தன் மடியில் படுத்து நல்ல உறக்கத்தில் இருந்த விக்னேஷை மெதுவாக நகர்த்தித் தலையணையில் படுக்க வைத்தாள் நீலாயதாட்சி.
எழுந்து ஏசியைக் குறைத்தவள் கப்போர்டில் தேடி மெல்லிய போர்வை ஒன்றை எடுத்து அவனுக்குப் போர்த்தி விட்டாள்.
இரண்டு மணி நேரங்கள் முன்பு மாஸ்டர் கீ கொண்டு வீட்டைத் திறந்து உள்ளே வந்தவள் அவன் கிடந்த கோலம் கண்டு பதறித்தான் போனாள்.
அவளுடன் உள்ளே நுழைந்த பக்கத்து வீட்டுப் பெண்மணியையும் மேனேஜரையும் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வேகமாக அவன் அருகில் சென்றவள் தயக்கம் சிறிதும் இல்லாமல் அவன் தோளை உலுக்கி அவனை எழுப்பலானாள்.
“கார்த்திக்! கார்த்திக்!” அவனைத் தொட்டுத் திருப்பியவள் அவன் உடல் கொதித்துக் கொண்டிருப்பதைக் கண்டு சட்டென அலைபேசியை எடுத்து மருத்துவருக்கு விலாசம் தெரிவித்து வரச் சொன்னாள்.
உடனிருந்தவர்களைப் பார்த்து “டாக்டருக்கு சொல்லிட்டேன். இனி நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க…ஹெல்ப் பண்ணினதுக்குத் தேங்க்ஸ்” என அவர்களை அனுப்பி வைத்தாள்.
அவளது நடவடிக்கைகளாலோ என்னவோ மெல்லிய குறுகுறுப்பு அவர்கள் பார்வையில் தெரிந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் கிளம்பியதும் கதவைச் சாற்றி விட்டு வந்தவள் கட்டிலில் அமர்ந்து விக்னேஷைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள்.
“கார்த்திக்! கார்த்திக்! இங்க பாருங்க…நான் நீலா… என்னைப் பாருங்க” கன்னத்தில் மெல்லத் தட்ட மயக்கத்தில் கிடந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வர ஆரம்பித்தான்.
இமைகளை சிரமப்பட்டுப் பிரித்தவன் பார்வையில் அவளுருவம் விழ “சொர்க்கத்துக்குப் போய்ட்டேனா…தேவதைலாம் தெரியுது” என்று உளறியடித்து விட்டு மீண்டும் அவள் மடியிலேயே குப்புறப் படுத்து அவளிடையைக் கட்டிக் கொண்டான்.
அவன் செயலை நினைத்து வாய் விட்டுச் சிரிக்கத் தோன்றினாலும் இந்த நிலையை உருவாக்கிக் கொண்டவனை நினைத்துக் கோபம் வர “இதுல எனக்கு அட்வைஸ் வேற உடம்பைப் பார்த்துக்கலைன்னு…” என முனங்கிக் கோண்டே இடையைச் சுற்றியிருந்த அவன் கையைப் பிரிக்க முற்பட அவன் வலியில் முனங்கினான்.
அப்போதுதான் முந்தைய நாள் அவன் கையில் அடிபட்டது நினைவு வர கவனமாக அவன் கையைப் பிரித்து முன்னே கொண்டு வந்து பார்த்தாள்.
ஈரமும் வேர்வையும் உதிரமுமாகக் கொஞ்சம் நனைந்து தெரிந்தது காயம். அவனை விலக்கி எழ முயற்சிக்க அவனோ அதற்கு அனுமதிக்காமல் இன்னும் அழுத்தமாக அவள் மடியில் ஒன்றினான்.
என்ன செய்வது என யோசித்துக் கொண்டே நேரம் கழிய அந்த நேரம் அழைப்பு மணி ஒலிக்க அவனைக் கொஞ்சம் சிரமப்பட்டு விலக்கிப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
மருத்துவர் வந்திருந்தார்.
“என்னாச்சு நீலா? இங்க எதுக்கு வரச் சொன்னே? யார் இருக்கா இங்க?”
“அவர்…விக்னேஷ் அங்கிள்… அன்னிக்கு என் வீட்டில் பார்த்தீங்களே அவர்தான்… அவருக்குத்தான் உடம்பு சரியில்ல”
“ஓ!”
