அத்தியாயம் 6

இருவரும் சீட் பெல்ட் அணிந்து கொள்ள அவனிருப்போ அல்லது இவ்வாறு நிகழ வேண்டுமென்ற விதியோ பெல்ட்டின் பக்கிள் சரியாக மாட்டப்படவில்லை என்பதை உணராமல் வண்டியை எடுத்தாள் நீலாயதாட்சி.

முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் பின் சீராகவே அவள் வண்டியை ஓட்ட ஆரம்பிக்க அவனும் இலகுவாக சாய்ந்து அமர்ந்தான்.

வண்டி சென்று கொண்டிருக்க அவளண்மையில் அவனுடலில் ஏதோ மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. அவள் போட்டிருந்த வாசனைத் திரவியத்தின் நறுமணமும் வண்டிக்குள் இதமாகப் பரவி ஒருவித மயக்கமூட்ட, ரசவாதம் என்று சொல்கிறார்களே அது இதுதானோ என யோசித்தவனுக்கு அந்த உணர்வுகள் ஒருவித அவஸ்தையைக் கொடுத்தன.

வண்டியின் உள்ளே வினாடிக்கு வினாடி மௌனத்தின் சப்தம் அதிகரித்துக் கொண்டே வர, அதைத் தாங்க மாட்டாதவன் ஒருவேளை அவளுடன் இயல்பாகப் பேசிப் பழகி விட்டால் இந்த அவஸ்தை குறையுமோ என நினைத்துத் தானே பேச்சை ஆரம்பித்தான்.

அவள் பக்கம் திரும்பாமல் முன்னால் பார்த்துக் கொண்டே கேள்வியை எழுப்பினான்.

“சிட்டில நிறைய இடங்கள்ல நம்ம கடைகள் இருக்குது. நீங்க இன்னும் அதெல்லாம் பார்க்கலையே!”

“ம்ம்ம்… ப்ரதீபா சொன்னாங்க…எனக்குக் காலைல ஃபேக்டரிக்கும் ஆஃப்டர்னூன் ஆஃபிசுக்கும் ரொட்டீன் சரியா இருக்கு…இங்க கொஞ்சம் எல்லாம் ரெகுலர் ஆன பின்னால போலாம்னு இருக்கேன்”

“ஓகே!”

“ஆமா! கார் செர்வீஸ் விட்டுருக்கேன்னு சொன்னீங்களே! இன்னொரு கார் வாங்கிக்க வேண்டியதுதானே! உங்க வசதிக்கு முடியாததா?”

“முடியாததுன்னு இல்ல…தேவைக்கு அதிகம் நான் செலவு செய்து பழக்கப்பட்டது இல்ல… இப்போன்னு இல்ல…சின்ன வயசிலயும் அப்படித்தான்…அதுவும் எங்க பாஸ் மதன் கூட பழகிட்டா அத்தனை சிம்ப்ளிசிட்டி தானா வந்துடும்… இவ்வளவு பணம் இருந்தும் பந்தா இல்லாம சாதாரணமா வேஷ்டி சட்டையோட ஆஃபிஸ் வருவார்…கேன்டீன்ல எல்லாரோடவும் உக்காந்து சாப்பிடுவார்… தொழிலாளர்கள்தான் அவரோட உலகம்…அவங்களுக்கு என்ன வேணும்னாலும் செய்வாரே தவிர தனக்குன்னு ஒன்னு செய்ஞ்சுக்க மாட்டார்…அவர் கூடவே இருந்தனால நானும் இதைப் போல் நிறைய விஷயங்களை அடாப்ட் பண்ணிகிட்டேன்”

“ஓ! குட்!”

அதன் பின் மீண்டும் மௌனம் தொடர மேலே என்ன பேசுவதெனத் தெரியவில்லை அவனுக்கு…சொந்த விஷயம் ஏதாவது கேட்டால் தவறாக நினைப்பாளோ என நினைத்தவனுக்குத் தொழில் தொடர்பாகவே உரையாடலைத் தொடரத் தோன்றியது.

