அச்சுதன் குடும்பத்தில் அனைவருக்குமே தெரியும், அனிதாவும் பிரகாஷும் சொல்லித்தான் அச்சுதன், அர்ச்சனாவிற்கு பிறந்தநாள் பரிசு வாங்கிக்கொண்டு வந்தான் என்று.
ஆனால் அர்ச்சனா வீட்டினில் இது தெரியாதே. அர்ச்சனா வந்து “இது நீங்கதானே வாங்கினீங்க..?” என்று கேட்டதுமே,
அச்சுதனுக்கு கூட கண்டுகொண்டாளே என்று இருந்தது. ஆனாலும் என்னவோ அனிதா சொல்லித்தான் வாங்கினேன் என்று அவனுக்கு சொல்ல மனது வரவில்லை.
அதனால், அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் “ஹேப்பி பர்த்டே அர்ச்சனா…” என்று வாழ்த்த,
“தேங்க்ஸ்.. சரி சொல்லுங்க இது நீங்க வாங்கினது தானே…” எனும்போதே,
அனிதா “ஆமா அர்ச்சு.. அச்சுதன் மாமா தான் வாங்கிட்டு வந்தார். உனக்கு பிறந்தநாள் வருது. ஏதாவது வாங்கிட்டு வாங்கன்னு நாங்க தான் சொன்னோம்…” என்றதுமே, அர்ச்சனாவிற்கு முகத்தினில் ஒரு சிறு சுணக்கம்.
அது அச்சுதன் கண்களில் தவறாமல் பட “உனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் அர்ச்சனா…” என்றான் கிண்டலாய்.
‘ஆமாமா.. ஒரு முடி ஒட்டினதுக்கே அத்தனை அலப்பறை…’ என்றெண்ணி உதட்டைச் சுளித்தவள்,
“முப்பது கிளிப்ஸ் இருக்கு. எப்படி டெய்லி ஒண்ணா?” என்றாள் பதிலுக்கு அவளும் கிண்டலாய்.
வீட்டினரோ ‘என்ன ரெண்டு பேரும் இப்படி பேசிக்கிறாங்க…’ என்று பார்க்க, அவர்களுக்கு என்னத் தெரியும், அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் விதமே இதுதான் என்று.
“அது உன் விருப்பம். ஒரே நாள்ல கூட நீ முப்பதும் யூஸ் பண்ணிக்கலாம்…” என்ற அச்சுதனுக்கு, அனைவரின் முன்னமும் பேச்சு வளர்க்க விரும்பவில்லை.
அவனை காப்பாற்றவென்றே அந்த நேரம், அவனது நகை கடையில் இருந்து அழைப்பு வர, அலைபேசியை எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டான்.
அனிதாவோ “என்ன அர்ச்சு இது. இப்படித்தான் வந்து கேட்பியா?” என்று தங்கையின் காதை கடிய,
அர்ச்சனாவோ திரும்ப அறைக்கு நடந்துகொண்டே “கிப்ட் பார்த்ததுமே இவர் தான் இந்த வேலை பார்த்திருப்பார்னு தெரியும். உன்கிட்ட கேட்கலாம்னு தான் வந்தேன் க்கா.. சரியா அச்சத்தான் இருக்கவும் கேட்டுட்டேன்..” என்றிட, அவளோடு வந்த அனிதாவும்,
“அத்தைங்க எல்லாம் பார்த்துட்டு இருந்தாங்க டி…” என்றாள் யோசனையாய்.
“சோ வாட்?! வேணும்னா சொல்லு ஆளுக்கு ஒரு கிளிப் தர்றேன்.. மட்டிக்கட்டும்…” என்று சொல்லி சிரிக்க, அனிதாவிற்குமே களுக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.
சகோதரிகள் இருவரும் சிரித்துக்கொண்டே இருக்க, அனிதாவோ “அதெப்படி டி சரியா அவர்தான் இப்படி கிப்ட் பண்ணுவார்னு கண்டுபிடிச்ச?” என்று கேட்க,
“அதெல்லாம் ரகசியம் சொல்ல முடியாது…” என்ற அர்ச்சனாவைப் பார்த்து,
“உங்களுக்குள்ள என்னவோ போகுதுன்னு தெரியுது. ஆனா என்ன விசயம்னு தான் வெளிய வரமாட்டேங்குது…” என்று அனிதா பூடகமாய் பேச,
“நான் தான் சொல்லிட்டேனே க்கா ரகசியம்னு.. வெளிய வரலாம்.. வராமலும் போகலாம்…” என்றவள் “சரி நீ இனிமே இங்கதான் டேரா போட போறியா?” என்றாள்.
