அத்தியாயம் – 18

“ஹலோ…” என்று அர்ச்சனா முயன்று குரலை இயல்பாக வைத்தே பேச,

“எங்க இருக்க அர்ச்சனா?” என்றான் அச்சுதன் அவளை விட மிக மிக இயல்பாய்.

இத்தனை நாட்கள் கழித்து ஒருவருக்கு ஒருவர் பேசுவது என்னவோ இருவருக்குமே மனதினில் ஒருவித உணர்வைக் கொடுக்க, இருவருமே அதை வெளிக்காட்டிட கூடாது என்பதில் உறுதியாய் இருந்தனர்.

“இ.. இப்போதான் வீட்டுக்கு வந்தேன் அச்சத்தான்…” என்றவள், சுற்றிலும் இருக்கும் பெரிய பெண்களை ஒரு பார்வை பார்த்தவள்

‘பேசிட்டு வர்றேன்…’ என்று சைகை செய்துவிட்டு எழுந்து போக, இந்த பெண்கள் நால்வருமே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அச்சுதனோ “எங்க வீட்ல இருந்து எல்லாம் வந்திருக்காங்களா?” என்று கேட்க,

“ம்ம் எஸ்..ஏன்?” என்றாள் வேகமாய்.

“நத்திங்..” என்றவன் “நான் சைட்டுக்கு வந்தேன்..” என்று சொல்ல,

“சொல்லிருந்தா நான் இருந்திருப்பேன் தானே…” என்றாள் அவளும்.

“எனக்கென்ன தெரியும் நீ சீக்கிரமே கிளம்பிருப்பன்னு…” என்றவன் “ப்ளான்ல கொஞ்சம் சேஞ்சஸ் வருதுன்னு இங்க எஞ்சினியர் சொன்னார். ஏன் என்னாச்சு?!” என்றான் நான் கட்டிட விசயமாய் தான் உனக்கு அழைத்தேன் என்பது போல.

“ஆமா அச்சத்தான். ரொம்பவெல்லாம் இல்லை..” என்றவள் சிறு யோசனையின் பின் “நாளைக்கு நீங்க வர முடியுமா? நான் நேரா எக்ஸ்பளைன் பண்ணட்டுமா?” என,

“ம்ம் ஓகே…” என்றவன் வைத்துவிட்டான்.

அதாவது நீ அன்று பேசி சென்றது எல்லாம் எனக்கு ஒரு விசயமே இல்லை. நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன் என்று காட்டுவதற்காகவே அச்சுதன் இந்த அழைப்பை செய்திருக்க, அர்ச்சனாவோ ‘நீ எப்படி நடந்துகொண்டாலும் என்னுடைய இந்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை…’ என்று அவளும் காட்டும் விதத்தில் அவளும் எப்போதும் போலவே பேசியவள்,

மீண்டும் வரவேற்பறைக்கு வந்து “பில்டிங் பத்தி பேச கால் பண்ணார்…” என்று பொதுவாகச் சொல்லி அனைவரையும் பார்க்க,

“ஏன் ம்மா.. உனக்கு கஷ்டமாவே இல்லையா?” என்றார் நீலவேணி.

“எதுக்கு அத்தை?” என்று அர்ச்சனா கேட்க,

“அவன் மனசு மாறும்னு எங்களுக்கு தோணவே இல்லைடா. நீயும் வாழவேண்டிய பொண்ணு. என் மகனை மறந்துடுன்னு சொல்ற தைரியமும் எனக்கில்லை. அவனுக்கு உன்னைவிட நல்ல பொண்ணு எங்க அமையும் சொல்லு.. ஆனா இதெல்லாம் நடக்கணுமே…” என்று நீலவேணி பரிதவிப்பாய் பேச,