“அங்க ஜெர்மனில உங்க ஹஸ்பண்டோட பிஸினஸை இப்ப யார் பார்த்துக்கிறா?”

சில வினாடிகள் பதிலொன்றும் வரவில்லை அவளிடமிருந்து…

அவன் பொறுமை போனது…

‘இப்போது என்ன கேட்டு விட்டான் அவன்…வியாபாரம் தொடர்பாகத்தானே கேட்டான்…ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டாற் போல் ஏனிந்த மௌனம்…

ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தினான்.

“என் ஹஸ்பண்டோட ஃப்ரெண்ட் வின்னின்னு…அவர்தான் எல்லாம் பார்த்துக்கிறாரு”

“ஓ ஓகே” என்றவன் இவ்வளவு நேரத்தில் அவள் வண்டியைச் செலுத்துவதில் பிழை ஒன்றுமில்லை எனக் கண்டுகொண்டிருந்ததால்  சேட்பட் வருவதற்கு முன்பே இறங்கிக் கொள்ளத் தீர்மானித்தான்.

அவன் பேச ஆரம்பிக்கும் முன்

“ஐ…ஐ வான்ட் டூ ஆஸ்க் யூ சம்திங்(நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்)”

திடுமென அவள் கேட்கவும் அதை எதிர்பார்த்திருக்காதவன் சட்டெனத் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான்.

அவளோ திரும்பாமல் நேர்பார்வையாகப் பார்த்துக் கொண்டிருக்க பளபளவென மின்னினாலும் கிள்ளி எடுக்கத் துளி சதையில்லாத அவள் கண்ணாடிக் கன்னங்கள் அவன் பார்வையில் விழுந்தன.

ஏனோ தொட்டுப் பார்க்கும் ஆவல் வரக் கையை முஷ்டியாக மடக்கிக் கொண்டவனுக்கு அப்போதுதான் அவள் கேட்டது நினைவு வர “கோ அஹெட் (கேளுங்க)” என பதிலிறுத்தான்.

“நீங்க…உங்க வைஃப் இறந்துட்டதா ப்ரதீபா சொன்னாங்க… அவங்க எப்படி இறந்தாங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

ஒரு கணம் அவன் ஒன்றும் பேசவில்லை. கண்களை இறுக மூடி மனைவியின் முகத்தை என்றோ படிந்து போன பிம்பங்களில் தேடினான். அவளைப் பிரிந்த கணங்கள்…ஓ அவைதான் எத்தனை கொடுமையானவை…

அவனிடமிருந்து பதிலில்லாமல் போக, திரும்பி அவன் முகம் பார்த்தவளுக்குத் திகைப்பு…

அத்தனை வேதனை அவன் முகத்தில்…ஏன் கேட்டோம் என்று ஆகி விட்டது அவளுக்கு…எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விடலாம் என அவள் நினைக்க, அதே நேரம், கண்ணிமைகளுக்குள் கண்மணிகளை உருட்டிக் கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்தியவன் இமைகளைப் பிரித்தான்.

“அவ…என் தரு சூசைட் பண்ணிகிட்டா”

“வாட்…” சாலையில் அதிக ஆட்களில்லாமல் கொஞ்சம் வேகமாகப் போய்க் கொண்டிருந்த வண்டியை அதிர்ச்சியில் அவள் தடையை அழுத்தி நிறுத்த, அந்த வேகம் தாங்காமல் அவளுடல் முன்னே செல்ல, சரியாக மாட்டாத சீட் பெல்ட் தன் கடமையைச் செய்யத் தவற, முன்னால் போய் ஸ்டீரிங்க் வீலில் நன்றாக மோதிக் கொண்டாள் நீலாயதாட்சி.

