அத்தியாயம் 13

அவள் கேட்ட கேள்வியில் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன் அவள் விழிகளில் ஒளிந்திருந்த விஷமத்தனத்தைப் புரிந்து கொண்டவனாக “முதல்ல கல்யாணம் பண்ணிக்கலாம்” எனவும் வாய் விட்டுச் சிரித்தவள் “ரெண்டில் ஒண்ணுதான்… நான் வேணும்னா இப்பவே நான் தயார்…ஆனா கல்யாணம் இல்ல” எனவும் “நெனச்சேன்…கட்டிப் பிடிச்சப்போ ஒன்னும் சொல்லாதப்போவே” என்றவன் அவளை விட்டு விட்டு ஹாலுக்கு வந்து மெத்திருக்கையில் அமர்ந்தான்.

அவளும் பின்னோடு வந்து எதிரே அமர

“என்னைப் பார்த்தா உனக்குப் பாவமா இல்லையா?”

அவள் கண்களில் ஒரு கணம் ஏதோ இனம் புரியாத உணர்வுகள் வந்து மறு கணம் கண்டது பொய்யோ என்பது போல் மறைந்தும் போக மீண்டும் விழிகளில் அதே குறும்புடன் ‘இல்லை’ என்பது போல் தலையசைக்க அவளை முறைத்தவன்,

“சரி நீலா உன் வழிக்கே வர்ரேன்…ஆனா ஒரு டைம் லிமிட் சொல்லு… காலமெல்லாம் காத்திட்டு இருக்க என்னால முடியாது. மூணு மாசம் உன்னைத் தொடாம இருந்து ப்ரூவ் பண்ணினாப் போதுமா இல்ல…ஐஞ்சு மாசம்…அப்பிடி ஏதாவது ஒரு காலக்கெடு சொல்லு”

“ஒரு வருஷம்” என பதில் கூறி இருந்தாள்.

அதில் முதலில் திகைத்தாலும் ஆயுள் முழுக்கக் காத்திருப்பதற்கு ஒரு வருடம் காத்திருப்பது ஒன்றும் கடினமில்லை என்று தோன்ற “டன்” என்றான் கட்டை விரலை உயர்த்தி…பின்,

“எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்?”

“நான் வீட்ல பிள்ளைகள்ட்ட பேசணும்… பேசிட்டுச் சொல்றேன்…அதுக்கு முன்னால…” என்றவள் தன் மடிக்கணிணியில் அந்த மின்னஞ்சலை எடுத்து அவனிடம் காட்டினாள்.

“ம்ம்ம்…இது வருஷா வருஷம் இந்த டைம்ல நடக்கிற பார்ட்டிதான்…நான் போறதுதான்…எனக்கும் மெயில் வந்துருக்கு…உன்கிட்ட இது பத்திப் பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன்…அடுத்தடுத்து நடந்த விஷயங்கள்ல மறந்துட்டேன். நாளைக்குத்தானே…நாம ரெண்டு பேரும் குழந்தைகளோட போய்ட்டு வந்துடலாம்…அப்படியே வெட்டிங் அனௌன்ஸ்மென்ட் கூட அங்கேயே பண்ணிடலாம்”

அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

புரியாதவனாக “என்னம்மா…” எனவும்

“இன்னும் ஃபீவரே விடல…மறுபடி முகமெல்லாம் சிவக்க ஆரம்பிக்குது… இதுல நாளை பார்ட்டிக்கு நீங்க வரப் போறீங்களா? ஒன்னும் தேவையில்லை…நான் மட்டும் போய்ட்டு வரேன்…பிள்ளைகள் கூட வேண்டாம்”

“பிள்ளைகள் கூப்பிடாமப் போக முடியாதுடா…அங்க எல்லார் ஃபேமிலி டிடையில்ஸ் எடுத்துருப்பாங்க…தனியாப் போனா அடுத்த வருஷம் வான்னு சொல்லிடுவாங்க”

“இது என்ன அராஜகமா இருக்கு…அப்போ நான் போகவே இல்ல போங்க”

அவள் எழுந்து சென்று ஜன்னலின் அருகே நின்று கொண்டாள். அருகில் சென்றவனுக்கு அவளை அணைக்க பயமாக இருந்தது இப்போது… முதலைப் போல் ஏதாவது சொல்லி விட்டால் என நினைத்தவன் அவள் கையை மட்டும் பிடித்து அவளைச் சுழற்றித் தன்னை நோக்கித் திருப்பினான்.

