நம்பெருமாள் நகை மாளிகையின் புதிய விஸ்தரிப்பிற்கான பூமி பூஜை இதோ அழகாய் நடந்தேறிக்கொண்டு இருந்தது. இது அச்சுதனுக்கான தனிப்பட்ட அடையாளமாய் இருந்திடவேண்டும் என்பதற்காக, அவனது சித்தப்பா இருவருமே அவனிடம் இதை பேசியிருந்தார்கள்.
“அச்சுதா, நம்பெருமாள் நகை மாளிகை அப்படிங்கிறது நம்மளோட குடும்பத்து அடையாளம். இப்போ வரைக்கும் இருக்கிற நகைக்கடைகள் அத்தனையும் பொது கணக்கா போட்டு எழுதிட்டு வர்றோம். லாபங்கள் தனியா பிரிச்சு அவங்கவங்க விருப்பத்துக்கு தனிப்பட்ட தொழிலோ இல்லை நிலங்களோ, விவசாயமோ எதிலும் போட்டுக்கிறோம். இப்போ நீ நகை வியாபாரமே தனியா தொடங்க போறது சந்தோசம் தான். ஆனா, பின்னாடி குழப்படி வந்துடக் கூடாது இல்லையா?” என்று சித்தப்பாக்கள் இருவரும் பேசியதை அச்சுதன் தவறாகவே எண்ணவில்லை.
அவர்களின் இடத்தினில் அவன் இருந்தாலும் இதை தானே பேசியிருப்பான்.
“சரி சித்தப்பா என்ன பண்ணிக்கலாம்…” என்று அவர்களையே திரும்பக் கேட்க,
“கட்டிட வேலை முடியவும் பேரு மட்டும் வேற வச்சுக்கலாம் தானே.. இல்லை உனக்கு எதுவும் யோசனை தோணினா சொல்லு..” என்று சின்னவர் கேட்க,
“சித்தப்பா இதை சொல்ல ஏன் இத்தனை தயக்கம். நானே இதைப்பத்தி உங்க ரெண்டுபேர் கிட்டயும் பேசனும்னு நினைச்சேன். நீங்களே பேசினது சந்தோசம் தான். எனக்கு அப்பாவோட பேர் வச்சு ஆரம்பிக்கணும்னு ஆசை அதனால ஸ்ரீ நம்பெருமாள் அப்படின்னு வச்சுக்கலாம் தானே…“ என்று கேட்டிட, சித்தப்பாக்கள் மட்டுமில்லை குடும்பத்தில் அனைவருக்குமே சந்தோசம் தான்.
அதே சந்தோசத்தோடு தான் இதோ இன்று பூமி பூஜையில் நிற்க, வீட்டு சம்பந்தி என்கிற முறையிலும், அவர்களின் கட்டுமானம் எங்களின் பொறுப்பு என்ற முறையிலும் கார்மேகம் குடும்பத்துடனும், கட்டுமான பணியாளர்களோடும், அங்கே நின்றிருக்க, அர்ச்சனா அனைத்தையும் ஒரு வேடிக்கை பார்த்து நின்று இருந்தாள்.
அச்சுதன் மீது ஆசையாய் படியும் பார்வையை கடினப்பட்டு திருப்பிட, அவனோ இன்றைய தினம் அநியாயத்திற்கு அழகனாய் தெரிந்தான் அவளுக்கு.
பின்னே பட்டு வேஷ்டி சட்டையில் வந்திருந்தான். அதிலும் எப்போதும் முகத்தை முக்கால்வாசி மறைத்திருக்கும் தாடியை இன்று கொஞ்சமே கொஞ்சம் ட்ரிம் செய்து, நெற்றியில் சின்னதாய் சந்தன கீற்றோடு வந்து நிற்பவனை காண காண அவளுள்ளம் தவியாய் தவிக்கவே செய்ததி.