அவள் முன்னே போன வேகத்தில் அவள் நீல நிறக் கண்ணாடி கழன்று அடியில் எங்கோ விழுந்து விட ஸ்டீரிங்க் வீலைப் பிடித்திருந்த கையில் அவள் நெற்றி மிக வேகமாக மோத அதில் அவள் கையில் அணிந்திருந்த வைர மோதிரம் நன்கு அழுத்தமாக அவள் நெற்றியில் புதைந்து குருதியைப் பெருகிடச் செய்ய மோதிய அதிர்ச்சியிலும் கொடகொடவெனக் கொட்டும் தன் குருதியைக் கண்ட அதிர்ச்சியிலும் அந்த ஸ்டீரிங்க் வீலின் மேலேயே சாய்ந்து மயங்கி விட்டாள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்ட நிகழ்வில் திகைத்துப் போனவன் வேகமாகத் தன் சீட் பெல்ட்டினை அவிழ்த்து விட்டு நகர்ந்து அவள் பக்கம் வந்தான்.

“நீலா! நீலா!” அவளை மெதுவாக நிமிர்த்தி அவள் முகம் பார்த்தவன் கண்ணாடி கழன்று கீழே விழுந்திருக்க முதல் முறையாக அவள் வெண்மதி முகத்தை முழுவதுமாகப் பார்த்தவன் அதனழகில் மயங்கியோ திகைத்தோ செயலற்றுப் போனான்.

எத்தனை நேரம் அப்படி இருந்தானோ பக்கத்தில் சென்ற ஒரு வண்டியின் ஹாரன் ஒலியில் சுய உணர்வு பெற்றவன் குனிந்து அவளைப் பார்க்க மதிக்கும் களங்கம் உண்டு என்று சொல்வது போல் அவள் நெற்றியில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து குருதி வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு வேகமாகத் தனது கைக்குட்டையை எடுத்துக் காயத்தில் வைத்து அழுத்தினான்.

அப்படியே அவளை இருக்கையில் சாய்த்து விட்டுக் கீழே இறங்கியவன் அண்மையில் ஏதாவது மருத்துவமனை இருக்கிறதா எனக் கண்களால் துழவினான். அவன் அதிர்ஷ்டம் சற்று தூரத்திலேயே மேலே சிவப்பு நிறத்தில் கூட்டல் குறியுடன் மருத்துவமனைச் சின்னம் தென்பட, கார்க் கதவைத் திறந்து அவளை சற்றுத் தள்ளி அமர வைத்து விட்டு வண்டியைக் கிளப்பி அந்த மருத்துவமனை வாசலில் சென்று நிறுத்தினான்.

கீழே இறங்கி அவளை இரு கைகளிலும் அள்ளிக் கொண்டவன் மருத்துவமனைக்குள் நுழைந்து ரிசெப்ஷனில் இருந்த பெண்ணிடம் “மயக்கமா இருக்காங்க. நெத்தில காயம் வேற பட்டிருக்கு. சீக்கிரமா ட்ரீட்மென்ட் கொடுக்கச் சொல்லுங்க” எனவும் அதற்குள் அவன் நிலை பார்த்து ஓடி வந்த ஒரு செவிலி “ஸார் அப்படியே இங்க ட்ரெஸ்ஸிங் ரூம் வந்துடுங்க” என அவனுக்கு வழிகாட்ட பஞ்சுப்பொதியாய் இருந்தவளை தன் நெஞ்சோடு அள்ளி இருந்தவன் அவள் சொன்னபடியே அந்த அறைக்குள் சென்று அங்கிருந்த படுக்கையில் அவளைக் கிடத்தினான்.

“நீங்க கொஞ்சம் வெளிய இருங்க சார்”

வெளியே வந்து அங்கு போடப்பட்ட இருக்கையில் அமர்ந்தவனுக்குள் ஆயிரம் ஆயிரம் யோசனைகள்…

அந்த அறை திரையிடப்பட்டு இருந்தாலும் காற்றிலாடிய திரையினூடாக நீலாயதாட்சியின் முக தரிசனம் அவனுக்கு அவ்வப்போது கிடைத்துக் கொண்டுதான் இருந்தது.

