Advertisement
20
நிதானமாக வந்து நின்ற மீரா “நான் பேசலாமா“., என்று கேட்கவுமே வீட்டிலுள்ளவர்கள் அவள் நிதானத்தில் சற்று பதறி தான் போனார்கள்.
ஏற்கனவே தலைவலியாக இருக்கிறது என்று அழைத்துக் கொண்டு வந்ததாக மீராவின் அண்ணன் சொல்லி இருந்தான்.
இப்பொழுது இவள் என்ன பேசப் போகிறாள் என்று பதற்றத்தோடு மீராவின் அம்மா தான்., “தலைவலி ன்னு சொன்னையாமே மீரா., போய் சாப்பிட்டு கொஞ்சம் தூங்கு மா., மாத்திரை வேற போட வேண்டியதிருக்கே“., என்று சொன்னார்.,
அமைதியாக அவரை திரும்பி பார்த்தவள்., “ஒருநாள் மாத்திரை சாப்பிடாமல் இருந்தால் நான் ஒன்னும் செத்து போக மாட்டேன்“., என்று சொன்னவள்., “நான் பேசலாமா” என்று அவள் அண்ணியை பார்த்து கேட்டாள்.
அவள் அண்ணன் மனைவியோ “என்ன பேசப் போற., உனக்கு என்ன தெரியும்., பெரியவங்க சொல்றத கேட்டு நடக்க கத்துக்கோ., தானா முடிவெடுத்து தானா எதுவும் பண்ணாத“., என்று சொன்னவள்.,
அவளைப் பார்த்து “உன்னை வெளியே அப்படித்தான் சொல்றாங்க., நாலு மாசம் யாருனே மறந்து போய் பைத்தியமா இருந்திருக்கா., இப்ப தான் நினைவு வந்து இருக்குன்னு சொல்றாங்க., ஏன் இந்த நாலு மாசம் பைத்தியமா இருக்கும் போதே உன்னை எங்க கூட்டிட்டு வந்து இருந்தா உன்னை பற்றி விஷயம் எல்லாம் வெளியே தெரிந்திடும் ன்னு தானே பயந்துபோய் உன்னை வெளியே வைத்து ட்ரீட்மென்ட் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்காங்க“., என்று சொன்னார்.
அமைதியாக கையை கட்டி சுவரில் சாய்ந்து நின்றவள் அவள் அண்ணியை பார்த்துக்கொண்டே மெதுவாக சொன்னாள்.,
“இப்போ நான் திரும்பி வந்தது நல்லதுக்கு ன்னு சொல்லுறீங்களா., தப்புறீங்களா., இல்லை எனக்கு நினைவு திரும்பாமேலேயே இருந்திருக்கலாம் ன்னு யோசிக்கிறீங்களா“., என்று கேட்டாள்.
அவள் அண்ணியும் திருதிருவென்று முழித்தபடி., “நான் எப்போ அப்படி சொன்னேன்“., என்று சொன்னார்.
“வெளியே யாரு எப்படி பேசினாலும் எனக்கு பிரச்சினையே கிடையாது., யாரும் வந்து எனக்காக எந்த விஷயத்திலும் நிக்க போறது கிடையாது., இந்த வீட்ல உள்ளவங்க நினைக்கிறது தான் எனக்கு முக்கியம்., அதுவும் நீங்க என்ன நினைப்பீங்க ன்னு எல்லாம் பெருசா யோசிக்கல., என்ன அம்மா அப்பா அண்ணன் அக்கா இவங்க நாலு பேருக்கு என்ன பத்தி தெரிஞ்சா போதும்.,
நான் பைத்தியக்காரியா இருந்தேனா., சுய நினைவோடு இருந்தனா., இல்லை நினைவே இல்லாமல் இருந்தனா நான் எப்படி இருந்தேன் என்கிறது இவங்க புரிஞ்சிக்கிட்டா போதும்., உங்களுக்கு நான் எந்த எக்ஸ்பிளநேஷனும் கொடுக்கணும்னு அவசியமே இல்ல., ஆனா இப்ப நீங்க சில வார்த்தைகள் விட்டீங்க பாருங்க., எனக்கு பைத்தியம் பிடிச்சிருந்துச்சி ன்னு வெளியே உள்ளவங்க சொல்றாங்க ன்னு., அது மட்டும் இல்லாமல் நீங்க அம்மா ட்ட அப்ப சொன்னீங்களே., என்ன கட்டிக்க யாரும் வர மாட்டாங்க ன்னு., அதுக்கு தான் நான் உன்கிட்ட கேக்குறேன்., நான் இப்ப பேசணும் ன்னு“., என்று சொன்னாள்.
“என்ன பேச போற., என்ன பேச போற., எனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு., நினைவு போச்சுன்னு சொல்லுவ., மிஞ்சி மிஞ்சி போனா டாக்டர் சர்டிபிகேட் வாங்கி தரேன் சொல்லுவ., அத தான சொல்லப் போற“., என்று வேக வேகமாக மீராவின் அண்ணி பேசினாள்.
