அத்தியாயம் – 8

அச்சுதனுக்கு, தனுஜாவின் அப்பா கூறிய வார்த்தைகளே மனதினில் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டு இருந்தது. நேற்றைய இரவு மாத்திரையின் உதவியால் உறங்கியவனுக்கு, விடியல் தாமதமாகவே இருக்க, என்னவோ அவனையும் மீறிய ஒரு சோர்வு. மனதிலும் உடலிலும்.

நேற்றைய மாலை வரைக்கும் தனுஜாவின் வீட்டினில் தான் இருந்தான். ஏன் இருக்கிறோம் என்று அவனுக்கும் தெரியவில்லை. ஆனாலும் இருந்தான். தன்னோடு இணைந்து, மீதமிருக்கும் வாழ்வை  வாழ இருந்த ஒரு ஜீவனின் கடைசி நேரமாக கூட இது இருக்கலாம் என்ற நினைப்பில் அங்கே இருந்தான்.

இதெல்லாம் எப்படியான மன உணர்வுகள் என்று அதை அனுப்பவிப்பவர்களுக்குத்தான் தெரியும். அச்சுதனோ மரத்துப்போன ஒரு நிலையில் அங்கே இருக்க, மாலை ஏழு மணிக்கு மேலே கொஞ்சம் கொஞ்சமாய் தனுஜாவின் பல்ஸ் இயல்பிற்குத் திரும்பிக்கொண்டு இருக்க, நர்ஸ் வந்து தகவல் சொல்லவுமே, அனைவரும் மீண்டும் அறைக்கு விறைய, மருத்துவருக்கும் தகவல் சொல்லப்பட, அடுத்த சில நிமிடங்களில் அவரும் வந்துவிட்டார்.

மீண்டும் பரிசோதனை செய்துவிட்டு, நர்ஸ் கூறிய விபரங்களை கூறியவர் “ம்ம்.. இம்ப்ரூவ்மென்ட்னு சொல்ல முடியாது. இதுவரைக்கும் பல்ஸ் கம்மியாகல.. இப்போ ஆகிருக்கு.. தென் நார்மல் ஆகிருச்சு. இனி அடிக்கடி இப்படி நடக்க வாய்ப்பிருக்கு…” என்று சொல்லிவிட்டுச் செல்ல,

மகேந்திரனோ அச்சுதனிடம் “நீ கிளம்பு அச்சுதா.. உன்னோட மனவோட்டம் எங்களுக்கு புரியாம இல்லை. ஆனா உங்கம்மாவை நினை.. பாவம் எத்தனை சிரமங்கள் தெரியுமா அவங்க பார்த்தது.. உங்கப்பா இழப்பை கூட ஒதுக்கி வச்சிட்டு உன்னை இப்போ சரி படுத்தி நிறுத்தி இருக்காங்க..” என, அந்த வார்த்தைகள் அவனை அசைக்க, கடைக்கு சென்றுவிட்டு தான் வீட்டிற்கு வந்தான் அச்சுதன்.

மகன் வந்ததுமே நீலவேணிக்கு சற்று நிம்மதி மூச்சு.

மறுநாள் அவன் ஓய்வாய் வீட்டினில் இருக்கட்டும் என்று அவர் எப்போதும் கடை திறக்கும் நேரத்தில் சரியாய் நகை கடைக்கு சென்றுவிட, அச்சுதன் நல்ல உறக்கத்தில் இருந்து மெல்லவே எழுந்தான்.

எழுந்தவனுக்கு அப்படியொரு அசதி..

மனதினில் ஒரு உத்வேகமே இல்லாதது போல இருக்க, காலை உணவை முடித்தவன், தனக்கு தானே ப்ரெஷர் செக் செய்துவிட்டு, சிறிது நேரம் தோட்டத்தில் நடந்தவன், அம்மா அழைக்கவும் பேசிவிட்டு வந்து மாத்திரை போட்டவன், அங்கே தோட்டத்தில் கூட்டமாய் நடந்துகொண்டு இருந்த வாத்துக்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

பின்னே அவன் வீடுகள் சுற்றி, தோட்டம் மட்டும் வைக்கவில்லை.. அங்கே உலாவிட என்று பறவைகளும் வளர்த்துக்கொண்டு தான் இருக்கிறான். நாட்டு கோழி வகைகள் ஒருபுறம். வாத்துகள் ஒருபுறம்.. வான் கோழி சிலது என்று வளர்க்க, இது போதாது என்று லவ் பேர்ட்ஸ் வாங்கி வந்துவிட்டான் அர்ஜுன்.

