அத்தியாயம் – 11

ரோஜாவிற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. அர்ச்சனவோ இருந்த கொஞ்ச நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்க, அச்சுதனோ நீலவேணியை முறைத்துக்கொண்டு நின்றான்.

ரோஜாவோ “சரி அர்ச்சு பார்த்து போயிட்டு வா. அங்க இங்கன்னு பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து சுத்திட்டு இருக்கக் கூடாது…” என்று மகளுக்கு சொன்னவர்,

“பார்த்துக்கோங்க அண்ணி…” என்று நீலவேணியிடமும் சொல்லிவிட்டு, அச்சுதனிடம் ஒரு தலையசைப்போடு விடைபெற்றுக்கொள்ள,

அர்ச்சனாவிற்கோ   ‘நான் சென்னைக்கே போகலடா.. வீட்டுக்கே போறேன்..’ என்பது போல இருந்தது.

என்னவோ அவளுக்கு அச்சுதன் எண்ணங்களில் இருந்து, இந்த சூழலில் இருந்து சற்று ஒரு மாறுதல் தேவை என்றுதான் தோழியின் திருமணம் என்றதுமே கிளம்பினாள். மனது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் என்று எண்ணம் அவளுக்கு. ஆனால் இங்கேயும் அவனே வந்து நின்றால், அவளும் தான் என்ன செய்வாள்?!

நீலவேணியோ “என்னம்மா டல்லாகிட்ட…” என்று கேட்க,

“ம்மா.. நீங்க பண்றது சரியில்லை…” என்றான் அச்சுதனும்.

“நான் என்னடா பண்ணேன்..” என்று நீலவேணி கேட்க, அர்ச்சனா அமைதியாய் அவர்கள் பேசுவதை கேட்டு நின்றிருந்தாள்.

“யுஎஸ் போயிட்டு இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கா. பிரண்ட்ஸ நேர்ல பார்க்க போறா.. அவளுக்கான டைம் இது.. இப்போ போயிட்டு எங்களோட வந்து ஸ்டே பண்ணுன்னு சொல்லிட்டு இருக்கீங்க..” என்று அர்ச்சனா முன்பாகவே பேச,

அவன் தனக்காக பேசுவது கண்டு, அவளுக்கு மனது சிறிது ஆறுதல் கொடுத்தலும், புத்தியோ இதெல்லாம் வேண்டாத கற்பனை அர்ச்சனா உனக்கு. இந்த அன்பு உனக்கு அஸ்திவாரம் இல்லாத ஒன்று. ஒருபக்கத்து நேசம் என்றுமே முழுமையடையாது. இப்படியே போனால், உன்னுடைய நிலை தான் மோசமாகும் என்று எடுத்துச் சொல்ல,

மனதோ ‘கடவுளா பார்த்து உனக்கு அச்சுதன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண வாய்ப்பு கொடுத்து இருக்கார். மிஸ் பண்ணிடாத…’ என்று கூப்பாடு போட,  அவளோ வெறுமெனே அம்மாவும் மகனும் பேசுவதைப் பார்த்து நின்று இருந்தாள்.

நீலவேணியோ “வயசு பொண்ணுடா.. தனியா விட முடியுமா?” என்று கேட்க,

“ஷ்..!” என்றவன் “அர்ச்சனா..” என்று அவளை அழைக்க,

“ம்ம்…” என்று விழிகளை மட்டும் நகர்த்தி அவனைப் பார்த்தாள்.

“நீ உன்னோட பிரண்ட்ஸ் கூட போ அர்ச்சனா.. நீ எப்படி ப்ளான் பண்ணிருந்தியோ, அதுபோல என்ஜாய் பண்ணு..” என்று சொல்ல,

“ப்ளான் அப்படின்னு எல்லாம் எதுவுமில்லை. பிக்கப் பண்ண பிரண்ட்ஸ் வருவாங்க. ஸ்டே பண்றது, நாளைக்கு பங்க்சன் போறது எல்லாம் அடுத்து தான் டிசைட் பண்ணனும்…” என்று நீலவேணியைப் பார்த்துச் சொன்னாள்.