பேசிக் கொண்டே அவர்கள் படுக்கையறைக்கு வந்திருக்க அவன் நிலையைக் கண்டவர் “என்ன இப்பிடிக் கிடக்கார்…” என்று விட்டு “ஒரு கை பிடி நீலா” என்றதும் இருவரும் சேர்ந்து நேராகப் படுக்க வைத்தனர் அவனை.
பின் அவனைப் பரிசோதிக்க ஆரம்பித்தார்.
“இது என்ன கட்டு?”
“அது… வந்து… அங்க… எங்க வீட்லதான் அங்கிள்… கண்ணாடி உடைஞ்சு கைல அடி பட்டுருச்சு…நாந்தான் ட்ரெஸ்ஸிங் போட்டு விட்டேன்…ஆனா நைட் நனைச்சுட்டு இருப்பார் போல”
வெப்பமானியை வைத்துப் பார்த்தவர் “ஓ…103 இருக்கே!” என்று விட்டு “எப்போ இருந்து ஃபீவர்?” எனக் கேட்க “தெரியலை அங்கிள்! நேத்து காலை பதினோரு மணி இருக்கும் எங்க வீட்ல இருந்து கிளம்புறப்போ… அப்போ நல்லாத்தான் இருந்தாரு…அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியல…ஒருவேளை இந்தக் காயத்துனால ஃபீவரா அங்கிள்?”
“ம்ம்ம் இருக்கலாம்…உனக்கு ஃபீவர் இருந்தது இல்லையா…உன் கூட இருந்தனால கூட ஒட்டிகிட்டு வந்திருக்கலாம்”
அவளுக்கு முந்தைய நாளின் இதழிணைப்பு நினைவு வந்து முகம் சிவக்க மருத்துவர் பார்த்து விடாமல் திரும்பிக் கொண்டாள்.
மனதுள் ‘ஓ அதில்தான் அவளிடமிருந்து தொற்றிக் கொண்டதோ’ என்ற எண்ணமும் ஓட அதற்குள் அவனைப் பரிசோதித்து முடித்தவர் “கொஞ்சம் வெந்நீர் வைத்துக் கொண்டா நீலா… ட்ரெஸ்ஸிங் மாத்தணும்” எனவும் சமையலறையைத் தேடி அவருக்குத் தேவையானவற்றைச் செய்தாள்.
அவன் கையைத் துடைத்து ட்ரெஸ்ஸிங் போட்டு விட்டவர் இடுப்பில் ஒரு ஊசியையும் போட அவனுக்கு முழுதாக விழிப்பு வந்தது.
இமைகளைத் தட்டித் தட்டிப் பார்த்தவன் “டாக்டர் நீங்க இங்க என்ன பண்றீங்க?” எனக் கேட்ட போது மருத்துவர் சொன்னபடி அவனுக்குக் கஞ்சியுடன் உள்ளே நுழைந்திருந்தாள் நீலா
“ம்ம்ம்…கேளுங்க கேள்வி…ஊருக்குத்தான் உபதேசம்…காய்ச்சல் அடிச்சா ஒரு மாத்திரை போட்டுக்கணும்னு கூட இல்லாம ஃபோனும் எடுக்காம எல்லாரையும் இங்க ஓடி வர வச்சுட்டு…” படபடத்தவளை இருவருமே ஆச்சர்யமாகப் பார்க்க அவர்களின் அமைதியை உணர்ந்தவள் தன் செய்கையையும் உணர்ந்து சட்டென மௌனமானாள்.
ஒரு தரம் செருமிக் கொண்ட மருத்துவர் “என்னாச்சு விக்னேஷ்…நேத்துக் காலைல நல்லா இருந்தீங்கன்னு நீலா சொல்றா…எப்போ இருந்து ஃபீவர்?”
ஒரு பெருமூச்சுடன் நெற்றியை நீவிக் கொண்டவன் எழுந்து அமர்ந்தான்.