பெரிய கூண்டு வைத்து லவ் பேர்ட்ஸ் வளர்க்க, அச்சுதனை கண்டதுமே அவைகள் வேறு கீச் கீச் என்று சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்தது.

வாத்துக்களை கண்டுகொண்டு இருந்தவன், பறவைகளின் சத்தம் அதிகரிக்கவுமே எழுந்து கூண்டின் அருகே சென்றவன் ‘என்ன?’ என்று கேட்கும் விதமாய் அவைகளை பார்த்து நிற்க,

“அச்சுதா…” என்று குரல் கேட்டு  திரும்பினான்.

அவனின் சித்தப்பாக்கள் இருவருமே வந்து நிற்க “என்ன ரெண்டு பேரும் ஒண்ணா வந்திருக்கீங்க?” என்றான் வரவழைத்த புன்னகையோடு.

“காலை டிபனே இப்போதான் சாப்பிட வந்தோம் அச்சுதா…” என்ற தாமோதரன்

“அம்மா சொன்னாங்க நேத்து தனுஜாக்கு…” என்று இழுத்து நிறுத்த,

“ம்ம்…” என்று அமோதிப்பாய் தலையை ஆட்டினான் அச்சுதன்.

சுரேந்திரனோ, அண்ணன் முகத்தை ஒருமுறை பார்த்தவர் “நாங்க பேசுறது உனக்கு கஷ்டமா தான் இருக்கும். ஆனா நீ இப்படி இருக்கிறது எங்க எல்லாருக்கும் எத்தனை கஷ்டமா இருக்கும்னு யோசிச்சு பார்த்தியா அச்சுதா.. அதுலயும் உங்க அம்மா.. இரும்பு மனுஷி.. ஆனா அவங்களே இப்போ நீ பண்றது எல்லாம் பார்த்து கலங்கி போறாங்க..” என்று சொல்ல,

“சித்தப்பா…” என்றான் உணர்வுகள் இல்லாத குரலில்.

“இத்தனை வருசமா உன் போக்குல தான் விடுறோம்… எங்களையும் நினைச்சு பாருடா…” என்று தாமோதரன் சொல்லிட, அச்சுதன் எதுவும் சொல்லாமல் அப்படியே நிற்க,

“உன்னை உடனே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லலை. ஆனா தனுஜா விசயத்துல இருந்து வெளிய வா.. மூவ் ஆன் ஆகு அச்சுதா.. சொன்னா கேளு…” என்று சுரேந்திரனும் சொல்ல,

“சித்தப்பா.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை…” என்றான் உள்ளே போன குரலில்.

“தொழில் வேற குடும்பம் வேற அச்சுதா.. தொழில்ல நீ எத்தனை முன்னேறி போனாலும், எங்க பையன்  குடும்பமா சந்தோசமா வாழனும். அதுதான் எங்க எல்லாருக்கும் நிம்மதியை குடுக்கும்…” என்று தாமோதரன் சொல்லவும்,

“நீங்க எல்லாருமே எனக்காக யோசிச்சு பேசுறீங்க தான் சித்தப்பா. இல்லைன்னு சொல்லலை.. ஆனா நிஜமா எனக்கு ஒருவிசயம் புரியலை.. கல்யாணத்துக்கு முதல் நாள் இப்படி ஆச்சு.. இதேது கல்யாணம் முடிஞ்சு இப்படி ஆகிருந்தா?! சரி அதைவிடுங்க, கல்யாணம் இப்போவே வேண்டாம்னு சொல்றீங்க தானே.