அச்சுதனுக்கு அவள் வந்ததுமே புரிந்துபோனது அவள் இன்னமும் கோபமாய் தான் இருக்கிறாள் என்று. ஆனால் அது எதற்கு என்றுதான் தெரியவில்லை. அவள் சொன்ன வடிவமைப்பை தானே தேர்ந்தெடுத்தும் இருக்கிறேன். இன்னும் ஏன் கோபம் என்று அவன் யோசித்துத்தான், இப்போது அவளுக்காக பேசியது.

அவளோ அவன் பேசியதற்கு நீலவேணியிடம் பதில் சொல்ல, அச்சுதனோ கண்கள் சுறுக்கி அவளைப் பார்க்க, நீலவேணியோ “காலம் கெட்டு கிடக்கு அர்ச்சனா. நம்ம வீட்டு பொண்ணுங்க இப்படி வெளில போய் தங்குறது எல்லாம் இதுவரைக்கும் பழக்கம் இல்லை. உங்கம்மாவுக்கு அதான் பயம். வெளிநாடு போய் படிக்கிறது வேற. ஆனா இப்படி பிரண்ட்ஸ்னாலும் போய் ஸ்டே பண்றது வேற…” என்று சொல்ல,

“ம்ம்.. நான் உங்களோட வர்றேன்…” என்று முடித்துவிட்டாள்.

எதற்கு வீணாய் பெரியவர்களின் மனதை நோகடிக்கவேண்டும்.

அச்சுதனோ “நான் உனக்காக பேசினா, நீ இப்படி பேசுற?” என்று சொல்ல,

“இல்ல இருக்கட்டும். நாளைக்கு காலைல அவங்களோட போய் நான் ஜாயின் பண்ணிக்கிறேன்…” என்று அப்போதும் அவள் பொதுப்படையாய் பேச,

“இப்போ உனக்கு என்ன கோபம்?” என்று அச்சுதன் கேட்ட நேரம், இவர்கள் விமானம் ஏறவேண்டிய நேரமும் வர, அதற்கான அழைப்பும் வந்துவிட்டது.

நீலவேணிக்கு எண்ணமெல்லாம் நாளை மருத்துவர் பரிசோதனை முடித்து என்ன சொல்வாரோ என்று பயமாய் இருந்தது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு மாத்திரை மருந்து எடுப்பது. இதனாலே தானே யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.

இந்த வைத்தியங்கள் இல்லாமல் போனால் கூட, ஏதேனும் மாற்றங்கள் நடக்குமா என்று சிந்தனை எல்லாம் அப்படி போக, அர்ச்சனாவைக் கண்டதும் என்னவோ அவருக்கு ஒரு நிம்மதியாய் இருந்தது.

அவளை தன்னுடன் தங்க வைத்துக்கொள்ள ஆசையாய் இருக்கவும் தான் அப்படி சொல்லிவிட்டார்.

இருந்தும் இதனால் அவளின் தனிப்பட்ட சந்தோசங்கள் பாதிக்கிறதோ என்று பார்க்க, அவளோ அவர்களுடன் வர, விமானம் ஏறியதும் அவரவர் இருக்கையில் அமர்ந்திட, பயணம் என்னவோ அமைதியாகவே தான் கடந்தது.

சென்னை வந்து இறங்கி, அவரவர் உடைமைகள் கைக்கு வர, வெளியே அர்ச்சனாவிற்காக மூவர் காத்து இருந்தனர். அர்ச்சனாவிற்கும் அவர்களை கண்டதும் முகத்தினில் ஒரு சந்தோசப் புன்னகை தான். என்னதான் நெருங்கிய நட்புக்கள் இல்லையென்றாலும், உடன்பயின்றவர்கள் தனக்காக வந்து நிற்பதே பெரிது.

அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து நேரில் காணவும் “ஹேய் அர்ச்சு..” என்று வந்திருந்தவர்களின் பெண் ஒருத்தி வந்து அவளை வரவேற்பாய் அணைக்க,

“ஹாய் அர்ச்சு…” என்று ஆண்கள் இருவரும் வரவேற்க,

“ஹை.. ஹாய்.. எல்லாம் எப்படி இருக்கீங்க? ஆளே மாறிட்டீங்க…” என்று அர்ச்சனாவும் சந்தோசமாய் பேசினாள்.

அச்சுதனோ “அர்ச்சனா பேசிட்டு வரட்டும். அவசரப் படுத்த வேண்டாம்..” என்று நீலவேணியிடம் சொல்லிட, இருவரும் அவளுக்காக காத்திருக்க,

“நீயும் தான் ஆளே மாறிட்ட..” என்று ரேகா சொல்லிட,

“ஹா.. ஹா அப்படில்லாம் இல்லை…” என்று பேசிச் சிரிக்கும் அர்ச்சா மீது தான் அச்சுதனின் பார்வை பதிந்து இருந்தது.

‘என்மீது என்ன கோபம் இவளுக்கு?!’ இதுவே அவனது சிந்தனையில் இருக்க, அவளையே தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவர்கள் பேசுவது கேட்கும் தூரத்தில் தான் இவர்கள் நின்றிருக்க, நீலவேணி அங்கிருந்த இருக்கையொன்றில் அமர்ந்துவிட்டார்.

மலர்ந்து சிரிக்கும், அவளது முகத்தில் அப்படியே மன உணர்வுகளின் வெளிப்பாடு. கள்ளம் கபடம் என்று எதுவுமில்லை அவளிடம் என்று அவனுக்கு அவனே எண்ணிக்கொள்ள, முதல்முறையாய் அவளது ஜீன்ஸ் மற்றும் ஒரு லாங் ஷர்ட்டில் பார்க்க, ஆளே என்னவோ வித்தியாசமாய் தான் இருந்தாள்.

திருச்சி விமான நிலையத்திலேயே கண்டான் தான். ஆனால் அப்போது உள்ளார்ந்து கவனிக்கவில்லை. இப்போது அவளை கவனிக்க, ஸ்டைலாய் கேசத்தை இடக்கையால் கோதியவள், நவநாகரீக நங்கையாய் தான் அவனுக்கு காட்சியளித்தாள்.

அவளது இப்படி உடைகளும் அவளுக்கு பொருத்தமாய் இருப்பதாய் பட ‘அழகான அர்ச்சனா…’ என்று அவனது மனது சொல்லாமல் சொல்ல,

அங்கே பேசிக்கொண்டே இருந்தவள், இவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க, பட்டென்று தன் பார்வையை மாற்றிக்கொண்டான் அச்சுதன்.

‘என்னடா அச்சுதா பண்ற நீ…’ என்று அவனுக்கு அவனே  கேட்டு கடிந்துகொள்ள,

அர்ச்சனாவோ “இட்ஸ் ஓகே கைஸ்.. நீங்க வந்தது எனக்கு ரொம்பவே சந்தோசம்.. நான் பேமிலியோட வந்திருக்கேன். நாளைக்கு உங்களோட ஜாயின் பண்ணிக்கவா?” என்று கேட்டபடி

“அத்தை…” என்று நீலவேணியை அழைக்க, அவரோ இத்தனை நேரமாய் மகனைப் பார்த்துக்கொண்டு தானே இருந்தார்.

அதிலும் அவனது பார்வை அர்ச்சனா மீது பதிந்து மீண்டதையும் கவனித்துக்கொண்டு தானே இருந்தார்.