“நேத்து இவங்க வீட்ல இருந்து கிளம்பி நேரா இங்கதான் வந்தேன் டாக்டர்…வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிச்சப்பயே தொண்டை ஒரு மாதிரி கரகரப்பா இருந்துச்சு… அப்புறம் சாப்பிடக் கூட இல்ல…அப்படியே படுத்துட்டேன்…மறுபடி முழிச்சேனா…சாப்பிட்டேனா…ஒன்னும் நினைப்பில்ல…ஒரு மாதிரித் தூக்கமும் மயக்கமுமா இருந்துச்சு… இப்பத்தான் முழுசா விழிப்பு வந்த மாதிரி இருக்கு”
காய்ச்சலின் வேகத்தில் பேசும் போதே சோர்ந்து போனான்.
“ம்ம்ம்…இப்ப இஞ்செக்ஷன் போட்டதுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல ஃபீவர் விட்டுடும்…ஆனா வெறும் வயிறா இருக்கக் கூடாது… சாப்டுடுங்க… நீலா உனக்கு சொன்ன இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்தான் இவருக்கும்…”
“அது போகக் காயத்துல தண்ணி படக் கூடாது…பட்டா உடனே ட்ரெஸ்ஸிங் மாத்திடணும்…இல்லைன்னா செப்டிக் ஆகிடும்” பேசிக் கொண்டே தன் மருத்துவக் குறிப்பேட்டை எடுத்து மருந்துகளின் பெயர்களைக் கிறுக்கியவர் “இதுல மூணு நாளைக்கு மருந்து எழுதி இருக்கேன்…வேற ஏதாவது சந்தேகம் இருந்தா எனக்குக் கால் பண்ணிக் கேட்டுக்கோ” என்றவர் அவன்புறம் திரும்பி “டேக் கேர் விக்னேஷ்! நான் கிளம்புறேன்”
“தேங்க் யூ டாக்டர்”
அவன் தோளைத் தட்டிக் கொடுத்தவர் கிளம்பி விட்டார்.
கதவைத் தாழிட்டு விட்டு வந்தவள் கஞ்சியை எடுத்து அவன் கையில் கொடுக்க அவனோ பார்வை மாறாமல் அந்தக் கப்பைக் கையிலும் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க ஒரு நெடுமூச்சுடன் கட்டிலில் அவன் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு ஸ்பூனால் எடுத்து ஊட்டலானாள்.
மறுவார்த்தை பேசாமல் வாய்திறந்து வாங்கிக் கொண்டவன் விழிகள் மட்டும் வேறெங்கும் பார்க்காமல் அவள் மீதே நிலைத்திருந்ததை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் ஊட்டி முடித்தவள் “இன்னும் கொஞ்சம் கொண்டு வரவா?” எனக் கேட்க அவன் வேண்டாமெனத் தலையசைத்தான்.
பாத்திரத்தைக் கொண்டு சமையலறையில் வைத்து விட்டு அவனிடம் வந்தவள் “நான் போய் இந்த மெடிசின்ஸ் வாங்கிட்டு வந்துடறேன்” எனவும் “வேண்டாம்…கீழ வாட்ச்மேன் பையன் இருப்பான்…அவங்கிட்டப் பைசா கொடுத்தாப் பக்கத்துல போய் வாங்கிட்டு வந்துடுவான்” என்றவன் அவன் அலைபேசியைத் தேட ஹால் மேஜையில் இருந்ததைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
சில நிமிடங்கள் கழித்து அந்தப் பையன் வரவும் விவரம் சொல்லி அவனை அனுப்பி விட்டவள் அறைக்குள் வந்து பார்க்க ஊசி மருந்தின் வேகம் காரணமோ அல்லது சூடாகக் கஞ்சி அருந்தியதன் காரணமோ அவனுக்கு நன்றாக வியர்த்து இருந்தது. கிட்டதட்டத் தொப்பலாக நனைந்து இருந்தான். காய்ச்சல் அதிகம் இருந்ததால் அவனுக்குக் குளிருமோ என ஏசியையும் மின்விசிறியையும் கூட அணைத்திருந்தவள் இப்போது மின்விசிறியை முழு வேகத்தில் சுழல விட்டாள்.
“டவல் எங்க இருக்கு?”
“அந்தக் கப்போர்ட்ல”
அலமாரிக் கதவைத் திறந்து எடுத்தவள் அவனருகில் வந்ததும் தயங்கி நின்றாள்.
வலது கையைக் காயப்படுத்தி வைத்திருப்பவனிடம் ‘நீயே துடைத்துக் கொள்’ என எப்படிச் சொல்வது என எண்ணியவள் மீண்டும் அவனருகில் அமர்ந்து அவளே துவாலையைக் கொண்டு வியர்த்து வழிந்திருந்த உடலைத் துடைக்க ஆரம்பித்தாள்.
