைச்சேன்” என்றான் தேவா. துளசி ஆச்சரியம் கொண்டாள். “கிளம்பலாமா?” என்று நால்வரும் காருக்குள் ஏறினர். பின்னால் அந்த ஆட்கள் தனி காரில் தொடர்ந்து வர, “தேவையில்லாத வேலை” என்றான் தேவா. “சுந்தரம் மேல எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சிக்கிற மாதிரி சிக்கி வேற எதாவது கூட திட்டம் போட வாய்ப்பிருக்கு” என்றார் பசுபதி. “இந்த இடத்தை எப்படி கண்டுபிடிச்சீங்க?” தேவா சந்தேகமாக சித்தப்பாவை காண, “உன் மொபைல் வைச்சு தான்” என்றார் பசுபதி. “லாயரையே டிராக் பண்றீங்களா? நான் கேஸ் கொடுத்தா என்னாகும்ன்னு தெரியுமா?” “அடேங்கப்பா. பயந்துட்டோம் என்னண்ணா?” வைரவேல் நடுங்குவது போல் பாவனை செய்தார். “நடுங்காமலா என்னை தேடி ஓடி வந்தீங்க?” தேவா கெத்தாக கேட்க, “இந்த நினைப்பு வேற இருக்கா? இவனை தேடி இங்க யாரும் ஓடி வரலை. மருமகளை தேடித்தான் நாம வந்தோம்ன்னு சொல்லுங்கண்ணா“ “ப்பா” என்று மகன் காண்டாக, “சரியில்லாத இடத்துக்கு, ஒரு கிரிமினலை பார்க்க துளசியை கூட்டிட்டு வந்திருக்கான். கூறு இருக்கவன் இந்த வேலையை செய்வானா?” என்று வைரவேல் கேட்டார். “மாமா. நாந்தான் வரேன்னு சொன்னேன். அவர்மேல் தப்பு இல்லை” என்று துளசி சொல்ல. “நீ சொன்னா செஞ்சிடுவானா? அப்போ சரி. இனிமேல் கிரிமினல்களுக்கு ஆதரவா கேஸ் எடுக்க மாட்டேன்னு அவனை சொல்ல சொல்லு பார்ப்போம்” என்று வைரவேல் சவால்விட, “சொல்வியாடி” என்று மனைவியை உறுத்து பார்த்தான் தேவா. “அவன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாத துளசி. நீ சொல்லு. அவன் கேட்கட்டும்” “எதே. இவ எனக்கு பயப்படுறாளா? என் உள்ளங்கையை நல்லா பார்த்துட்டு பேசுங்க” என்று துளசி பேனாவால் குத்திய கையை தூக்கி காட்ட போக. “ஏங்க, என்ன செய்றீங்க?” என்று துளசி பாய்ந்து அவன் கைப்பற்றி தன் இரு கைகளுக்குள் மறைத்து கொண்டாள். மாமனார் என்ன நினைப்பார்? பெண்ணுக்கு சங்கடம். “உங்க சண்டையில எதுக்கு துளசியை இழுக்கிறீங்க? நீ விடும்மா. இவங்களுக்கு இதே வேலை தான்” என்று பசுபதி மருமகளின் சங்கடத்தை தீர்த்து வைத்தார். “அடுத்து என்ன பண்ண போற தேவா?” என்று மகனிடம் கேட்டார் தந்தை. “ஏற்கனவே சந்தோஷ் மேல துளசி, சுவாதி கொடுத்த கேஸ் இருக்கு. சுந்தரத்துக்கு செக் வைச்சே ஆகணும்ப்பா. அப்பனும், மகனும் கொஞ்சம் திமிறினாலும் இழுத்து பிடிக்க வலுவான பிடி வேணும்“ “என்ன யோசிச்சிருக்க?” “ஆனந்தி மேடம்கிட்ட பேசணும். அவங்க இப்போ இந்தாள் மேல கழுத்து வரைக்கும் இருக்காங்க. இவங்களை ஏதோ செய்ய நினைச்சிருக்கார். தெரிஞ்சு தான் ஆனந்தி மேடம் பாதுகாப்பான இடத்துக்கு மூவ் ஆயிட்டாங்க“ “மத்ததுல எப்படியோ புருஷன், பொண்டாட்டியா நல்லா தானே இருந்தாங்க” என்று பசுபதி கேட்க, “புருஷனை விட அப்பா ஸ்தானத்துக்கு பவர் அதிகம்ண்ணா” என்றார் வைரவேல். “சந்தோஷுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தே ஆகணும்ன்னு போராடி அவனை மெட்ராஸ் கூட்டிட்டு போனது ஆனந்தி மேடம் தான். சுந்தரமும் கேஸ் இருக்க போய் மகனை நல்லவன்னு நிருபிக்க ட்ரீட்மெண்ட் எடுத்துகிறது நல்லதுன்னு அனுப்பி வைச்சுட்டார்“ “ஆனா தேவா, துளசி கல்யாண விஷயம் தெரிஞ்சு சந்தோஷ் அங்கிருந்து தப்பிச்சுட்டான். சுந்தரமும் கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட் துளசியை