இப்போது அர்ச்சனா அழைக்கவும் “என்னம்மா..?” என்றிட,

“என்னோட பிரண்ட்ஸ்…” என்று அவர்களை அறிமுகம் செய்துவைத்தவள், இவர்களையும் அவர்களுக்கு அறிமுகம் செய்திட, அச்சுதனோடு வந்திருந்தவர்கள் கரம் குலுக்க,

“அர்ச்சனா வந்ததும் பார்ட்டி ப்ளான் பண்ணிருந்தோம் சார். பேமிலி கூட வந்திருக்கேன்னு சொல்லிட்டா…” என்று ரேகா வருந்த, வெளிப்பார்வைக்கு அச்சுதன் புன்னகை செய்தாலும்,

அர்ச்சனாவோ “நாளைக்கு காலைல ஷார்ப்பா எயிட்டோ க்ளாக் வந்து உங்களோட ஜாயின் ஆகிடுவேன். எனிவே தேங்க்ஸ் கைஸ்…” என்று கூறி மீண்டும் அவர்களிடம் கை குலுக்கி விடைபெற, அவளுக்கே ஒருமாதிரி சங்கடமாய் தான் இருந்தது.

தங்களோடு வருவாள் என்றுதானே, இவர்களும் தங்களின் நேரத்தை ஒதுக்கிவிட்டு வந்திருப்பது.

‘நீ என்ன பண்ணிட்டு இருக்க அர்ச்சு.. இப்படி அச்சுதன் பின்னாடி போகனுமா?!’ என்று அவளை அவளே நிந்தித்துக்கொண்டாள்.

‘இல்ல.. இல்ல.. பெரியவங்க நிம்மதிக்காக…’ என்று தனக்கு தானே பதில் கூறினாலும், ஆசை கொண்ட மனது என்னவோ அச்சுதன் என்றே பதில் கூறியத்.

அச்சுதனோ, அவனும் கடுகடு முகத்துடனே வர, அர்ச்சனாவோ அவளும் உற்சாகமில்லாமல் வர, நீலவேணிக்குத்தான் இதெல்லாம் புதிதாய் இருந்தது.

‘இந்த காலத்து பிள்ளைங்க குணமே புரியலை…’ என்று எண்ணிக்கொண்டாலும் ‘என் மகளாய் இருந்தால் அனுப்பியிருப்பேனா இல்லை தானே..’ என்று ஒரு அன்னையாய் ஆறுதல் பட்டுக்கொண்டார்.

அச்சுதன் ஏற்கனவே புக் செய்திருந்த ஹோட்டல் வந்து, அவர்களுக்கான சூட்டிற்கு வர, அர்ச்சனாவோ ‘ரெண்டு  பேர் ஸ்டே பண்ண சூட் தேவையா?’ என்றுதான் யோசித்தாள்.

நீலவேணி அதை புரிந்தவர் போல “எங்க வீட்டு பசங்களை நம்ப முடியாது.. கடைசி நேரத்துல நாளும் வருவேன்னு கிளம்பி நிப்பானுங்க.. போன தடவை அப்படித்தான் பிரஷாந்தும் அர்ஜூனும் கடைசி நேரத்துல டிக்கட் புக் பண்ணி கிளம்பி வந்தாங்க. அதான் சூட் புக் பண்ணிடுவோம் எப்பவும்..” என்று விளக்கம் சொல்ல,

இரண்டு படுக்கை அறையும், ஒரு ஹாலும் தனிப்பட்ட சமையல் அறையும் கொண்ட அந்த சூட்டில் தான் எந்த அறையில் தங்குவது என்று அர்ச்சனா பார்த்து நிற்க,

“ம்மா நீங்களும் அர்ச்சனாவும் ஒரு ஒரு ரூம் எடுத்துக்கோங்க.. எனக்கு ஹால் போதும்…” என்று அச்சுதன் அவள் எண்ணமறிந்து பேச,

“நோ  நோ.. நா.. நான் உங்களோட ரூம் ஷேர் பண்ணிக்கலாம் தானே அத்தை..” என்றாள் நீலவேணியிடம்.

