கடந்து செல் காதலுடன்! 20 2 7166 தங்களின் வாகனத்தை யாரேனும் பின் தொடர்கிறார்களா என்று சம்யுக்தா பின்னால் திரும்பி பார்த்து கொண்டே வர, “ரிலாக்ஸ். ஒன்னுமில்ல” என்று இவளின் கைப்பற்றி சொன்னான் சர்வாச்சார்யா. “ம்ம்” என்ற பெண்ணுக்கு அச்சம் உச்சத்தில் நின்றது. பயத்துடன், தடுமாற்றத்துடன் தான் இச்செயலில் இறங்கினாள். குருட்டு தைரியம் அவளுக்கு சிறிதளவு மட்டுமே! மற்றபடி இவனுக்கு உதவிட வேண்டும் என்பதே அவளை துணிய வைத்துவிட்டது. இருள் விலக ஆரம்பிக்க, “கீழே குனிஞ்சு உட்காருங்க” என்றாள் சம்யுக்தா மெல்லிய குரலில். “ஏன்? ரொம்ப மாசம் கழிச்சு இப்போதான் வெளியுலகத்தை பார்க்கிறேன்” என்றான் உற்சாகத்துடன். “நாம என்ன டூருக்கா வந்திருக்கோம். முகத்தை மறைச்சு உட்காரு” “கொஞ்சு நேரம்“ “சாவடிச்சிடுவேன்டா. ஒழுங்கா குனி” என்று அவன் கழுத்தை பிடித்து கீழே அழுத்தினாள். ஓட்டுநர் வேறு கவனித்து விடுவாரா என்று கவலை. சில மாதங்களுக்கு முன்பு தான் அவர்களும் ஊட்டி வந்தது. சம்யுக்தாவிற்கு மட்டுமே ஆன ஓட்டுநர் இவர் என்பதால், குருமூர்த்தி அலுவலகத்தில் வேலை செய்வோர் பற்றி அவருக்கு பெரிதாக பரிச்சயம் இல்லை. இரண்டோரு முறை தொலைவில் இருந்து குணாவை பார்த்திருக்கிறார் அவ்வளவு தான். ஆனாலும் அந்த பையன் கொஞ்சம் ஒல்லியா இருந்த மாதிரி இருந்தானே? வெளிச்சத்தில் இவன் உடல் வாகை பார்த்தவருக்கு கேள்வி முளைத்தது. கற்பகம் பாட்டி அழைத்து, “மணி வர சொன்னதா குணா பையன் வந்திருக்கான் கண்ணு” என்றார். “குணாவா?” என்று சம்யுக்தா திகைக்க, சர்வாச்சார்யா இவளை நெருங்கியிருந்தான். “உன் அப்பாக்கு லைன் போகலை. எதுக்கு வர சொன்னார்ன்னு தெரியலையே” என்றார் பாட்டி. குருமூர்த்தி அப்போது விமானத்தில் இருக்க, சம்யுக்தா ஆசுவாசம் அடைந்தவள், “ஆபிஸை பார்த்துக்க சொல்றதுக்காக வர சொல்லியிருக்கலாம் பாட்டி. நேத்து கூட சண்டை போட்டுட்டு எங்கேயோ போயிட்டாராம். பொறுப்பில்லாத ஆள்” என்று சம்யுக்தா சொல்ல, “ஹலோ யாரை பொறுப்பில்லைனு சொல்றீங்க?” என்று குரல் ஒன்று ஓங்கி ஒலித்தது. சம்யுக்தா அதிர்ந்து போன் எடுத்து பார்த்து, திரும்ப காதில் வைக்க, “என்னை விட உங்க ஆபிஸை பார்த்துக்க ஆள் இருக்கா? அதெப்படி நீங்க என்னை பொறுப்பில்லைன்னு சொல்லலாம்” என்று கோவத்துடன் கேட்டான் குணா. ஏற்கனவே அம்மாவுடன் இதே காரணத்துக்காக தான் சண்டை! “சம்பாதிக்கிற காசை பொறுப்பில்லாமல் செலவு பண்ணிட்டு திரியுற? உனக்கென்ன சொத்து, பத்தா