தூக்கணும் இல்லை தேவாவை எதாவது செஞ்சே ஆகணும்ன்னு ஏற்பாடு பண்ணிட்டார்“ “இடையில சந்தோஷ் காணலை. காரணம் தேவா” என்றார் வைரவேல். “நீங்களா? சுவாதி அப்பாகிட்ட தானே அவன் இருக்கான்” என்று துளசி அதிர்ந்து கேட்க, “அவர் கட்டுப்பாட்டுல தான் இருக்கான். ஆனா சந்தோஷ் எங்கிருக்கான்னு கண்டுபிடிக்க தேவா உதவினான்” வைரவேல் சொன்னார். “தேவா நீயா? அன்னைக்கு நைட் நீ ரூமுக்குள்ள போனவன், காலையில தானே வெளியே வந்த?” பசுபதி கேட்டார். “ப்பா. எனக்கு முதல்ல இருந்தே சந்தோஷ் மேல நம்பிக்கை இல்லை. டிராக்கர் வைச்சிருந்தேன். சுவாதி அப்பா அவனை தூக்கவும் அந்த டிராக்கர் தான் உதவிச்சு” தேவா சொல்ல, “அப்போ உன்மேல மட்டும் தானே கோவப்படணும், ஆனந்தி என்ன பண்ணுச்சு? கல்யாணத்துக்கு வந்ததா? இல்லை நகை கொடுத்ததா?” பசுபதி புரியாமல் கேட்டார். “கல்யாணத்துக்கு வந்தது, நகை கொடுத்ததும் சுந்தரத்துக்கு பிடிக்கலை தான். ஆனா அவர் கோவத்துக்கு காரணம் வேற. சந்தோஷுக்கு டிராக்கர் வைக்க உதவினது ஆனந்தி மேடம்“ “உண்மையாவாங்க” துளசி கண்களை விரித்தாள். “ஆமா. மகன் எனக்கு உயிர். ஆனா அவன் என் அண்ணா பொண்ணு வாழ்க்கையில விளையாட விட மாட்டேன்னு சொன்னாங்க” தேவா சொல்ல, துளசி அத்தையை நினைத்து நெகிழ்ந்து போனாள். “சரவணன் ரத்தம் ஆனந்திக்கும் உண்டு தானே” என்றார் பசுபதி. “சுந்தரம் நல்லவர் இல்லைன்னு ஆனந்தி மேடம்க்கு தெரியும். வட்டி கொடுக்கிறது மட்டும் தான் ஆனந்தி மேடத்தோட அப்பா செஞ்சது. ஆனா சுந்தரம் உள்ள வந்து கட்ட பஞ்சாயத்து, கருப்பு பணம்ன்னு நிறைய. அப்படியும் புருஷனோட முழு மனசா தான் வாழ்ந்தாங்க. அவருக்கு சப்போர்ட் பண்ணாங்க. ஆனா அவர், ஒரு உதவாக்கரை மகனுக்காக ஆனந்தி மேடத்தை பகைச்சுக்கிட்டார். மகனை திருத்தி, மனைவியோட சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம்” என்றான் தேவா. ஆனந்தி மீது அவனுக்கு எப்போதும் நல்ல அபிப்ராயம் உண்டு. சுந்தரம் ஏமாற்றிய எத்தனையோ பேருக்கு தேவா வழியாக ஆனந்தி உதவி செய்திருக்கிறார். “ஆனந்திக்கு நாம துணை நிக்கணும் தேவா” என்றார் பசுபதி. “பெரியவர் காலத்துல இருந்து ஆனந்தி மேடத்துக்கு விசுவாசமான ஆளுங்க இருக்காங்க. சுந்தரத்தை அவங்களே பார்த்துப்பாங்க. சட்டம்ன்னு வந்தா நான் இருக்கேன்ப்பா” என்றான் மகன். “நல்லது தேவா” என்று பசுபதி சொல்ல, அவர்கள் வீடும் வந்துவிட்டது. “காலையிலே எங்க போயிருந்தீங்க?” என்று ஜெயலட்சுமி நால்வரையும் கேட்டார். “போன் பண்ணாலும் எடுக்கலை. ஏதும் பிரச்சனையா?” என்று மாலதி கவலையாக வினவ, “சுந்தரத்தை பார்க்க போனோம்” என்றார் பசுபதி. “ப்பா” என்று மகன் ஆட்சேபிக்க, “தெரியணும் தேவா. அவங்களும் உஷாரா இருக்கிறதோடு, நாளைபின்ன ஏதும்ன்னா சமாளிப்பாங்க” என்றார். அம்மாவும், சித்தியும் பயப்படுவார்கள் என்று மறுத்த தேவா, அப்பாவின் விளக்கத்தை ஏற்று கொண்டான். “துளசி” என்று வளர்மதி வேகமாக வந்தவர், நால்வரையும் ஆராய்ந்து ஆசுவாசம் கொண்டதுடன், “என்ன தேவா?” என்று மருமகனிடம் கேட்டார். “நாங்க தான் அண்ணிக்கு போன் பண்ணி அங்க ஏதும் இருக்கீங்களான்னு கேட்டோம். நீங்க யாரும் போன் எடுக்கலை அதான்” என்றார் ஜெயலட்சுமி. “சொல்லிட்டு போயிருக்கணும். எங்க தப்பு தான் அண்ணி” என்ற வைரவேல், எல்லாவற்றையும் வளர்மதிக்கு சொன்னார்.