“ஹாய் சின்ன அண்ணி…” என்று அர்ஜூனும் பவஸ்ரீயும் வந்து பேச,
“ஹாய்..! ஹாய்..!” என்றவள் “என்ன ஸ்கூல் காலேஜ் எல்லாம் இல்லையா?” என்று கேட்க,
“லீவ் போட்டாச்சு…” என்று இருவரும் கோரஸாக பேச,
“ஓ! லீவ் போட சான்ஸ் கிடைச்சா போதும் இவங்களுக்கு…” என்றபடி அங்கே அனிதா வந்தவள் “ஏன் இப்படி தனியா நின்னிருக்க.. வா வந்து எங்களோட நில்லேன்…” என்று அழைக்க,
“அதானே வாம்மா..” என்று பாமினியும் வந்துவிட்டார் அவளை அழைக்க,
“இருக்கட்டும் அத்தை.. நீங்க எல்லாம் பாருங்.. என்னோட டீம் இப்போ வந்துடுவாங்க.. வந்த ப்ளான் டிஸ்கஸ் பண்ணனும்…” என்று சொல்லி நின்றாள் அர்ச்சனா.
“அட அதெல்லாம் அடுத்து மெல்ல பண்ணிக்கலாம்.. பூஜை நடந்துட்டு இருக்கு, நானும் கவனிக்கல பாரேன்…” என்ற பாமினி அவளின் கை பற்றியே அழைக்க, சங்கடமாய் அனிதாவைப் பார்த்து வைத்தாள் அர்ச்சனா.
அங்கே பூஜையில் அச்சுதன் அருகே தான் நின்றிருந்தாள் அர்ச்சனா. அது அவளுக்கு ஒருமாதிரி மன சுனக்கத்தை கொடுக்க, இந்த தருணங்களை எல்லாம் அனுபவித்துக்கொள் என்று அவளது மனது ஆசைகொண்டு கூறினாலும்
‘வேணாம் அர்ச்சனா.. இதெல்லாம் பின்னாடி நினைச்சு பார்த்து நீ தான் பீல் பண்ணிட்டு இருக்கணும்…’ என்று தன்னுடைய மனதிற்கு ஒரு குட்டு வைத்தவள், வேலை இருப்பது போல் ஒதுங்கி நிற்க, இதோ இப்போது பாமினி அழைக்கவும், வேறு வழியில்லாமல், மீண்டும் பூஜையில் வந்து நிற்க “அப்போவே சொன்னே தானே போகதன்னு…” என்று கடிந்தார் ரோஜா.
“ம்ம்ச் ம்மா…” என்றவள், பூஜை செய்பவர் பக்கம் பார்வை வைத்துக்கொண்டாள்.
பிரசாந்தும் வந்திருந்தான் தான். ஆனாலும் அர்ச்சனாவை பார்த்து சின்னதாய் ஒரு சிரிப்போடு நிறுத்திக்கொண்டான். பிரகாஷ் தம்பியிடம் “போய் பேசேன்டா…” என்று சொல்ல,
“அதெல்லாம் இப்போவே வேண்டாம்.. முதல்ல வீட்ல பேசட்டும் அடுத்து பார்ப்போம்…” என்றவன் இயல்பாகவே இருக்க, அவர்கள் பேசுவது அச்சுதன் செவியிலும் விழுந்து வைத்து, அவனை பிரசாந்த் பார்த்து சிரிக்கவும் வைத்தது.
‘ஆகா..! இப்போ எதுக்கு இந்த அச்சண்ணா முகத்துல இத்தனை புன்னகை?!’ என்று எண்ணியவன், அர்ஜூனைப் பார்க்க
“அது ஒண்ணுமில்லை, நீ அவங்களை லேடி அச்சுதன்னு சொன்னதை பவஸ்ரீ அச்சண்ணாக்கிட்ட சொல்லிட்டா…” என்று சொல்ல,
“கிராதகி…” என்று தங்கையை பார்த்து முறைத்து வைத்தான்.
இளைய பட்டாளாம் இப்படி பேசியபடி நிற்க, அனிதாவோ பொறுப்பான மருமகளாய் அங்கே மிகவும் தீவிரமான முக பாவனையுடன் நின்று இருந்தாள். நீலவேணி மனதினில் இருக்கும் வருத்தங்களை வெளிக்காட்டாமல், மகனது இந்த முயற்சி நல்லபடியாய் காலத்திற்கும் சிறந்து விளங்கவேண்டும் என்று வேண்டி நிற்க,
ஐயரோ, பூஜை செய்யப்பட்ட ஐந்து செங்கலை எடுத்து முன்னே வைத்து “வாங்கோ.. வந்து ஒவ்வொருத்தரா நல்லா சாமி கும்பிட்டு எடுத்து வைங்கோ..” என்று சொல்ல,
அச்சுதன் முதலில் “ம்மா…” என்று நீலவேணியை பார்க்க,
“நானா?!“ என்றார் நீலவேணி தான்.
