கண்ணம்மா இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு சத்தம் இல்லாமல் வந்து ஹாலில் அமர்ந்துவிட்டாள். ஏழுமலை மீனாவை ஊர் எல்லை வரை கொண்டு சென்று விட்டுவிட்டு வந்து விட,
அவன் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த கண்ணம்மா ஓடி சென்று மெதுவாக கதவை திறக்க, மூச்சு வாங்க நின்றிருந்தான் ஏழுமலை.
“என்னடா பஸ் எதுவும் இப்போ இல்லையே அக்கா எப்படி போனா”.
“தெரியலடி…ஊர் எல்லை வரைக்கும் போனோம். இனி நான் போறேன். நீ வீட்டுக்கு போன்னு அக்கா சொல்லிடுச்சு. நான் வந்துட்டேன்”.
“லூசு பயலே இந்நேரத்துக்கு பஸ் எதுவும் வேற இருக்காதே. அவ தனியா என்ன பண்ணுவா”.
“எனக்கு மட்டும் அது தெரியாதா. நான் சொல்றதை அக்கா காதுலயே வாங்க மாட்டிக்குது. நீ போ…நான் பார்த்துக்கறேன்னு பிடிவாதமா சொல்லும்போது என்னை என்ன பண்ண சொல்ற?” என்று கோபமாக சொல்ல,
“சரி விடு. இனி விதிவிட்ட வழி. அவ நல்லபடியா வாழ்ந்தா ஓகேதான். வா போய் தூங்கலாம். காலைல ஒரு போராட்டமே இருக்கு. அதை சமாளிக்க தெம்பு வேணும்ல” என்று கண்ணம்மா சொல்ல, ஏழுமலையும் ஒப்புதலாக தலை அசைத்து தன் அறைக்கு சென்றுவிட்டான்.
ஊர் எல்லையில் நின்றிருந்த மீனாவிற்கு எந்த பக்கம் செல்வது, என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. கால் போன போக்கில் நடந்து கொண்டு இருந்தவளுக்கு யாரோ தன் பின்னால் வருவது போன்ற உணர்வு தோன்ற பயந்து போனாள்.
யார் தன் பின்னால் வருவது என்று நடுங்கி போனவள், திரும்பி பார்க்க முரட்டு உருவமாக ஒருவன் அவளை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். அவன் கண்கள் வேறு குடித்ததில் சிவந்து போய் இருக்க,அரண்டு போனவள் தன் நடையை வேகப்படுத்த, அவனும் நடையை வேகப்படுத்தினான். இவள் மேலும் வேகமாக ஓட ஆரம்பித்தாள்.
பின்னால் வந்த நபரும் அவளை துரத்திக் கொண்டே வர, தன் குழந்தையை காப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டவள் கண் மண் தெரியாமல் வேகமாக ஓட, திடீரென்று ஒரு வளைவில் வந்த காரை எதிர்பாராமால் அதில் மோதி “என் குழந்தை…….” என்ற அலறலோடு மயங்கி விழுந்தாள்.
சத்யா வேலையில் மூழ்கி போனான். வீட்டில் இருந்தே ஐடி பைல் பண்ணும் வேலையை செய்ய துவங்கினான். நம்பகமான ஆட்களை கொண்டு ஆபிசை நடத்தினான்.
லதா மகனை நன்றாக கவனித்து கொண்டார். தாய் சிரமப்படுவதை கண்ட சத்யா வீட்டு வேலைக்கு ஆள் வைத்துவிட்டான். ஆனால் அவர்களுடனான பேச்சை முற்றிலும் நிறுத்திவிட்டான்.
பெற்றோர் இருவரும் முற்றிலுமாக மாறி போய் இருக்கும் மகனை நினைத்து மிகவும் வருந்தினர். தங்களது பழைய மகிழ்ச்சியான வாழ்க்கை மீண்டும் கிடைக்காதா? இது அனைத்தும் கெட்ட கனவாக இருக்க கூடாதா…. என்று தவிக்க ஆரம்பித்தனர்.
மகனிடம் பேச முயன்று தோற்று போயினர். தனக்குள் இறுகி போயிருந்தவன் என்ன பதிலை தர போகிறான். அமைதியயே அவர்களுக்கு பதிலாக தர, சோர்ந்து போனவர்கள் கடைசியில் இந்த வாழ்க்கையை ஏற்று கொள்ள துவங்கினர்.