“நீங்க வாய்விட்டு பேசிட்டீங்க அண்ணி. நாங்க சொல்ல முடியாம தவிச்சிட்டு இருக்கோம். திரும்ப யூஎஸ் போலாம்னு இருந்தாளாம். என்ன ஒரு எண்ணம் பார்த்தீங்களா? அப்போ காதல்னு வந்துட்டா, பெத்தவங்களோட எண்ணமெல்லாம் ரெண்டாம் பட்சமா தானே போகுது..” என்று ரோஜாவும் பேச,

அர்ச்சனாவோ அவளது கோர்த்திருந்த விரல்களை பார்த்து அமைதியாய் இருக்க,

“பார்த்தீங்களா.. இப்படித்தான் இதே அமைதியோட உக்காந்துடுறா. அவங்கப்பாவும் அவளை ஒன்னும் சொல்ல விடுறது இல்லை..” என்றார் ரோஜா மீண்டும்.

“ம்மா…” என்று அவரை கடிந்தவள்,

“நான் என்ன பண்ணும்னு நீங்க எல்லாம் நினைக்கிறீங்க அத்தை..” என்று அனைவரையும் பார்த்து கேட்க,

“என்னன்னு சொல்றதும்மா.. அவன் திருந்தமாட்டான். அது நிச்சயம். என்னோட கண்ணீர் கூட அவனை அசைக்கல..” என்றார் நீலவேணி.

“சோ, நான் என்னோட விருப்பத்தை மாத்திக்கனும்னு சொல்றீங்களா?” என்று அர்ச்சனா பேச,

“அப்படி சொல்ற மனசும் எங்களுக்கு முழுசா இல்லை..” என்றார் சுமிதா.

“பின்ன அத்தை வேறென்ன நான் செய்யனும்?” என,

“ப்ராக்டிகலா யோசின்னு சொல்றோம்..” என்று பாமினி பேச,

“ம்ம் ஓகே.. சரி இப்படி ஒரு டீல் வச்சுக்கலாம்.. ஒருவேளை அச்சத்தான், நான் தான்னு இல்லை. இப்போ இருக்க சூழ்நிலைல இருந்து மூவ் ஆன் ஆகட்டும். அவருக்குன்னு ஒரு லைப் அவர் அமைச்சுக்கட்டும். அப்படி நடந்துட்டா, நானும் மூவ் ஆன் ஆகிடுறேன்.. ப்ராமிஸ்…” என்று சொல்ல, இதற்குமேல் அவளிடம் யாருக்கும் தான் என்ன பேச முடியும்.

ரோஜாவிற்கு மகளின் இந்த நிலைப்பாடு மிகவும் வருத்தத்தை கொடுத்தாலும், அவரால் என்ன சொல்லிட முடியும் என்றுதான் தெரியவில்லை.

இந்த பேச்சுக்கள் முடியவும் பாமினி அடுத்து “அனிதா உங்கக்கிட்ட எதுவும் பேசினாளா அண்ணி?” என்று கேட்க,

“என்ன விஷயமா அண்ணி?” என்றார் இவரும்.

“இல்ல.. கல்யாணமாகி ஒருவருசதுக்கு மேல ஆச்சு. இன்னும் கன்சீவ் ஆகல. ஒருதடவ டாக்டர் கிட்ட போயிட்டு வாங்கன்னு சொன்னேன்.. ரெண்டு பேருமே பதில் பேசலை..” என்று பாமினி இதனை தயங்கியே பேசினார்.

எப்படி எடுத்துக்கொள்வாரோ என்று.

“ஹ்ம்ம் நானும் ஒருதடவ சொன்னேன் அண்ணி. ஆனா பிடிகுடுத்து பதில் சொல்லலை அனிதா. சரி நீங்க எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்னு தான் இருந்தேன்…”  என்றிட,

“பிரகாஷ் கிட்ட பேசினாலும் பயனில்லை. அனிதாக்கிட்ட பேசினாலும் பயனில்லை. ஒரு செக்கப் பண்ணிக்கிட்டா என்னாகப் போகுது..?” என்று பாமினி பேச,

“நான் பேசி பாக்குறேன் அண்ணி..” என்றார் ரோஜா.