“நீங்க இல்லாம யாரும்மா…” என்றவன் “வாங்க…” என்று சொல்லி நீலவேணியை முதல் செங்கல் எடுத்து வைக்கச் சொல்ல, அடுத்து தாமோதரன் பாமினி எடுத்து வைக்க, மூன்றாவது செங்கலை சுரேந்திரன் சுமிதா எடுத்து வைக்க, நான்காவது செங்கலை பிரகாஷ் அனிதா வைக்க,
ஐந்தாவது செங்கலை ஐயர் “கட்டிடம் கட்டித் தர்றவா வந்து வைங்க…” என்று சொல்ல,
“அர்ச்சனா வாம்மா…” என்று பாமினி அவளை அழைக்க, திகைத்துப் போனாள் அர்ச்சனா.
அவளோ தயங்கி நிற்க “போயேன் அர்ச்சு..” என்று ரோஜா சொல்ல,
“ம்மா.. அப்படி பார்த்தா அப்பா தான் வைக்கணும்…” என்று அர்ச்சனா சொல்ல,
“இது உன்னோட ப்ளான்.. நீ தான் முன்னாடி நின்னு எல்லாம் செய்ய போற அர்ச்சனா. உன்னோட முதல் ப்ராஜக்ட். நல்லபடியா செய்யனும்னு சாமி கும்பிட்டு கல்லு வாங்கி வை..” என்று கார்மேகமும் சொல்லிவிட,
“அப்பா சொல்றது சரிதான் அர்ச்சனா.. வாம்மா..” என்று சுமிதாவும் அழைக்க,
“எல்லாரும் சொல்றாங்க தானே என்ன யோசனை?” என்று தங்கையை இடித்தாள் அனிதா.
ஆனால் அர்ச்சனாவிற்கோ, இன்றா தினம் வந்ததில் இருந்து அனைவரும் அவளிடம் அதிகமாய் இணக்கம் காட்டுவது போலிருக்க, இப்போது இதுவேறா என்று எண்ணியவள், கேள்வியாய் அச்சுதனைப் பார்த்தாள்.
ஏனெனில் இது அவனின் இடமல்லவா.. அவன் சொல்லாமல், அவன் அழைக்காமல் இருந்தால் எப்படி?!
இத்தனை களேபரத்திலும் அர்ச்சனாவின் காதல் மனது, அவனை அழைப்பை எதிர்பார்க்க, அச்சுதனோ அவள் தயக்கம் புரிந்து “வா அர்ச்சனா.. நானே சொல்லனும்னு நினைச்சேன்… வந்து செங்கல் வாங்கி வை..” என்று சொல்ல,
“ம்ம்…” என்று தலையை அசைத்தவள், ஐயரிடம் இருந்து செங்கல் வாங்கி நிமிர்கையில், காலடியில் இருந்த சிறு கல்லை கவனிக்காது காலை அதுமேலேயே வைத்துவிட, நொடியில் தடுமாறிவிட்டாள் அர்ச்சனா.
“ஏ! பார்த்து…” என்று அனைவருமே பதறிட, அங்கே பக்கத்தில் அச்சுதன் நினிருந்தவன், அவள் கல் மீது கால் வைக்கவுமே கவனித்து, அவளை பிடித்துவிட்டான்.
அர்ச்சனா விழவில்லை என்றதுமே அனைவருமே ஒன்றுபோல ‘நல்ல வேளை…’ என்று சொல்ல,
“நல்ல சகுனம்.. சுத்தி இருக்க எல்லாரும், ஒன்னுசொன்னது போல நல்ல வேளை அப்படின்னு நல்ல வார்த்தை சொல்லிருக்கீங்க.. இதுவே நல்ல சகுனம்தான். அம்மாடி.. பொண்ணு.. சாமியை வேண்டிண்டு வந்து அஞ்சாவது கல்லை வச்சு பூஜையை நிறைவு பண்ணுங்க..” என்று சொல்ல,
நல்லவேளை அச்சுதன் அவளை ஒரு கையிலும், அவள் கையில் இருந்த செங்கலை ஒரு கையிலும் பிடித்திருக்க, அவள் திடமாய் நிற்கவும் “பார்த்து போய் வை…” என்று சொல்ல,
“தம்பி.. நீங்க தானே முதலாளி..அப்போ நீங்களும் வைக்கணுமே.. கடைக்கு சொந்தமானவர் நீங்க.. கடை கட்டிக்குடுக்கப் போறது அவங்க.. அப்போ ரெண்டு பேரும் சேர்ந்தே வைங்களேன்…” என்று ஐயர் சொல்லவும், அர்ச்சனாவிற்கு பக்கென்று ஆனது.
