“ஆரா..!ஆரா!” என்ற காயத்ரியின்  அழைப்பில் மீண்டாள் ஆரா.

“ம்மா” என்றாள்.

“என்னாச்சு ஆரா? டயர்டா இருக்காடா?” என்றார் காயத்ரி.

“அங்க மாப்பிள்ளை வர்றவங்களை ரிசீவ் பண்ணிட்டு இருக்கார். நீ என்னடான்னா இங்க தூங்கிட்டு இருக்க?” என்றார்.

“இல்லம்மா..! கொஞ்சம் அசதியா இருந்தது. அவர்தான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க சொன்னார்” என்று பழியைத் தூக்கி அவன் மேல் போட்டாள்.

“சரி சரி..!வீட்டுக்கு கிளம்பனும்னு சொல்றாங்க ஆரா. கொஞ்சம் பிரஷ் ஆகுறியா? நான் ஆதிராவை வர சொல்லவா?” என்றார்.

வேண்டாம்மா நான் பார்த்துக்கறேன்” என்றவள் அவரை அனுப்பி விட்டு அப்படியே அமர்ந்தாள். நினைவுகளின் தாக்கத்தில் இருந்தவளுக்கு உயிரை உருவி எடுத்ததைப் போல் ஒரு வலி. யாருமே இல்லாத இடத்திற்கு ஓடி விட வேண்டும் என்பதைப் போல் தோன்றியது அவளுக்கு.

அந்த அறையின் கதவு தட்டப்பட,

“வர்றேன்ம்மா..! எதுக்கு உசுர வாங்குறிங்க? இப்ப என்ன தான் பிரச்சனை?” என்று எரிச்சலுடன் பேசிக் கொண்டே வந்தவள் அங்கே நின்றிருந்த சத்ய தேவ்வை பார்த்த உடன் வாயை மூடினாள்.

“லுக்..! இது ஒன்னும் உன் வீடு கிடையாது இஷ்ட்டத்துக்கு பேச. அக்கம் பக்கம் பார்த்து பேசனும்ன்ற அறிவு கூடவா இருக்காது” என்றான் கோபமாய்.

“நான் ஒன்னும் வெளிய நின்னு கத்தலை. ரூம்குள்ள தான் பேசுனேன். இப்ப என்ன பிரச்சனை?” என்றாள் சலிப்பாய்.

“கிளம்பனும்..! மத்ததெல்லாம் இங்க இருக்கவங்க பார்த்துப்பாங்க” என்றான்.

“நான் என்ன இங்கயே குடி இருக்கலாம்னா சொன்னேன்?” என்றாள் நக்கலாய்.

அவன் வாயைத் திறக்கப் போக,

“நல்ல நேரத்துக்குள்ள கிளம்பனும் தேவ். வீட்ல விளக்கேத்த வேண்டாமா?” என்றபடி சிவகாமி வர,

“இது வேறையா?” என்று மனதிற்குள் நொந்து கொண்டாள்.

அனைவரும் ஆளுக்கொரு காரில் கிளம்ப,  சத்ய தேவ் ஆராவை  தன்னுடைய காருக்கு  அழைத்து சென்றான். அந்த போர்ஷே பனமேரா காரைக் கண்டவள் அரண்டு விட்டாள்.

‘என்ன இந்த காரெல்லாம் வச்சிருக்கான்?” என்றவள் மனதிற்குள் அரண்டு விட்டாள். பிரபலங்களின் விருப்ப பட்டியலில் இருக்கும் கார் அல்லவா?

அவளுக்கு கார் கதவை திறந்து விட, அவனை ஆச்சர்யமாய் பார்த்தவள், சிறு தயக்கத்துடன் தான் ஏறினாள். காரை லாவகத்துடன் ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு பரிதாபம் தான் மிஞ்சியது.

‘வீணா இவன் வாழ்க்கையில இவனே மண்ணை அள்ளி போட்டுகிட்டான்’ என்று நினைத்துக் கொண்டாள்.

“அந்த கவலையெல்லாம் உனக்கெதுக்கு? அதைப் பத்தி கவலைப் பட வேண்டியது நான் தான?” என்றான் சத்ய தேவ்.

“என்ன கவலை எதுக்கு?” என்றாள் புரியாமல்.

“நீதான இப்ப சொன்ன? நானே மண்ணை அள்ளி போட்டுகிட்டேன்னு” என்றான்.

“நான் மனசுல தான நினைச்சேன்” என்றாள்.

“அப்படி நீயா நினைச்சுகிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது. வாய் விட்டு சொல்லாம எனக்கெப்படி தெரியும்?” என்றான். பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஆரண்யா.