“ஆமா.. ஏன்?!”
“கேட்டேன்…” என்றவள், கண்ணாடியின் முன்னே நின்று, தலையை இப்படி அப்படி திருப்பிப் பார்த்து, அச்சுதன் கொடுத்த கிளிப்களில் அவளது உடைக்கு தோதாய் என்ன இருக்கிறது என்று பார்த்து, ஒன்றை எடுத்து போட்டுக்கொண்டாள்.
அனிதாவோ தங்கையின் செயல்களை எல்லாம் பார்த்தவள் ‘முத்திடுச்சு…’ என்று முனுமுனுக்க,
வெளியே ஹாலில் பெண்கள் எல்லாம் பேசிக்கொண்டு இருக்க, அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அச்சுதன் பேசி முடிக்கும் வரை காத்திருந்த கார்மேகம் “அச்சுதன்…” என்று அழைத்தபடி அவனின் அருகே சென்று நிற்க,
“சொல்லுங்க மாமா…” என்றான் அவனும்.
“இல்ல கொஞ்சம் பேசணும்.. அதுதான்…” என்று இழுக்க,
“என்கிட்டே பேச என்ன யோசனை மாமா…” என்றான் வார்த்தைகளில் அவருக்கு தைரியம் கொடுத்து.
“இதுபத்தி உங்கக்கிட்ட பேசிடவே கூடாதுன்னு அர்ச்சனா என்கிட்டே சொல்லிருக்கா…” எனும்போதே, அச்சுதனுக்கு புரிந்துபோனது அவர் என்ன கேட்க வருகிறார் என்று.
“ஓ! அப்போ நானும் இதை நீங்க பேசினீங்கன்னு அர்ச்சனா கிட்ட சொல்ல மாட்டேன்…” என்று அச்சுதன் புன்னகை புரிய, அவன் முகத்தை ஒருநொடி கேள்வியாய் பார்த்த கார்மேகம், என்ன நினைத்தாரோ தானும் புன்னகைத்துக் கொண்டார்.
பிரகாஷ் மூத்த மருமகன் தான். ஆனால் அவனுடன் எல்லாம் இப்படி அவர் பேசியதில்லை. அச்சுதன் எப்போதுமே அவரிடம் நன்றாய் பேசுவான். அதிலும் அர்ச்சனா விஷயம் இப்படி என்றாகவும், கார்மேகம் மீது அச்சுதனுக்கு இன்னும் தனியொரு மரியாதை வந்திருந்தது.
எத்தனை பொறுமையாய், பெருந்தன்மையாய் நடந்துகொள்கிறார் என்று. அப்போது, அவருக்கு மதிப்பளித்து தான் நின்று பேசவில்லை என்றால் எப்படி என்றுதான் அவன் நின்றது.
“அது.. என்ன கேட்கிறதுன்னும் எனக்குத் தெரியலை. இல்ல எப்படி ஆரம்பிக்கிறதுன்னும் எனக்குத் தெரியலை. உங்க வீட்ல, பிரகாஷ் அப்பாக்கிட்ட இதை பேசிடலாம் தான். ஆனா அது பெரியவங்க பேச்சுன்னு வரும்போது, பிரச்சனைகள் ஒவ்வொருமாதிரி மாறிடும் இல்லையா..” என,
“புரியுதுங்க மாமா…” என்றான் அச்சுதனும்.