இதெல்லாம் இயல்பாய் நடக்கிறதா, இல்லை தனக்குத்தான் இப்படித் தோன்றுகிறதா என்று எண்ணியவள், மீண்டும் தயக்கமாய் அச்சுதன் முகம் பார்க்க, அவனோ அவன் முகத்தினில் எதுவும் காட்டாமல் நின்றிருக்க, சுற்றி இருந்த பெரியவர்களைப் பார்க்க, அவளோ எப்போதும் போலத்தான் இருந்தார்கள்.
ஆக, இதெல்லாம் யாருக்கும் வேறுவிதமாய் தெரியவில்லை. காதல் கொண்டது அவளது நெஞ்சம் தானே. அதுமட்டும் தான் ஏகத்திற்கும் எதையாவது நினைத்து தாறுமாறாய் தவியாய் தவித்துக்கொண்டு இருந்தது.
நீலவேணிக்கோ சந்தோசம்கொள்வதா, சங்கடம் கொள்வதா என்றே தெரியவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று பார்க்க, இறுதியாய் அர்ச்சனா அவளின் அப்பாவைத் தான் பார்த்தாள்.
அவரோ “என்னடா? டைம் ஆகுது பாரு…” என்று அவளை ஊக்கப்படுத்த, அச்சுதனும் அதனை உணர்ந்தவன் “சேர்ந்து வைக்கலாம்…” என்று மெல்ல சொன்னவன், அவளுடன் இணைந்தே ஐந்தாவது செங்கலை வைக்க, இளையவர்கள் லேசாய் கை தட்டி, அவர்களின் சந்தோசத்தை வெளிப்படுத்த, அச்சுதனுக்கு என்னவோ மனது ஒருமாதிரி இருந்தது.
ஆனாலும் அதனை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, அவனின் அப்பாவை எண்ணிக்கொண்டான்.
“நீங்க இருந்திருக்கனும் ப்பா.. ஆனாலும் எப்பவும் உங்களோட ப்ளசிங்க்ஸ் எனக்கிருக்கும்னு தெரியும்…” என்று மனதினுள்ளே அப்பாவினோடு பேசிக்கொள்ள, அடுத்து பூஜையும் நல்லபடியாய் முடிந்து அடுத்தடுத்த வேலைகள் ஆரம்பமாகின.
அர்ச்சனா வேகமாய் இந்த கூட்டத்தில் இருந்து விடுபட்டு, அவளது அப்பவினோடு சென்று சேர்ந்துகொண்டாள்.
இனி அங்கே வீட்டினருக்கு வேலை இல்லை.
அதனால் மற்றவர்கள் எல்லாம் கிளம்பும் நேரத்தில் ரோஜா பெரிய மகளிடம் “என்ன டி என்னவோ கதை எல்லாம் சொன்ன?” என்று கேட்க,
“ம்மா.. பொறும்மா.. அங்க பாரு எங்க மாமனார் அப்பாக்கிட்ட பேச போயிருக்கார்…” என்று காட்ட,
அவள் சொன்னது போல தாமோதரன், கார்மேகத்திடம் “நாங்க கிளம்புறோம் சம்பந்தி..” என்று சொல்ல,
“சந்தோசம்.. அடிக்கடி வந்து வேலை எப்படி நடக்குதுன்னு பாருங்க..” என்று கார்மேகமும் சொல்லம,
“பின்ன நாங்க வராமயா..” என்றவர “வர்ற ஞாயிரு பிரகாஷ் பிறந்தநாள் உங்களுக்கே தெரியும். வீட்ல சின்னதா ஒரு பார்டி ரெடி பண்ணிருகோம்.. கண்டிப்பா குடும்பமா எல்லாம் வந்துடனும்..” என்று சொல்ல, கார்மேகத்திற்கு புரிந்து போனது.
