தனுஜாவின் இறுதி சடங்கில் அனைவருமே ஒருவித அமையுடன் தான் கலந்துகொண்டனர்.
அதிலும் அச்சுதன் அதீத அமைதியில் இருக்க, அவனது மனதோ பலவித உணர்வுகளால் ஆட்கொண்டு இருந்தது. இன்னமும் கூட அவனுக்கு அந்த காட்சி மறக்கவில்லை. அந்த சாரட் வண்டியில் ஏறுகையில், அச்சுதனைப் பார்த்து புன்னகை பூத்த தனுஜாவின் முகம்.
கண்களை இறுக மூடித் திறந்தான் அச்சுதன்.
‘போய் வா தனுஜா. இனியாவது ஆண்டவன் உனக்கு நிம்மதியை கொடுக்கட்டும். எனக்கு உன்னோட வாழ குடுத்து வைக்கலையா? இல்லை உனக்கு என்னோட வாழ குடுத்து வைக்கலையான்னு எனக்குத் தெரியலை. ஆனா இந்த வாழ்க்கைல நம்ம சேர்ந்து வாழக் கூடாதுன்னு இருந்திருந்தா பிரிவு வேறெந்த வகையிலையும் கூட வந்திருக்கலாம். இப்படி ஒரு கோரம் நடந்திருக்க வேண்டாம். நீ நிம்மதியா போயிட்டு வா. ஆனா காலத்துக்கும் இந்த வலி எனக்கு எப்பவுமே இருக்கும்…’ என்று மானசீகமாய் தனுஜாவோடு பேசிக்கொண்டு இருக்க, அர்ச்சனாவும் அங்கே தான் இருந்தாள்.
பின்னே அச்சுதனுக்கு அழைப்பு வந்ததுமே, அவனது முக மாற்றம், உடல் மொழி வைத்தே அவள் கண்டுவிட, அவனது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாகவாவது தானும் தனுஜாவின் இறுதி பயணத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணியவள்,
“கா.. கார் நான் டிரைவ் பண்ணட்டுமா?” என்று கேட்க,
“நோ.. ஐம் ஓகே…” என்றவன் காரினை அவனே செலுத்தினான்.
‘நீ வேண்டாம்…’ என்றெல்லாம் அவளிடம் சொல்லவில்லை.
உடன் வருகிறாயா என்றும் கேட்கவில்லை.
அச்சுதன் முகத்தினில் வேதனை எல்லாம் இல்லை. அப்போதிருந்தே ஒருவகை அமைதி குடிகொண்டு விட, அர்ச்சனாவும் கூட எதுவும் பேசவில்லை. தனுஜாவின் மரணம் ஒருவகையில் அவளுக்கு நெஞ்சை அடைப்பது போலிருந்தது.
‘உன் லைப்ல நான் இல்லை அர்ச்சனா…’ என்று அச்சுதன் சொன்ன வார்த்தைகள், அவளை அந்த நொடியில் கொன்றுகொண்டு இருக்க, தனுஜாவின் மறைவு செய்தியும் அந்த நேரத்தில் சரியாய் வர, அவளுக்கு என்ன உணர்கிறோம் என்பதே தெரியவில்லை.
சென்றுகொண்டு இருக்கும்போதே, கார்மேகம் அர்ச்சனாவிற்கு அழைத்து “என்னடா கிளம்பிட்டன்னு சைட்ல சொன்னாங்க.. என்னாச்சு?” என்று கேட்க,
“அது டாடி..” என்றவள் இந்த விசயம் சொல்ல,
“ஓ! பாவம் வாழ வேண்டிய பொண்ணு…” என்றவர் “நீயும் போறியா…?” என்று கேட்க,
“எஸ் டாடி…” என்றாள் உறுதியுடன்.
அவளது பேச்சுக்கள் எல்லாம் அச்சுதன் செவிகளில் விழுந்துகொண்டு தான் இருந்தது. வராதே என்றெல்லாம் அவன் சொல்லவில்லை. என்னவோ தனியே செல்லவும் ஒருமாதிரி இருந்தது. இந்த நொடியை அவனால் தனியாக கடந்திட முடியும் போலவும் தோன்றவில்லை.
அமைதியாகவே காரினை செலுத்தியவன் “அம்மாவுக்கு கால் பண்ணி சொல்லு அர்ச்சனா…” என்று சொல்ல,
பார்வையோ அவ்வப்போது அச்சுதன் பக்கம் தான் சென்றுகொண்டு இருந்தது. அவன் என்னமாதிரி மனநிலையில் இருக்கிறான் என்று யாரும் யூகிக்க முடியவில்லை. அமைதியாகவே இருந்தான்.
தனுஜாவின் இறுதி சடங்குகள் முடிந்து, வீடு கிளம்புகையில் தனுஜாவின் பெற்றோர் அச்சுதன் கரம் பற்றிக்கொண்டார்கள்.
