Advertisement

அத்தியாயம் – 03

மதிய நேர உறக்கத்தில் இருந்த விஜயாவை கைப்பேசி எழுப்பியது. ஷண்முகமாக தான் இருக்க வேண்டுமென்று என்று எண்ணியபடி, உறக்கத்தோடு கைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்து,”ஹலோ” என்று சொன்னவுடன்,”ஸாரி ம்மா..அவசரமா ஒரு மீட்டிங் போயிட்டு இருக்கேன்..அது எப்போ முடியும்னு தெரியலை..அஞ்சு மணி போல ஷர்மா வருவார்..அவரோட நீங்க கோவிலுக்கு போயிடுங்க..அங்கேயிருந்து அந்தக் கடைக்கு அழைச்சிட்டுப் போவார்..நீங்க பார்த்திட்டு இருங்க..நான் வந்திடுவேன்..இல்லைன்னாலும் பிராப்ளமில்லை..ஷர்மா பணம் கட்டிடுவார்.” என்றான் ஷண்முகவேல்.

“நீயில்லாம அங்கே போக விருப்பமில்லை சாமி..இன்னொரு நாள் பார்த்துக்கலாம்.” என்று மறுத்தார் விஜயா.

“அம்மா, என்னை நம்பிட்டு இருந்தா நீங்க வீட்டுக்குள்ளே தான் இருக்கணும்..எனக்குப் பதிலா இரண்டு பேர் உங்ககூட இருப்பாங்க.” என்றான் சற்று கோபத்துடன்.

அவ்வளவு தான் விஜயாவின் கண்கள் குளமாகின. அவர் அப்படித் தான் யாராவது குரல் உயர்த்தி பேசினால் டக்கென்று கண்கள் நிறைந்து விடும். அவருடைய குடும்பத்தினருக்கு அது பழக்கமென்றாலும் அடுத்த நொடியே அவரை சமாதானம் செய்து விடுவார்கள். ”சரி சாமி.” என்று சின்ன குரலில் அவர் ஒப்புதல் அளித்தவுடன் கைப்பேசியின் இணைப்பைத் துண்டித்தான் ஷண்முகவேல். அடுத்த சில நொடிகள் அவர் அப்படியே அமர்ந்திருக்க மீண்டும் கைப்பேசி ஒலி எழுப்பியது. அழைத்தது ஷண்முகவேல் தான். சற்று மனத்தை தேற்றிக் கொண்டு அந்த அழைப்பை விஜயா எடுக்க, நேரடியாக மன்னிப்பு கேட்காமல்,”மீட்டிங் முடிஞ்சதும் நான் கிளம்பிடுவேன் ம்மா..அந்தக் கடை தமிழ்க் கடை தானாம்..உங்களுக்குப் பிடிச்சதை வாங்கிக்கோங்க..அவங்களே தைச்சும் கொடுத்திடுவாங்க.” என்று அம்மாவைச் சமாதானம் செய்தான்.

“எதுக்கு சாமி..நான் புடவையே” என்று விஜயா ஆரம்பித்தவுடன் இந்தமுறை புத்திசாலித்தனமாக அம்மாவைக் கோபித்துக் கொள்ளாமல் இணைப்பைத் துண்டித்தான் மகன்.

அம்மா, மகன் இருவருமே அவர்களுக்கு கிடைத்திருந்த இந்த வாய்ப்பை வீணாக்க விரும்பவில்லை. எனவே, அவனாலான முயற்சிகளை மகன் செய்ய, அவராலான ஒத்துழைப்பை கொடுக்க முயன்று கொண்டிருந்தார் விஜயா.’அம்மாவை சுடிதார்லே பார்க்கணும்னு ஆசைப்படறான்..நிறைவேற்றி வைப்போம்..நம்ம கலருக்கு அந்தக் கடைலே கிடைக்குமா?” என்று எண்ணியபடி மதிய உறக்கத்தை தொடர்ந்தார் விஜயா.

மாலை ஆறரை மணி போல் அந்தக் கடையில் இருந்தார். அலமாரி அடுக்கில் இருந்த ராணி கலர், நீலக் கலர், மஞ்சள் கலர் என்று ப்ரைட் கலர் சல்வார் செட்டை அவர் முன்னால் எடுத்து போட்ட இளம்பெண் அதற்கு பின் வீட்டினுள்ளே அழுது கொண்டிருந்த குழந்தையைக் கவனிக்க சென்று விட்டாள்.