ஆனாலும் வெளியில் காட்டாமல் “அதுக்கென்ன சம்பந்தி வந்துட்டா போச்சு..” என்றிட, அடுத்து ரோஜாவிடம், அர்ச்சனாவிடம் என்று எல்லாம் முறையாய் சொல்லி அழைப்பு வைத்தே கிளம்ப, அர்ச்சனாவிற்கு இன்று என்னவோ இவர்கள் அனைவரும் பேசுவது வித்தியாசமாய் இருந்தது.
‘வேணாம். இவங்களை எல்லாம் யோசிக்கவே யோசிக்காத.. உனக்கு கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி உன்னோட வேலையை நல்லபடியா செஞ்சு முடி..’ என்று மனதை கடினப்பட்டு கட்டுப்படுத்தியவள், அவளது வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டாள்.
அச்சுதன் இவர்களோடு தான் இருந்தான்.
கார்மேகமோ “நீங்க கிளம்புங்க தம்பி.. இனி இது எங்களோட வேலை.. வெயில்ல எதுக்கு நிக்கணும்…” என்று சொல்ல,
“இருக்கட்டும் மாமா…” என்றவன், வெளியில் அர்ச்சனா லேசாய் முகம் சுறுக்கி நிற்பதைப் பார்த்தவன்
“முதல்ல ஒரு டென்ட் எதுவும் போட்டுக்கலாம் தானே மாமா…” என்றான்.
“ஆமா தம்பி.. அது எப்பவும் நாங்க ரெடி பண்ணிடுறது தான். ஈவ்னிங் குள்ள எல்லாம் ரெடி பண்ணிடுவாங்க..” என்றிட, அடுத்து அச்சுதனுக்கு கடையில் இருந்து அழைப்பு வந்துவிட, அவனும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
கார்மேகம் மேற்கொண்டு சில நிமிடங்கள் வேலைகள் பற்றி பேசியவர், அவரும் கிளம்பிவிட, அர்ச்சனாவிற்கோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. அவளுக்கு உதவி செய்ய அத்தனை பேர் இருந்தாலும், முதல் விஷயம் என்பது எப்போதுமே ஸ்பெசல் தானே.
இதில் தான் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கிறது என்று மனதை ஒருநிலை படுத்தி, எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்தாள்.
அடுத்தடுத்த நாட்களும் இப்படியே நகர, வேலைகள் மளமளவென்று நடந்துகொண்டு இருந்தது. அச்சுதன் தினமும் காலையும் மாலையும் வருவான். அர்ச்சனா பல நேரங்களில் அவனைக் கண்டதும் பேசுவாள். சில நேரங்களில் அவனைப் பார்த்து லேசாய் தலையை ஆட்டிவிட்டு, அவளது வேளையில் கவனம் வைத்திருப்பாள்.
அன்றைய தினம் சரியான வெயில், அர்ச்சனாவிற்கு இத்தனை வெயில் பழக்கம் இல்லை என்பதால், டென்டினுள் சென்று அமர்ந்துகொண்டவள் அவளது ஐ பேடில் எதையோ பார்த்துக்கொண்டு இருக்க, அச்சுதன் அங்கே வந்தவன் “ஹாய்..” என்றபடி அங்கிருந்த இருக்கையில் அமர,
“ஹாய்…” என்று புன்னகைத்தவள், அவள் அருகினில் நின்றிருந்தவரிடம் “என்னோட மெசர்மென்ட் இதுதான். எதுக்கும் மேஸ்திரி என்ன சொல்றார் கேட்டுகோங்க..” என்று சொல்லி அவரை அனுப்பியவள்
“சொல்லுங்க அச்சத்தான்..” என்று அவனைப் பார்த்து புன்னகைத்து இருந்தாள்.
“நீ சொல்றதை செய்ய இத்தனை பேர் இருக்காங்க தானே.. நீயும் ஏன் வந்து உக்காந்துட்டு இருக்க?” என்று அச்சுதன் கேட்க,
“பின்ன.. ப்ரம் தி ஸ்க்ராட்ச் எல்லாம் தெரிஞ்சுக்கணும்.. எங்கப்பா கம்பனி அப்படின்னா ஈசியா முதலியாகிடலாம் தான். ஆனா வேலை தெரியனும் தானே.. இல்லைன்னா ஈசியா ஏமாத்திட்டு போயிடுவாங்க..” என்றிட,
“அதுசரி. நாளைக்கு பிரகாஷ் பர்த்டே பார்ட்டி.. என்ன ப்ளான்..?” என்றான்.