“ஐயோ……என் குழந்தை……” என்று மீனா அலறி அடித்து கொண்டு எழ, அவ்வளவு நேரம் அவளை கன்னத்தில் கை வைத்து பார்த்து கொண்டிருந்த உருவம் “ஆத்தாடி……” என்ற அலறலோடு சுவரோடு சுவராக பல்லி போல் ஒட்டி கொண்டு நின்றது.
பிறகுதான் தான் இருக்கும் இடத்தை கவனித்த மீனா சுற்றி முற்றி பார்த்து பின் குனிந்து தன் வயிற்றில் கைவைத்து என் குழந்தை என்று சொல்ல எதிரில் இருந்த உருவமா “ஆத்தாடி ஆத்தா என்னம்மா. நீ இப்படி அலறுற. என் குழந்தை…. என் குழந்தை சொல்லிக்கிட்டு இருக்க. உன்னை மட்டும்தான் எங்க பாப்பா கூட்டிட்டு வந்துச்சு” என்று சொல்ல,
தலையில் கை வைத்தவள் “எனக்கு என்ன ஆச்சு? நான் எங்க இருக்கேன்?” என்று கேட்க,
அவள் அருகில் வந்த அந்த உருவம் “ஹப்பாடா…. படத்துல பார்க்கும்போது மயக்கத்துல இருந்து எந்திரிக்கறவங்க கேக்குற கேள்வி. நீயும் கரெக்ட்டா கேட்டுட்டம்மா. இப்போதான் என் சந்தேகம் சரியாயிருக்கு. இதுக்குதான் இவ்ளோ நேரம் காத்திட்டு இருந்தேன். இரு நான் போய் எங்க பாப்பாவ கூட்டிட்டு வரேன்” என்றுவிட்டு நாற்பது வயது மதிக்கதக்க பெண் அறையைவிட்டு வெளியில் ஓட,
“ஒரு நிமிஷம்…. நான் சொல்றதை கேளுங்க……” என்ற மீனாவின் குரல் காற்றோடுதான் கலந்து போனது.
தான் இருக்கும் அறையை சுற்றி பார்த்தாள் மீனா. நன்கு பெரிய அறை. உயர்தர மெத்தை, அலங்கார பொருட்கள் என்று பார்க்கவே அந்த அறை அளவாகவும் பார்க்க அழகாகவும் இருந்தது.
“இது என்ன இடம். நான் எப்படி இங்க வந்தேன். நைட்டு ஓடி வந்தோம் எதிர்ல ஒரு கார் வந்தது…அப்புறம்……”
“எந்திரிச்சிட்டீங்களா…. இப்போ உங்களுக்கு ஓகேவா…” என்று கேட்டவாறு வந்தாள் ஒரு அழகிய யுவதி.
மீனா அவளையே குழப்பமாக பார்த்து “நீங்க யாரு? நான் எப்படி இங்க வந்தேன்? இது எந்த இடம்?”
“சொல்றேன்…. சொல்றேன்…பயப்படாதீங்க. நீங்களும் உங்க குழந்தையும் சேப். எந்த பிரச்சனையும் இல்ல. இது என்னோட வீடுதான். நாம திருச்சில இருக்கோம். என் பெயர் நித்ய ஸ்ரீ. நீங்க எங்க வீட்லதான் இருக்கீங்க. நான் ஒரு வேலை விஷயமா போயிட்டு வரும்போது என் வண்டில நீங்க விழுந்ந்துடீங்க நைட் டைம் வேற. உங்களை எங்க விடறது. என்ன பண்றதுனு ஒன்னும் தெரியல. உங்கள துரத்திட்டு வந்த ஆள் காரை பார்த்த உடனே ஓடிட்டாரு. அது மட்டும் இல்லாம, அவசரமா இங்க ஊருக்கு வர வேண்டி இருந்தது அதான். உங்களை இங்க அழைச்சுட்டு வர வேண்டியதா போச்சு.”என்று சொல்ல,
மீனா அமைதியாக அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்தாள்.
“அட என்னம்மா என்னபத்தி சொல்லாம விட்டுட்ட” என்று கேட்டவாறு வந்தார். முன்பு மீனாவுடன் பேசிய அதே பெண் கையில் டீ கப்புடன்.