மயூர் விஹார் குருவாயூரப்பன் கோவிலிருந்து சில நிமிடங்கள் பயணத்தில் இருந்ததது ஷிக்கா பொட்டிக். முக்கிய சாலையின் திருப்பத்தில் இருந்த தரைத் தள ஃபிளாட்டின் வரவேற்பறையை கடையாக மாற்றி இருந்தார்கள். சின்னதாக இருந்தாலும் சரக்கு நிறைய இருந்தது. ஆனால் அதை எடுத்து போட தமிழ் தெரிந்த ஆள்கள் யாரும் விஜயாவின் கண்களுக்குத் தென்படவில்லை. மெயின் ரோட் என்பதால் வேறொரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு, காரில் அனிஷை விட்டு விட்டு விஜயாவை இந்த இடத்திற்கு நடத்தி அழைத்து வந்திருந்தார் ஷண்முகத்தின் உதவியாளர் ஷர்மா. கடையின் உள்ளே வராமல் மரியாதை நிமித்தமாக கடைக்கு எதிர்புறத்தில் நின்று கொள்ள, விஜயாவிற்கு தான் பாஷை தெரியாமல் பிரச்சனை ஆனது. 

விற்பனை பெண்ணிற்கு ஹிந்தியும் ஓரளவு ஆங்கிலமும் தெரிந்திருந்தது. விஜயாவிற்கு தமிழ் மட்டும் தெரியும் என்பதால், சைகையில் அவருக்கு வேண்டியதை சொல்ல, அவளுக்குப் புரிந்த விதத்தில் அவளும் பொருள்களைக் காண்பித்தாள். பருத்தி துணி தான் என்றாலும் தரம், விலை என்று கேள்வி கேட்க விஜயாவிற்குத் தெரியவில்லை. அவளும் எடுத்துச் சொல்லவில்லை. விஜயாவின் தோற்றத்தைப் பார்த்து,’இவங்க என்ன வாங்கப் போறாங்க? சும்மா பார்க்க வந்திருக்காங்க.’ என்று நினைத்து வேலையில் அசிரத்தையாக இருந்தாள். 

கடையிலிருந்து எப்படி வெளியே செல்வது? அவள் எடுத்து போட்டது எதுவுமே பிடிக்கவில்லை என்று எப்படிச் சொல்வது? என்று யோசித்தபடி கடையின் வெளியே ஷர்மா இருக்கிறாரென்று கண்களால் விஜயா தேடிக் கொண்டிருந்த போது தான் வீட்டினுள்ளே குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்தப் பெண் உள்ளே சென்றவுடன் வெளியே செல்லயிருந்த விஜயாவை அவரது நயப்பண்பு தடுக்க, அந்தப் பெண்ணிற்காக காத்திருக்க முடிவு செய்தார். 

அந்தக் பெண் கடை பரப்பியிருந்த துணிகளை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தவர் சாலையின் எதிர்புறத்தில் ஓர் இளம் பெண்ணோடு ஷர்மா பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கவில்லை. சில நொடிகள்  கழித்து, வேகமாக ஓடி வந்து சாலையைக் கடந்து, கடையின் கதவைத் திறந்தாள் அந்த இளம் பெண். திடீரென்று கண்ணாடிக் கதவு திறந்தவுடன் திடுக்கிட்டுப் போய் அந்தப் பெண்ணை குழப்பத்துடன் நோக்கினார் விஜயா.

அவரது திடுக்கிடலைக் கண்டவுடன்,”ஸாரி ஆன்ட்டி இப்படி ஓடி வந்தா தான் இந்த சைட் வர முடியும்..இல்லைன்னா அந்த சைட்லேயே தவம் கிடக்கணும்..சடார்ன்னு நான் கதவு திறந்ததுலே பயந்து போயிட்டீங்கயில்லே..ஸாரி.” என்று மறுபடியும் மன்னிப்பு கேட்ட அந்த இளம் பெண்ணிற்கு வேகமான இந்தச் சின்ன ஓட்டமெல்லாம் சகஜமான ஒன்று விஜயாவிற்குத் தெரியவில்லை. சில சமயங்களில் அவள் வீட்டிலிருந்து இந்தக் கடை வரை, கிட்டதட்ட ஐந்து கிலோமீட்டரை மெல்லோட்டத்தில் கடப்பது அவளது வழக்கம் என்ற விவரத்தை அவள் வெளியிடவில்லை. 

