குளித்து முடித்து நைட்டியுடன் வந்தவள், அவனைக் காணாமல் திகைக்க, பிறகு தான் கவனித்தாள் அவன் பால்கனியில் நின்றிருந்ததை. அவன் உடலிலும், முகத்திலும் தெரிந்த இறுக்கத்தில் அவளுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது. சற்று நேரத்திற்கு முன்பு வரை சிரித்து கலாட்டா செய்து கொண்டிருந்த ஆதி கேசவன் இவன் தான் என்று சத்தியம் செய்து சொன்னாலும் நம்புவதற்கில்லை. அவள் வந்ததை அவன் உணரவில்லை.

“மாமா” என்ற அவள் அழைப்பிலும் தொடுதலிலும் நிஜத்திற்கு வந்தவனின் முகம் சட்டென்று பழையபடி மாறிப் போனது அவளிடம்.

“பத்து நிமிஷம் தீர்த்தா”  என்று கனிவான குரலில் சொன்னவன், குளியல் அறைக்குள் சென்று விட, சிவாவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை.

“என்னாச்சு இவங்களுக்கு? இவ்வளவு நேரம் நல்லாத் தான இருந்தாங்க” என்று எண்ணியவளுக்கு, அப்போது தான் ஞாபகமே வந்தது.

“அய்யோ, இவங்க வீட்ல நடந்ததைப் பத்தி கேட்டாங்க, ஒரு வேளை அதைப் பத்தி யோசிச்சுட்டு இருக்காங்களோ” என்று எண்ணியவளுக்கு மனம் அடித்துக் கொண்டது.

‘எங்கே மீண்டும் வந்து அதைப் பத்தி கேட்பாங்களோ’ என்று எண்ணியவள் பதட்டத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்க, அவளைப் பின்னிருந்து அணைத்தவனின் ஸ்பரிசத்தில் யோசனைகள் பின்னுக்கு சென்றது.

“தேங்க்ஸ்டி”

“எதுக்கு?”

“எல்லாத்துக்கும் தான்”

“நானும் தான் நன்றி சொல்லணும்” என்றாள் சிவா.

“மேடம் எதுக்கு நன்றி சொல்றிங்க?”

“இந்த வீட்ல எல்லாரும் வெறுத்த என்னை, இப்படி கொண்டாடி தீர்க்க நீங்க வருவிங்கன்னு நான் கனவுல கூட நினைச்சதில்லை, அதுக்குத்தான்” என்றவளை விட மனமின்றி தனக்குள் புதைத்துக் கொண்டவன்,

“எப்பவும் கோபமா பேசுற தீர்த்தா இப்படி பேசுறது கூட நல்லா இருக்குடி. அழகா பேசுற” என்றவனைப் பார்த்தவள்,

“நீங்கதான் பேச வைக்கிறிங்க” என்றாள் மென்னகையுடன்.

“கண்டிப்பா சாப்பிட போகனுமா?” என்றான் தினுசான பார்வையுடன்.

“பசிக்குதுன்னு சொன்னிங்க?”

“பசிக்குது தான்” என்று அவளைப் பார்த்தபடி அவன் இழுத்த இழுவையில் காரணம் புரிந்தவள் அவனை முறைத்திருந்தாள்.

“சரி சரி முறைக்காதடி, வா போகலாம்”  என்றவளை இழுத்துக் கொண்டு செல்ல,

“நான் ரேணுமா முகத்துல எப்படி முழிப்பேன். எல்லாம் உங்களால தான்” என்றாள் சங்கோஜத்துடன்.

“சரி என்னால தான்” என்று சிரித்தவனைத் தான் ரசித்திருந்தாள்.

ஹாலிலும் கிட்சனிலும் யாரும் இல்லாததைப் பார்த்த பிறகு தான் சிவாவிற்கு நிம்மதியே வந்தது.

“சட்னி சாம்பார் எல்லாம் இருக்கு. சூடா தோசை ஊத்தித் தரவா?” என்றாள்.

“அப்படியே ஒரு ஆம்ப்லேட்” என்றான். அவன் எப்போது சாப்பிட்டாலும் ஒரு ஆம்ப்லேட் இருக்க வேண்டும். இத்தனை நாட்களில் கவனித்திருந்தாள்.