“எங்கமேல ரொம்பவே தப்பு இருக்கு அச்சுதா.. இப்பவும் எங்க பொண்ணு எங்களை விட்டு போயிட்டான்னு கவலை இருக்கு தான். ஆனா இனியாவது அவளோட உயிருக்கு ஒரு விடுதலைன்னு ஒரு சிறு நிம்மதியும் இருக்கு. இருக்கோமா இல்லையான்னே தெரியாம அவளோட நிலை ரொம்ப கொடுமை இல்லையா..” என்றார் மகேந்திரன்,
“பிள்ளைகளோட வாழ்கையில சின்ன பிசகு வந்தாலும் பெத்தவங்க படுற கஷ்டம் எங்களுக்குத் தெரியும் அச்சுதன். இப்பவும் உங்கம்மா மனசுக்குள்ள துடிச்சிட்டு தான் இருப்பாங்க. உங்கப்பாவை பறிகொடுத்து, உன்னை சரி பண்றதுக்குள்ள அவங்க எத்தனை போராட்டம் பார்த்தாங்க தெரியுமா?” என்றவர்
“தனுஜா இல்லை. இனி அவ திரும்ப வரப் போறதே இல்லை. அதுனால இனியாவது உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கப் பாருப்பா…” என்று சொல்ல,
தனுஜாவின் அம்மா சந்திராவோ “ஆமா தம்பி.. என் பொண்ணு இனி திரும்ப வரப் போறது இல்லை. ஜோசியர் சொன்னதை கேட்காம இவர் பண்ண வேலை தான் இப்படின்னு எங்களுக்கு ஒரு குற்றவுணர்வு ஏற்கனவே இருக்கு. இதுல நீயும் தனியா நின்னு எங்களுக்கு மேலும் கஷ்டம் கொடுத்துடாதப்பா…” என்று அழுதபடி பேசிவிட்டு போக, அங்கே அச்சுதன் வீட்டாட்களும் தான் இருந்தனர்.
அவர்களுக்கு இவர்கள் பேசுவது பாதி புரியவில்லை. என்ன சொல்கிறார்கள் இவர்கள், ஜோசியர் என்ன சொன்னார் என்பது போல எல்லாம் பார்க்க, இப்போது அதனை எல்லாம் கேட்கும் நேரமும் இல்லை அல்லவா?!
அனைவருமே வீட்டிற்கு வந்துவிட, அர்ச்சனா அச்சுதன் காரில் வந்தமையால், அவன் கிளம்பும் நேரம் “நீ எப்படி போவ?” என்று கேட்க,
“அப்பா வந்திருக்கார்…” என்று சொல்ல, அப்போது தான் கார்மேகம் வந்திருப்பதையே அவன் கவனித்தான்.
“மாமா… சாரி கவனிக்கல…” என்று பேச,
“இருக்கட்டும்பா…” என்றவர் தனுஜாவின் பெற்றோர்களுக்கும் ஆறுதலாய் இரு வார்த்தைகள் பேசிவிட்டு மகளை அழைத்துக்கொண்டு அவர்கள் வீடு செல்ல, அச்சுதனின் குடும்பம் எல்லாம் அவர்களின் வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டிற்கு வர வர, அர்ச்சனாவின் கண்ணீர் கூடிக்கொண்டே இருந்தது. அடக்கப்பட்ட அத்தனை உணர்வுகளும் மேலும்ப, ஏன் அழுகிறோம் எதற்கு அழுகிறோம் என்றே தெரியாமல், அம்மாவை இறுக கட்டிக்கொண்டே அழ
“என்னடா என்னாச்சு? ஏன் இப்படி அழற அர்ச்சு…” என்று ரோஜா பதறி கேட்க,
“பாவம் தானேம்மா தனுஜா…” என்றாள் தேம்பியபடி.
மகளின் இந்த வார்த்தைகளில் ஆடிப்போனவர் “டேய்.. அதெல்லாம் ஏன் நீ நினைக்கிற? அவளுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.. நீ இது இதெல்லாம் மனசுல போட்டுக்காதே. அந்த பொண்ணு பாவம் தான். அவளோட விதி இப்படின்னா யார் மாத்த முடியும் சொல்லு. அதுக்காக நீ ஏன் இத்தனை அழற…” என்று அம்மாவாய் அவரும் பரிதவிக்க,
“அவ நல்லா இருந்திருந்தா இந்நேரம் நல்லா வாழ்ந்திருப்பா தானே…” என்று மீண்டும் அர்ச்சனா கேட்க,
“அர்ச்சு…” என்று ஆதுரமாய் மகளின் கரம் பற்றிய கார்மேகம் “முதல்ல போய் குளிச்சிட்டு வா. நல்லா ஷவர்கள் நில்லு. மனசு கொஞ்சம் லேசாகும்..” என்று மகளை அனுப்ப, அவளும் குளிக்கச் செல்ல,
“என்னங்க இவ இப்படி பேசிட்டு இருக்கா…” என்றார் ரோஜா.