அவனும் திரையிட்ட சன்னதியினூடாகக் கிடைக்கும் இடைவெளியில் கடவுளைப் பார்க்கத் துடிக்கும் பக்தன் போல அந்தத் திரை மெலிதாக விலகினாலும் அவள் முகத்தைக் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான்.

அவன் மனமோ அவளைக் கைகளில் அள்ளிய போது தோன்றிய உணர்வுகளை மீண்டும் மீண்டும் அசை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. தான் என்ன உணர்கிறோம் என்பது அவனுக்குப் புரிந்தேயிருந்தாலும் அதை நம்ப மறுத்தது மனது…

அவன் எண்ண அலைகள் எங்கெங்கோ உலா வந்து கொண்டிருந்தாலும் விழிகள் அவள் முகத்திலேயே நிலைத்திருந்தன.

அந்த அறையிலிருந்து வெளியே வந்த செவிலியைப் பார்த்தவன் சட்டெனத் தனக்குள் முடிவெடுத்தவனாக “சிஸ்டர்! ஒரு நிமிஷம்!” என்ற வண்ணம் எழுந்து நின்றான்.

“சொல்லுங்க!” என்று அந்தப் பெண் அவனருகே வர நன்றாகக் குனிந்து அவள் காதுகளுக்குள் பிறர் கேட்காதவண்ணம் எதையோ முணுமுணுக்க அந்தப் பெண்ணோ ‘முடியாது’ என்பது போல் வேகமாகத் தலையசைத்தாள்.

ஆனால் அவன் மேலும் வற்புறுத்த, கொஞ்சம் தயங்கிய பாவனையுடன் அவன் கேட்டதற்கு ஒத்துக் கொண்டு மீண்டும் அந்த அறையினுள் சென்றாள்.

சில நிமிடங்களில் நீலாயதாட்சிக்கு நினைவு திரும்ப அவளது கண்ணாடியால் மறைக்கப்பட்டிராத நீல விழிகள் அவன் மீது படிந்தன.

அந்த விழிகளில் முதலில் ஒரு குழப்பம், அதைத் தொடர்ந்து ஒரு புரிதல், பின் ஒரு ஆசுவாசம் என வரிசையாக உணர்வுகள் வந்து போக அந்த நீல விழிகள் பார்வைக்குக் கிடைத்து விடாதா என கடந்து போன நாட்களாகக் காத்திருந்தவனோ கலவையான உணர்வுகளுடன்  வாய்மொழி மறந்தவனாய் அவளையே பார்த்திருந்தான்.

அவனிடம் பேசி விட்டுப் போன செவிலி வந்து “மேம்! மெட்டல் குத்தி இருக்கிறனால டிடி இஞ்செக்‌ஷன் போடணும்… கொஞ்சம் திரும்பிப் படுங்க” என்றதும் அவளும் திரும்பிப் படுத்தாள்.

திரைசீலையினூடாகத் தெரிந்த இடைவெளி இப்போது அந்த செவிலியால் முற்றும் மறைக்கப்பட்டிருக்க அவன் மிகுந்த யோசனையுடன் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான்.

சில நிமிடங்கள் பொறுத்து வெளியே வந்த அந்தச் செவிலி அவனை நோக்கிக் கண்ணைக் காட்ட அவனும் அருகில் செல்ல இருவரும் கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டனர். பின் ஒரு ஐநூறை எடுத்து யாரும் அறியாமல் அவள் கையில் திணித்தவன் மீண்டும் சென்று அதே இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

உள்ளே கசமுசவென்ற சத்தத்துடன் கழிந்த சில நிமிடங்களுக்குப் பிறகு நீலாயதாட்சி கொஞ்சம் தள்ளாடி நடந்தவாறு வெளியே வந்தாள்.

அவளைக் கண்டதும் எழுந்து கொண்டவன் அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்தவாறு அவளருகில் சென்றான்.

“டாக்டர்கிட்டப் பார்த்துடலாமா? இப்போ எப்பிடி இருக்கு?”