அவளை சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தவள்., “ரொம்ப வேகமா பேசுறீங்க., ரொம்ப நல்லா பேசுற தா நீங்க நினைக்கிறீங்க., இதுதான் உண்மை ன்னு., உங்களுக்கு நீங்களே சொல்லுறீங்களோ., மத்தவங்களுக்கு நம்புவதற்காக அழுத்தி பேசுறீங்க., ஆனா இதெல்லாம் விட முக்கியமான விஷயம் என்ன தெரியுமா.,
நாலு மாசம் நினைவில்லாமல் இருக்கும் போது., நான் இருந்த அளவுக்கு சந்தோஷமா யாருமே இருந்திருக்க மாட்டாங்க., அதுனால தானோ என்னவோ இப்பவும் அந்த ஞாபகங்கள் இருக்கு., எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியாது.,
நான் நினைவு வந்து திரும்பி இங்க வந்ததுக்கு அப்புறம் கூட என்னை நீங்க ஒரு நோயாளி மாதிரி பாக்குறீங்க., இங்க உள்ளவங்க எல்லாருமே., ஏன் எங்க அம்மா அப்பா அண்ணா அக்கா எல்லாரையும் சேர்த்து தான் சொல்றேன்., ஆனா நான் அங்கு இருந்த அந்த நாலு மாசத்திலேயே என்ன ஒரு நாள் கூட அவங்க நோயாளி மாதிரி நடத்தியது கிடையாது., நான் நானா தான் இருந்தேன்.,
அந்த வீட்ல என்னோட பெயர் அம்மு அப்போ நா அம்முவா மட்டும் தான் இருந்தேன்., எனக்கு மீராங்குற பேரு ஞாபகம் இல்ல., மீராவோட வாழ்க்கை எப்படி இருந்தது ன்ற ஞாபகம் இல்லை., ஆனால் நா அந்த வீட்டோட பொண்ணா நிம்மதியா சந்தோஷமா., என்னோட மனசுக்கு என்ன தோணுதோ அதை தான் செஞ்சுகிட்டு இருந்தேன்., அவங்க என்ன நினைப்பாங்க., இவங்க என்ன நினைப்பாங்க., இப்படி சொல்லீருவாங்களோ., அப்படி சொல்லிடுவாங்களோ.,
அந்த மாதிரி எதுவுமே நான் யோசித்தது கிடையாது., ரொம்ப நிம்மதியா இருந்தேன்., இப்ப கூட என்ன தோணுச்சு தெரியுமா., நீங்க இந்த மாதிரி எல்லாம் பேசும் போது எனக்கு நினைவு வராம நான் அம்முவாவே இருந்திருக்கலாமோ அப்படித்தான் தோணுச்சு., அது தான் நிம்மதியா இருந்துச்சு.,
அதனால தான் எனக்கு நினைவு வந்த உடனே நான் டாக்டர் கிட்ட சொன்னேன்., இது என்னோட முன்ஜென்மம் சொன்னேன்., டாக்டர் தான் இல்லை., இது ஆக்சிடென்ட்க்கு முன்னாடி., இது ஆக்சிடென்ட் க்கு அப்புறம் ன்னு சொல்லி எனக்கு புரிய வைத்து என்னை அனுப்பினாங்க“., என்று சொல்லும் போதே மூச்சு வாங்கியது.
அவள் அக்கா தான் “பேசாதடா மீரா., பேசாத போதும்“., என்று சொல்லி அவளுக்கு கழுத்தையும் நெஞ்சையும் தடவிக்கொடுத்து குடிக்க தண்ணீர் எடுத்துக் கொடுத்தார்.
“பொறுக்கா எல்லாத்தையும் மொத்தமா எல்லாத்தையும் பேசி முடிச்சிருவேன்” என்று சொன்னவள்.
தன் அம்மா அப்பாவையும் பார்த்து “மத்தவங்க என்ன சொன்னாலும் நம்புறீங்க இல்ல., அடுத்தவங்க சொல்லி எதுவுமே நடக்கப் போறது கிடையாது., இது என்னோட வாழ்க்கை நான் தான் வாழனும்., நம்மள பத்தி தப்பா பேசுறவங்களோ இல்ல., பாராட்டி பேசுறவங்களோ., நாளைக்கு நமக்காக வந்து எந்த விஷயத்திலும் நிக்க போறது கிடையாது.,
நான் கஷ்டப்பட்டா., அந்த இடத்தில் நான் தான் கஷ்டத்த அனுபவிக்க போறேன்., நல்லது நடந்தாலும் யாரும் எனக்காக வந்து நிற்க போறீங்களா., இல்ல இல்ல.., என்ன பைத்தியக்காரி ன்னு சொல்றாங்க ன்னு யாரும் வந்து அந்த இடத்துல எனக்காக சப்போர்ட் பண்ண போறீங்களா இல்ல தானே., எதுவுமே நடக்கப் போறது கிடையாது.,
அது மட்டும் இல்லாம எனக்கு பைத்தியக்காரி பட்டங் கட்டுறவங்க., நாளைக்கு நான் ஒரு தப்பு பண்ணிட்டேனா., ஐயோ பாவம் அந்த பிள்ளை பைத்தியக்காரி தப்பு பண்ணிட்டா அப்படின்னு சொல்ல போறது கிடையாது., அவ சரியான ஆளு தெரிஞ்சு தான் பண்ணி இருப்பான்னு சொல்லுவாங்க., இதெல்லாம் எதுக்கு தேவை இல்லாதது.,
நான் உங்களுக்கு உங்களுக்கு பாரமா இருக்கேன் அப்படின்னு நீங்க ஃபீல் பண்றீங்களோ., அப்படின்னு எனக்கு இப்ப தோணுது“., என்று மீரா சொன்னாள்.