“ம்ம் தகவல் வந்த நேரம் அச்சுதனும் அர்ச்சனாவும் ஒரே இடத்துல தான் இருந்திருக்காங்க. ஒண்ணா தான் அங்கயும் போயிருக்காங்க. அர்ச்சனா சைட்ல இருந்து சீக்கிரமே கிளம்பி அச்சுதனோட தான் வெளிய போயிருக்கா..” என்று சொல்ல,
“எ.. என்ன சொல்றீங்க? அப்.. அப்போ..” என்று ரோஜா இழுக்க,
“எனக்கும் தெளிவா தெரியலை ரோஜா. ரெண்டு பேருக்குள்ளயும் என்ன ஓடுதுன்னு ஒண்ணுமே புரியலை. நான் கால் பண்ணி கேட்கவும், இப்படின்னு சொல்லி அச்சுதனோட போறேன்னு சொல்றா…” என்று வருந்த,
“ம்ம் இப்போ எதுவும் கேட்கவேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்..” என்றார் ரோஜா.
“போகட்டும்.. இனியும் இதை இப்படியே விட முடியாது தானே. ஏதாவது ஒரு முடிவு வந்துதானே ஆகணும்…” என்ற கார்மகேம் தானும் குளித்துவிட்டு உடைமாற்றி வர, அர்ச்சனாவின் ஈர முடியை ரோஜா துவட்டிக்கொண்டு இருக்க,
“நைட் டின்னர் வெளிய போலாமா டா?” என்றார் மகளிடம்.
“இல்ல டாடி.. எனக்கு என்னவோ போல இருக்கு..” என,
“அதுனால தான் அப்பா சொல்றேன். வெளிய போலாம்.. அக்காவை வரச் சொல்லலாம். அவங்க ரிசார்ட்டுக்கு கூட போயிட்டு வரலாமா?” என்று கேட்க,
“ம்ம்ச் ப்ளீஸ் டாடி…” என்றவள், அவரது மடியில் தலை வைத்துக்கொள்ள,
“ஈரத் தலையோட படுக்காத அர்ச்சு…” என்று பிடிவாதமாய் ரோஜா அவளை எழுந்தமரச் செய்ய,
“இங்க பாருடா நீ இத்தனை வொர்ரி பண்றதுக்கு எதுவுமில்லை…” என்றார் கார்மேகம்.
“என்ன டாடி சொல்றீங்க?” என்று அர்ச்சனா அவர் முகம் பார்க்க,
“தனுஜவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம். அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு செயல் நடந்திருக்கக் கூடாதுதான். ஆனா நம்ம யார் கைலையும் எதுவுமில்லை தானே. யாருக்கு வேணும்னாலும் எப்போன்னாலும் எதுவும் ஆகுமில்லையா. அப்படி பார்த்தா அச்சுதனோட அப்பா மறைவும் நீலவேணிக்கு பெரிய இழப்பு இல்லையா…” என்று நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி பேச, அர்ச்சனா அமைதியாகவே இருந்தாள்.
“தனுஜாவை நீ உன்னோட வாழ்க்கை கூட கனக்ட் பண்ணி பார்க்காத.. அது உனக்கு நல்லது இல்லை. அதேபோல அச்சுதன் கிட்டயும் இப்படியெல்லாம் எதையும் பேசி வைக்காத..” என்று சொல்ல,
“அவர்கிட்ட நான் இதெல்லாம் பேச முடியுமா என்ன?” என்றாள் கசந்த புன்னகையோடு.
மகளின் அந்த பாவனை பெற்றவர்கள் இருவரையும், மேலும் வருந்தச் செய்ய “கொஞ்ச நாள் பொறு டா. கண்டிப்பா அச்சுதன் கிட்டயே நான் பேசுறேன்…” என்று கார்மேகம் சொல்லவும்,
“நோ டாடி…” என்றாள் வேகமாய்.