“தனுஜா இறந்து கொஞ்ச நாள்லயே, அர்ச்சனாக்கிட்ட கேட்டேன் நான் வேணும்னா அச்சுதன்கிட்ட பேசட்டுமான்னு. ஒரேடியா மறுத்துட்டா.. ஒரு பொண்ணோட சாவை, எனக்கு சாதகமா மாத்திக்கிற அளவுக்கு நம்ம இறங்கி போகலைன்னு அத்தனை அழுகை அன்னிக்கு. உங்கமேல இத்தனை அன்பும் நேசமும் எங்கிருந்து அவளுக்கு வந்ததுன்னு தெரியலை. நீங்கதான் வேணும்னு அர்ச்சனா பிடிவாதமா கூட சொல்லலை. நீங்க சந்தோசமா உங்க வாழ்கையை நகர்த்த ஆரம்பிச்சா அதுவே போதும்னு நிக்கிறா.. ஒரு அப்பாவா என்னால சும்மாவும் இருக்க முடியலை அச்சுதன். ஆனா என்ன செய்றதுன்னும் தெரியலை…” என்று கார்மேகம் பேச பேச,
அச்சுதனுக்கு இவை எல்லாம் புதிது தானே. தனுஜா மறைவிற்கு பிறகும் கூட அவனே எண்ணினான், இனி வீட்டினர் சும்மா இருக்கமாட்டார்கள் என்று. எப்படியும் அர்ச்சனா வீட்டில் இருந்தே கூட பேச்சு ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்த்தான் தான்.
ஆனால் அப்படி எதுவுமே இல்லாமல் இருக்க, அவனுக்குமே அதை முதலில் நம்பிட முடியவில்லை. இதற்கு காரணம் அர்ச்சனாவின் வார்த்தைகள் என்று உணர்கையில், அவளுக்கு அப்படியென்ன தன்மீது அன்பு என்ற கேள்வி எழாமல் இல்லை.
கூடவே ‘என்ன செய்துவிட்டேன் நான்?’ என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை.
கார்மேகத்தின் வார்த்தைகளை ஆழ்ந்து கிரகித்தவனுக்கு ஒன்றுமட்டும் நன்றாய் புரிந்தது. அர்ச்சனாவுமே தனக்காக ஒரு வாழ்வை ஏற்படுத்தி வாழ முடியும், ஆனால் அச்சுதன் அவன் வாழ்வில் அவனுக்கென்று ஒரு துணையை தேடிக்கொண்டாள் மட்டுமே. அவன் தனித்து நின்றால், அவளும் தனித்துத் தான் நிற்பாள்.
என்னை ஏற்றுக்கொள் என்று கேட்கமாட்டாள். ஆனால் அவன் வாழாத ஒரு வாழ்வை அவளும் வாழமாட்டாள்.
நினைக்கையில் ஒருமாதிரி நெஞ்சு அடைத்தது.
அர்ச்சனா இல்லாமல் தன்னை இருக்க முடியுமா? வேறொரு பெண்ணோடு எதிர்கால வாழ்வை வாழ முடியுமா என்ற யோசனைக்கு எல்லாம் அச்சுதன் போகவில்லை. மாறாக அர்ச்சனாவின் மனதிற்காக வேணும், அவளது வாழ்வில் தான் இணைவது உசித்தமானது என்று எண்ணினான்.
அவனது சிந்தனைகள் இப்படியோட, என்ன பதில் சொல்வான் என்று அவன் முகத்தையே கார்மேகம் பார்த்திருக்க “ம்ம்.. நீங்க சொல்றது சரிதான் மாமா.. எனக்கு ஒரு த்ரீ டேஸ் டைம் தர்றீங்களா. இன்னிக்கு நைட் நான் சென்னை போறேன் மாமா.. மே பி என்னோட பைனல் சேக்கப் இதுவா கூட இருக்கலாம்.. போயிட்டு வந்து பேசட்டுமா..” என்று அவன் கேட்க,
“தாராளமா..” என்றார் கார்மேகம்.
“தேங்க்ஸ் மாமா…” என்றவன் “அர்ச்சனாக்கு இது எப்போவும் தெரியவராது…” என்றும் சொல்ல,
“தேங்க்ஸ் அச்சுதன்…” என்றுசொல்லி அவரும் நகர்ந்துவிட, ஒரு பெரும்மூச்சு ஒன்றினை எடுத்துவிட்டான் அச்சுதன்.