இருக்கா? உழைச்சா தான் கஞ்சி, ஒழுங்கா காசை சேர்த்து வைக்கிற வழியை பாரு” என்று அவ்வளவு பேச்சு. இதற்கும் அவன் ஒன்றும் செய்யவில்லை. அம்மா, மகன் மட்டுமே! இருவரும் உழைக்கும் வர்க்கம். நாளெல்லாம் வேலை பார்த்து வரும் அம்மாக்காக, ஹோட்டலில் இருந்து உணவு வாங்கி வந்துவிட்டான். அவ்வளுவே! அதனை கொண்டே சண்டையிட்டு, ஆள் வெளியே போயாகிவிட்டது. இப்போது சம்யுக்தாவும் அதையே சொன்னதில், குணாவிற்கு பொறுக்கவில்லை. முதலாளி மகள் என்ற எண்ணமெல்லாம் இல்லாமல், “நான் பொறுப்பில்லாமல் ஊர் மேய்ஞ்சதை பார்த்தீங்களா நீங்க?” என்று சுள்ளென கேட்டான். “ஏய் என்ன?” என்று சம்யுக்தா கோவமாக கேட்டாள். குணாவின் அம்மா இவர்களின் வீட்டு வேலைக்கு வருவார். அதனாலே கற்பகம் பாட்டி மூலம், அவர்களை பற்றி முழுதும் தெரியும். “கோவம் வருது இல்லை. அதே மாதிரி தான் என்னை பத்தி பேசினா எனக்கும் கோவம் வரும்” என்றான் குணா. சம்யுக்தா இப்போதைய சூழ்நிலையை மனதில் வைத்து பல்லை கடிக்க, “எதுக்கு வர சொன்னாராம்?” என்று இவளிடம் கேட்டான் குணா. “ஆபிஸை விட்டு நீங்க எங்கேயும் நகர கூடாதுன்னு சொல்லத்தான்” என்றாள் சம்யுக்தா. “ஏன் உங்க ஆபிஸை யாராவது தூக்கிட்டு போயிடுவாங்களா?” நக்கல் பேசினான். “ஆபிஸ் இருக்கும். ஆனா நீங்க ஓடிடுவீங்களே?” சம்யுக்தா பதில் கொடுக்க, “என் வேலையை முடிச்சுட்டு தான் ஓடு, ச்சீ. போறேன்” என்றான் குணா. சம்யுக்தா தோளில் ஏதோ பாரமாக உணர, சர்வாச்சார்யா முழுதும் அவளின் பக்கம் ஒண்டியிருந்தான். “என்னாச்சு?” என்று சம்யுக்தா கேட்க, “பேசு” என்று உதட்டசைத்தான். “ஒட்டு கேட்கிறீங்களா?” சம்யுக்தா கோவப்பட, “ஹலோ அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க? லைன்ல இருக்கிறது மனுஷனா தெரியலையா உங்களுக்கு?” குணா மறுபக்கம் எகிறினான். இவன் வேற? சம்யுக்தா, “ஆபிஸ் பார்த்துக்கோங்க. அவ்வளவு தான் விஷயம்” என்றாள். “இதை முதல்லே சொல்றதுக்கு என்ன?” என்று அவன் வைத்துவிட, சம்யுக்தா கடுப்பாகி போக, “முதலாளி பொண்ணுகிட்ட இவ்வளவு ஆட்டிடியூட்? தப்பு தான். ஆனா பையன் வித்தியாசமா இருக்கான்” என்றான் சர்வாச்சார்யா. “முதல்ல தள்ளி உட்காரு” என்று அவனை தள்ளினாள் சம்யுக்தா. “ரொம்பத்தான் போடி” என்று உதட்டை சுளித்தவன், “பர்பியூம் அடிக்கலையா?” என்று கேட்டான். பர்பியூம் எல்லாம் அடிச்சுட்டு கிளம்புற நிலமையிலா நான் இருக்கேன்? சம்யுக்தா முறைக்க, “இதுவும் நல்லா இருக்கு. நேச்சுரல் வாசம் உன்கிட்ட” என்று