“ரேணுமா உங்களை நல்லா கெடுத்து வச்சிருக்காங்க” என்று முறைத்தவள்,

“உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?” என்றாள்.

“சாரிமா, எனக்கு சமைக்கவெல்லாம் தெரியாது. ஆம்பளைக்கு என்ன அடுப்படியில வேலைன்னே பழக்கிட்டாங்க. சமையல்கட்டு பக்கமே எட்டிப் பார்த்ததில்லை. இதுல மட்டும் நீ அர்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்” என்றான் சிரிப்புடன்.

“போனாப் போகுதுன்னு விடுறேன்” என்றவள்,

“ஆனா எங்கப்பா சூப்பரா சமைப்பார் தெரியுமா?” என்றாள் பெருமையாய்.

“ம்ம் தெரியும்” என்றான் ஆதுரமாய்.

“சின்ன வயசுல அவர் சமைச்சு ஒரு தடவை சாப்பிட்டிருக்கேன்” என்றான்.

“நிஜமாவா?” என்றாள்.

“ம்ம்” என்றவனுக்கு முகம் ஏனோ இறுகி மீண்டதைப் போல் இருந்தது அவளுக்கு.

அவன் அங்கேயே அமர்ந்து சாப்பிட, அவளுக்கும் ஊட்டியிருந்தான்.

“இல்ல, நீங்க சாப்பிடுங்க” என்றவளை விடாது அவளுக்கும் ஊட்டிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அங்கே வந்த ரேணுகா கண்டது பேசிக் கொண்டே தோசை ஊற்றிக் கொண்டிருந்த மருமகளையும், அவளுக்கு ஊட்டிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த மகனையும் தான். மனம் நிறைந்து போனது அவருக்கு. அவர்களை தொந்தரவு செய்யாமல் அவர் திரும்பி செல்ல எத்தனிக்க,

“வாங்கம்மா” என்றவனின் குரலில் வேறு வழியின்றி சென்றார்.

“ரேணுமா இன்னும் தூங்கலையா நீங்க?” என்றாள் சிவா.

“இல்லடா, எப்பவும் ஆதி லேட்டா தான வருவான். ஆதியை சாப்பிட வச்சுட்டு தூங்க லேட் ஆகிடும்” என்றவர்,

“ஏன் ஆதி என்னைக்காவது அம்மாவுக்கு இப்படி ஊட்டி இருக்கியா?” என்று பொய்யாய் கோவிக்க,

“இவ தான் என்னை மயக்கி வச்சிருக்காம்மா, நீங்க இவ கூட தான் சண்டை போடணும்” என்றவன் சிரிக்க,

“இவ உன்னை மட்டுமா மயக்கி வச்சிருக்கா ஆதி? மாமியார் என்னையும் தான் மயக்கி வச்சிருக்கா” என்ற ரேணுகாவின் பேச்சில் இப்போது சிரிப்பது சிவாவின் முறையாகிப் போயிருந்தது.

“சரி சரி நீங்களும் சாப்பிடுங்க” என்று ரேணுகாவிற்கும் ஊட்டியிருந்தான்.

“ரேணுமா சட்னில இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாம்” என்றாள் சிவா.

“ஆதி காரம் சாப்பிட மாட்டான் சிவா” என்றார்.

“இல்லையே அன்னைக்கு கருவாட்டுக் குழம்பு எவ்வளவு காரமா இருந்தது. இவங்க சாப்பிட்டாங்களே” என்றாள் சிவா.

“என்னது கருவாட்டுக் குழம்பு சாப்பிட்டானா? அதுவும் காரமா?” என்ற ரேணுகாவிற்கு நெஞ்சுவலி வராத குறை தான்.

“ஏன் ரேணுமா?” என்றாள் புரியாமல்.

“ஆதிக்கு முதல்ல கருவாடு வாடையே பிடிக்காது சிவா. வீட்ல அதனாலேயே கருவாடு சமைக்கிறதில்லை” என்றவர் ஆதியைப் பார்த்து முறைத்திருந்தார்.

“அம்மா, அவ கையால அன்னைக்கு பர்ஸ்ட் டைம் சாப்பிட்டேன். எடுத்த உடனே அது பிடிக்காதுன்னு எப்படி சொல்ல முடியும். அது மட்டுமில்லாம நிஜமாவே அன்னைக்கு அவ்ளோ டேஸ்ட்டா இருந்தது. நான் நல்லா சாப்பிட்டேன்” என்றவனைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்திருந்தார் ரேணுகா.