எப்போவா இருந்தாலும் என்னை தெரிஞ்சவங்க யாரும் பொண்ணு தரமாட்டாங்க. முகத்துக்கு நேரா என்னை புகழ்ந்து பேசுற எல்லாருமே, முதுகுக்கு பின்னாடி பைத்தியம்னு தான் சொல்லிட்டு இருக்காங்க….” என்றிட,

“டேய் அச்சுதா…!” என்று இரு சித்தப்பாக்களும், பதறி அவன் கரம் பிடிக்க,

“இல்லைன்னு உங்கனால சொல்ல முடியுமா சித்தப்பா? நடந்த நிகழ்வுகள் வேதனையான விஷயம் தான். அதையே தாங்க முடியலை.. விழுங்கித்தான் ஆகணும்னு இருக்கு. ஆனா அதுக்குமேல அவமானங்களை சந்திக்க நான் விரும்பல. என்னை பார்க்கிற எல்லாருக்குமே ஒரு ஆராய்ச்சி பார்வை இருக்கு. பொண்ணு தேடுறேன்னு நீங்களும் சிரமப் படவேணாம். முதல் கோணல் முற்றும் கோணல்.. சோ போதும்.. நான் இப்படியே இருந்துக்கிறேன்…” என்று சொல்ல,

“உனக்கென்னடா வந்தது.. நீ ராஜா டா.. உன்னை அப்படி வெளி பார்வைக்கு யார்னாலும் நினைக்கட்டும்.. ஆனா பழகிப் பார்த்தா அப்படி சொல்ல முடியுமா?” என்றிட,

“அட போங்க சித்தப்பா…” என்று அவரின் தோளில் தட்டியவன் “இனி நான் ஒரு பொண்ணோட பேசி பழகி.. என்னை புரிய வச்சு.. அதெல்லாம் நடக்கிற விசயமில்லை.. அதுக்கான எண்ணமும் எனக்கில்லை.. தனுஜா விஷயம் வேற. அவளோட நான் வாழணும்னு எல்லாம் காத்துட்டு இருக்கல.. ஒரு உயிருக்கு நம்ம செய்ய வேண்டிய அடிப்படை மரியாதை இது..” என்று பேசியவன் இருவரையும் வேற என்ன என்பது போல பார்த்து நின்றான்.

அண்ணன் தம்பி இருவருக்குமே, இதற்குமேல் இவனிடம் என்ன பேச என்று தெரியவில்லை. அனைத்திற்குமே அவன் தரப்பில் தக்க பதில் வைத்திருக்கிறான். அவனது பேச்சு நியாயமாகவும் இருந்தது. ஆனால் கல்யாணத்தின் மீது வெறுப்பில்லை அவனுக்கு.

அடிமனதில் இருக்கும் பயம் தான் அவனுக்கு காரணம்.

தன்னை, தன மனநிலை, உடல்நிலை குறித்து விமர்சனங்கள் வரும். ஒருவேளை சூழல் மாறி ஏதேனும் குளறுபடிகள் நடந்தால், இன்னும் அவமானங்களை சந்திக்க நேர்ந்திடும் என்றே அவன் பின்வாங்கி நிற்கிறான் என்று புரிய, அவனை புரிந்துகொள்ளும் ஒரு பெண் வரவேண்டும் என்று அவர்களால் வேண்டாமல் இருக்கவே முடியவில்லை.

அதே நேரம் அர்ச்சனா வீட்டினில் இருக்க, கார்மேகம் எப்போதோ அவரது நட்சத்திற உணவகங்களுக்கு சென்றுவந்தவர், வீட்டிற்கு அந்து உடைமாற்றி விட்டு, கன்ஸ்ட்ரக்சன் கம்பனிக்கு செல்லவேண்டும் என்று தயாராக, இன்னும் தயாராகாத இளைய மகளைப் பார்த்து நின்றார்.

“ப்பா.. அர்ச்சு வந்திருக்கான்னு தான் நான் இங்க ரெண்டு நாள் வந்திருக்கேன்.. இதோ இன்னிக்கு ஈவ்னிங் கிளம்பனும்.. நேத்து கம்பனி கூட்டிட்டு போயிட்டீங்க.. இன்னிக்கும் பார்த்தா எப்படி?” என்று அனிதா கேட்க,

“டாடி.. நான் நாளைக்கு வர்றேன்…“ என்றாள் அர்ச்சனா.

“ம்ம் சரிம்மா.. நேத்து.. நானும் கேள்விபட்டேன்..” என்றவன் மகளின் முகம் பார்க்க,

“ம்ம்ச்.. அதுவிடுங்கப்பா..” என்றவள் அவள் அச்சுதனிடம் காட்டிய வரைபடம் காட்டியவள் “அவரோட டிசைன்ஸ் வந்ததும் அல்டர் பண்ணும் டாடி..” என்றிட,

“சரிம்மா.. இந்த ப்ராஜக்ட்காக உனக்குன்னு ஒரு டீம் செட் பண்ணிக்கோ.. புது ஆளுங்க வேணும்னாலும் எடுத்துக்கோ..” என்று பேசிக்கொண்டு நிற்க,

“டாடி…” என்று புன்னகைத்து அவரைப் பார்த்தவள் “நாளைக்கு ஆபிஸ் வந்துட்டு இதெல்லாம் பேசிக்கலாம்…” என்று சொல்ல,

“ஓகே.. ஓகே… யூ கேரி ஆன்…” என்றவர் கிளம்பிவிட்டார்.