“நான் கேட்டா எனக்கு பதில் வந்தாகணும் ஆரண்யா” என்றான் கடுமையான குரலில்.

“வரலைன்னா?” என்றாள் இடக்காய்.

“எப்படி வர வைக்கனும்னு எனக்குத் தெரியும்” என்றான்.

“இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என்கிட்ட வச்சுக்கக் கூடாது ரைட். அமைதியா இருக்கேன்றதுக்காக  எப்பவும் அப்படியே இருப்பேன்னு சொல்ல முடியாது. அடம் பிடிச்சு கல்யாணம் பண்ணவர் நீங்க. அதுக்கான பிரதிபலனையும் நீங்க தான் அனுபவிக்கனும்” என்றாள் பட்டென்று.

“யு ஆர் கரெக்ட்..! பிரதிபலன் மட்டுமில்லை, உன்னை அனுபவிக்கிற உரிமை கூட எனக்குத் தான இருக்கு?” என்றான் அவனும் நக்கலாய்.

“ஜஸ்ட் ஷட் அப் மிஸ்டர் சத்யா. மைன்ட் யுவர் வொர்ட்ஸ்” என்றாள் கண்களில் கனலுடன்.

“ஹேய்..! கூல். இப்ப நான் என்ன சொல்லிட்டேன். நவ் யு ஆர் மை வொயிப் கேர்ள் மறந்துட்டியா?” என்றான் உல்லாசமாய்.

சட்டென்று அவன் பாவனை மாறியதைக் கண்டு அவனை முறைத்தவள்,”ஹீரோ சார்க்கு நடிக்க சொல்லியா தரனும்?” என்றாள்.

“அது என்னவோ சரித்தான்” என்றவன்,

“என்னோட எந்த படம் உனக்கு பிடிக்கும்?” என்றான் சிரிப்புடன்.

“ம்ம்..! பைத்தியக்காரனா நடிச்ச படம்” என்று அவள் நக்கலுடன் சொல்ல,

“ரியலி, அந்த பிலிம் நிஜமாவே உனக்கு பிடிச்சிருந்ததா?” என்றான் ஆச்சர்யமாய்.

“இவன் பைத்தியக்காரனா வேற நடிச்சிருக்கானா? பைத்தியக்காரன்” என்று எண்ணியவள்,

“ஆமா ஆமா..! அது ஒரிஜினல் கேரக்டரோட ஒத்துப் போறதால நிஜமாவே ஒர்ஜினல் பைத்தியம் மாதிரியே நல்லா இருந்தது” என்றவளை அவன் உக்கிரமாய் முறைத்தான்.

அவனின் முறைப்பை எல்லாம் சட்டை செய்யாதவள், “என்கிட்ட கேள்வி கேட்டா பதில் இப்படித்தான் வரும்” என்றாள்.

“லுக் ஆரண்யா..! எனக்கு என்னோட இமேஜ் ரொம்ப முக்கியம். மத்தவங்க முன்னாடி இப்படியெல்லாம் பேசி வச்சா அதோட பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் பார்த்துக்க. இது எப்பவும் உன்னோட மைண்ட்ல இருக்கணும்” என்றான் கடுமையாய்.

“அது என்கிட்ட நடந்துக்குற முறையைப் பொறுத்து இருக்கு” என்றாள் அவளும் கடுமையான குரலில்.

அவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, வீடும் வந்துவிட்டிருந்தது. வீடு என்று சொல்வதைக் காட்டிலும் மாளிகை என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.

இதென்ன? வீடுன்னு சொல்லி மறுபடியும் மண்டபத்துக்கே கூட்டிட்டு வந்திருக்கானா?’ என்று கூட யோசித்தாள் ஆரண்யா.

சாரு ஆரத்தி எடுக்க,  வேண்டா வெறுப்பாய் அவனுடன் நின்றிருந்தாள் ஆரண்யா.

ரவிக்கும் காயத்ரிக்கும் அப்படி ஒரு சந்தோசம். தன் மகள் கொடுத்து வைத்தவள் என்றே எண்ணினர். சுலோச்சனா பாட்டியை கையில் பிடிக்க முடியவில்லை.

ஆதிராவுக்குத் தான் இதையெல்லாம் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதிலும் இப்போது சத்ய தேவ்வின் வீட்டைப் பார்த்தவளுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது.

‘இது எனக்கு அமையவிருந்த வாழ்க்கை. எல்லாம் இந்த ஆரண்யாவால கை நழுவிப் போய்டுச்சு’ என்ற எண்ணம் மட்டும் அவளுக்கு ஆழமாய் பதிந்து போய், வன்மம் கூடிப் போனது.