அத்தியாயம் – 2

அர்ச்சனாவிற்கு இவர்கள் எல்லாம் கொடுத்த பில்டப் பார்த்து ‘அப்படி என்ன இவன்?!’ என்ற கேள்வி தோன்ற, அவனைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவனைப் பற்றி ஓரளவு தெரியும். எல்லாம் அனிதா சொல்லித்தான். அதாவது அவனது கடந்த காலம் தெரியும். நேரில் இப்போது தான் பார்க்கிறாள். சொல்லப்போனால் அனிதாவின் புகுந்த வீட்டு ஆட்களை எல்லாம் இப்போது தானே பார்க்கிறாள்.

என்ன பிரகாஷோடு அவ்வப்போது வீடியோ காலில் பேசி இருக்கிறாள். அவ்வளவுதான்.

ஆனால் இப்போது, அனைவரையும் தாண்டி  பார்வை எல்லாம் அச்சுதன் மீது படிய, அனைவருமே அவனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கண்டு கொஞ்சம் வியப்பாய் தான் இருந்தது.

இந்த காலத்தில் கூட்டு குடும்பங்கள் அரிது. இவர்களோ, தனி தனியாய் மூன்று பங்களாக்கள் கட்டி, ஒரே காம்பனவுண்டினுள் வசிக்கிறார்கள். எந்தவொரு விஷயம் என்றாலும், மூன்று குடும்பங்களும் கலந்து பேசி, சேர்ந்து நின்று செய்வது மட்டும் தான் வழக்கம்.

‘நம்பெருமாள்…’ குடும்பம் என்றாலே, அவர்களின் ஒற்றுமையும், தொழில் நேர்த்தியும் தான் திருச்சியில் பிரசித்தம். 

மூன்று குடும்பங்களுக்கும் தனி தனியே நகை கடைகள் இருந்தாலும், தொழில் ஒன்றுதான். லாபங்கள், நட்டங்கள் எல்லாமே மூன்று பங்கு தான். அப்பாக்களின் தொழில்கள் அப்படித்தான். அதனால் தான் இத்தனை விசாரிக்க முடிந்தது.

ஆனால் பெரியவர்கள் அதனை பிள்ளைகளின் தலையில் சும்மத்தவில்லை. அவர்களுக்கு என்ன விருப்பம் என்று கேட்டு அறிந்தனர். அச்சுதனுக்கு சிறு வயதில் இருந்தே, குடும்ப தொழில் மீது ஆர்வம் அதிகம். அவனும் ஒற்றை பிள்ளை என்பதால், ஸ்ரீதரன் இருக்கும்போதே, மகனுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து, அவனாக கற்றுக்கொள்ளவும் இடம் கொடுத்துவிட்டார்.

அவரின் மறைவிற்குப் பிறகு, அச்சுதன் அவனின் பொறுப்பை முழுதாய் ஏற்கும் சூழல். அதிலும் எத்தனை சவால்கள் என்று அவன்தானே கண்டான்.

இல்லை இல்லை.. குடும்பம் முழுவதுமே கண்டது.

அடுத்தது பிபி சகோதரர்கள்.. பிரகாஷிற்கு ஹோட்டல் தொழில் மீது காதல். அதன் மூலமாய் தான் அனிதா மீதும் காதல். தாமோதரன் பெரிய மகனுக்கு சொந்தமாய் ஒரு உணவு விடுதி அமைத்துக் கொடுத்து, விரும்பிய பெண்ணை திருமணமும் செய்து வைத்துவிட்டார். இதற்குமேல் தொழிலில் வாழ்வில் முன்னேறுவது உன் பொறுப்பு என்றும் சொல்லியாகிவிட்டது.

அடுத்து பிரசாந்த். அவனுக்கு அச்சுதன் என்றால் அதிக பிடித்தம். அதனால் அவன் வழியை பின்பற்றிக்கொண்டான். குடும்ப தொழில் ஏற்றுக்கொண்டான்.

கடைசியில் இருப்பது சுரேந்திரன் குடும்பம். அர்ஜூன் இப்போது தான் கல்லூரி படிப்பு படித்துக்கொண்டு இருக்க, தொழிலை முற்றிலுமாய் கவனிப்பது சுரேந்திரன் தான்.  அர்ஜூனிற்கு பெரிதாய் எதிலும் நாட்டம் இல்லை. அப்பா, பெரியப்பா, அண்ணன்கள் சொல்வதை எல்லாம் செய்யும் கடைக்குட்டி.