ரோஜாவோ கணவர் கிளம்பியதும் “என்ன டி நீ எதுக்கு அந்த பொண்ணு வீட்டுக்கு போன..” என்று கேட்க,

“ம்மா.. உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது.. அப்போ நானும் அச்சுதனும் தான் இருந்தோம்..” என்று அர்ச்சனா மீண்டும் விளக்க முயல,

“அர்ச்சு…” என்று இடையில் வந்தாள் அனிதா.

“என்ன அனி…” என்று பார்க்க,

“அவர் உன்னை விட பெரியவர்.. பேர் சொல்லியே பேசிட்டு இருக்க. யாரோன்னா கூட பரவாயில்லை.. பிரகாஷோட அண்ணன் வேற.. முறை வச்சு மரியாதையா சொல்லேன்…” என்று அனிதா பேச,

“ஷ்..! ஆனாலும் நீ இருக்க பாரேன்…” என்று அக்காவை சலித்தவள் “எனக்கு நிஜமா அவரை எப்படி சொல்லனும்னு தெரியலை.. மாமான்னு எல்லாம் என்னால கூப்பிட முடியாது. அது என்னவோ போல இருக்கு..“ என்றாள் முகத்தை சுருக்கி.

“ஓ! ஏன் என் புருஷனை மட்டும் சொல்ற…” என்று அனிதா கோதாவில் இறங்க,

“அக்கா புருஷனை மாமான்னு சொல்லாம வேற எப்படி சொல்ல?” என்றாள் இவளும் பதிலுக்கு.

“ம்ம்.. ஆமா…” என்ற அனிதா,

“எங்க வீட்ல யாருக்கும் இப்படி பேர் சொல்லி எல்லாம் கூப்பிட்டா பிடிக்குமா  பிடிக்காதான்னு தெரியலை..” என,

“அது உன் கவலை.. ஆனா நிஜமா அவரை எப்படி கூப்பிடன்னு தெரியாமத்தான், அவர் நம்பர் கூட சேவ் பண்ணி வைக்கல…” என்று உதடு பிதுக்கினாள்.

‘இதெல்லாம் ஒரு பெரிய விசயமா?!’ என்று ரோஜா பார்க்க, அனிதாவோ ‘என்ன உன் தங்கச்சி, எங்க வீட்டு பெரிய பையனை பேர் சொல்லி கூப்பிடுறா…’ என்று அங்கே யாரேனும் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சியே,

“அ.. அது.. பேசாம அத்தான் அப்படின்னு சொல்லிடு..” என,

“என்னது? அத்தானா?!” என்றாள் அர்ச்சனா அதிர்ந்து.

“ஆமா…” என்று அனிதா பிடிவாதமாய் சொல்ல,

“அதெல்லாம் முடியாது.. அச்சுதன் அத்தான்னு இழுத்து பேசிட்டு எல்லாம் என்னால இருக்க முடியாது.. ம்மா பாரும்மா இவளை..” என்று அக்காவோட சண்டையில் நிற்க, அம்மாவை துணைக்கு அழைத்தாள் அர்ச்சனா.

ரோஜாவும் கூட “ஏன் டி அனிதா.. நீ பண்றது உனக்கே ஓவரா இல்லியா.. அவளுக்கு எப்படி வசதியோ அப்படி சொல்லிக்கட்டுமே.. இதுல அச்சுதனுக்கே பெருசா எதுவும் இருக்காது. நீ ஏன் இத்தனை அலட்டிக்கிற…” என்றிட,

“அது அப்படித்தான். அர்ச்சனா, அச்சுதன் மாமாவை பேர் சொல்லி கூப்பிடக் கூடாதும்மா. அது மரியாதையா இல்லை.. இதுபத்தி நாளைக்கு பேச்சு வந்தா எனக்குத் தெரியாது…” என்று பெரியவள் முகத்தை தூக்க,

“ம்ம்ச்.. ஷ்..!” என்று சலிப்புடன் அமர்ந்தாள் அர்ச்சனா.