“இல்ல டாக்டர் வர இன்னும் கொஞ்சம் நேரம் ஆகுமாம்…டீடீ ( TT ) போட்டாச்சு… நாம கிளம்பலாம்…நான் எங்க டாக்டரை வீட்டுக்கு வரச் சொல்லிப் பார்த்துக்கிறேன்”

அவள் அருகில் சென்றவன் தன் கையைத் தூக்கி அவள் நெற்றியில், காயத்தைத் தையலிட்டு அதற்கு மேலாகப் போட்டிருந்த ப்ளாஸ்டரை வருட அவள் உடல் சிலிர்த்துக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி நின்றாள்.

அவள் முகத்தையே அவன் கூர்ந்து பார்க்க அவளோ அவன் முகம் பார்க்க மறுத்து அங்கிருந்த சுவரையும் பெஞ்சையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

ஒரு பெருமூச்சுடன் அவன் கையை அவள் உதவிக்கு நீட்ட வேண்டாமென மறுத்துத் தலையசைத்தவள் மெல்ல நடக்கலானாள்.

ஆனால் இடுப்பில் ஊசி போட்டிருந்ததாலும் நெற்றிக் காயத்தின் வலியாலும் அவள் தடுமாற “ப்ச்ச்…” என்றவன் உள்ளே பார்த்து “சிஸ்டர்!” என்று அழைக்க ஒரு செவிலி வெளியே வந்தார்.

“கொஞ்சம் கார் வரைக்கும் நடந்து போக ஹெல்ப் பண்ணுறீங்களா?” என அவன் கண்ணைக் காட்ட அந்தப் பெண்ணும் அவள் கையையும் பின் அவளையுமே சற்று தாங்கியவாறு பிடித்துக் கொண்டாள்.

“இல்ல என்னால நடக்க முடியும். கை மட்டும் பிடிச்சுக்கோங்க” எனவும் அவளும் அது போல் செய்ய கார்த்திக் வேறு எதுவும் செய்ய முடியாமல்  முன்னே நடக்க ஆரம்பித்தான்.

அவன் சென்று ஓட்டுனர் இருக்கையில் அமர அந்தச் செவிலியின் உதவியுடன் பின்னிருக்கையில் அமர்ந்தாள் நீலாயதாட்சி.

சில நிமிடங்கள் ஸ்டீரிங்க் வீலை வெறித்த வண்ணம் அவன் அமர்ந்திருக்க அவள் தொண்டையைச் செருமினாள்.

அவன் திரும்பிப் பார்க்க “போலாம்” என்றாள்.

 வண்டி கிளம்பியது. 

“உங்க அட்ரஸ் சொல்லுங்க”

அவள் சொல்லவும் வண்டியின் ஜிபிஎஸ்ஸை இயக்கி விலாசத்தைக் கொடுத்தவன் வண்டியை ஓட்டலானான்.

“இது உங்க ஹஸ்பன்ட் வீடா?”

அவளிடம் பதிலில்லை.

“நீ…நீலா!”

“மிஸ்டர் விக்னேஷ்…எனக்குத் தலை வலிக்குது…கொஞ்சம் பேசாம வரீங்களா?”

அதன் பின் அங்கே மௌனமே ஆட்சி செய்தது.

ஷெனாய் நகரில் அந்தப் பெரிய தனி பங்களாவின் முன் அவன் வண்டியை நிறுத்த அவள் காரைப் பார்த்து விட்டு வேகமாகக் காவலாளி கதவைத் திறந்தான்.

போர்டிகோவில் வண்டியை நிறுத்தியவன் இங்கும் அவள் தன் உதவியை நாட மாட்டாள் என்று தோன்ற வேகமாக உள்ளே சென்று “யாராவது இருக்கீங்களா?” எனச் சத்தமாகக் கேட்க உள்ளிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் தலை எட்டிப் பார்த்தது.

“யாரு நீங்க? என்ன வேணும்? ஏன் நடு வீட்ல வந்து சத்தம் போடுறீங்க?”