இவர்கள் அனைவருக்கும் ஒருத்தியாய் செல்ல மகளாய், அன்புத் தங்கையாய் பிறந்தவள் பவஸ்ரீ. சொல்லவே வேண்டாம். மூன்று குடும்பங்களுக்கும் சேர்த்து ஒரு பெண். நம்பெருமாள் குழுமத்தின் ஒற்றை பெண் வாரிசு. சுமிதா எப்படியோ, அதுபோலவே தான் நீலவேணியும், பாமினியும் கூட அவளை பார்த்துக்கொள்வர்.

அனைத்து பிள்ளைகளையுமே அப்படித்தான்.

இன்றுநாள் வரைக்கும் ஒரு பிரிவினையும் இல்லை.

அதனால் தான் என்னவோ, பெரிய திருஷ்டி போல் பெரியவர் குடும்பத்தில் நிகழக் கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டது.

அச்சுனதுக்கு மூன்றாண்டுகள் முன்னரே திருமணம் ஏற்பாடு செய்ய, தக்க வயது தான் என்பதாலும், வேறு பிரச்சனைகள் இல்லை என்பதாலும், அவனும் வீட்டில் அப்பா அம்மா பார்த்த பெண்ணிற்கு சம்மதம் என்றான்.

துனுஜாவை புகைப்படம் பார்த்தே அவனுக்கு பிடித்தம் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒருவகை திருப்தி தோன்றியது மனதினில். தனுஜாவின் அப்பா வைர வியாபாரி. பல ஆண்டுகள் குடும்ப பழக்கம். வெளியில் இருந்து ஏன் பெண் எடுக்க வேண்டும் நானே என் மகளை திருமணம் செய்து கொடுக்கிறேன் என்று அவரின் ஆசையை முன் வைக்க,

ஸ்ரீதரனோ “நீங்க சொன்னது சந்தோசம்.. ஆனா இது நான் மட்டும் எடுக்கிற முடிவு இல்லை. எல்லாரும் கலந்து பேசித்தான் சொல்லணும்…” என்றிட, குடும்பத்தில் இந்த செய்தி கேட்டு, அனைவருக்கும் மகிழ்ச்சியே.

தனுஜாவை ஓரிரு முறை வீட்டு பெண்களும் பார்த்திருக்கிறார்கள். என்னதான் வசதியான வீட்டு பெண் என்றாலும், அவளிடம் சிறு பந்தாவோ, பகட்டோ இருக்காது. மரியாதையாய் பழகும் பாங்கு எல்லாமே நீலவேணிக்கும் பிடித்துவிட, அடுத்து அச்சுதனிடம் இந்த விஷயம் போக,

“எல்லாருக்கும் ஓகே வா ப்பா..?” என்றான் அப்பாவிடம்.

“எங்க எல்லாருக்கும் ஓகே அச்சுதா.. நீ தனுஜாவை பார்த்திருக்க தானே…” என ,

“முன்ன எப்பவோ பார்த்தது.. சரியா நியாபகம் இல்லை…” என்ற மகனிடம், ஸ்ரீதரன், அவரின் அலைபேசியில் தனுஜாவின் புகைப்படத்தை காட்ட, கண்டவனுக்கு திருப்தியாய் தான் இருந்தது.

ஆனாலும் “அம்மா என்ன சொன்னாங்க?” என்று கேட்க,

“மகன் சொல்ற முடிவு தான் அப்படின்னு சொல்லிட்டாங்க…” என்று நீலவேணி புன்னகையோடு வர,

“ம்மா…” என்று சலுகையாய் அழைத்தவன் “உங்களுக்கு ஓகேவா ப்பா..?” என்று கேட்க,

“உன்னோட முடிவு தான் அச்சுதா…” என்றார்.

“தொழில் வேற, குடும்பம் வேற ப்பா.. அதான் யோசனை..” என்று அச்சுதன் இழுக்க

“நானும் இது யோசிச்சேன். ஆனா தனுஜா அப்பா கை சுத்தம். அதுனால வேற எந்த பிரச்சனைகளும் வர்ற வாய்ப்பில்லை…” என்று ஸ்ரீதரன் சொல்ல, அடுத்து இப்படியாக தனுஜா – அச்சுதன் திருமணம் முடிவாகியது.

பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது இவர்களதும். நிச்சய தேதிக்கும் திருமணத்திற்கும் இரண்டு மாதங்களே இருக்க, திருமண வேலைகளே அனைவருக்கும் சரியாய் இருந்தது.

பின்னே குடும்பத்தில் முதல் திருமணம் அல்லவா. ஆளுக்கு வேலையாய் பிரித்து செய்ய, அச்சுதனுக்கு தனுஜாவோடு பேசி பழகியதில் அவளது குணமும் மனதிற்கு ஏதுவாய் தான் இருந்தது.

காதல் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு நல்ல எண்ணமும், கொஞ்சம் பிடித்தமும், இவளோடான வாழ்வு நன்றாய் இருக்கும் என்கிற நம்பிக்கையும் அவனுக்கு நிறையவே இருக்க, ஆவலாகவே திருமண நாளுக்காக இருவருமே காத்திருந்தனர்.

அவர்கள் காத்திருந்த அந்நாளும் வர, முதல் நாள் மாலை வரவேற்பு நிகழ்ச்சி. ஸ்ரீதரன் மகனது திருமணத்தை அத்தனை அழகாய் ஏற்பாடு செய்திருக்க, முதல் நாள் நிகழ்ச்சியாக, சாரட் வண்டியில் தான் மாப்பிள்ளை பெண் ஊர்வலம் நடந்தேறியது.

அந்த குதிரை வண்டியை அலங்கரிக்கவே சில லட்சங்களை செலவு செய்திருந்தார் எனலாம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று எல்லாமே இருக்க,

வண்ண விளக்குகள் ஏந்திய ஆட்கள், ஒருப்பக்கம், நடன கலைங்கர்களின் நடனம் முன்னே செல்ல, செண்டை மேளமும், ட்ரம்ஸ் வாத்தியங்களும் போட்டி போட்டு தங்கள் திறமையை காட்ட, அதற்கும் முன்னே வான வேடிக்கைகள் வேறு ஆர்ப்பாட்டமாய் இருந்தது.

அச்சுதனும், தனுஜாவும், தேவ லோகத்தில் மிதப்பது போலத்தான், அந்த குதிரை வண்டியில் அமர்ந்து வர, சட்டென்று அனைத்தும் மாறியது போல, அழகிய கனவு கலைந்து போனது போல, எல்லாம் மாறியது.

பட்டாசு சத்தம் அதிகமானதா, இல்லை மேல தாளங்களின் சத்தம் அதிகமானதா இல்லை இரண்டும் சேர்ந்து குதிரையை மிரளச் செய்ததுவா என்று தெரியவில்லை.

நொடியில் என்னானது என்று யோசிக்கும் முன்னமே, குதிரைகள் இரண்டும் தரிகெட்டோட, அனைவருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துபோனது. அச்சுதன் ஒருப்பக்கம் கீழே விழுந்து கிடந்தான், தனுஜா ஒருபக்கம் கீழே விழுந்து கிடந்தாள்.

குதிரை வண்டியை செலுத்தியவன், வண்டிக்கு அடியில் கிடக்க, நல்ல வேளை அனைவருக்குமே உயிர் இருந்தது.

உயிர் மட்டும் இருந்தது.

இதனை எல்லாம் பார்த்த, ஸ்ரீதரனுக்கு கை கால்கள் நடுக்கம் கொடுத்து, வியர்த்து போய் சாய, அந்த நொடியில் அவர் அப்படியே சாய, நொடியில் அங்கே சூழல் மாறிவிட்டது.

இவர்களை எல்லாம் மருத்துவமனையில் சேர்த்து, அடுத்தது என்ன என்று யாருக்கும் யோசிக்கக் கூட முடியவில்லை. நீலவேணி தான் முற்றிலும் இடிந்து போனார். ஸ்ரீதரனுக்கு ஹார்ட் அட்டாக் என்று மருத்துவர்கள் சொல்ல, அச்சுதனுக்கு நெற்றியிலும், தோள் பட்டையிலும் நல்ல காயம். நெற்றி காயத்தின் தழும்பு இன்னமும் கூட உண்டு. தனுஜாவின் நிலை தான் மிக மோசமாய் இருந்தது.