ஆனாலும் அவளின் மனதோ ‘அச்சுதன் + அத்தான் = அச்சத்தான்…’ என்று சொல்லிப்பார்க்க

‘ச்சே.. சைத்தான் போல இருக்கு…’ என்று திரும்ப அவளுக்கு அவளே எண்ணிக்கொள்ள, அவளையும் மீறி ஒரு இளநகை அவளது இதழில் பூக்க, இம்முறை அம்மாவும் அக்காவும் அவளை விசித்திரமாய் பார்த்து நின்றனர்.

“பாரும்மா.. நான் இத்தனை சொல்றேன்.. இவ நக்கல் பண்ணி சிரிச்சிட்டு இருக்கா.. உனக்கே தெரியும், எங்க வீட்ல எல்லாம் ரொம்ப முறை பார்ப்பாங்க தானே.. இவ வந்ததுமே எல்லாரும் சின்ன அண்ணி அப்படின்னு எத்தனை மரியாதையா பேசினாங்க..” என, அவள் பேசியதைக் கேட்டு, அர்ச்சனாவிற்கு இன்னமும் சிரிப்பு வந்திட,

“ஏய் என்ன டி..?!” என்று அவளின் தோளில் தட்டினாள் அனிதா.

“நீ பண்றது எல்லாம் ஓவரா இருக்கு..” என்றவளுக்கு அச்சுதன் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது.

‘என்ன செய்துகொண்டு இருப்பான்..’ என்ற கேள்வி அவளுள் எழ, மனது இப்போது இங்கே கவனத்தில் இல்லை. அச்சுதனின் யோசனை வந்தாலே, அவளுக்கு மற்றது எல்லாம் மறந்து போகிறது.  

‘அவன் என்ன செய்துகொண்டு இருக்கிறான்…’ என்று இப்போதே தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் பிடிவாதமாய் அவளுள் எழ, நீலவேணிக்கு அழைத்துப் பேசினாலும் அது நன்றாய் இருக்காது என்று தோன்றியது.

அச்சுதனுக்கே அழைத்து பேசிடலாம் என்று எண்ணினாலும், என்னவென்று அவனிடம் பேச ‘நீ என்ன செய்கிறாய் என்று தெரிந்துகொள்ள அழைத்தேன்…’ என்று சொல்ல முடியுமா?!

அவளது மனதிற்குள்ளேயே அவள் இப்படி பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்க, ரோஜாவும் அனிதாவும் வேறேதோ பேசினில் இறங்கிட, அவனுக்கே அழைப்போம் என்ற முடிவிற்கே வந்துவிட்டாள் அர்ச்சனா.

அழைத்து பேசாமல் அவளது மனது ஒருநிலைக்கு வராது என்பது அவளுக்கே உறுதியாய் தெரிய, மெதுவாய் இடம்விட்டு நகர்ந்தவள், அச்சுதனின் எண்ணிற்கு அழைத்தாள்.

முதலில் அழைப்பு ஏற்கபடவே இல்லை.

‘தூக்கமோ…’ என்று அவள் எண்ணியிருக்க, அடுத்த சில நிமிடங்களில் அவனே திரும்ப அழைத்து “சொல்லு அர்ச்சனா…” என்று பேச,

“அ.. அது.. சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?!” என்றாள்.

“இல்லல்ல.. வாக் பண்ணிட்டு இருந்தேன்…” என,

“என்னது இந்த நேரத்துல வாக்கிங்கா?” என்று அவள் கேட்க,

“வீட்ல தான் இருக்கேன்.. போர் அடிச்சது.. சாப்பிட்டு சும்மா தோட்டத்துல உலாத்திட்டு இருக்கேன். போதுமா விளக்கம்…” என்று அவன் கேட்க, அவன் சாதாரணமாய் பேசுவது அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

“அது..  உங்களோட டிசைன்ஸ் அனுப்புறேன்னு சொன்னீங்க..” என்று இழுக்க,

“யா.. யா.. மறந்துட்டேன்.. இதோ பியூ  மினிட்ஸ்…” என்றவன் அவனது அலைபேசியில் இருந்தவற்றை அவளுக்கு அனுப்பிவிட்டு

“அனுப்பிட்டேன்.. பார்த்துக்கோ…” என்றிட,

“ஓகே..” என்றவளுக்கு இன்னும் அவனோடு பேசவேண்டும் போலவே இருந்தது.