கரணை கரணையாய் இருந்த சதைக் கோளங்களும் அடர்ந்து முடி படர்ந்த மார்புமாக இருந்தவனைத் தொட்டுத் துடைக்கத் துடைக்க அவன் அண்மையில் தன் உடலில் ஏதோ மாற்றங்களை உணர்ந்தவள் அவன் முகம் பாராமல் மார்பு, முதுகு, வயிறு எனத் துடைத்து முடித்துப் பின் முகத்தையும் துடைக்கப் போக அதிலிருந்த அவளுக்கான தாப உணர்வுகளைக் கண்டு சட்டென எழுந்து கொண்டாள்.
“நீலா!”
“ம்ம்ம்”
“உன் கண்டிஷனை வாபஸ் வாங்கிக்க மாட்டியா?”
அவன் நெருக்கத்தால் விளைந்த தயக்கம் இப்போது விடைபெற்றுச் செல்ல “ம்ம்ஹூம்…முடியாது…சொன்னா சொன்னதுதான்”
ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் ஏதோ பேச ஆரம்பிக்க “போதும் இப்ப ஒன்னும் பேச வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு மணி ஒலிக்க, சென்று அந்தப் பையன் கொண்டு வந்து தந்த மருந்துகளை வாங்கி வந்தவள் அந்த வேளைக்கான மருந்துகளைக் கொடுத்து விட்டு விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள்.
“கொஞ்சம் தூங்கி ஓய்வு எடுங்க…பேசி முடிவு பண்ணலாம்”
“நீ இப்பிடி உக்காரு! நான் தூங்குறேன்”
“ம்ம்ஹூம்… நான் இருந்தாத் தூங்க மாட்டீங்க”
“ப்ளீஸ் நீலா”
வேறு வழியில்லாமல் கட்டிலில் வந்து அவள் அமர அவள் மடியிலேயே தலை வைத்துப் படுத்துக் கொண்டவன் சிறிது நேரத்திலேயே உறங்கியும் போனான்.
தன் நினைவுகளில் இருந்து மீண்டவள் கதவைச் சாற்றி விட்டு ஹாலுக்கு வந்தாள்.
ப்ரதீபாவை அழைத்து அலுவலக விவரங்களைக் கேட்டறிந்தவள் அவளது “பாஸ் எப்படி இருக்காங்க மேம்?” என்ற கேள்வியில் திகைத்துப் போனாள்.
“உனக்கு நான் இங்க வந்தது எப்படித் தெரியும்?”
“சும்மா ஒரு கெஸ்தான் மேம்…நான் இங்க வேலை முடிச்சுட்டுப் போய்ப் பார்க்கலாம்னு இருந்தேன். நந்தினி நீங்க யேர்லியராக் கிளம்பீட்டீங்கன்னு சொன்னதும் பாஸ் வீட்டுக்குப் போயிருப்பீங்களோன்னு யோசிச்சுக் கேட்டேன்”
“ஓ…சரிதான்…ஃபீவர் அடிக்குது. டாக்டர் வந்து இஞ்சக்ஷன் போட்டு மருந்து கொடுத்துட்டு போயிருக்கார். தூங்குறார்…எழுந்ததும் சொல்லிட்டு நான் கிளம்பணும்”
“ஓ ஓகே மேம்…அப்போ நான் வரத் தேவை இல்லைல்ல”
“தேவை இல்லைன்னு இல்ல…வந்து பார்க்கிறதுன்னாப் பார்த்துட்டு போ… ஆனா என்னை வந்து பார்த்துதான் அவருக்கு ஃபீவர் வந்துச்சு. அதுனால கவனம்”
“இல்ல மேம்…தேவை இல்லைன்னா நான் வரல”
“இங்க சர்வன்ட் யாரும் வர மாட்டாங்களா?”
“வருவாங்க மேம்…வாரத்துல ரெண்டு நாள் மட்டும் பாஸ் ஃபோன் செய்து வரச் சொன்னா வந்து க்ளீன் பண்ணி வச்சுட்டுப் போவாங்க…சமைக்க மாட்டார்ங்கிறனால வீடு க்ளீனிங், அப்புறம் துணி வாஷ் பண்ண மட்டும்தான்”
“ஓ சரி அப்போ நான் பார்த்துக்கிறேன்” என்று வைத்தவள் சமையலறையில் உபயோகித்திருந்த பாத்திரங்களைக் கழுவி மற்றவற்றையும் ஒழுங்குபடுத்தி வைத்தாள்.