“உங்க மேடத்துக்கு ஒரு சின்ன விபத்து. வண்டில இருக்காங்க. வந்து இறங்கக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க. அதுக்குத்தான் கத்திக் கூப்பிட்டேன்”

அந்த அம்மா நெஞ்சில் கை வைத்து ஒரு கணம் நின்றவர் பின் நிலை உணர்ந்து வேகமாக முன்னே வந்தார்.

“என்ன ஆச்சு?” என்று அவனிடம் கேட்ட வண்ணம் வண்டியை நெருங்கியவர் பின் கதவைத் திறந்து நீலாயதாட்சிக்குக் கை கொடுக்க அவளும் கொஞ்சம் தடுமாறினாலும் இறங்கி நின்றாள்.

“பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல பொன்னம்மா. கமலி திடீர்னு அவங்க மாமா இறந்துட்டாங்கன்னு லீவு கேட்டாங்க. அதுனால நானே வண்டியை எடுத்தேன். நம்ம ஊரு ட்ராபிக் புதுசு இல்லையா… சடன் பிரேக் போட்டப்போ முன்னால போய் மோதிக்கிட்டேன்”

பொன்னம்மாவுக்கு பதில் சொல்லிக் கொண்டே அவள் கூடத்துக்கு வந்திருக்க சோபாவில் அமரப் போனவளை “நீங்க உங்க ரூம்க்குப் போய் ரெஸ்ட் எடுங்க… நீலா. நான் கிளம்புறேன்” என்ற அவன் வார்த்தைகள் தடுத்து நிறுத்தின.

அவன் சொல்வது சரியெனத் தோன்றவும் அவள் அமராமல் நிற்க அவன் தன் சட்டைப் பையில் கை விட்டு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரைகளை எடுத்து அந்தப் பொன்னம்மாவிடம் கொடுத்து “மூணு நாளைக்கு மாத்திரை கொடுத்திருக்கங்க. நேரா நேரத்துக்குக் கொடுத்துருங்க. நான் நாளை காலை வர்றேன்”

“எதுக்கு மிஸ்டர் விக்னேஷ்… அவசியமில்லை. நான் காலைல ஆஃபீஸ் வந்துடுவேன். அங்க பேசிக்கலாம்”

“நாளை ஆஃபீஸ் கு நீங்க வர வேண்டாம்” என்றவன் தனக்கு துணையாகப் பொன்னம்மாவை அழைத்தான்.

“நீங்க சொல்லுங்க பொன்னம்மா”

“ஆமாம்மா! இப்போவே முகம் வாடித் தெரியுது. நாளை ஒரு நாள் ஓய்வு எடுத்துட்டு அப்புறம் ஆஃபீஸ் போவீங்களாம்”

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றதைப் பயன்படுத்திக் கொண்டவன் “முதல்ல அவங்களுக்கு ஜுஸ் மாதிரி ஏதாவது கொண்டு வந்து கொடுங்க” எனவும் அத்தனை நேரம் வீட்டுக்கு வந்தவனிடம் ‘ஒரு வாய் தண்ணீர் குடிக்கிறாயா’ என்று கூடக் கேட்காத தன் விருந்தோம்பல் குணத்தை அவன் குத்திக் காட்டுகிறானோ என நினைத்து முகம் கன்றிப் போனது அவளுக்கு.

அவள் முகம் பார்த்தவனுக்கு அவள் எண்ண ஓட்டம் புரிபட “இல்ல நான் கிளம்புறேன். எனக்கு எதுவும் வேண்டாம். நாளை பார்க்கலாம்” என்றவள் எதுவும் மறுத்துக் கூறி விடும் முன் விடுவிடுவெனக் கிளம்பி விட்டான்

“நல்ல புள்ளையாதான் தெரியுது. எங்கயோ பார்த்த முகமாவும் இருக்குது.உங்க ஆஃபீஸ்ல வேலை செய்யுதா தம்பி?” எனப் பொன்னம்மா கேட்க மெலிதாகச் சிரித்தாள் நீலாயதாட்சி.