“இது ஒரு பெரிய ஆப்பர்சூனிடி நீலா…சௌத் இந்தியா முழுதும் இருந்து பெரிய தொழிலதிபர்கள் வருவாங்க… இந்தப் பார்ட்டில கலந்துகிட்டது மூலமாகவே நிறைய கான்டாக்ட்ஸ் கிடைத்து மளமளன்னு பெரிய ஆளாகிப் போனவங்க உண்டு…நானே ஒரு டைம் கம்பனியை அப்படித்தான் மேல கொண்டு வந்தேன். இப்ப நீ போறது கம்பனிக்கு பெரிய அப்லிஃப்டா இருக்கும். குழந்தைகளைக் கூட்டிட்டுப் போறதுல என்ன ப்ரச்சனை உனக்கு?”

“அது…” அவனிடம் சொல்லத் தயக்கமாக இருந்தது அவளுக்கு.

ஜெர்மனியில் இருந்து இங்கே வந்த இத்தனை நாட்களில் இதுவரை எந்தப் ப்ரச்சனையும் இல்லை. பள்ளியில் கூட அவள் கேட்டு விட்டாள்… அவளுக்கோ பிள்ளைகளுக்கோ தொல்லை என்று எதுவும் இல்லாத நிலையில் அங்கே யாரோ தொழில் போட்டிக்காக அவளை வெளியேற்றி இருக்க அதை ஒரு பெரிய விஷயமாக அவனிடம் இப்போது…அதுவும் திருமணம் செய்யத் தீர்மானித்திருக்கும் நிலையில் சொல்ல வேண்டாம் என முடிவு செய்தவள்,

“சரி! அப்போ நான் போய்ட்டு வந்துடறேன்”

“தட்ஸ் மை கேர்ள்”

“சரி! அப்போ நான் கிளம்பட்டுமா?”

அவனுக்கு அவளைப் பிரிய மனதில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் “ம்ம்ம்” என்றான்.

உள்ளே சென்று முகம் கழுவி வந்தவள் அவன் கொடுத்த துவாலையில் முகம் துடைத்துக் கொண்டே “மதியம் மெடிசின் வாங்கப் போனப்போவே அந்தப் பையன்கிட்ட ப்ரெட் வாங்கி வரச் சொல்லிக் கிட்சன்ல வச்சுருக்கேன். நைட் அதை சாப்பிட்டு மருந்துகள் போட்டுக்கோங்க…நைட் ஏதாவது அவசரம்னா எனக்குக் கால் பண்ணுங்க…நான் டாக்டரைக் கூட்டிட்டு வந்துடுவேன்”

அவள் அக்கறையான பேச்சு வெகு நாட்கள் கழித்து ஒரு இதத்தைத் தோற்றுவிக்க அவன் கண்களில் அவளை அணைத்துக் கொள்ளும் ஆசை அப்பட்டமாக மிளிர அவனிடம் பேச்சில்லை என்றதும் அவனைத் திரும்பிப் பார்த்தவள் என்ன நினைத்தாளோ வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அவனும் மென்மையாகவே அவளைத் தாங்கிக் கொண்டான்.

மெல்லிய குரலில் “எனக்குப் போகவே விருப்பம் இல்ல”

“அப்போ இங்கயே இருந்துடு” அவனும் கிசுகிசுப்பாகச் சொல்ல சட்டென விலகி அவனை முறைத்தாள்.

“ஆசை தோசை” என்றவள் அவன் வாய்விட்டுச் சிரிக்கத் தானும் புன்னகைத்துக் கொண்டே தன் பொருட்களை எடுத்துச் சேர்க்கலானாள்.

வாசல்வரை சென்றவள் “டேக் கேர். நான் காலைல வரேன்” என்று விட்டு வெளியேறினாள்.

அன்றிரவு அவன், அவள், அவர்கள் பிள்ளைகள் எனக் கற்பனையில் கண்டபடி வெகு நாட்கள் கழித்து நிம்மதியாக உறங்கினான்.

அவளோ மறுநாள் அந்த விருந்துக்குச் செல்வதற்கான முன்னேற்பாட்டு வேலைகளில் இறங்கி இருந்தாள்.

மாலை ஆறு மணிக்குத்தான் செல்ல வேண்டும் என்பதால் பிள்ளைகள் பள்ளிக்கு விடுப்பெடுக்கத் தேவை இல்லை.எனவே அவளுக்கான உடைகள் அவர்களுக்கான பார்ட்டி வேர் எனத் தயாராக எடுத்து வைத்தவள் முந்தைய ஆண்டுகளில் அந்த விருந்தின் காணொளிகளை அந்தக் குறிப்பிட்ட தளத்தில் சென்று பார்வையிடலானாள்…

ஒருமணி நேரம் கடந்திருக்க அது என்ன மாதிரியான விருந்து, யார் யார் வருவார்கள், எப்படிக் கலந்து பழக வேண்டும் என்றெல்லாம் குறித்துக் கொண்டவளுக்கு மாலை விக்னேஷ் சொன்னது நினைவு வந்தது.