பின் வீட்டுக்கு அழைத்துப் பொன்னம்மாவிடம் தான் வர நேரமாகும் என்றும் குழந்தைகள் வந்தால் பார்த்துக் கொள்ளும் படியும் பணித்தவள் தன் மடிக்கணிணியுடன் அமர்ந்து விட்டாள்.
வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு மின்னஞ்சலைக் கண்டு புருவம் சுருக்கினாள்.
ஒரு வாரம் முன்னதாக வந்திருந்த மின்னஞ்சல் அது…இருந்த குழப்பங்கள் மற்றும் உடல்நிலை வேறு சரியில்லாமல் போனதில் பார்க்காமல் தவற விட்டிருக்கிறாள்.
ஒவ்வொரு வருடமும் புதிதாகத் தொழில் ஆரம்பிக்கும் அல்லது தொழிலில் இணைந்து கொள்ளும் புதிய இளம் தொழிலதிபர்களை வரவேற்கும் விருந்துக்கான அழைப்பு அது…அதுவும் கட்டாயமாகக் குடும்பத்துடன் வந்தாக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.
இந்தியா வந்த இத்தனை நாட்களில் அவள் பிள்ளைகளை எந்த வெளித் தொடர்பும் இல்லாமல்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்போது இந்த நிகழ்ச்சிக்குப் போவதா வேண்டாமாவென்று தெரியவில்லையே என யோசித்து கொண்டேயிருந்தவள் அவளுக்கும் காய்ச்சல் விட்டு இரு நாட்களே ஆகியிருந்த சோர்வில் மெத்திருக்கையிலேயே தலை சாய்த்து உறங்கிப் போனாள்.
இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்க கண் விழித்த விக்னேஷ் உறங்கி எழுந்த நிறைவும் மருந்துகளால் காய்ச்சல் விட்டிருந்ததுமாகத் தெம்பாகவே உணர்ந்தான்.
எழுந்து அறையைத் திறந்து வெளியே வந்தவன் கண்ட காட்சியில் அப்படியே நின்று விட்டான்.
நீளிருக்கையில் கைப்பிடியில் தலை வைத்து ஒருபுறம் திரும்பி இரு கைகளையும் கோர்த்துக் கன்னத்தின் அடியில் கொடுத்து, கால்களையும் கொஞ்சம் குறுக்கிக் கருவறைக் குழந்தை போல் துயில் கொண்டிருந்தவளைக் கண்டதும் முகம் கனிந்தது அவனுக்கு.
அவளும் இப்போதுதானே சரியாகிக் கொண்டிருக்கிறாள். அவனுக்கு ஒன்று என்றதும் ஓடி வந்து விட்டாளே! அவனுக்கு அவன் முதலாளி மதன கோபாலின் வார்த்தைகள் நினைவு வந்தன.
“என்ன சம்பாதித்து என்ன புண்ணியம் விக்னேஷ்…ஒரு குடும்பத்தையோ நல்ல உறவுகளையோ சம்பாதிக்காமல் போய் விட்டேனே” என்று இறக்கும் தருவாயில் வருத்தப்பட்டவரைப் போல் தன் வாழ்வும் அமைந்து விடுமோ என எண்ணியிருந்தவன் வாழ்வை மீண்டும் வண்ண மயமாக மாற்ற வந்தவளுக்காக என்ன செய்தால் தகும் என எண்ணிக் கொண்டவன் சமையலறைக்குச் சென்று அவளுக்கும் சேர்த்துத் தேநீர் தயாரித்து எடுத்து வந்தான்.
அருகில் வந்தவன் அவள் படுத்திருந்த நிலை கண்டு கொஞ்சம் தயங்கினான்.
வெள்ளையில் உள்ளே ஒரு வட்டக் கழுத்துடன் கூடிய சட்டையும் மேலே பேபி பிங்க் நிறத்தில் ஒரு ஓவர்கோட்டும் கீழே ஸ்கார்ட்டும் என்று முதல் நாள் பார்த்தது போலவே உடை அணிந்திருந்தாள்.