“அவர்தான் கம்பெனி சிஈஓ பொன்னம்மா” 

அவள் புரியாமல் பார்க்கவும் “கம்பனிலயே ரொம்ப முக்கியமான ஆளு” 

“ஓ ஆனா அந்த பந்தால்லாம் இல்லாமத் தன்மையாப் பேசிட்டுப் போகுது. தங்கமான புள்ள”

“அவர் புராணத்தை விடுங்க… பிள்ளைங்க வந்துட்டாங்களா?”

“அவங்க மூணரைக்கே வந்தாச்சும்மா. இந்நேரம் உங்க குரலைக் கேட்டதும் ஓடி வந்துருக்கணுமே! இன்னும் காணலையே!”

காரில் வரும் போதே வெளி ஆளுடன் வருவதாகவும் வெளியே வர வேண்டாம் என்றும் மகளுக்கு செய்தி அனுப்பி விட்டதைப் பொன்னம்மாவிடம் சொல்லாமல் “போய்ப் பிள்ளைகளை என் ரூம்க்கு வரச் சொல்லுங்க” என்று விட்டுத் தன் அறையை நோக்கிப் போனாள்.

அறைக்குள் சென்றவளுக்கு, வியர்வையும் ரத்தமும் ஸ்பிரிட் வாசமுமாக  மேல் கசகசவென்றிருக்க, குளியலறைக்குள் நுழைந்தாள். கண்ணாடியில் பார்த்துக் கொண்டே முகத்தில் காயமிருக்கும் இடம் தவிர மற்ற இடங்களை வெந்நீரில் துணியை நனைத்துத் துடைத்தவள் உடைகளைக் களைந்து, ஷவரில் குளிக்காமல் தண்ணீரை அள்ளி ஊற்றிக் குளியலை முடித்துக் கொண்டு உடலைத் துடைத்துத் தாங்கியில் கிடந்த ஹவுஸ் கோட்டை அணிந்து கொண்டு வெளியே வர அங்கே அறையில் அவள் பிள்ளைகள் அவளுக்காகக் காத்திருந்தனர்.

ப்ரியநந்தினி, ஏழு வயது, யதுநந்தன், ஆறு வயது என அவள் இடுப்பளவுக்கு வளர்ந்து விட்ட குழந்தைகளை இருபக்கமும் கட்டிக் கொண்டாள்.

“மா! என்னாச்சு? ஏன் நெத்தில கட்டு? ப்ளாஸ்டர் ஒட்டி இருக்கீங்க?” எனக் கேட்டான் அவள் மகன்.

முழுக்க முழுக்கத் தகப்பனின் சாயலில் பிறந்திருந்த அவனைக் கன்னத்தில் முத்தமிட்டவள் “ஒரு சின்ன ஆக்சிடன்ட் கண்ணா…பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல” என்றவாறு அவர்களுடனே நடந்து சென்று கட்டிலில் அமர்ந்தாள்.

“ம்ம்ம்… சொல்லுங்க! ஹவ் வாஸ் யுவர் டே? வந்ததும் அம்மாவைத் தேடினீங்களா?”

“எஸ் மா…இன்னிக்கு ஒரு ந்யூ ஃப்ரெண்ட் கிடைச்சான் எனக்கு…சோ நைஸ் அவன்… நோட்ஸ்லாம் காப்பி பண்ணக் கொடுத்தான்”

“வெரிகுட்!” என்று மகளின் பக்கம் திரும்பியவள் தன் சாயலை விடத் தன் தாயின் சாயலை அதிகம் கொண்டிருந்த மகளின் கன்னம் கொஞ்சி முத்தமிட்டு விட்டு “உனக்குடா? எனிதிங்க் இவென்ட்ஃபுல் டுடே?( எதுவும் முக்கியமா நடந்ததா இன்னிக்கு)”

“நோ மா நத்திங்…எல்லாம் ஆஸ் யூசுவல்”

“இப்ப ரெண்டு பேருக்கும் ஸ்கூல் செட் ஆகிடுச்சா?”