குதிரை வண்டியை ஓட்டியவர்க்கு காயங்கள் அதிகம் தான் என்றாலும் பாதிப்பு என்று எதுவும் இல்லை.

தனுஜாவும், ஸ்ரீதரனும் தீவிர சிகிச்சை பிரிவினில் இருக்க, அச்சுதன் இரண்டு நாட்கள் கழித்து கண் விழிக்க, அவனுக்கு முதலில் என்ன ஆனது என்றுகூட விளங்கவில்லை.

தலை வலி தாள முடியாமல் இருக்க, நடந்தவைகளை எல்லாம் நினைவு கூர்ந்து, என்ன நடந்தது என்று யூகித்து பார்க்கவே அவனுக்கு நிமிடங்கள் பல தேவைப்பட்டது.

நீலவேணிக்கு மகன் கண் விழித்தது சற்று நிம்மதி கொடுத்தாலும், கணவரின் நிலை எண்ணியும், மருமகளாய் வரப்போகிரவளுக்கு இப்படி ஆகியதே என்றெண்ணியும் மிகவும் கவலையுற, அச்சுதனோ சற்று தேம்பானதுமே, அப்பாவையும், தனுஜாவையும் காணவேண்டும் என்று பிடிவாதம் செய்ய, முதலில் மருத்துவர்கள் சம்மதிக்கவில்லை.

பின் அவனது பிடிவாதம் கண்டு சம்மதிக்க, முதலில் அப்பாவை சென்று பார்க்க செவிலியரோ “சார் அவர் நல்லா தூங்கிட்டு இருக்கார்.. கண் விழிச்சதும் நானே கூப்பிடுறேன்.. நீங்க தனுஜா மேம்மை வேணும்னா பார்த்துட்டு வாங்க…” என்றிட,

நீண்ட பெரும்மூச்சு ஒன்றினை வெளி விட்டவன், தனுஜாவை காணச் செல்ல, அவளது தலையில் பெரிய கட்டொன்று போடப் பட்டு, உடல் எங்கிலும் எத்தனை மருத்துவ சாதங்கள் பொருத்தப்பட வேண்டுமோ அத்தனை பொருத்தப்பட்டு இருந்தது.     

அவனை கண்டதுமே, அத்தனை நாட்களாய் அழுது அழுது, மகள் எப்படியேனும் பிழைத்து விடுவாள் என்று ஒரு நம்பிக்கையில் இருந்த, தனுஜாவின் அப்பா மகேந்திரனும், அம்மா சந்திராவும் ஓவென அழ, அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

தலை மீண்டும் பயங்கரமாய் வலிக்க, தலையில் கை வைத்தவன் அப்படியே அமர்ந்துவிட, மகேந்திரனோ “அச்சுதா… நீ.. நீ போ.. நீ உன் ரூமுக்கு போப்பா.. எ.. எல்லாம் சரியாகும்…” என்று தங்கள் துக்கம் விடுத்து, அவனுக்கு ஆறுதல் சொல்ல,

“டாக்டர் என்ன.. என்ன சொல்றாங்க?” என்றான் வறண்டு போன குரலில்.

“இன்னும் மூணு நாள் ஆகும்னு சொல்லிருக்காங்க…” என்று சந்திரா மருத்துவர்கள் சொன்னதை கொஞ்சம் மாற்றி சொன்னார்.

நடந்த கோரத்தில் இவன் தான் சற்று தேறி இருக்கிறான். மருத்துவர்கள், தனுஜாவிற்கு மூன்று நாள் கெடு வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால், இவனது மனநிலை பாதிக்கப்பட்டு, அதனால் உடல்நலனும் கேட்டால் என்னாவது?

“க.. கண்டிப்பா தனுஜா சரியாகிடுவா…” என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லியவனுக்கு ஏனோ அங்கே இருந்திட முடியவில்லை.

எத்தனை அலங்காரமாய், எதிர்காலம் பற்றிய ஆயிரம் கனவுகளோடு, முகம் கொள்ளா புன்னகையோடும்  தன்னருகே சாரட் வண்டியில்  அமர்ந்து வந்தாள். ஆனால் இன்றைய அவளின் நிலை?

அவனால் யோசிக்கவே முடியவில்லை. தனுஜா நல்லமுறையில் குணமடைய வேண்டும் என்று அவனது உள்ளம் நிஜமான அக்கறையோடு, அந்த இறைவனை சரண் புக,

அதே நேரம் ஸ்ரீதரன் கண் விழிக்க, செவிலியர் வந்து அழைக்கவும் அச்சுதன் அப்பாவைப் பார்க்கச் சென்றான். மகனைப் பார்த்ததுமே அவருக்கு மீண்டும் துக்கம் தொண்டையை அடைத்தது.

மணக்கோலத்தில் காண எண்ணிய மகனின் இன்றைய கோலம் கண்டு அவருக்கு நெஞ்சு மீண்டும் வலிப்பது இருக்க “சா.. சாரி.. அச்ச..” என்று திக்கி திணறி பேச,

“ப்பா ப்ளீஸ்…” என்றான் அச்சுதன் வருந்தி..

“இ.. இல்ல.. நீ.. குதி.. வேணாம் சொன்ன.. நா. நான் தான்…” என்றவருக்கு அதற்குமேல் பேச முடியவில்லை.

சுவாசத்திற்கு போராட, மீண்டும் ஹார்ட் அட்டாக் அந்த நொடி வர, மகனின் கரத்தினை எத்தனை முடியுமோ அத்தனை இறுக்கிப் பிடித்தவர், அப்படியே உயிரையும் விட்டுவிட்டார்.

ஏற்கனவே அச்சுதன் ஒருவித அதிர்ச்சியில் இருந்தான் தான். வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. மருந்துகளின் உதவியால் பலமணி நேரங்கள் உறக்கத்தில் இருக்க, இப்போது நடந்தவைகளை மனது ஏற்றுக்கொள்ளும் முன்னமே, அப்பாவின் மரணம் கண் முன்னே நிகழ, அவன் அப்படியே இடிந்து போனான்.

திக் பிரம்மை பிடித்தவன் போலவே ஆகிவிட்டான்.

உடல் தேறினாலும். மனது தேறவில்லை..

கண் முன்னே நிகழ்ந்த அப்பாவின் மரணம் அவனுக்கு பேரிடியாய் இருக்க, அடுத்த நான்கு மாதங்கள் அவன் சித்த பிரம்மை பிடித்தவன் போலத்தான் இருந்தான்.

யார் என்ன பேசினாலும் சரி, அவன் முன்னே என்ன நடந்தாலும் சரி, எத்தனை பெரிய சத்தமாய் இருந்தாலும் சரி எதுவுமே அவனது மூளைக்கு எட்டவில்லை. குடும்பத்தினர் அனைவருக்குமே இதுவொரு இக்கட்டான சூழல். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்பது யாருக்குமே விளங்கவில்லை.

நீலவேணிக்கு தான் இந்த சூழலில் அழுது புலம்பினால் சரிபடாது என்று தோன்றியதோ என்னவோ, தன் துக்கத்தை எல்லாம் தொண்டைக்குள் அடைத்து, விழுங்கிவிட்டு, மகனை எப்படியேனும் சரி செய்திடவேண்டும் என்று முனைப்பாக இருந்தார்.

எத்தனைக்கு எத்தனை மனோ தத்துவ நிபுணர்களை எல்லாம் காண வேண்டுமோ எல்லாம் செய்தார்.

அனைவரும் சொன்னது ஒன்றே ஒன்றுதான், அதீத அதிர்ச்சி அச்சுதனுக்கு.. காலம் ஒன்றே மருந்து.. சட்டேன்றும் அவன் இயல்பாகலாம். இல்லை கால தாமதம் ஆனாலும் ஆகலாம் என்று. துணைக்கு கணவரும் இல்லை. ஒரே மகனுக்கு இந்த நிலை எனில் அவரும்தான் என்ன செய்வார்.

ஆனால் மனம் தளரவில்லை. தொழிலையும் விடவில்லை. இழுத்துப் பிடித்து எல்லாம் கொண்டு போனார். நீலவேணியின் போராட்டம் கண்டு கடவுள் சிறிது மனது இலகினாரோ என்னவோ, தொடர் மருத்துவத்தாலும், மருந்துக்களின் உதவியாலும், குடும்பத்தினரின் வேண்டுதலாலும் நான்கு மாதங்கள் கழித்து அவனுக்கு சற்றே சுயம் திரும்பியது.

இதற்கிடையில் ஊருக்குள்ளே பல பேச்சுக்கள்..