ஒரு நொடிக்கு எதுவும் புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார் விஜயா. அப்புறம் தான் அவள் தமிழில் பேசியதை அவர் உணர, அவரது முகத்தில் நிம்மதி பரவ, உதட்டில் புன்னகை அரும்பியது. அவரைக் கடந்து போய் கல்லாவில் இருந்த டிராவைத் திறந்து அவளது சின்ன கைப்பையை உள்ளே திணித்து விட்டு, பெரிய பையைத் தரையில், சுவரோடு வைத்து விட்டு, அப்படியே உள்ளே சென்று, குமிந்திருந்த துணிகளை ஒதுக்கி விட்டு,”என்ன மாதிரி வேணும்? வீட்லே போட்டுக்கவா, வெளியே போட்டுக்கவா, வெளியேன்னா கோவிலுக்கா, பார்ட்டிக்கா இல்லை டிராவல்க்கா இல்லை..” என்றவளை இடைமறித்து,

“எனக்கு சுடிதார் போட்டு பழக்கமில்லை ம்மா..என் பையன் தான் நான் பழகிக்கணும்னு பிடிவாதம் பிடிக்கறான்..இது தமிழ்க் கடை..துணி எடுத்தா அவங்களே தைச்சும் கொடுப்பாங்கண்ணு உங்க கடையைப் பற்றி யாரோ அவனுக்கு சொல்லியிருக்காங்க..கொஞ்சம் நேரம் முன்னே இதையெல்லாம் எடுத்து போட்ட பெண்ணுக்கு தமிழ் தெரியாது போல..எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும்..குழந்தை அழுததுன்னு வீட்டுள்ளே போயிருக்கா..வேற யாரையும் கடைலே பார்க்கலை ம்மா..கிளம்பிப் போயிடலாம்னு நினைச்சிட்டு இருந்த போது தான் நீ வந்த..

எனக்கு எப்போதும் புடவை தான் ம்மா..வெளியே எங்கேயாவது போனா சுடிதார் போட்டுக்கிட்டு போனா எனக்கு வசதியா இருக்கும்னு என் பையன் சொல்றான்..எனக்கு அதெல்லாம் ஒத்து வராத்துன்னு சொல்லிப் பார்த்தேன், கெஞ்சிப் பார்த்திட்டேன் கேட்க மாட்டாங்கறான்..இதெல்லாம் எனக்கு எப்படி ம்மா பொருந்தும்?” என்று அவரது தேவையையும் தயக்கத்தையும் சொல்லி முடித்தார் விஜயா.

“எல்லாம் பொருந்தும்..பொருந்தற மாதிரி செய்து கொடுப்போம்..இது தமிழ்க் கடை மட்டுமில்லை..பஞ்சாபி கடையும் தான்..நீங்க சொன்ன அந்தப் பெண் என்னோட அண்ணி ஷிக்கா..என் அண்ணனோட வீடு ஆன்ட்டி இது..வரவேற்பறையைக் கடையா மாத்தியிருக்கோம்..பின்னாடி ஒரு ரூம், சமையலறை, பால்கனி இருக்கு..வேலைக்கு ஆளெல்லாம் வைச்சுகற அளவுக்கு வியாபரமில்லை. ஷிக்கா, எங்கம்மா, அண்ணன், நான்னு மாறி மாறி கடையைப் பார்த்துப்போம்..நானும் எங்கம்மாவும் தனியா இருக்கோம்..அண்ணன், அண்ணி, அவங்க பையன் மந்தீப் இங்கே இருக்காங்க.” என்று சினேக பாவத்துடன் அவளின் குடும்பத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டு,”உங்களுக்குப் பிடிக்கற மாதிரி நான் காட்டறேன்..பட்ஜெட் எவ்வளவு?” என்று கேட்டாள்.

அவளைப் போல் வெளிப்படையாக அவரின் குடும்பத்தைப் பற்றி பேசி விஜயாவிற்குப் பழக்கமில்லை. இதுவரை வெளி ஆள்களிடம் சகஜமாக பேசியது கூட இல்லை. மத்திய அரசில் பெரிய பதவியில் இருக்கும் அவருடைய மகன் அவனைப் பற்றி பேச தடை வித்திருந்ததால் அந்தப் பெண்ணின் பேச்சிற்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். அவர்கள் குடியிருக்கும் ஃபிளாட்டிற்கு அவர் வந்து சில வாரங்கள் தான் ஆகியிருந்தது. அவரை அழைத்துக் கொண்டு வரும்முன் ஹாஸ்டலில் தங்கி இருந்தான் ஷண்முகம். ‘இன்னும் சில மாசம் பொறுத்திருந்தா தில்லிலே அரசு அதிகாரிகள் குடியிருப்பிலே தனி வீடு கிடைச்சிடு ம்மா. அங்கே கரெண்ட், தண்ணீர் பிரச்சனை எல்லாம் இருக்காது.’ என்று சொல்லியிருந்தான். ஆனால் அதுவரை காத்திருக்க அவனுக்கு இஷ்டமிருக்கவில்லை. அதற்குள் பெரியம்மா, மாமா இருவரில் யாராவது ஒருவராவது ஊருக்குத் திரும்பி விடலாமென்பதால் அம்மாவுடன் இருக்கக் கிடைத்த வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்ள நொய்டா ஃபிளாட்டிற்கு சரி சொல்ல முடிவு செய்தான். 

அவனுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டில் வேறொரு அதிகாரியின் குடும்பம் குடியிருந்தது. அந்த அதிகாரியின் குழந்தைகள் அங்கே அருகிலிருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் நொய்டாவில் காலியாக இருந்த அரசு குடியிருப்பு ஃபிளாட்டிற்கு ஷிஃப்ட் ஆகிவிட்டான் ஷண்முகவேல். அங்கே அதிகாரிகள் மட்டுமில்லை அனைத்து தரப்பினரும் குடியிருந்ததால் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஃபிளாட்டுகள் எப்போதும் காலியாகவே இருந்தன. கரெண்ட், தண்ணீர் இரண்டையும் விட பெரிய பிரச்சனை அங்கேயிருந்து தினமும் தில்லிக்குப் பயணம் செய்வது தான்.

நொய்டாவிலிருந்து அலுவலகம் செல்வது ஷண்முகத்திற்குக் கடினமாக இருந்தாலும் தனி வீடில்லாமல் ஃபிளாட்டில் வசிப்பது அம்மாவிற்கும் பிடிக்கலாமென்று என்று நினைத்து தான் அந்த முடிவு எடுத்திருந்தான். இப்போது வரை அக்கா வீடு, அண்ணன் வீடு என்று உறவினர்கள் புடைசூழ வாழ்ந்த அம்மா இனி நாள் முழுவது தனியாக இருக்கப் போவது அவருள் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கும்? அதன் விளைவு எப்படி இருக்குமென்ற நினைப்பே அவனுக்குப் பயத்தை ஏற்படுத்தியிருந்தது. தில்லிவாசத்தை விஜயாவினால் சமாளிக்க முடியாமல் போனால் உடனே அவரை அழைத்து வந்து விடும்படி அவனுடைய அக்காக்களும் மாமாவின் மகன்களும் அவனுக்குக் கட்டளையிட்டிருந்தனர். ‘அடுத்தமுறை அம்மாவைப் பார்க்கற போது இது நம்ம அத்தையா? சித்தியான்னு அதிசயப்படப் போறீங்கடா.’ என்று அவர்களிடம் சவால் விட்டிருந்தான் ஷண்முகம். அம்மாவைப் படிப்படியாக மாற்ற திட்டமிட்டு அவரது உடையிலிருந்து ஆரம்பித்திருந்தான்.

’பட்ஜெட்டா?’ என்று யோசனையான விஜயாவின் முகத்தைப் பார்த்து,”நோ பிராப்ளம்..எல்லா ரேஞ்லேயும் காட்டறேன்.” என்று ஒரு சின்ன ஸ்ட்டூல் மீது ஏறி நின்று, உயரத்தில் இருந்த ஒரு பண்டலை கீழே இறக்கி, பிரித்து, அதிலிருந்து சில சல்வார் செட்டை எடுத்துப் போட்டாள் அந்தப் பெண். அப்போது வீட்டினுள்ளே இருந்து வந்த பெண் ஹிந்தியில் அவளிடம் ஏதோ சொல்ல, குனிந்த தலையை நிமிர்த்தாமல் இவளும் பதில் சொல்ல, கடுகடு முகத்துடன் அந்த பெண் உள்ளே சென்று விட்டாள்.

கால்மணி நேரம் போல் விஜயாவிற்கு பொருத்தமாக இருக்கும் செட்களைக் பொறுமையாக காட்டினாள் அந்தப் பெண். அப்படியே இடை இடையே பேக்கெட்டிலிருந்த கைப்பேசி ஒலி எழுப்ப, அந்த அழைப்புகளை ஏற்று புன்னகைத்தபடி ஆங்கிலம், ஹிந்தி என்று கலவையாகப் பேசிக் கொண்டிருந்தாள். கோடை காலத்திற்கு ஏற்றார் போல் கையில்லாத உடையில் இருந்தாள் அவள். முதலில் அவளைப் பார்க்கவே ஒரு மாதிரி கூச்சமாக இருந்தது விஜயாவிற்கு.  பொதுவாக சிகப்பாக இருப்பவர்கள் தான் சிகப்பு நிறத்தில் உடை அணிவது வழக்கம். சிகப்பு இல்லை என்றாலும் அந்தப் பெண்ணனின் நிறம் என்னயென்று விஜயாவினால் கணிக்க முடியவில்லை. முகம், கைகள் இரண்டும் ஒரு மாதிரி கறுத்துப் போயிருந்தது. இரண்டு நாள்கள் கழித்து அவளைப் பார்த்திருந்தால் மகனைப் போல் அவளும் மாநிறமென்று புரிந்திருக்கும். 