அலைபேசியை வைக்க மனதில்லை. ஆனால் இதற்குமேல் என்ன பேச என்றும் அவளுக்குத் தெரியவில்லை. அவள் இப்படி சிந்தனையில் நிற்க,

“அர்ச்சனா…” என்று அழைத்தவன்

“ம்ம் சொல்லுங்க…” என்றதுமே

“வேற எதுவும் இருக்கா? சொல்லனுமா?” என்று கேட்க,

“இருக்கு.. ஆனா…” என்று இழுத்து நிறுத்தினாள்.

“என்ன விஷயம்?” என்றவனுக்கு ஏதேனும் முக்கியமான ஒன்றோ என்று எண்ணி கேட்க,

“அது.. அனிதா ஒரே சண்டை.. உங்களை நான் பேசும்போது அச்சுதன் அப்படின்னு சொல்லிட்டேன்.. அதெப்படி எங்க வீட்டு பெரிய பையனை நீ பேர் சொல்லி கூப்பிடலாம்னு என்னோட சண்டை.. மரியாதையா முறையோட கூப்பிடுன்னு ஒரே ரகளை..” என்று அவள் வேகமாய் பேசிட, அச்சுதனுக்கு அத்தனை நேரம் இருந்த இறுக்கங்கள் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை.  

அவள் பேசிய விதத்தில், அவனுக்கு சிரிப்பு வந்துவிட அனிதா எப்படி இவளோடு சண்டையிட்டு இருப்பாள் என்று அவனுக்கு காட்சிகள் ஓட “ஹா ஹா…” என்று சத்தமாய் சிரித்துவிட்டான்.

அவனது சிரிப்போ அவளது இதயம் தொட,

“எ.. என்ன சிரிப்பு?!” என்றாள் எதற்கு சிரிக்கிறான் என்று புரியாமல்.

“பின்ன.. இது ஒரு பெரிய விசயமா? உனக்கு எப்படி கூப்பிடனும்னு தோணுதோ கூப்பிடு.. பேர் சொல்லி கூப்பிடனுமா, எனக்கு ஒரு அப்ஜக்சனும் இல்லை…” என,

“உங்க வீட்ல..” என்றாள் தயக்கமாய்.

“எங்க வீட்ல என்ன?” என்று யோசித்தவன் “ஓ! அப்படில்லாம் யாரும் ரியாக்ட் பண்ணிக்க மாட்டாங்க.. ஆனாலும் கொஞ்சம்…” என்று வேண்டுமென்றே அவன் இழுக்க,

“பார்த்தீங்களா…” என்று அவளும் இழுத்தவள் “அத்தான் சொல்லுன்னு சொல்றா.. நீங்களே சொல்லுங்க அச்சுதன் + அத்தான்.. அச்சத்தான்னு வருது.. நல்லாவா இருக்கு…” என்றிட,

அர்ச்சனாவின் இந்த படபட பேச்சுக்கள் எல்லாம், அச்சுதன் முகத்தினில் ஒரு மென்மையையும், இதயத்தில் ஒரு இதத்தையும் கொடுக்க, அவனது முகத்தில் இன்னும் புன்னகை விரிய, வீட்டின் முன்னிருக்கும் போர்டிக்கோவில் இங்கும் அங்கும் நடந்தபடி அவளுடன் பேசிக்கொண்டு இருந்தான்.

“உனக்கு பிடிக்கலைன்னா விடேன்.. அதுக்காக என்னோட பேரை வச்சு நீ புது பார்முலா எல்லாம் கண்டு பிடிக்காத. புது ஈக்குவேசன் எல்லாம் போடாத…” என்று அச்சுதன் பேச,

“ஓ! அப்.. அப்போ அச்சத்தான் அப்படின்னு கூப்பிட்டா உங்களுக்கு ஓகே வா…” என்று அர்ச்சனா கேட்க,

“நீ அச்சுதன்னு கூப்பிடு.. அச்சத்தான்னு கூட கூப்பிடு..” என்றவன் முகமெல்லாம் மலர்ந்து போயிருக்க, நீலவேணி வந்தவர், மகனைத்தான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.