அவரிடம் சொன்னதுபோல, அவனுக்கு நாளை சென்னை செல்லும் திட்டம் எல்லாம் எதுவும் இல்லை. ஆனால் இப்போது திடீரென எடுத்த முடிவுதான் அதுவும். மனதினில் சில யோசனைகளை இருந்தது. அதன் காரணம் தொட்டே அவன் சென்னை செல்லக் கிளம்ப,
வரவேற்பறைக்கு வந்தவன், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப ரோஜாவோ “அனிதா.. அர்ச்சனா…” என்று குரல் கொடுக்க,
இரு பெண்களும் அரையினில் இருந்து வர “நான் கிளம்புறேன்… பை…” என்று இருவருக்கும் பொதுப்படையாய் சொன்னவனின் பார்வை, அர்ச்சனாவிடம் ஒருநொடி நின்று நகர,
வீட்டினில் இத்தனை பேர் இருக்க, அர்ச்சனா வெளியில் கிளம்புகிறேன் என்று சொல்வது சரியில்லை என்று நினைத்தவர் “ஈவ்னிங் போல போலாம் அர்ச்சு..” என்று சொல்ல,
அச்சுதுக்கு புரிந்துபோனது, அவள் தன்னோடு எதோ பேச நினைக்கிறாள் என்று. அவளுக்காக என்று முடிவிற்கு வந்தபிறகு, அவளோடு பேசாமல் இருக்க என்ன காரணம் இருக்கப் போகிறது. திரும்பி நடக்கத் தொடங்கியவன், அவளும் வெளியில் செல்ல வேண்டும் என்று சொல்லவுமே தயங்கி நின்றான்.
தன்னோடு வருவாளோ என்று.
அவன் தயங்கி நிற்கவுமே, இந்த அம்மாக்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ரோஜா அதனை கவனிக்கவில்லை. முல்லை கவனித்தவர் “இப்போ என்னக்கா போயிட்டு வரட்டுமே…” என்றார்.
“இல்ல தனியா கிளம்புறாளே.. ஈவ்னிங் போலன்னா எல்லாரும் போகலாம் இல்லையா…” என்று ரோஜா பேச, அர்ச்சனாவின் பார்வையோ அச்சுதனிடம் ‘நில்…’ என்று சொல்லாமல் சொல்ல,
“அவ தனியா போறது போல தெரியலையே…” என்றார் முல்லை, அங்கே பார் என்று அக்காவிடம் அச்சுதனைக் காட்டி.
கிளம்பியவன் நின்றுகொண்டு இருப்பதும், இத்தனை நேரம் அமைதியா இருந்த மகள் கிளம்புகிறேன் என்று சொல்வதும் அவருக்கு என்ன உணர்த்தியதோ, அர்ச்சனாவை முறைத்தவர் “போயிட்டு சீக்கிரம் வா…” என்று சொல்ல,
“ம்ம் சரி…” என்று அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியவள், அச்சுதனைப் பார்த்து நகைத்தபடி தான் அவன் பக்கம் வந்தாள்.
ரோஜாவிற்கோ மனது ஆறவே இல்லை. கார்மேகம் அச்சுதனிடம் பேசப்போகிறேன் என்று சொல்லவே இல்லை. சொல்லியிருந்தால் கூட சற்று நிம்மதியாய் இருந்திருப்பாரோ என்னவோ.
இப்பொழுது அச்சுதன் கார்மேகத்திடம் சொன்ன பதிலும் அவருக்குத் தெரியாது தானே.
அவரைப் பொறுத்தமட்டில், கடைசியில் தங்களின் பெண்ணல்லவா கவலைப்பட நேரிடும். அதுமட்டும் தான் மனதினில்.
அச்சுதன் ரோஜாவின் கலக்கமான முகத்தினைப் பார்த்தவன், அர்ச்சனாவிடம் ஒரு கண்டனப் பார்வையைக் காட்டி “கோவிலுக்கு போகணும்னா காலைலயே போயிட்டு வந்திருக்கலாம் தானே…” என்று கடிந்தபடி நடக்க,
“தப்பு அர்ச்சனா.. வீட்ல எல்லாரும் இருக்காங்க.. நம்ம விஷயம் இன்னதுன்னு எதுவுமே முடிவாகல. அப்படி இருக்கப்போ இப்படி கிளம்பி வர்றது தப்பு. அதுவும் உங்க அம்மா முகம் அத்தனை கலவரத்தை காட்டுது…” என்று சொல்ல,
“ஷ்..!” என்று கண்களை மூடியவள் “நான் திரும்ப யூஎஸ் போலாம்னு இருக்கேன்.. அனிதா டெலிவெரி முடியவும்…” என்று சொல்ல, ஒரு சிறு அதிர்வு அவனுள்.