“ம்ம்ம்… ஓகேம்மா… அங்க உள்ள பிரண்ட்ஸ்தான் மிஸ் பண்றோம்… ஆனா அடிக்கடி ஸ்கைப்ல பேசிக்கிறனால கஷ்டமா இல்ல”

“ஓகேடா! அம்மா சொன்னது நினைவிருக்கில்ல…எப்பவும் கவனமா இருக்கணும்…புது ஆட்கள்கிட்ட அதிகம் பேசக் கூடாது…யாரையாச்சும் பார்த்து சந்தேகமா ஏதாவது தோனினா நான் ஸ்கூல்ல உங்களுக்கு அறிமுகப்படுத்தி வச்சுருக்கிற அந்த டீச்சர்கிட்ட உடனே போய்ச் சொல்லிடணும்”

“ஓகேம்மா டன்”

இருவரும் ஒருகுரலாகச் சொன்ன தோரணையில் சிரித்தவள்

“ஓகே!அம்மா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன். நீங்க ஹோம் ஒர்க் முடிச்சுட்டு சாப்பிட்டுட்டு படுங்க. ஓகே?”

“ஓகேம்மா… குட் நைட்”

இருவரும் இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டு விட்டு வெளியேற படுக்கையில் சாய்ந்து படுத்தாள்.

இந்தியா வந்தும் தங்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய அவள் மறக்கவில்லை. அவள் வீடு 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில்தான் இருந்தது. யாரும் அறியாத வண்ணம் மஃப்டியில் பங்களாவைச் சுற்றி ரோந்துப் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அன்றன்றைக்கு யார் வருகிறார்கள், போகிறார்கள், அவர்களது படங்கள் அவர்களைப் பற்றிய தகவல்கள் என எல்லாமே அவளது அலைபேசிக்கு ஒவ்வொரு நாள் காலையும் அனுப்பி வைக்கப்பட்டு விடும். பிள்ளைகளும் பாதுகாப்பாகவே போய் வந்து கொண்டிருந்தனர்.

ஜெர்மனியில் இருக்கும் போது பிள்ளைகளை மட்டுமே குறிவைத்துத் தாக்குதல் நடந்ததில் இந்தியாவுக்கு வந்து பிள்ளைகளுக்கு எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்தவள் தனக்கென்று பெரிதாக எதுவும் செய்து கொள்ளவில்லை. கார் ஓட்டுனரைக் கூடப் பெண்ணாகவே பார்த்து ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்…அவளுடைய பாதுகாப்புக்கென இருந்த ஒரே விஷயம் அவள் கைப்பையில் இருந்த லைசன்ஸ் பெற்ற துப்பாக்கி ஒன்றுதான்.

ஆனால் அன்று வரை எந்தத் தொல்லையும் இருந்ததாகத் தெரியவில்லை.

பெருமூச்செரிந்தவளின் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலைமோதின.

அவளது இளமைப் பருவம், திருமணம், ஜெர்மனி போனது, குழந்தை பெற்றது, மீண்டும் இந்தியா திரும்பியது என எண்ணங்களின் அலைப்புறுதலினூடாயே பொன்னம்மா கொண்டு வந்து கொடுத்த உணவையும் உண்டு மாத்திரையையும் விழுங்கி விட்டுப் படுத்தவளுக்குத் தூக்கம் சாமானியமாக வராமல் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டியது.

அன்று விக்னேஷ் உடனான நிகழ்வுகள், அவன் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகச் சொன்னது, அவனின் முக பாவனைகள், மருத்துவமனையிலும் அக்கறையாக அவளைக் கவனித்துக் கொண்டது எனப் பலவற்றையும் அசை போட்டு கொண்டு இருந்தவள் வெகு நேரம் கழித்தே உறங்கினாள்.

ஆனால் மறுநாள் காலங்காலையில் ஆளுக்கு முன் அவன் வந்து நின்ற போது அவளுக்கு எரிச்சலாகத்தான் வந்தது.

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓர் அழகை கண்டதில்லையே 

காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்குள் விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும்
மெய் மறக்கும் ம்ம்ம்.
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே