“இப்போ எதுக்கு கோவமா இருக்கணும் சொல்றீங்க? நான் காபி எடுத்துட்டு வரவான்னு தானே கேட்டேன்” துளசி புரியாமல் கேட்டாள்.
“உனக்கு புரியவே வேணாம். நீ முதல்ல தள்ளி நில்லு” என்று தேவா அவளை விலக்கிவிட்டான்.
“ம்ஹூம். கிட்ட வராத. நான் கடுப்பாகிடுவேன்” என்று திரும்ப அருகில் வருபவளை நிறுத்தினான்.
“சரி நான் வரலை. நாம கோவிலுக்கு இன்னொரு நாள் போயிக்கலாம்” என்றாள் துளசி.
“அதான் ஏன்னு நானும் கேட்கிறேன்?”
“காரணம் சொன்னாதான் ஆச்சா? ஏன் இப்படி படுத்துறீங்க?” துளசி கோபத்துடன் திணறினாள்.
“சரி. நீ போய் எனக்கு கொஞ்சம் காபி எடுத்துட்டு வா. தலை வலிக்குது” என, துளசி உடனே காபி எடுக்க சென்றாள்.
இவர்களுக்காக தேவாவின் குடும்பம் மொத்தமும் காத்திருக்க, “எங்கம்மா தேவா?” என்று பசுபதி கேட்டார்.
“ரூம்ல இருக்கார் மாமா” என்றவள் கிட்சன் சென்று கணவனோடு சேர்த்து மொத்த குடும்பத்துக்கும் காபி கலந்தாள்.
“துளசி. லேட் ஆகுதுன்னு உன் மாமியார் டென்சன் ஆகுறாங்க. நீ என்னடான்னா பொறுமையா காபி போடுற. ரூம்ல வைச்சு வேற ஏதோ சொல்ற. என்ன துளசி இது?” என்று வளர்மதி மகளின் பின் வந்து சத்தமிட்டார்.
“ம்மா. என்னை எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ். கோவிலுக்கு இன்னைக்கு போக வேண்டாம்மா. நான், நானே அவரோட வந்து பேசுறேன்” என்றவள் வீட்டினருக்கு கொடுத்து அதன் பின்னே தேவாவிற்கு எடுத்து சென்றாள்.
“அண்ணி. ஏதோ சரியில்லை. கொஞ்சம் பொறுமையா கிளம்பலாம். நான் கோவிலுக்கு பேசிட்டேன். லேட்டா போனாலும் பிரச்சனை இல்லை” என்று வைரவேல் சொல்லியிருக்க, ஜெயலட்சுமியும் அமைதி காத்தார்.
“ச்சு. போனை எடுத்துட்டு போயிருக்கணும்” பெண் முணுமுணுத்து கொண்டாள்.
“அந்தாள் தான் ஏதோ மிரட்டுறார்ன்னா நீயும் பயந்துட்டு உட்கார்ந்திருக்க. என்னடி இதெல்லாம்?”
“அவர் சும்மா மிரட்டுற மாதிரி தெரியலை. நம்ம வேன் ட்ரைவர் பேசின ஆடியோ கேட்டீங்க இல்லை. அவர் சுந்தரம் மாமாவோட ஆள். அப்புறம் மில்லுக்குள்ளும் வெடி வைக்கிற போட்டோ அனுப்பியிருக்கார்”
“அதனால?”
துளசி ஆயாசத்துடன் கணவனை பார்க்க, “சரி. நமக்கு லேட் ஆச்சு. நாம கோவிலுக்கு போய்ட்டு வந்து இதை பேசிக்கலாம்” என்று அறையை விட்டு வெளியேற போக,
“நீங்க இப்படி தான்னு பேசுவீங்கன்னு எனக்கு தெரியும். அதனால தான் உங்களுக்கு நான் சொல்லலை”
“தெரியுது இல்லை. கிளம்பு போலாம்”
“உங்களோட தைரியம் எனக்கு இல்லை. நாம போகலை” என்றாள் துளசி அடமாக நின்றபடி.
“படுத்துறா” தலை கோதி கொண்ட தேவா, திரும்ப வந்து கட்டிலில் அமர்ந்தான்.
“காபி குடிங்க” என்று மனைவி நீட்ட, உடனே எடுத்து கொண்டான்.
“நான் போலீசுக்கு பேசிட்டேன். இப்போவாவது வருவியா?” என்று கேட்க,
“போற வழியில ஏதும் பண்ணிட்டா?”
“உன்னை நான் பத்திரமா பார்த்துகிறேன்டி”
“வைரவேல் மாமாக்கு பண்ணப்போ உங்களால அவரை காப்பாத்த முடிஞ்சதா?”
தேவா கோவத்தில் அறைக்குள்ளே நடக்க ஆரம்பித்தான்.
“நீங்களும், சட்டமும் எல்லாம் நேரமும் காப்பாத்த முடியாதுன்னு ஒருமுறை நீங்களே தான் சொன்னீங்க”
“இப்போவும் நான் தான் சொல்றேன். என்னால உன்னை காப்பாத்த முடியும்”
“என்னை விட்டுடுங்க. நீங்க, உங்க குடும்பம், அண்ணிங்க குழந்தைங்க எல்லாம் இருக்காங்க. வேணாம்ங்க. ரிஸ்க் எடுக்க வேண்டாம், அவர் மகன் காணாமல் போன கோவத்துல அவர் வெறிபிடிச்ச மாதிரி நடந்துகிறார்”
“நம்பலை. ம்ம். என்னை நம்பாதவ ஏண்டி என்னை கட்டிகிட்ட?” என்று அவளின் முகத்துக்கு நேரே வந்து சீறினான்.
“நம்பிக்கை விஷயம் இல்லை. நாம பாதுகாப்பா இருக்கணும்ன்னு நினைக்கிறேன்”
“பாதுகாப்பு இருக்காதுன்னு நீ சொல்றதே என்மேல நம்பிக்கை இல்லாம தான்”
“இல்லைங்க. நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க”
“முடியாது. இப்போ நீ என்னோட கிளம்பி வர. இல்லை” என்று வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்த,
“இல்லைன்னா? இல்லன்னா என்ன செய்வீங்க?” என்று கோபத்துடன் கேட்டாள்.
“தெரியாது. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றான் தேவா.
“உனக்கு புருஷன் ஆக முன்னாடியே உன்னை பத்திரமா என் உள்ளங்கைக்குள்ள வைச்சவன்டி நான். இப்போ எப்படி உன்னை விட்டுடுவேன்? என் குடும்பத்தை விட்டுடுவேன். ஆஹ்ன்?”
துளசிக்கு கண்கள் கலங்கி போனது. முகத்தை திருப்பி கொண்டாள்.
“ஹேய் இங்க பாருடி” அவள் கன்னத்தை பற்றி தன்னை பார்க்க வைத்தவன், “உடனே நாம கோவில் கிளம்புறோம். என்மேல நம்பிக்கை இருந்தா கிளம்பி வா. இல்லை போ. உனக்கு என்ன செய்யணுமோ செய்” என்றான்.
துளசி கணவன் கண்களை பார்த்தபடி, “அப்படி ஏதும் நடந்தா என்னை விட்டுடுங்க. உங்களை, உங்க குடும்பத்தை பாதுகாப்பா வைச்சுக்கோங்க. போதும்” என்று அவன் கை விலக்கி ஓய்வறை சென்றாள்.