இலகுவாய் காரினை செலுத்திக்கொண்டு இருந்தவன், அவளை கேள்வியாய் நோக்க “எஸ் அச்சத்தான்… ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் அப்ளை பண்ணிருந்தேன்.. நாலு மாச கோர்ஸ்.. அப்ரூவல் மெயில் கூட வந்துடுச்சு.. வீட்ல இன்னும் சொல்லலை..” என்றிட, அச்சுதனிடம் பேரமைதி.
ஆனால் மேற்கொண்டு அர்ச்சனாவே தான் பேசினாள்.
“எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. என்னோட சின்ன சின்ன செயல்கள் கூட எங்க வீட்ல ரொம்ப ரியாக்ட் ஆகுது. அனிதா லவ் மேரேஜ் ஒரு பிரச்சனையே இல்லை. ஆனா என்னோட நானே ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்கிறேனோ அப்படின்னு தோணுது. உங்களோட விஷயம் என்னை பொருத்தவரைக்கும் என்னோட லவ் அது.
நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம் அப்படின்னு எல்லாம் என்னால சுத்திட்டு இருக்க முடியாது. சோ, இந்த ப்ராஜக்ட் ஓரளவு முடிஞ்சது. நீங்க ஷாப் ஒப்பன் பண்ற டேட் கூட சொல்லிட்டீங்க தானே. எல்லாம் முடிச்சிட்டு, திரும்ப கிளம்பிடுவேன்…” என்று பேச,
அச்சுதனுக்கு ஒருமாதிரி இருந்தது. தான் ஒன்று நினைக்க, இவள் ஒன்று யோசித்து செய்துகொண்டு இருக்கிறாள் என்று நினைத்தவன் “முடிவே பண்ணிட்டியா?” என்றான்.
“ஆல்மோஸ்ட்.. வீட்ல இன்னும் சொல்லலை.. உங்கக்கிட்ட தான் முதல்ல சொல்லிருக்கேன்.. அனிதா டெலிவெரி முடியவும் தான் சொல்லணும்.. இப்போ சொன்னா அதுவும் ஒரு இஸ்யூ ஆகும்…” என்று சொல்ல,
“நான் இன்னிக்கு நைட் சென்னை கிளம்புறேன் அர்ச்சனா..” என்றான் பட்டென்று.
“ஓ! செக்கப்பா?” என்று கேட்க,
“ம்ம்…” என்றவன் முகம், தீவிர யோசனையிலேயே இருக்க
“உங்களுக்கும் இப்போ ரொம்ப வொர்க் ப்ரெஷர்ல?” என்று கேட்டாள்.
“என்ன பண்றது? நம்மளது செஞ்சுதானே ஆகணும்…” என,
“அதுதான்.. உங்க வீட்ல நாலு மாசம் டைம் கொடுத்ததுல இப்போவே பாதி நாள் ஓடிருச்சு. ஒருவேளை நானுமே இங்க இருந்துட்டே இருந்தா, உங்களுக்கு ஒரு முடிவுக்கு வர்றது கஷ்டமா கூட இருக்கலாம். சோ, நான் இங்க இல்லைன்னா அது நல்லது தானே அச்சத்தான்…” என்று கேட்க,
அவன் என்ன சொல்வான்?!
போகாதே என்று சொன்னால், அது அவளது ஒரு படிப்பை கெடுக்கும் செயல் அல்லவா?!
அவளது முன்னேற்றத்தை தடுப்பது போல் தானே ஆகிவிடும்.
கண்களை இறுக மூடித் திறந்தவன் “உன்னோட முன்னேற்றம் எப்போவும் என்னால தடைபடாது அர்ச்சனா..” என்று பொதுப்படையாய் சொல்ல,
“தெரியும் நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு. ஆனாலும் உங்கக்கிட்ட சொல்லணும் போல இருந்தது…” என்றவள் “இங்க பக்கத்துலையே ஏதாவது ஒரு கோவில் பார்த்து நிறுத்துங்க அச்சத்தான்…” என்றிட,
“ம்ம்ம்…” என்றவன், அவள் சொன்னதுபோல அளவான கோவில் ஒன்றிருக்க, காரினை நிறுத்திவிட
“நீங்க?” என்று கேட்டாள்.
‘வரலை..’ என்று சொல்ல நினைத்தவன், பின் ஏனோ காரினை ஓரமாய் நிறுத்திவிட்டு வர, ஒரு சிறிய அம்மன் கோவில் தான். பூஜைகள், அலங்காரம் எல்லாம் முடிந்து, கூட்டமில்லாது தான் இருந்தது.