சில நாள்களாக நீச்சல் குளத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீரில் நீந்தி விளையாடியதில் அவளது நிறம் மாறிப் போயிருந்த விவரம் விஜயாவிற்குத் தெரியவில்லை. கொஞ்சம் போல் மஞ்சள், எலுமிச்சை பழம் சாறை கலந்து தேய்த்து குளித்தால் காலப் போக்கில் அந்தக் கருமை நிறம் மறைந்து விடும். ஆனால் இப்போதைக்கு அந்தச் சிகிச்சையை அவள் செய்து கொள்ள முடியாது. நாளை ஒரு நாள் பாக்கி இருக்கிறது.  அதனால் தான் நீச்சல் உடை, தொப்பி, கண்ணாடி அனைத்தையும் அங்கேயே  விட்டு விட்டு நேரத்தை வீணடிக்காத இலகுவான பருத்தி ஜம்ப்ஸுட்டிற்கு மாறிக் கொண்டாள்.

சிகப்பு நிறப் பின்ணனியில் பல வண்ணப் பூக்களை வாரியிறைத்த ஷர்ட்டும் பேண்ட்டும் அணிந்திருக்கிறாள் என்று நினைத்தார் விஜயா. ஆண்கள் அணியும் சட்டை போல் முன்பக்கத்தில் பொத்தான், பேக்கெட் இருந்தாலும் கீழே இருந்த பேண்ட்டுடன் இணைந்திருந்தது அந்த மேல்சட்டை. ‘இதென்ன டிரெஸ்? இங்கே இதுபோல நாம இதுவரை பார்த்ததேயில்லையே’ என்று எண்ணியபடி அவர் முன் கிடந்த துணிகளில் எது அவருக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற யோசனையோடு விஜயா பார்த்துக் கொண்டிருந்தார். 

அப்போது, எந்தக் கதவை வேகமாக திறந்து சத்தத்துடன் கடையினுள் நுழைந்தாளோ அந்த பெண் அதே கதவைச் சத்தமில்லாமல் திறந்து பூனை போல் அவன் அம்மா அருகே வந்து நின்றான் ஷண்முகம். ‘இந்தத் துணி வெய்யில் காலத்திலே போட்டுக்கலாம் குளிர் காலத்திலேயும் போட்டுக்கலாம் ஆன் ட்டி..குளிர்காலத்திலே மேலே ஒரு ஷால் இல்லை மெல்லிசான ஸுவட்டர் போட்டுக்கிட்டா சரியா இருக்கும் ஆன்ட்டி.’ என்று சினேக பாவத்துடன் பேசியபடி மேல் அடுக்கில் எதையோ தேடிக் கொண்டிருந்தவளின் பின்பக்கத்தை அரை நொடிக்கும் குறைவான அவகாசத்தில் நிதானமாக அளந்தவன், ‘ஜம்ப்ஸுட்’ என்று அவளது உடையை அடையாளம் கண்டு கொண்டான். சதைப் பிடிப்போடு சிலை போன்ற கச்சிதமான உடல்வாகு அவளை ‘அத்லீட் (athlete)’ என்று அடையாளப்படுத்தியது. 

பொழுது போக்கா இல்லை ப்ரொஃபஷனலா என்று யோசனை செய்தவனின் பார்வை கழுத்துப் பகுதியில் தூக்கிக் கட்டியிருந்த கொண்டையில் இருந்த ஈரத்தில், மேல் தூக்கியிருந்த கைகளின் நிறத்தில் சில நொடிகள் தேங்க, கைகளின் நிறம் மாறி இருந்ததற்குக் காரணம் ’ஸுவிம்மர்ஸ் டேன் (swimmer’s tan)’ என்று புரிய, ஜம்ப்ஸுட்டினுள் ஸுவிம்ஸுட்டா? என்று எண்ணங்கள் எல்லை மீற, அது தெரியா வண்ணம், புதிய முகமொன்றை ஷண்முகம் அணிந்து கொண்ட நொடியில் அந்தப் பெண் தலையைத் திருப்ப, அவளின் கண்கள் ஷண்முகவேலின் கண்களோடு கலந்தன.

Advertisement