“ப்ளான் வீட்டுக்கு போனாதான் தெரியும். அக்காதான் நிறைய என்னவோ பண்ணிட்டு இருக்கா. இன்னும் நான் கிப்ட் கூட வாங்கலை..” என,
“அதேதான் நானும். என்ன வாங்குறதுன்னு தெரியலை..” என்று இரு கைகளையும் விரித்தான்.
“இதுக்கு முன்ன என்ன வாங்கி கொடுத்தீங்க..?” என்று அவள் பேச்சு வாக்கினில் கேட்க,
“இதுக்கு முன்னே இப்படியெல்லாம் எங்க சித்தப்பா பார்ட்டி அரேஜ் பண்ணல. சொல்லப்போனா எங்க வீட்ல யாருமே பிறந்தநாள் அப்படின்னு பெருசா எல்லாம் செலிபிரேட் பண்ண மாட்டோம். கோவில் போவோம். வீட்ல கண்டிப்பா ஏதாவது ஸ்வீட் பண்ணுவாங்க. எல்லாரும் விஷ் பண்ணுவாங்க. இப்போதான் முதல்தடவை..” என்று சொல்ல,
“ஓஹோ..! அப்போ கண்டிப்பா ஏதாவது பெரிய கிப்டா வாங்கி கொடுங்க..” என்றவள் “அக்கா சொன்னா, நீங்க பேசினதுனால தான் அவங்க கல்யாணம் நடந்ததுன்னு…”என்றும் சொல்ல, அச்சுதன் பதில் பேசாமல் புன்னகைக்க,
“சரி ஏதாவது ஐடியா சொல்லுங்க. என்ன வாங்குறதுன்னு.. எனக்கு ஜென்ட்ஸுக்கு கிப்ட் குடுத்து எல்லாம் பழக்கம் இல்லை…” என்றும் சொல்ல,
“எனக்கும் தான் ஜென்ட்ஸுக்கு கிப்ட் குடுத்து பழக்கம் இல்லை…” என்று அவன் சிரியாமல் சொன்னதைக் கேட்டு, அர்ச்சனா தான் கலகலவென்று சிரித்தாள்.
பல நாட்கள் கழித்து வந்த சிரிப்பு அவளுக்கு.
என்னவோ மனதினில் இப்படித்தான் என்று ஒரு முடிவிற்கு வந்தபிறகு, மற்றதெல்லாம் அவளுக்கு இலகுவாய் வந்தது. அதிலும் அச்சுதனோடு நேரம் போக்குவது எல்லாம் அவளுக்கு பொக்கிஷ தருணங்களாய் இருக்க, அவனிடம் முகம் திருப்புவதெல்லாம் இல்லை.
அச்சுதனுக்கும் அவளிடம் பெரிதாய் எவ்வித வித்தியாசமும் தெரியவில்லை. அதுபோக, பிரசாந்திற்கு பேசப் போகிறார்கள் என்றதும் அர்ச்சனா மீது வேறெந்த விதமான பார்வைகளுக்கும் அவன் மனது இடம் தருமா என்ன?!
இப்படியாக இருவரும் பேசி, என்ன வாங்குவது என்று கடைசிவரைக்கும் முடிவு செய்யாமல், அவரவர் இல்லம் நோக்கிச் செல்ல, வீடு வந்ததுமே ரோஜா மகளிடம் “பிரெஷ் ஆகிட்டு வா அர்ச்சு.. உன்னோட கொஞ்சம் பேசணும்…” என்றிட,
அவளும் பிரெஷ் ஆகி வந்தவள் “சொல்லு ரோஸ்…” என்று அம்மாவை கட்டிக்கொள்ள,
“நாளைக்கு நீ அப்பாவோட போகவேணாம். வீட்ல இரு. அக்கா சாயந்திரம் சீக்கிரமே வர சொல்லிருக்கா…” என,
“ம்மா.. நாளைக்கு போயே ஆகணும்.. நான் நேரா அங்க வந்துடுறேன்…” என்றாள்.
“ம்ம்ச் சொன்னா கேளு டி…” என்றவர் பின்னே என்ன நினைத்தாரோ அன்று அனிதா சொல்லியதை எல்லாம் சொல்லி “ஒருவேளை நாளைக்கு அனிதாவோட மாமனார் இதை பேசினா, உன் டாடி உன்னோட முடிவு என்னன்னு கேட்பார்…” என்று சொல்லி அவளது தலையில் இடியை இறக்க,