அவள் அம்மாவும் அப்பாவும் ஒன்று சேர்ந்தாற்போல் “ஐயோ என்னம்மா பேசுற மீரா., நாங்க அப்படி நினைக்கவே இல்லை“., என்று சொன்னார்கள்.
“அப்புறம் ஏன் மா அவங்க சொன்னாங்க ன்னு நீங்க அப்படி நினைப்பீங்களா., ஏன் தோணுச்சு உங்களுக்கு., அந்த நேரத்தில் என்ன தோனி இருக்கணும்., என் பிள்ளை பற்றி யார் என்ன சொன்னா என்ன கிடக்கு எங்களுக்கு தெரியும்., அவ எப்படி இருந்தா ன்னு எங்களுக்கு தெரியும் ன்னு சொல்லி இருக்கணும்., ஏன் சொல்லலை.,
நீங்க என்ன வந்து பாத்தீங்க தானே., நா நா நா அவங்க வீட்ல அம்முவா இருக்கும் போது., நீங்க என்ன வந்து பார்த்தீங்க தானே., அப்போ யாரோவா வந்து பார்த்தீங்க அப்ப பார்க்கும் போது கூட உங்களுக்கு நான் நல்ல தானே இருந்தேன் அப்படின்னு உங்களுக்கு தோணலையா., என்ன பாத்தா பைத்தியக்காரி மாதிரியா இருந்துச்சு.,
அப்பவும் என்னோட பழைய வாழ்க்கையை மட்டும் தான் மறந்திருந்தேனே தவிர., நான் ஒரு பொண்ணும் என்பதையோ., எனக்கு என்ன வேணும்., என்ன வேண்டாம் ன்னு எதையும் நான் மறக்கல நான் சாதாரணமா தான் இருந்தேன்.,
உங்களால் அப்படி சாதாரணமா யோசிக்க முடியல தானே., அப்படி இருக்கும் போது உங்களுக்கு என்ன பாரமா நினைக்கிறீங்க அப்படித்தானே” என்று சொன்னாள்.
அருகில் இருந்த அக்கா அவள் கையை பிடித்தபடி இருக்கும் போதே., அங்கு வந்த அவள் அண்ணனும் அவளின் மற்றொரு கையை பிடித்துக்கொண்டு “இல்லடா நாங்க அப்படி நெனைச்சது கிடையாது” என்று இருவரும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தனர்.
அவளோ அவர்களை பார்த்து நிதானமாக “இதோட எல்லாத்தையுமே விட்ருங்க., நான் நானாக இருக்கிறேன் அப்படிங்கிறதுல நான் தெளிவா தான் இருக்கிறேன்., டாக்டர் எனக்கு அட்வைஸ் பண்ணி தான் இங்க அனுப்பியிருக்காங்க., டேப்லெட் எடுக்கிறதோ., தூங்குவதோ அது என்னோட கைலதான் இருக்கு., நான் டேப்லட் எடுத்து ஆரோக்கியமா இருக்கணும் அப்படின்னா டேப்லெட் மட்டும் பத்தாது., மனசு நிம்மதி வேண்டும் அது நிச்சயமா இங்கே இல்லை“., என்று சொன்னாள்.
“பெரிய மனுஷி மாதிரி பேசுற., ஆக்சிடென்ட் முன்னாடி இந்த மாதிரி நீ பேசி இங்கே யாரும் பார்த்ததே கிடையாது., என்ன சொன்னாலும் சரி சரி ன்னு தானே போவ“., என்றாள்.
“எப்பவும் எல்லா இடங்களிலும் அப்படியே இருந்தா., பைத்தியக்காரி பட்டம் ஈஸியா கிடைக்கும்“., என்றாள்.
அவள் அம்மா தான்., “தேவையில்லாத பேச்சு எதுக்கு“., என்று சொல்லும் போதே.,
“அம்மா ப்ளீஸ்., நான் பேசி முடிச்சிறேன்” என்றவள்.
“ஆமா எனக்கு மாப்பிள்ளை பார்க்க நீங்க யாரு., உங்க கிட்ட வந்து எங்க அம்மா அப்பா சொன்னாங்களா., மாப்பிள்ளை பாருன்னு சொன்னாங்களா., இல்ல தானே., அப்புறம் என்ன நீங்க பார்க்குற மாப்பிள்ளைக்கே கல்யாணம் முடிக்கனும் சொல்லிட்டு இருக்கீங்க“., என்று கேட்டாள்.,
Advertisement