“ரொம்ப டீசென்டா நடக்கிற பார்ட்டி இது…எல்லாரும் குடும்பத்தோட வருவாங்கங்கிறனால ட்ரிங்க்ஸ் அலோட் கிடையாது…ரொம்ப ரேரா பத்து பத்தரைக்கு மேல ஒரு சிலர் மட்டும் ஸ்டே பண்ணி ஹாட் ட்ரிங்க்ஸ் சாப்பிடுவாங்க… அதுவும் லேடீஸ், கிட்ஸ் எல்லாம் கிளம்பிட்டாங்களான்னு கன்ஃபர்ம் பண்ணிகிட்டுத்தான்…அதுனால எந்த பயமும் இல்ல…ஆறு மணிக்குப் போயிட்டு எட்டுக்கெல்லாம் அங்க இருந்து கிளம்பிடு”

அவன் சொன்னது போலவே செய்து விட முடிவு செய்து கொண்டவளின் அலைபேசி அடிக்க எடுத்துப் பார்த்தாள். வின்னிதான் அழைத்திருந்தான்.

ஒரு தடவலில் அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க “வந்து சேர்ந்துட்டேன் டியர். நீ சைன் போட்ட டாக்ஸ் எல்லாம் அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பிட்டேன்…ஆமா நீ எப்பிடி இருக்கே…உடம்பு பரவாயில்லையா?”

“ஃபைன் வின்னி ஒன்னும் ப்ரச்சனை இல்ல…ஆனா எங்கிட்ட இருந்து விக்னேஷ் பிடிச்சுக்கிட்டார் போல…ஒரே ஃபீவர் இன்னிக்கு அவருக்கு… நானே போய் நம்ம டாக்டரையும் வர சொல்லி அங்கேயே இருந்துட்டு சாயந்திரம்தான் வந்தேன்

“ஓ…நீலு டியர்…விக்னேஷ் மேல உனக்கு வந்துருக்கிறது லவ்தானான்னு உறுதிப்படுத்திகிட்டியா?”

“ம்ம்ம்…எஸ் வின்னி… நானும் அவரை லவ் பண்றேன்…இப்ப அதுல எந்த டவுட்டும் எனக்கு இல்ல”

“ஓ…ஓகே டேக் கேர். நான் நாளை கூப்பிடுறேன்”

“நாளைக்கு நைட் ஒரு பார்ட்டி இருக்கு வின்னி” விருந்தின் விவரங்களை அவனிடம் கூறியவள் “வந்துட்டு நானே உன்னைக் கூப்பிடுறேன்” என்று விட்டு வைத்தாள்.

மறுநாள் காலை விக்னேஷின் வீட்டிற்கு சென்றவள் அவனை நலம் விசாரித்து அவன் தேவைகளைக் கேட்டுச் செய்து விட்டு அலுவலகத்துக்கு விரைந்தாள்.

அங்கும் வேலைகளை முடித்துக் கொண்டு மதியம் மூன்று மணிக்கெல்லாம் வீடு திரும்பி இருந்தாள்.

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரையில் காத்திருக்குமாம் கொக்கு என்ற ஔவையாரின் வாய்மொழிக்கிணங்க அவளுக்காகக் கொக்காகக் காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சரியாக ஐந்தே முக்காலுக்கு விழா நடக்கும் இடத்துக்குக் குழந்தைகளுடன் சென்று சேர்ந்தாள்.

அங்கு சென்று சேர்ந்ததும் விக்னேஷ் ஏற்கனவே சொல்லியிருந்தது போல் அவனுக்குக் குறுஞ்செய்தியும் அனுப்பி விட்டிருந்தாள்.

அவன் சொன்னது போலவே மிக கண்ணியமாக இருந்தது அந்த விருந்து.

புதிதாக வந்திருக்கும் ஒவ்வொரு தொழிலதிபரையும் அவர்களின் குடும்பத்துடன் மேடையில் ஏற வைத்து அவர்களின் சிறப்புக்களைக் கூறி அவர்களையும் பேச வைத்து என முறையாக எல்லாருக்கும் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னரான பஃபே விருந்தில் தெரியாதவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டனர்.

ஏற்கனவே ஜெர்மனியில் இருந்த போதே சுப்ரமணியத்தைப் பற்றியும் பின் அவள் தொடர்ந்து தொழிலை நடத்துவது பற்றியும் கேள்விப் பட்டிருந்தவர்களும் விக்னேஷின் தொழில் முறை நண்பர்களும் அவளிடம் சகஜமாகப் பேச அவளுக்கும் புது இடம்… அறிந்தவர் இல்லை… என்ற எண்ணமில்லாமல் இயல்பாக வளைய வந்தாள்.