“அதுக்கென்ன ம்மா.. தாராளமா வா..” என்றவர், அவளோடு அறைக்கு வந்துவிட, அச்சுதன் மட்டும் ஹாலில் தனியாய் நின்றிருந்தான்.

என்னவோ அவனுக்கு தன்னை சுற்றி நடப்பது எல்லாமே புதிதாய் இருந்தது. அர்ச்சனாவின் பேச்சுக்கள், பார்வைகள் எல்லாம் அனிதாவின் தங்கை என்ற முறையில் சொந்தம் என்கிற விதத்தில் எடுக்கவும் முடியவில்லை.

ஆனால் பார்த்தால் அதில் வித்தியாசமாகவும் எதுவும் இல்லை.

‘அழகான பெண்.. அறிவான பெண்…’ ஆனாலும் சில நேரங்களில் புரியாத புதிராய் இருக்கிறாள்.

இதோ இப்போது வரைக்கும் கூட, அவனோடு நேர்கொண்டு முகம் பார்த்து பேசவில்லை.

இதையே யோசிக்க ‘ம்ம்ச்.. நீ எதுக்குடா அச்சுத்தா இதெல்லாம் திங் பண்ற.. உன்னோட வேலை என்னவோ அதை கவனி…’   என்றெண்ணியவன், அவனது அறைக்குள் புகுந்துகொண்டான்.

நீலவேணியோ, அர்ச்சனாவோடு பேசிக்கொண்டே இருந்தார். மகன் பற்றி என்று இல்லை. அவர்களின் குடும்பம் பற்றி. பழக்க வழக்கங்கள் பற்றி. அவரது திருமண கதைகள் என்று எல்லாம் பேச, அர்ச்சனாவிற்கே அவரின் பேச்சில் ஆர்வமாய் போனது.

கதை கேட்கும் ஆர்வம்.

அவர் எதை எல்லாம் பெருமையாய், சந்தோசமாய் சொல்கிறாரோ அதையெல்லாம் அனிதா இப்போது வரைக்கும் குறைவாய் தான் சொல்லியிருக்கிறாள். ஒருவேளை அவளது கணிப்பு அப்படி இருக்கலாம்.

இல்லை தலைமுறை வித்தியாசம் என்றும் சொல்லலாம்.

பேச்சினூடே, அர்ச்சனா வீட்டிற்கும், அக்காவிற்கும் அழைத்து பேசிவிட, அவள் அனிதாவுடன் பேசும்போது, நீலவேணியும் பேசியவர், பாமினியிடம் அலைபேசியை தரச் சொல்லி, அர்ச்சனாவும் தங்களுடன் வந்திருப்பதைச் சொல்ல,

“நல்ல விஷயம் தான் க்கா. நம்ம வீட்டு பொண்ணுங்க தனியா விட முடியுமா…” என்று பேசி வைத்தார்.

அவர்களது ‘நம்ம வீட்டு பொண்ணு..’ என்ற சொற்களே அர்ச்சனாவை கொல்லாமல் கொன்று கொண்டு இருந்தது.

இதை எந்த அர்த்தத்தில் சேர்ப்பது.

மகளாய் இருக்கவேண்டும் இல்லையேல் மருமகளாய் இருக்க வேண்டும்..

இரண்டும் இல்லை.

அவள் மனதோ உறவுகொண்டாட, உரிமை கொண்டாட குதித்துக்கொண்டு இருக்கிறது. இதில் இப்படி பேச்சுக்கள் எல்லாம் காதில் கேட்கையில், நோவதா மகிழ்வதா என்று அவளுக்கே புரியவில்லை.