“ம்கூம்…. உன்னை சொல்லாம விடுவேனா. இங்க பாருங்க.இவங்கதான் முனியம்மா. எங்களுக்கு எல்லாமே இவங்கதான்” என்று சொல்லி சிரிக்க,
முனியம்மாவோ கோவமாக “என்னம்மா நீ நான்தான் என் பேர முனிஷ் மொத்துவாணினு பேர மாத்திட்டேன்ல அப்புறம் ஏன் பழைய பேர சொல்ற? ட்ரெண்டிங்கு வா” என்று சொல்ல,
மீனா ஆவென்று பார்க்க ஸ்ரீயோ வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். “என்ன பேரு மொத்துவாணியா….. அது என்ன பேரு”.
“ஆமா ஹன்சிகா மொத்துவாணி, ரெஜினா மொத்துவாணி மாதிரி முனிஷ் மொத்துவாணி”என்க,
இரு பெண்களும் அவரை இப்படியெல்லாம் உன்னால மட்டும்தான் யோசிக்க முடியும்னு என்னும் ரேஞ்சில் பார்த்து வைத்தனர்.
“சரி என் பேர் கிடைக்கட்டும் இந்த வீட்டில் ஆல் இன் ஆல் நான்தான். சரி இப்போ உன் பேர் சொல்லு. எங்க போகணும் சொல்லு. அதுக்கு முன்னாடி இந்த டீய குடி” என்று அவளிடம் ஒரு கப்பை குடுத்தவர் ஸ்ரீயிடம் ஒரு கப்பை குடுக்க அவளும் வாங்கி குடித்து கொண்டே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.
சற்று நேரம் அங்கே அமைதியே நிலவியது. பின் முனிஷ் இப்போ சொல்லுமா உன் எஸ் டி டிய என்க,
மீனா அவரை புரியாமல் பார்த்தாள். ஸ்ரீயோஅவங்க கொஞ்சம் வடிவேலு ரசிகர் அப்படிதான் பேசுவாங்க. நீங்க சொல்லுங்க. உங்க பேர் என்ன?. உங்க ஊர் என்ன?ஏன் வண்டில விழுந்தீங்க.
“என் பேரு மீனாங்க” என்று சொல்ல,
ஸ்ரீயும் “நீங்க எந்த ஊர். எங்க போக வந்தீங்கன்னு சொன்னீங்கன்னா , நானே உங்களை அந்த ஊருக்கு அனுப்பி வைக்கறேன்” என்று சொல்ல,
மீனாவோ பெருமூச்சுடன் “ நான் இருந்த இடத்துல என் குழந்தை உயிர்க்கு ஆபத்து. அதான் அங்க இருந்து ஓடி வந்துட்டேன். அப்படி வரும்போதுதான் அந்த ஆள் துரத்திட்டு வந்தான்.
நான் பயந்து போய் ஓட ஆரம்பிச்சேன் உங்க வண்டில விழுந்துட்டேன்” இதுக்கு மேல வேற எந்த விவரமும் என்கிட்ட கேட்காதீங்க. ப்ளீஸ்….. என்னை புரிஞ்சுக்கோங்க”என்க,
அவளையே ஆழ்ந்து பார்த்த ஸ்ரீ “சரி ஓகே. உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லைனா பரவால்ல, எப்போ சொல்ல தோணுதோ அப்போ சொல்லுங்க”என்னும்போதே,
“ஸ்ஸ்…” என்று ஸ்ரீயை அழைத்தார் முனிஷ், அவள் கவனிக்கவில்லை என்பதை அறிந்து கடுப்பானவர், அவள் கையை பிடித்து ஓரமாக இழுத்து சென்று “சிரி பாப்பா……அது……”
“அட என்ன முனிஷ் நீங்க. இப்போ என்ன ஜோக் நடந்தது சிரிக்க”.
“சிரி பாப்பா விளையாடுற நேரமா இது. உன் பேரு என் வாயில அப்படிதான் வரும்னு உனக்கு தெரியாதா. அதை விடு. எனக்கு என்னம்மோ இந்த பொண்ணு மேல சந்தேகமா இருக்கு”
“ஏன் முனிஷ். பார்க்க நல்ல பொண்ணு மாதிரிதானே இருக்கு”.