“ஏன் அர்ச்சனா?” என்று ரோஜா கேட்க,
“வேண்டாம் ம்மா.. இதுக்கு முன்ன பேசிருந்தா கூட ஓகே. ஆனா அதுவே எனக்கு வேண்டாம்னு தான் தோணிச்சு. இப்போ தனுஜாவோட மறைவுக்கு பிறகு, இந்த பேச்சு வேண்டவே வேண்டாம்.. கண்டிப்பா டாடி நீங்க அச்சத்தான் கிட்ட, நீங்க என்னோட விசயம் பேசவே கூடாது. இது என்மேல ப்ராமிஸ்…” என்றுவிட, பெற்றவர்கள் இருவரும் பேச்சற்று நிற்க,
“அச்சத்தானுக்கு நான் வேண்டாம்னா சந்தோசம் தான். அவரோட அந்த முடிவை நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன். அவர், அவரோட வாழ்க்கைல முன்னேறி போறார் அப்படின்னா, அதையும் நம்ம அக்சப்ட் பண்ணித்தான் அகனும். என் பொண்ணுக்கு என்ன பதில்னு எல்லாம் யாரும் எதுவும் பேசக் கூடாது. ரெண்டு குடும்பம் ஏற்கனவே சம்பந்தம் பண்ணிருக்கு. எப்பவுமே இதுனால அந்த சம்பந்தம் கசந்துடக் கூடாது…” என்று பேச, ரோஜாவிற்கோ மகளின் மனமுதிர்வு கண்டு கண்களில் நீர் வர,
“ம்மா நீ இதெல்லாம் அக்காக்கிட்ட சொல்லிட்டு இருக்காத.. அவ ரொம்ப டென்சன் ஆகிடுவா…” என்றவள் அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.
அங்கே அச்சுதனோ அவனது அறையில், கட்டிலில் வெறுமெனே படுத்திருந்தான்.
வீட்டிற்கு வந்தவன், குளித்து உடைமாற்றி எப்போதும் போலவே இருக்க, அவனைப் பார்த்து மற்றவர்கள் தான் குழம்பினர். அச்சுதன் வீடு வரவும் அவனைப் பார்க்க பிரசாந்தும், அனிதாவும் வர
“எங்களை வேண்டாம்னு சொல்லிட்டாங்கண்ணா…” என்ற பிரகாஷ், ஆறுதலாய் அச்சுதன் கரம் பிடித்துக் கொள்ள
“ரொம்ப யோசிக்காதீங்க மாமா…” என்றாள் அனிதா.
“யோசிக்க என்ன இருக்கு அனிதா…” என்று புன்னகை சிந்தியவன் “நீ இதெல்லாம் எதையும் போட்டு தலையை உருட்டிக்காத…” என்று சொல்ல,
“ம்ம்…” என்றவள், கணவனைப் பார்க்க, அடுத்து சில நொடிகளில் அண்ணன் தம்பி இருவரும் தொழில் விஷயம் பேச, அடுத்து ஒவ்வொருவராய் இங்கே வந்து சேர, இரவு உணவு மொத்தமாய் அங்கே தோட்டத்தில் வைத்துக்கொள்வோம் என்று சுமிதாவும் பாமினியும் ஏற்பாடுகள் செய்ய, எல்லாம் தனக்காக செய்கிறார்கள் என்று அச்சுதனும் எதையும் மறக்கவில்லை.
எப்போதும் போலவே உணவினை உண்டவன், வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அறைக்குள் வந்துவிட, நீலவேணிக்கு தான் அவனிடம் என்ன பேச என்றுகூட தெரியவில்லை.
உறக்கம் வராமல் எத்தனை நேரம் தான் அறையில் கிடப்பது என்று எண்ணியவன், கதவை திறந்து வெளியில் வர நீலவேணி உறங்கச் செல்லாமல் வரவேற்பறை சோபாவில் தான் அமர்ந்திருந்தார்.
“ம்மா என்ன தூங்கலையா?” என்று கேட்க,
“தூக்கம் வரலை அச்சுதா…” என்றவர் “நீ என்ன வெளிய வந்துட்ட?” என்று கேட்க,
“எனக்கும் தூக்கம் வரலை…” என்றவன் அம்மாவின் அருகினில் சென்று அமர்ந்தவன் என்ன நினைத்தானோ அவரது மடியில் படுத்துக்கொள்ள, நீலவேணிக்கு நெஞ்சு அடைத்துப் போனது.
முன்னெல்லாம் இப்படித்தான், நீலவேணியும் ஸ்ரீதரனும் இரவு உணவு முடித்து இப்படி அமர்ந்து பேசுகையில், அச்சுதன் வந்து அம்மாவின் மடியில் படுத்துக்கொள்வான். அப்பாவையும் அம்மாவையும் பேசவிடாமல் வேண்டுமென்றே வம்பிழுப்பான்.
அதெல்லாம் பொற்காலம் நீலவேணிக்கு. திரும்ப அந்த நாட்கள் வந்திடாதா என்று ஏங்காத நாளே இல்லை. கணவர் திரும்ப வரப் போவது இல்லை. ஆனால் மகனது மனம் மீண்டும் பழையபடி திரும்புமா என்பது அவருக்கு சந்தேகமே.
இன்று அச்சுதன் வந்து, மடியில் படுக்கவுமே, அவரையும் மீறி கண்கள் கலங்கிவிட, அவரது கண்ணீரோ அச்சுதனின் நெற்றியில் விழுந்து தெரித்தது.