இரண்டிற்கும் நடுவே அவள் திண்டாடி அமர்ந்திருக்க “நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் ம்மா. நைட் எனக்கு ப்ரூட்ஸ் மட்டும் போதும். நீயும் அவனும் ஆர்டர் பண்ணிக்கோங்க…” என்றவர் கால் நீட்டி சாய்ந்துவிட,

அதற்குமே அவளுக்கும் அங்கிருக்கும் எண்ணமில்லை. அவளது ஆப்பிள் ஐ பேடை தூக்கிக்கொண்டு ஹாலுக்கு வர, அச்சுதன் அங்கில்லை எனவும், ஒரு நிம்மதி மூச்சு விட்டவள், அவளது வேலையில் இறங்கி இருந்தாள்.

வெவ்வேறு நகரத்தின், நாடுகளின் பாணியிலான கட்டிடங்கள், அதன் கட்டுமான அடிப்படை, வடிவமைப்புகள் என்று அவளது தேடல்கள் தொடங்கியிருக்க, மனது தான் ஒருமனதாகவில்லை.

அறை கதவு திறந்து அவன் வருவானோ என்று ஒரு சிறு எதிர்பார்ப்பு, கடை கண்ணோரமாய் அவ்வப்போது எட்டிப்பார்த்துக்கொண்டு இருந்தது.

அடுத்த ஒரு அரைமணி நேரம் அச்சுதனும் வரவில்லை.

‘ஹ்ம்ம்…’ என்று ஒரு பெருமூச்சு விட்டவள், வெளியே இரவு நேர சென்னை நகரின் மின்மினி  வெளிச்சக் காட்சிகள் கண்ணுக்குத் தெரிய, ஆளுயர பெரிய கண்ணாடி ஜன்னலின் அருகே சென்று நின்று பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அங்கே அறையினுள்ளே அச்சுதனோ குளியல் போட்டு, ஒரு இலகுவான இரவு உடைக்கு மாறியவன், அன்றைய வியாபாரம் பற்றி நகைக்கடை மேனேஜரிடம் பேசிக்கொண்டு இருந்தவன், அடுத்து தம்பிகளுக்கும் அழைத்து பேசிவிட்டு வைத்து முடிக்க, அரைமணி நேரத்திற்கு மேலேயே ஆகியது.

‘அம்மாவை இப்படியே விட்டா, அர்ச்சனாவை பேசியே டென்சன் பண்ணிடுவாங்க…’ என்று எண்ணியவன், அறையின் கதவினைத் திறந்துகொண்டு வெளி வந்த சத்தம் கேட்டு அர்ச்சனா திரும்பிப் பார்த்தாள்.

ஒரு ப்ளைன் கோ ஆர்ட் உடையில், தோள் வரைக்கும் புரண்ட அடர்த்தியான கேசம் அலைமோத, கண்ணாடி ஜன்னல் மீது ஒரு கை மட்டும் வைத்திருந்தவள், மெல்ல அவனைப் பார்க்க, அவள் பார்த்தது, நின்றிருந்தது எல்லாமே அவனுக்கு அழகிய ஓவியம் போல் இருந்தது.

அவனைப் பார்த்தே அவள் நிற்க, ஒருநொடி.. ஒரே ஒரு நொடி அச்சுதன் அசைவற்றுத்தான் நின்றிருந்தான்.

அந்த தனிமை.. ஹால் முழுவதுமான ஏசியின் குளுமை.. அந்த அமைதி… புதிய சூழல் அதில் அழகிய பெண்ணொருத்தி என்று அவனது நெஞ்சம் வேறெதுவும் சிந்திக்க ஒருநொடி மறந்து நின்று பின் துடிக்க,

‘அச்சுதா…’ என்று பல்லைக் கடித்தவன், வேகமாய் பார்வையை மாற்றிக்கொண்டான்.