“எனக்காகவா சாப்பிட்டிங்க? ஏன்?” என்றாள் கலங்கிய குரலில்.

“ஏன்னு கேட்டா? என்ன சொல்ல முடியும் தீர்த்தா? வாழ்க்கையில நீ வரவே கூடாதுன்னு நினைச்ச இந்த வீட்ல, நான் சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தான இருந்த. அப்படி இருக்கும் போது, நான் என்ன பெருசா பண்ணிட்டேன். ஒரு சாப்பாடு விஷயம், அவ்வளவு தான” என்றவனின் குரலில் எப்படி உணர்ந்தாள் என்று கேட்டால் அவளிடம் பதிலில்லை.

இவை அனைத்தும் தண்ணீர் பிடிக்க வந்த சுபத்ராவின் கண்களில் பட்டு அவரையும் நெகிழ்த்தியிருந்தது. எதுவும் பேசாமல் அமைதியாய் நீரை மட்டும் பிடித்துக் கொண்டு திரும்பியவரை,

“சுபாத்தை” என்ற ஆதியின் குரல் நிறுத்தியிருந்தது.

“ஆதி” என்றவர் கேள்வியாய் பார்க்க, அவரை தன்னருகில் இழுத்து, அவருக்கும் ஊட்டியிருந்தான்.

“தீர்த்தா இன்னும் ரெண்டு தோசை” என்றவனை முறைத்தவள், அமைதியாய் திரும்பி தோசையை ஊற்ற, அவனோ சுபாவுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான்.

“நீங்க இப்பல்லாம் சரியாவே சாப்பிடுறது இல்லைன்னு நினைக்கிறேன். மெலிஞ்சுகிட்டே போறீங்க” என்றவனை ரேணுகா ஆச்சர்யமாய் பார்த்திருந்தார்.

சுபாவோ அமைதியாய் இருக்க,

“உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்கிட்ட இருந்து எதையாவது மறைக்குறிங்களா?” என்றான். குரல் சாதாரணமாகத் தான் இருந்தது. முகமோ இறுகியிருந்தது. அவன் இதற்கும் தட்டைத் தான் பார்த்திருந்தான். சுபாவைப் பார்க்கவில்லை.

ஆனால் அவன் கேட்டது தான் தாமதம் என்பதைப் போல், அவர் கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வந்திருக்க, அதை சட்டென்று துடைத்திருந்தார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆதி” என்றவரைத் தான் இப்போது கூர்மையாய் பார்த்திருந்தான். சிவாவிற்கோ அவன் அப்படி கேட்டதில் யோசனை.

“எனக்கு போதும் ஆதி” என்ற சுபா தன்னை அடக்க முடியாமல் அங்கிருந்து கிளம்பியிருந்தார்.

“எதுவும் பிரச்சனையாப்பா?” என்றார் ரேணுகா புரியாமல்.

“இன்னைக்கு வீட்ல என்னம்மா நடந்தது?” என்றான் ரேணுகாவிடம். சிவா பதட்டத்துடன் திரும்பி ரேணுகாவைப் பார்க்க, அவளின் பார்வையில் சேதி அறிந்தவர், அவள் சொல்ல வேண்டாம் என்பதைப் போல் தலையாட்டியதையும் பார்த்திருந்தார்.

“ஒன்னும் நடக்கலையேப்பா?” என்றார்.

“இவ கூட சேர்ந்து நீங்க கூட பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டிங்க போல” என்றான்.

“ஆதி”

“சரி சரி நானும் எதுவும் கேட்கலை, போதுமா” என்றவன் கையை கழுவி விட்டு வெளியே செல்ல, அப்போது தான் சிவா நிம்மதியாய் மூச்சே விட்டாள்.

“தேங்க்ஸ் ரேணுமா” என்றாள் ரேணுகாவைக் கட்டிக் கொண்டபடி.

“எதுக்கு சிவா? ஆதிட்ட சொல்லாம விட்டதுக்கா?” என்றார்.

“ம்கூம்..! ஆதி மாமா மாதிரி ஒரு அருமையான பையனைப் பெத்து, அருமையா வளர்த்து, எனக்கு புருஷனா குடுத்ததுக்கு” என்றாள் கமரிய குரலில்.