“ம்கூம்…நீ இப்படிதான் எல்லாரையும் நம்புவ. நான் சீரியல்ல பார்த்துருக்கேன். எல்லா வில்லியும் இப்படிதான் ஹீரோ வீட்டுக்குள்ள வருவாங்க. அப்புறம் வில்லங்கத்தை உருவாக்குவாங்க” என்று சொல்ல,
அவரை கிண்டலாக பார்த்த ஸ்ரீ “முனிஷ் நீங்க சீரியல் பார்த்து ரொம்ப கெட்டு போய்ட்டீங்க. நம்ம வீட்ல எந்த ஹீரோ இருக்காரு. ஹீரோயின் நீங்கதான் இருக்கீங்க. ஒரு வேலை உங்களுக்கான வில்லியோ இந்த பொண்ணு” என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்க,
தன்னை ஹீரோயின் என்று சொல்லவும் வெட்கம் கொண்ட முனிஷ் “உண்மையாலுமே நான் ஹீரோயினா சிரி பாப்பா” என்று கேட்க,
அவளும் சிரித்து கொண்டே “இல்லையா பின்ன. அன்னைக்கு எங்க ஹாஸ்பிடல் வந்தல்ல பட்டு அப்போ உன்னை பார்த்து ஒரு டாக்டர் யார் இந்த பொண்ணு உங்க தங்கச்சியான்னு என்கிட்ட கேட்டாரு தெரியுமா” என்க,
முனிஷோ “ம்ம்ம்…. நெசமாலுமா….”
“பின்ன நான் என்ன பொய்யா சொல்றேன். சரி அதைவிடுங்க. இப்போ இந்த பொண்ண என்ன பண்ணலாம்னு சொல்லு”
“ இந்த சிஐ டி முனிஷ் மொத்துவாணிகிட்ட விடு சிரி பாப்பா எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்”என்று சொல்ல,
அவளும் உங்க விருப்பம்”என்றுவிட்டாலும் , மீனாவின் தோற்றம் அவள் மீது ஸ்ரீக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது என்னவோ உண்மை.
மீனாவிடம் சென்ற ஸ்ரீ “சரி என்ன படிச்சுருக்கீங்கன்னு சொல்லுங்க. நான் உங்களுக்கு எதாவது உதவ முடியுமான்னு பார்க்கிறேன்”என்று சொல்ல,
அவளை நன்றியாக பார்த்த மீனா முதலில் தயங்கினாலும் பின் தன் நிலையை உணர்ந்து “நான் டீச்சர் ட்ரெயினிங் முடிச்சுருக்கேன்”என்க,
ஸ்ரீயோ “ஹோ…. அப்படியா. எங்களுக்கு ஒரு ஸ்கூல் இருக்கு. அங்க வேலைல சேர்ந்துக்கறீங்களா” என்க,
அவளோ தயக்கத்தோடு ஸ்ரீயை பார்த்து “உங்களுக்கு ரொம்ப தொல்லை தரேன்னோ”.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. உங்களுக்கு என்னால ஆனா சின்ன உதவி. அவ்வளவுதான்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் போன் மணி அடிக்க எடுத்து பார்த்தாள் ஹாஸ்பிடலில் இருந்துதான் அழைத்து இருந்தார்கள்.
அழைப்பை ஏற்று பேசியவள் அந்த பக்கம் சொன்ன தகவலில் அதிர்ந்து “என்ன சொல்றீங்க” என்று கேட்க, அந்த பக்கம் சொன்ன பதிலில் ஆடி போனவள்.
“நான் உடனே வரேன்”என்றவள் போனை கட் செய்துவிட்டு “நான் இப்போ வரேன்….” என்றவள் வேகமாக சென்றுவிட்டாள்.
முனிஷ் ஸ்ரீ பின்னாலேயே சென்று என்னவென்று விசாரிக்க,அவளோ எதுவும் சொல்லாமல் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே ஓடிவிட்டாள்.
ஸ்ரீ முகத்தில் இருக்கும் பதட்டத்தை கண்டு மீனாவும் அவள் பின்னோடு வந்து என்னவென்று விசாரிக்க, முனிஷோ தெரியவில்லை என்று சொல்ல இருவரும் ஸ்ரீ சென்ற பாதையை குழப்பத்தோடு பார்த்து கொண்டு நின்றனர்.
ஸ்ரீயின் பதட்டத்திற்கும் கண்ணீருக்கும் காரணம் என்னவாக இருக்கும் அடுத்த எபியில் பார்க்கலாம்.