எட்டு மணியாகவும் சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி விட்டு அவள் கிளம்ப அந்த விருந்து நடைபெறும் உணவகத்தை விட்டுக் கார் பார்க்கிங் செல்லும் வழியில் அதிகம் கூட்டமில்லாது இருந்த இடத்தில் முன்னால் அவளும் பின்னால் அவள் பிள்ளைகளும் சென்று கொண்டிருந்த போது காத்திருந்தது போல் மறைவிடத்திலிருந்து வெளியே வந்த ஒருவன் அவள் முகத்தில் மயக்க மருந்தை அடிக்க சட்டெனச் சுதாரித்தவள் “யது! டேக் த கன்” எனத் தன் கைப்பையைப் பின்னால் வீசி இருந்தாள்.

ஏற்கனவே அவர்களுக்கு இருக்கும் ஆபத்தின் காரணமாக இது போன்ற சூழ்நிலைகளுக்குப் பலமுறை பிள்ளைகளும் பழக்கப்படுத்தப்பட்டிருக்க சட்டெனச் சுதாரித்து அவள் கைப்பையிலிருந்த அனுமதி பெற்ற துப்பாக்கியை எடுத்த யதுநந்தன் அந்த மனிதனின் காலைக் குறிவைத்துச் சுட குறி இலக்கை சரியாகத் தாக்க அவன் வலி தாங்க முடியாதவனாக சுருண்டு விழுந்தான்.

தான் மயக்கத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம் என உணர்ந்தவளாக “ப்ரியா! கமான்… க்விக்… கார்கிட்ட என்னைக் கூட்டிட்டுப் போ”

இரு பக்கமும் பிள்ளைகள் தாங்கிக் கொள்ள விரைந்து வண்டியை அடைந்தவர்கள் ப்ரியநந்தினி கதவைச் சாவியிட்டுத் திறக்க உள்ளே அமர்ந்திருந்த நேரம் அந்த சுடப்பட்டவன் தன் கூட்டாளிகளுக்குக் கொடுத்திருந்த செய்தியில் இரண்டு பேர் அவர்கள் வண்டியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தனர்.

ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் என்பதால் வந்திருந்த நால்வரில் ஒருவன் மட்டும் சத்தம் செய்யாமல் சென்று அந்தப் பெண்ணை மயங்கச் செய்து மூவரையும் கட்டுக்குள் கொண்டு வந்த பின் மற்றவர்க்கு சைகை கொடுக்க எனப் போட்டிருந்த திட்டம் திடுமென யதுநந்தன் அவர்களைச் சுட்டதால் மாறி இருக்க இப்போது மீதமிருந்த மூன்று பேரில் ஒருவன் சுடப்பட்டவனைக் கவனிக்க மற்ற இருவரும் அவர்களைப் பிடிக்க வந்தனர்.

அதற்குள் குண்டுகள் கூடத் துளைக்க முடியாத அந்த Mercedes benz s600 வண்டியின் உள்ளே அமர்ந்து வண்டியைப் பூட்டியிருந்தாள் ப்ரியநந்தினி.

மிச்சமிருந்த கடைசித் துளி நினைவுடன் “யது! அப்பாவுக்குக் கால் பண்ணு” என்று விட்டு மயங்கினாள் நீலாயதாட்சி.

………………………………………………………………………………………………………….

அந்த புகழ் பெற்ற மருத்துவமனையில் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் கட்டிலில் நீலாயதாட்சி உறங்கிக் கொண்டிருக்க அருகில் நாற்காலியில் கையைத் தாடையில் தாங்கி அமர்ந்திருந்தவன் மனது சூழ்நிலையின் குளுமைக்குச் சற்றும் பொருந்தாமல் கொதித்துக் கொண்டிருந்தது.

மற்றொரு கையோ நீலாயதாட்சியின் அலைபேசியைத் தாங்கியிருக்க அவளது சேமித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் குழந்தைகள் யதுநந்தனும் ப்ரியநந்தினியும் ஒன்றாகவும் தனித்தனியாகவும் எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களை அவன் விழிகளும் விரல்களும் ஒருசேர வருடிக் கொண்டிருந்தன.

ப்ரியநந்தினி அவள் அன்னையைக் கொண்டு நீலாயதாட்சியின் சாயலில் இருக்க யதுநந்தனோ அவன் தகப்பனை அப்படியே அச்சு அசலாக உரித்துக் கொண்டு பிறந்திருந்தான்.

ஆம்… யதுநந்தன், விக்னேஷ் கார்த்திக் ருத்ர ப்ரதாபனை உரித்து வைத்துக் கொண்டுதான் பிறந்திருந்தான்.

இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு
அது மாளிகை ஆனதும் அவளாலே
வெறும் மண் மேடானதும் அவளாலே
மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர்தான் யாரோ
உன்னை சூடி முடித்ததும் பெண்தானோ
பின் தூக்கி எறிந்ததும் அவள்தானோ
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!