அர்ச்சனாவும் இந்த பேச்சினை எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள். அவள் அறிந்தவரையில், பிரகாஷும் அனிதாவும் ஒருவருக்கு ஒருவர் புரிதல் கொண்டவர்கள் தான். ஆனால் சும்மா கூட இருவரும் சிரித்து பேசியோ, இல்லை ஒன்றாய் அமர்ந்து பேசியோ அவள் கண்டது இல்லை.

அனிதாவோ எப்போதுமே ஒருவித பதற்றத்தில். பிரகாஷோ  எப்போதுமே ஒருவித இறுக்கத்தில். இவர்கள் இருவரையும் பார்த்தால் யாருமே காதல் திருமணம் செய்தவர்கள் என்று சொல்லவே முடியாது.

‘என்னவோ இருக்கு…’ என்று எண்ணியவள், அனிதாவிடம் இதை பேசவேண்டும் என்று முடிவும் செய்துகொண்டாள்.

மேலும் இவர்கள் எல்லாம் பேசிவிட்டு கிளம்ப, ரோஜாவிற்கு அனிதாவின் பிரச்சனை இப்போது தலைமீது வந்தமர்ந்து கொண்டது. கணவர் வந்ததுமே அவரிடம் இதனைப் பேச,

“இந்த காலத்துல இதெல்லாம் ஒருவிசயமே இல்லை. செக்கப் போறதுன்னா போக வேண்டியது தானே…” என்றவர் “நீ அனிக்கிட்ட பேசு ரோஜா…” என்றவர்

அர்ச்சனாவிடம் “என்னடா ப்ளான்ல எதோ சேஞ்சஸ் வருதுன்னு இஞ்சினியர் சொன்னார்…” என,

“எஸ் டாடி.. பில்டிங் ஓவரால் ஸ்ட்ரக்சர்ல எந்த மாற்றமும் இல்லை. ஆனா உள்ள கொஞ்சம் மாத்துறோம். கட்டிடத்தோட நிலைப்புத் தன்மைக்காக..” என்றவள் என்னென்ன மாற்றங்கள் என்று அவரிடம் சொல்ல,

“ம்ம் ஓகே குட்.. இது அச்சுதனுக்கு தெரியுமா?” என,

“நாளைக்கு வர்றேன் சொல்லிருக்கார். நான் பேசிக்கிறேன் டாடி..” என, மகளின் முகத்தை அர்த்தமாய் பார்க்க,

“அவ்வளோதான் டாடி..” என்றாள் அர்ச்சனா.

“என்னவோடா…” என்றவரின் முகத்திலும் மகள்களை பற்றிய கவலை.

மறுநாள் அச்சுதன் வழக்கம்போல் வரும் நேரத்திற்கு வர, அர்ச்சனா வெளியில் இல்லையெனில் தயங்காமல் டென்ட்டிற்குள் வருபவன், இன்று அப்படி செய்யாமல் அவளுக்கு அழைப்பு விடுக்க,

“டென்ட்ல தான் இருக்கேன்…” என்றாள்.

“வெளிய வா அர்ச்சனா..” என,

“ம்ம்ம்..” என்றவள், அவனைப் பார்த்ததும் எப்போதுமே செய்யும் விதமாய் ஒரு தலையசைப்பை கொடுத்தவள் “எக்ஸ்ப்ளைன் பண்ணீங்களா?” என்றார் அவர்களின் எஞ்சினியரிடம்.

“இல்ல மேம்.. நீங்க வரட்டும்னு தான்…” என்று அவர் இழுக்க,

“எப்பவுமே கஸ்டமர் கேள்வி கேட்கிற மாதிரி வச்சுக்கக் கூடாது இல்லையா…” என்று கடிந்தவள்

அவளது ஐ பேடில் மாற்றம் செய்யப்பட கட்டிட வடிவமைப்பை காட்டி “உள்ள மட்டும் தான் அச்சத்தான் கொஞ்சம் மாத்துறோம். அதுவும் பில்டிங் ஸ்டேபிலிட்டிக்காகத்தான். இது ஓகேன்னா சொல்லுங்க. இல்லைன்னா வேற ஐடியா எதுவும் பண்ணலாம்…” என்றிட,

“ம்ம்…” என்று யோசித்தவன் “பட்ஜெட்ல எதுவும் மாற்றங்கள் வருமா?” என்றான்.

“ரொம்பவெல்லாம் இல்லை.. அது கடைசியா பார்த்துக்கலாம்…” என்றுவிட,

“ஓகே.. ஆனா முதல்ல நீ கொடுத்த டிசைன்ஸ் நல்லா இருந்தது…” என்றான் வெளிப்படையாகவே.

“எனக்கும் அது ரொம்பவே பிடிச்சு தான் இருந்தது. ஆனா பில்லர்ஸ் போடும்போது தான் சின்ன சின்ன மிஸ்டேக்ஸ் எல்லாம் கண்ணுக்கு தெரியுது. இனி பில்டிங் மேல எழும்ப எழும்ப என்னென்ன சரி பண்ண முடியுமோ எல்லாம் பண்ணிக்கலாம்…” என்று பேச,

“ஓகே…” என்று தோள்களை குலுக்கியவன்,

‘அவ்வளவு தானே…’ என்பதுபோல் அவளை ஒரு பார்வை பார்த்து கிளம்பப் போக,

“அ.. அச்சத்தான் உங்களோட பேசணும்…“ என்று வேகமாய் சொல்லி நிறுத்தினாள்.

‘என்ன?’ என்பதுபோல் நெற்றி சுறுக்கி பார்க்க “அது..பிரகாஷ் மாமா அனிதா கல்யாணம் முன்னாடி வீட்ல எதுவும் பெருசா ப்ராப்ளம் ஆச்சா?” என்று கேட்க,

வேகமாய் அவன் முகம் மாறி “இல்லையே.. ஏன் ம்மா?” என்றான் வழக்கம் போல.

“ம்ம் அக்கா என்னவோ எப்பவும் ஒருவித டென்சன்லயே இருக்கப் போல இருக்கு. மாமாவும் அவளும் சிரிச்சு பேசி பார்க்கிறதே ரொம்ப ரேர். நேத்து அத்தைங்க வந்திருந்தாங்க இல்லையா..” என்றவள் அவனிடம் செக்கப் செல்வது பற்றி பேச,

“ஓ..!” என்று நெற்றியை நீவியவன் “பிரகாஷ் லவ் பண்றேன்னு சொன்னதே எங்க எல்லாருக்கும் பெரிய ஷாக் தான். ரொம்ப மூடி டைப் அவன். எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு வச்சிப்பான். எங்க எல்லாரோடவும் இருப்பான் ஆனா வாய் திறந்து பேசிக்க மாட்டான்..” என,

“அனிதா அதுக்கு நேரமார்…” என்றாள் அர்ச்சனா.

“சரிதான். ஆனா ரெண்டுபேர் குள்ளேயும் எதுவும் பிரச்சனை இருக்கிறது போல தெரியலையே..” என்றான் அச்சுதனும்.

“தெரியலையா இல்லை யாரும் அதை கவனிக்கலையா அச்சத்தான்..” என்று அர்ச்சனா கேட்க, அவள் கேட்கும் கேள்வி மிக சரி தானே.

‘அவங்களுக்கு என்னப்பா லவ் ஜோடி…’ என்றுதானே எண்ணிக்கொண்டார்கள் அனைவருமே.

அச்சுதன் முகம் மேலும் யோசனைக்கு போக “அனிதாக்கிட்ட தான் பேசலாம்னு நினைச்சேன். ஆனா அத்தைங்க வந்து பேசினது தெரிஞ்சு, அதுக்கு அவ ரொம்ப ரியாக்ட் பண்ணிட்டா, அதுவும் தப்பாகிடும். என்னவோ ஆனா ஷி இஸ் நாட் நார்மல்…” என,

“ம்ம்…” என்று தலையை ஆமோதிப்பாய் ஆட்டியவன் “பிரகாஷ் கிட்ட பேசி பார்க்கலாம் தான்…” என்றவன்

“ஓகே பார்க்கலாம்…” என்று கிளம்பிவிட்டான்.

அர்ச்சனா சொன்னதுபோல பிரகாஷ் அனிதா திருமணத்திற்கு பிறகு யாரும் அவர்களை அப்படியொன்றும் கூர்ந்து கவனிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காதலித்து கல்யாணம் செய்தவர்கள். அப்படியென்ன அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை வந்துவிடப் போகிறது என்றுதான் இருந்தனர்.

ஆனால் அப்படியில்லையோ என்று அச்சுதனுக்கு இப்போது தோன்ற, தான் இந்த விசயத்தில் பேசுவது எத்தனை சரியாய் இருக்கும் என்றும் அவனுக்கு தெரியவில்லை. தனக்கு திருமணம் ஆகியிருந்தால், தம்பியிடம் அவனது குடும்ப விஷயம் பற்றி வெளிப்படையாய் பேசலாம்.

அவனுக்கும் கொஞ்சமேனும் அனுபவம் வந்திருக்கும். ஆனால், இப்போதைய நிலையில் பிரகாஷிற்கு எடுத்து சொல்லும் அளவு அவனுக்கு அனுபவம் இருக்கிறதா என்றால் இல்லை தானே.

இதே யோசனையில் அவன் நகை கடைக்கு வந்துவிட, பிரசாந்த் அங்கே இருந்தான்.

“வாடா…” என்று பேச,

“அண்ணா.. இந்த மாடல் இருந்தா அப்பா வாங்கிட்டு வர சொன்னார்..” என்று அவன் ஒரு ஹாரம் படத்தை காட்ட,

“பட்டறைல இருக்கும்டா. போன வார டிசைன்…” என்றவன், நகை செய்பவரிடம் அழைத்துக் கேட்க,

“ரெடி சார்..” என்றார் அவரும்.

“ஆன்லைன்ல அவைளபில் இருக்குன்னு பார்த்துட்டு கஸ்டமர் நேர்ல வந்து நிக்கிறாங்க. ஆனா டிசைன் ரெடியாகல…” என்று சொல்ல,

“நான் பேசிக்கிறேன். நீ போய் வாங்கிட்டு கிளம்பு..” என்றவன்

“அ.. பிரசாந்த்..” என்று நிறுத்தினான்.

“என்னண்ணா?” என்று கேட்க,

“நகையை குடுத்துட்டு திரும்ப வா. பேசணும்..” என்றழைக்க, என்றைக்குமே இப்படி பேசியிராத அச்சண்ணன் இன்று பேசவேண்டும் என்று சொல்லவும், அதுவும் தன்னையும் மதித்து சொல்லவும் பிரசாந்திற்கு அதுவே ஒருவித வேகத்தை கொடுக்க,

‘அண்ணன் என்னவோ பேசப் போகிறார்…’ என்று நினைத்தவன், வேகமாய் அந்த ஹாரத்தை வாங்கி, அவனின் அப்பாவிடம் கொடுத்தவன் மீண்டும் அச்சுதன் கடைக்கு வர,

“பிரகாஷ், அனிதா வீட்ல ஓகே தானே டா..” என்றான் நேரடியாகவே.

“என்னண்ணா? இதுக்காக கூப்பிட்ட..” என்று பேச,

“பின்ன எதுக்கு?” என,

“இல்ல.. அர்ச்சனா..” என்று இழுத்தவன் “ஓகே ஓகே.. சரண்டர்…” என்று கை தூக்கிவிட்டு “ஏன் ரெண்டுபேருக்கும் என்ன?” என்று கேட்க,

அச்சுதனோ அர்ச்சனா சொல்லியதை சொல்ல “ஓஹோ..!” என்றான் அவனும் யோசனையோடு.

“என்னடா?” என,

“பிரகாஷுக்கு கொஞ்சநாளாவே பிஸ்ன்ஸ் டல்லுன்னு நினைக்கிறேன் ண்ணா…” என,

“நினைக்கிறியா? ஏன்டா இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்க வேணாமா?” என்று பேச,

“ண்ணா ண்ணா ஹோட்டல் பார்த்துக்கிறேன்னு காலையில சீக்கிரமே கிளம்பிடுறான். நைட்டும் லேட்டா தான் வர்றான்.. ரிசார்ட் பத்தி பிரச்சனை இல்லை. ஆனா ஹோட்டல்ல தான் என்னவோ பிஸ்னஸ் டல்லுன்னு அன்னிக்கு அப்பாக்கிட்ட சொல்லிட்டு இருந்தான்…” என,

“இதெல்லாம் எல்லா தொழில்லையும் இருக்கிறது தானே…” என்றான் அச்சுதன்.

“இருக்கிறது தான். இதோ நம்ம நகை தொழில் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்கிறோம். அவன் புதுசா ஹோட்டல் தான் வைப்பேன்னு போனான். சப்போர்ட் பண்ண ஆள் வேணுமில்லையா? சின்னதா ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா பெருசு பண்ணிருக்கலாம். ஆனால் எடுத்ததுமே பெரிய பட்ஜெட்ல பண்ணான்…” என்று பிரசாந்த் சொல்வது எல்லாம் நிதர்சனம் தானே.

“சரிடா.. பிஸ்னஸ்ல பிரச்சனை வர்றதுக்கும், அவனுக்கும் அனிதாவுக்கும் இடையில என்ன ஆகிடப் போகுது…” என,

“அது.. தெரியலையே…” என்று கைகளை விரித்தவன் “அண்ணா நம்ம இங்க வச்சு அவன்கிட்ட பேசினா எல்லாம் எதுவும் பதில் சொல்ல மாட்டான். ரெண்டு பேரையும் ஒண்ணா வச்சுத்தான் பேசணும். பெரியவங்க முன்னாடி பேசினா அது பிரச்னை வேற மாதிரி போகவும் வாய்ப்பிருக்கு…” என்றிட,

“கரக்ட்டா.. ஒன்னு பண்ணலாம் எப்பவும் மாசத்துக்கு ஒருதடவ பண்ணைக்கு போவோம் தானே. இந்த வாரம் அங்க போலாம்.. தனியா பேசி பார்க்கலாம்…” என,

“யா.. யார் எல்லாம் போறோம் ண்ணா…” என்றான் வேகமாய்.

“கண்டிப்பா பெரியவங்க யாரும் இல்லை.. நம்ம மட்டும் தான்…” என்றிட,

“ம்ம் அனிதா அண்ணிக்கிட்ட பேசுறப்போ, அவங்க சைட் ஆளுங்க யாரும் இருந்தா பெட்டர்…” என்று இழுத்து பிரகாஷ் நிறுத்த, அவன் யாரை சொல்கிறான் என்று புரிந்த அச்சுதன், அவனை முறைக்க,

“ண்ணா இந்த விஷயத்தை நம்ம பார்வைக்கு கொண்டு வந்ததே அர்ச்சனா தான். அவங்க இல்லாம எப்படி?” என்று பிரசாந்த் பேச,

“ம்ம் சரி கூப்பிட்டுக்கலாம்…” என்றான் எனக்கு இதில் விருப்பமில்லை என்பதுபோல் முகம் வைத்து.