கால்களுக்கு நீளமான தோல் நிறக் காலுறை அணிந்திருக்க அதன் வழவழப்பும் வெளுப்பும் அதிகம் தெரியவில்லை. ஆனால் அவள் ஒருக்களித்துப் படுத்திருந்த விதத்தில் மேல் கோட் கொஞ்சம் ஒரு பக்கம் விலகி இருக்க அவன் பார்வை கண்ணியத்தைக் கடக்க முயற்சித்தது. மனத்தைக் கொள்ளை கொண்டவளிடம் கண்ணியமென்ன வேண்டிக் கிடக்கிறது என ஒரு மனம் சொன்னாலும் இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் தேநீர் ஆறி விடும் என்பது மனதில் உறைக்க “நீலா!” என மெல்ல அழைத்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் எழும்பாமல் இருக்க கையிலிருந்த கோப்பைகளை டீப்பாயின் மீது வைத்து விட்டு அவளருகில் சென்று அவள் கன்னத்தை மென்மையாக வருட அதில் துயில் கலைந்தவள் படக்கென எழுந்தமர்ந்தாள்.
“ஈசி ஈசி” என்றவன் “இந்தா டீ குடி” என ஒரு டம்ப்ளரை எடுத்து அவளிடம் நீட்ட இன்னும் முழுதாகத் தூக்கம் கலையாமல் ‘நான் இங்கே எப்படி வந்தேன்’ என்பது போன்ற பார்வையுடன் தேநீர்க் கோப்பையை வாங்கிக் கொண்டாள்.
குடிக்க குடிக்க அதன் சூடும் தேயிலையின் புத்துணர்வுமாக நன்றாக உணர்வு திரும்பியவள்,
“எப்போ எழுந்தீங்க? இப்போ எப்பிடி இருக்கு? ஃபீவர் விட்டுடுச்சா? என்னை எழுப்பி இருக்கலாமே! நான் டீ போட்டிருப்பேனே!”
எனவும் அவள் கேள்விகளின் வேகத்தில் “அப்பப்பா கொஞ்சம் மூச்சு விட்டுக்கோயேன்…இப்பத்தான் ஒரு ஃபைவ் மினிட்ஸ் முன்ன எழுந்தேன். ஃபீவர் இல்ல…வெளிய வந்து பார்த்தா நல்லாத் தூங்கிகிட்டு இருந்தே… எழுப்ப வேணாம்னுதான் பார்த்தேன்… அப்புறம் நேரம் ஆகுதே… நீயும் கிளம்பணுமில்ல… அதுனாலதான் டீ போட்டுட்டு எழுப்பினேன்…ஆமா நீ மதியம் சாப்பிட்டியா இல்லையா?”
அவன் கேட்டது ஏனோ மனதுக்கு இதமாக இருக்க “ம்ம்ம் உங்களுக்கு வச்ச கஞ்சி மிச்சம் இருந்தது குடிச்சுட்டுதான் படுத்தேன்” என்றவள் காலிக் கோப்பையை எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கி நகர்ந்தாள்.
தானும் கோப்பையை எடுத்துக் கொண்டு அவள் பின்னே சென்றவன் சிங்கில் கப்பைக் கழுவிக் கொண்டிருந்தவள் பின்னால் சென்று உரசிக் கொண்டு நின்றான்.
அவள் கோபப்படவில்லை…மாறாக இதழ்களில் புன்னகை சிந்தினாள். கையை முன்னே கொண்டு சென்று தன் கையை அவள் கையுடன் சேர்த்து பிடித்து அவன் கப்பையும் கழுவி அருகிலிருந்த மேஜை மேல் வைத்தவன் அவளை விட்டு நகர மட்டும் இல்லை.
அவளிடையைச் சுற்றிப் படர்ந்த கைகள் அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைக்க சூடான அவன் இதழ்கள் அவள் பின் கழுத்தில் பதிய அவளும் பதில் எதுவுமில்லாமல் அவன் மீது சாய்ந்தாள்.
சில நிமிடங்கள் பொறுத்து அவளைத் தன் பக்கம் முழுதாக அவன் திருப்ப “பெட்ரூம் போகலாமா?” என அவன் கண்களைப் பார்த்து அவள் கேட்க நம்ப மாட்டாதவனாக அவன் அவளைப் பார்த்தான்.