அச்சுதனுக்கு மூளை பாதிப்பு என்றும், அவனுக்கு மன நல பாதிப்பும் என்றும் கூட பேச்சுக்கள் பரவல், பொதுவாய் ‘பைத்தியம் போலவா?!’ என்று பேச்சுக்கள் கேட்டு, நீலவேணி மேலும் இடிந்து போனார்.

என் மகனுக்கா இந்த பெயர் என்று எண்ணி எண்ணி மனதிற்குள் நோக, குடும்பத்தினர் எல்லாருமே அவருக்கு பக்கபலமாய் இருந்தனர்.

அச்சுதனுக்கு வைத்தியம் எல்லாம் வீட்டிலே தான். கொஞ்சம் சுயம் திரும்பியதும் வீட்டினுள் அவனாக நடமாடினான். ஆனால் யாரோடும் பேசவில்லை. பின் ஓரிரு மாதத்தில் ஓரிரு வார்த்தைகள் பேசினான். ஒவ்வொரு படியாய் மனதும் தேற தேற,  அப்பாவின் படத்திற்கு மாலை போட்டிருப்பது கண்டு, அந்த புகைப்படத்தின் முன்னேயே வெகு நேரம் நின்றிருந்தான்.

நீலவேணி மீண்டும் மகன் ஏதேனும் இழுத்து வைத்துவிடுவானோ என்றெண்ணி “அச்சுதா…” என்று வேகமாய் அவன் தோள் தொட,

“சா.. சாரிம்மா…” என்றான் கண்ணீருடன்.

மருத்தவர் சொல்லியிருந்தார். அவன் உடைந்து அழவேண்டும் என்று. அப்படி அழுதுவிட்டால் மனதின் பாரங்கள் பாதி குறைந்துவிடும் என்று. நீலவேணி அதனை மனதில் வைத்து, மகனுக்கு ஆறுதலோ தேறுதலோ எதுவும் சொல்லவில்லை.

அவன் அழட்டும் என்று தனது துக்கத்தையும் மகனிடம் கண்ணீரோடு இறக்கி வைக்க, அம்மாவின் கண்ணீர் மகனை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. அம்மா எத்தனை வலியை கண்டிருப்பாள் என்று புரிய, தான் இப்படியே இருப்பதும் சரியில்லை என்று மூளை உணரத் தொடங்க,

அடுத்து ஓரிரு நாட்கள் அமைதியாய் இருந்தவன் “ம்மா தனுஜா?!” என்றான் கேள்வியாய்.

அதிர்ச்சியான சங்கதிகளை உடனே அவனிடம் எதுவும் சொல்லக் கூடாது என்பதால் “தனுஜா அவங்க வீட்ல இருக்காப்பா…” என்றுமட்டும் சொல்ல,

“அப்படியா? நல்லாகிட்டாளா? நல்லாகிட்டா ஏன் என்னை பார்க்க வரல?” என்று கேள்விகளை அடுக்க,

“வீட்ல தான் இருக்கா.. ஆனா இன்னும் நல்லாகல…” என்று பாமினி சொல்ல,

“இல்ல சித்தி.. பொய் சொல்லாதீங்க…” என்றான் பட்டென்று.

அவன் கொஞ்சம் இயல்பாய் பேசுகிறான் என்றதுமே குடும்பம் மொத்தமும் அங்கேதான் இருக்க, அப்போதுதான் இந்த பேச்சுக்கள் வர, வீட்டினருக்கோ என்ன சொல்லி அவனை சமாளிக்க என்று தெரியவில்லை. நீலவேணி சமாளித்துப் பார்த்தவர்,

“சரி ஆச்சுதா நாளைக்கு அவளை போய் பார்க்கலாம். ஆனா ஒன்னு நீ ரொம்ப ரியாக்ட் பண்ண கூடாது..” என்று சொல்ல, சரி என்று சொன்னான்.

கோமாவில் இருக்கும் தனுஜாவை, உரிய மருத்தவ வசதிகள் கொண்டு வீட்டில் வைத்தே பார்த்துக்கொள்கிறார்கள் என்பதனை நேரில் கண்டவன் மீண்டும் சில வாரங்கள் பிரம்மை பிடித்தவன் போலாகி, மீண்டும் இயல்பிற்கு திரும்ப, அனைவரின் நிலையையும் சொல்லவா வேண்டும்..