அர்ச்சனாவோ அவளுக்கும் அப்படித்தான். மனது அவனிடம் சரண்புக அவளது அனைத்து எண்ணங்களையும் அவனிடம் கொட்டித் தீர்த்துவிட துடியாய் துடித்துக்கொண்டு இருக்க

‘நோ அர்ச்சனா.. நோ.. இது அத்தனை சுலபம் இல்லை.. போராடலாம்.. காத்திருக்கலாம்னு நினைக்கிறதுக்கு எல்லாம் அப்பாற்பட்டது…’ என்று அவளே அவளை கட்டுக்குள் வைத்துக்கொண்டாள்.

அச்சுதனோ “அம்மா எங்க?” என்று சாதாரணம் போல் கேட்க,

“ரெஸ்ட் எடுக்கிறாங்க.. நைட் சாப்பிட ப்ரூட்ஸ் மட்டும் போதுமாம்…” என்றிட,

“ஓ!” என்றபடி அங்கே அறையில் அம்மாவினைப் பார்த்தவன், அவர் லேசான உறக்கத்தில் இருப்பது புரிய, அவரே எழுந்து வரட்டும் என்று விட்டவன், நேரம் பார்த்துவிட்டு

“மெனு கார்ட் பாரு அர்ச்சனா உனக்கு என்ன வேணும்னு சொல்லு ஆர்டர் பண்ணிடலாம்…” என, நேரம் பார்த்தவள், அவன் சொன்னதை செய்துவிட்டு, மீண்டும் பழையபடி வந்து நின்றுகொண்டாள்.

அப்படி என்ன வேடிக்கைப் பார்க்கிறாள் என்று அவனுக்கு கேள்வி இருந்தாலும், அவளது கோபம் நினைவில் வர, அவள் பக்கம் சென்று நின்றவன் “என்ன கோபம்னு கேட்டேன்…” என்றான் அமைதியாகவே.

அவன் பக்கம் வந்து நின்றதுமே, அவளுக்கு அவளது முக பாவனைகளை கட்டுப்படுத்தவே பெரும்பாடாய் இருக்க, முயன்று வென்றவள் “என்ன கோபம்?!” என்றாள் ஒன்றும் அறியாதவள் போல.

“அதுதான் நானும் கேக்குறேன்.. என்ன கோபம் அப்படின்னு?” என்று அவனும் கேட்க,

“ம்ம்ச் ஒண்ணுமில்லை…” என்று உதடு பிதுக்க,

“பொய் சொல்றன்னு அப்பட்டமா தெரியுது…” என்றான் அச்சுதனும்.

“கோபமெல்லாம் இல்லை.. எனக்குள்ள நிறைய டென்சன்ஸ் அவ்வளோதான்..” என்று இலகுவாய் தோள்களை குலுக்கினாள்.

“அப்படி என்ன டென்சன் உனக்கு?” என்று அச்சுதன் அடுத்த கேள்விக்கு போக,

“எ.. எல்லாம்.. உங்கக்கிட்ட சொல்லிட்டே தான் இருக்கனுமா?”   என்று கேட்டவள் “உங்களுக்கு எப்படி சில விஷயங்கள் எல்லாம் பெர்சனலோ.. அதுபோல எனக்கும் எத்தனையோ இருக்கும் தானே..” என்றவள், அவன் முகம் மாறவும்,

“நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன். தப்பா நினைக்க வேணாம்…” என்றாள் உடனே.

அவள் சொல்வதும் சரிதானே..

அவளுக்கென்று எத்தனையோ இருக்கும்.

அவள் முக வாட்டமெல்லாம் தன் மீது உண்டான கோபம் என்று தான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தவனுக்கு இப்போது தான் மனது இலகுவானது போல இருந்தது.

அடுத்து சில நிமிடங்களில் அவர்கள் ஆர்டர் செய்த உணவும் வந்துவிட, இருவருமே ஒன்றாய் தான் அமர்ந்து உண்டனர். சின்ன சின்ன பொதுவான பேச்சுக்கள்.  அடுத்து ஒரு சிறிய குட் நைட் சொல்லி உறங்கவும் சென்றுவிட்டனர்.