இருவருமே அம்மன் சன்னிதானத்தின் முன் எதிரும் புதிருமாய் தான் நின்று இருந்தனர்.
அர்ச்சனாவோ வழக்கமான வேண்டுதல்களை வைக்க, அச்சுதனோ இமை மூடி நிற்கும் அர்ச்சனாவைத்தான் பார்த்து நின்று இருந்தான்.
‘இன்னும் என்னென்ன இருக்கிறது?’ என்ற கேள்வியை அம்மன் முன்னே வைத்தவன், ஒருநொடி இமை மூடித் திறக்க, பூசாரி வந்து இருவருக்கும் பிரசாதம் கொடுக்க, அர்ச்சனா மிக இயல்பாகவே இருந்தாள்.
ஆனால் அச்சுதனோ அவனது இயல்பை தொலைத்து நின்றான்.
திரும்பவும் காரில் ஏறும்போது “என்ன டல்லாகிட்டீங்க?” என்று அர்ச்சனா கேட்க,
“நத்திங்…” என்று புருவம் உயர்த்தியவன், அவளை அவளது வீட்டின் முன்னே இறக்கிவிட்டு, திரும்பவும் கிளம்பிவிட, அர்ச்சனா வீட்டினுள்ளே வர அடுத்து பொதுவான பேச்சுக்கள் தான்.
இவர்கள் கிளம்பியதுமே ரோஜா மனதில் இருப்பதை வெளிப்படையாகவே சம்பந்தி வீட்டு பெண்களிடம் பேசிவிட்டார். மனது ஆறவில்லை அவருக்கு. அர்ச்சனாவை என்ன நினைப்பார்கள் என்று அதுவேறு அவருக்கு கலக்கமாய் இருக்க
“என்ன சொல்றதுன்னே தெரியலை அண்ணி…” என்று வாய்விட்டே புலம்பிவிட,
“கோவிலுக்கு தானே போகணும்னு சொல்றா…” என்றார் பாமினி.
“அதை காலைல கூட போயிட்டு வந்திருக்கலாம். அச்சுதன் தம்பி கிளம்புறப்போ சொல்லிட்டு நிக்கறா.. இதே தான் எங்களுக்கு சொல்லவும் முடியாம, சொல்லாம இருக்கவும் முடியாம.. தவிப்பா இருக்கு…” என்று சொல்ல,
நீலவேணியோ “அச்சுதன் அவனா தானே நின்னான். அர்ச்சனா நிக்க சொல்லலை அண்ணி..” என்று பேச,
“இவ பேச்சை கேட்டுத் தானே நின்னார்…” என்றார் ரோஜா.
“அச்சுதன் விருப்பம் இல்லாம, அவனை யாரும் ஒன்னும் செய்ய வைக்க முடியாது. நீங்க வேண்டும்னா பாருங்க.. சீக்கிரமே நல்ல முடிவு தான் சொல்லுவாங்க…” என்று சுமிதாவும் சொல்ல,
“என்னவோ போங்க அண்ணி.. எனக்கு மனசு இப்பவும் அடிச்சுக்குது.. அர்ச்சனா எதிர்காலம் எப்படின்னு யோசிச்சு யோசிச்சு தலை பிச்சுக்குது…” என்று ஒரு அன்னையாய் அவரின் வருத்தம் அங்கே யாருக்கும் புரியாமல் இல்லை.
அர்ச்சனா வீடு வரவுமே, இது எதுவுமே நடக்காதது போல அனைவரும் இருக்க, அனிதாவோ “அப்படி என்ன டி ரகசியம் பேசிட்டு வர்ற..?” என்றாள்.
“அதான் நீயே சொல்லிட்டியே க்கா ரகசியம்னு…” என்று அர்ச்சனா கேட்க,
“அர்ச்சு.. நீ பண்றது எல்லாமே அம்மா அப்பாவை ரொம்ப பாதிக்குது..” என்று அனிதா கண்டிப்புடன் பேச,
“நீ இதெல்லாம் கண்டுக்கமா, ஜூனியர் கூட பேசு..” என்றவள், அக்காவின் வயிற்றில் கை வைத்தவள் “யார் நீங்க? கேர்ல் பேபியா? பாய் பேபியா? யாரா இருந்தா என்ன நான் உங்க சித்திடா…” என்று பேசத் தொடங்கிவிட்டாள்.