“என்னடா ஆச்சு?” என்றார் ரேணுகா ஆதுரமாய்.

“தெரியலை ரேணுமா, சொல்லணும்னு தோணுச்சு” என்றாள் சிவா.

“ம்க்கும்” என்ற ஆதியின் குரலில் திரும்பியவள் முழித்த முழியில் சிரிப்பு வந்திருந்தது அவனுக்கு.

“நல்ல பிள்ளைங்க” என்ற ரேணுகா அவ்விடத்தில் இருந்து நகர்ந்திருந்தார்.

அவளை இழுத்து கைப்பிடியில் நிறுத்தியவன்,” நீ என்னடி மாமன்கிட்ட சொல்ல வேண்டிய டயலாக் எல்லாம் மாமியார்கிட்ட சொல்லிட்டு இருக்க?” என்றான் கிண்டலுடன்.

“விடுங்க, வீட்டுக்கு நடு ஹால்ல நிக்கிறோம்” என்றாள் சங்கடத்துடன்.

“அது எனக்குத் தெரியாதா? பேசாம நில்லுடி” என்றான் அதட்டலாய்.

“கையவாவது எடுங்களேன்”

“நான் தான் அன்னைக்கே சொன்னேனே? இந்த இடுப்புக்கு பட்டா பத்திரம் எல்லாம் போட்டவன் நான்தான்னு. இடத்துக்கு சொந்தக்காரனையே கையை எடுக்க சொல்லுவியா?” என்றான்.

“யாரு இல்லைன்னு சொன்னா? ஆனா இப்ப விடுங்க” என்றாள்.

“அப்படியே ரைட்ல திரும்பி பார்க்காத மாதிரியே பாரு பார்ப்போம்” என்று ஆதி சொல்ல, அவளும் அவன் சொன்னபடியே பார்த்திருந்தாள்.

“மாமா உங்க பாட்டி” என்றாள் அதிர்ந்த குரலில்.

“அப்போ உனக்கு யாருடி?” என்றான் கடுப்புடன்.

“எனக்கு அது கிழவி மட்டும் தான்” என்றாள் அவளும் பட்டென்று.

“சரி இப்போ சொல்லு, பிடிக்கவா விடவா?” என்றான் நமட்டு சிரிப்புடன்.

“ச்சச்ச.. விடாம பிடிச்சுக்கோங்க. யார் வேண்டாம்னு சொன்னா?” என்றவளைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்திருந்தான். சிவாவோ அதோடு நிறுத்தாமல் எக்கி அவன் இதழ்களிலும் ஒரு முத்திரையை பதித்திருக்க, ஆதி அதிர்ந்தானோ இல்லையோ பார்த்திருந்த விசாலாட்சிக்கு மயக்கமே வந்துவிட்டது.

“ஹேய் பாவம்டி..! வயசான காலத்துல அட்டாக் வந்துடப் போகுது” என்றான் பாவமாய்.

“வந்தா வரட்டும். அதைப் பத்தி எனக்கென்ன கவலை” என்றவள்,

“மாமா” என்றாள்.

“ஏமா?”

“நீங்க ஏன் என்னை மேல தூக்கிட்டு போகக் கூடாது?” என்றாள் அவனைப் பார்த்து கண் சிமிட்டியபடி.

“பொண்டாட்டி கேட்டு நிறைவேத்தாம இருக்க முடியுமா?” என்றவன் சட்டென்று அவளைத் தூக்கியிருந்தான்.

‘கிழவிக்கு காலையில உசுரு இருக்குமான்னு தெரியலையே?’ என்று நமட்டு சிரிப்பு சிரித்தபடி அவனுடன் ஒட்டிக் கொண்டாள் சிவ தீர்த்தா.

அவள் எண்ணியதைப் போல் தான் அமர்ந்திருந்தார் விசாலாட்சி.

“என்ன இந்த பையன்? அவளை அத்து விட்டுறேன்னு நம்ம கிட்ட சொன்னான். இப்ப என்னடான்னா அவளோட இப்படி கொஞ்சிக் கொலாவிட்டு இருக்கான்?” என்று எண்ணியவருக்கு இரவு உறக்கம் முற்றிலும் தொலைந்து போனது.