அவள் கழுத்துக்கருகில் வந்து வாசம் இழுத்தான் கேடி. ஓட்டுனரை வைத்து கொண்டு சேட்டை! சம்யுக்தா கண்களால் அவனை மிரட்டி தானே தள்ளி அமர்ந்து கொண்டாள். “மலை இறங்கிட்டோம். சாப்பிடாலமா?” என்று ஓட்டுனர் கேட்க, “நான் எடுத்திட்டு வந்துட்டேன். நீங்க போய் சாப்பிட்டு வந்துடுங்க” என்றாள் சம்யுக்தா. அவரும் நல்ல உணவகத்தில் காரை நிறுத்தி இறங்கி செல்ல, சம்யுக்தா இவனுக்கான உணவை கொடுத்தாள். “வெல் பிளான்ட்” என்று மெச்சிக்கொண்டான் சர்வாச்சார்யா. “சீக்கிரம் சாப்பிட்டு முடி” என்று சம்யுக்தா தானும் உண்டு, அவனையும் விரட்டி உண்ண வைத்தாள். அவன் கழுத்தில் இருந்த டவல் எடுத்து, டிஷ்ஷியூ கொண்டு உதட்டை எல்லாம் துடைக்க வைத்து, தண்ணீர் குடிக்க வைத்தாள். “ஏதோ கிண்டர் கார்டன் குழந்தையை ட்ரீட் பண்ற மாதிரி என்னை பண்ணிட்டு இருக்க நீ?” என்று அவன் முகம் சுருக்கினான். “ம்ம். பேச்சு போதும். குனிஞ்சு உட்காரு” என்றாள் சம்யுக்தா. ஓட்டுநரும் வேகமாக உணவு முடித்து கொண்டு வர, “கோவிலுக்கு போகணுமா?” என்று கேட்டார். “இல்லை. முதல்ல நான் சொல்ற இடத்துக்கு போலாம் அங்கிள்” என்ற சம்யுக்தா அந்த ஊரை சொன்னாள். “அங்க ஏன்? மூர்த்தி அய்யா அப்படி ஏதும் என்கிட்ட சொல்லலையே?” என்றார் அவர். “என் பிரென்ட் உதவி பண்ண வரேன்னு சொல்லியிருக்கா அங்கிள். அவளை பிக்கப் பண்ணனும். நான் அப்பாகிட்ட பேசிடுறேன்” என்றாள் சம்யுக்தா. “சரி பேசிட்டு சொல்லுமா” என்று அவர் கார் எடுக்க, சம்யுக்தா அச்சத்துடன் தந்தையின் எண்ணுக்கு அழைத்தாள். அணைத்து வைக்க பட்டிருந்தது. அப்போது தான் அவர் பண்ணை வீட்டில் இருந்தார். “போன் ஆப் அங்கிள். நீங்க போங்க” என்றாள் சம்யுக்தா. ஓட்டுனருக்கு இடறியது. ஆனால் என்ன செய்ய? சம்யுக்தா சொல்லும் வழியில் கார் சென்றது. ஏதோ ஓர் ஊரை தேடி நீண்டது பயணம். சர்வாச்சார்யா முகமும் கொஞ்சம், கொஞ்சமாக மாறிக்கொண்டே வந்தது. அவனுக்குள் ஏதேதோ நினைவுகள். “இந்த வீடு தான்” என்று சம்யுக்தா சொல்ல, சர்வாச்சார்யா வேகமாக இறங்க போனான். “ஷ்ஷ். என்ன பண்றீங்க?” சம்யுக்தா பாய்ந்து அவன் கைப்பற்றி தடுக்க, ஓட்டுனர் திரும்பி கேள்வியாக பார்த்தார். “அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அங்கிள் அதான்” என்று சமாளித்தவள், “நான் போய் முதல்ல பார்த்திட்டு வரேன்” என்று அவனை காருக்குள்ளே இருக்க வைத்து இவள் இறங்கி சென்றாள். வீடு பூட்டப்பட்டிருந்தது. “யாரும்மா?” என்று பக்கத்தில் இவளை விசாரிக்க, “இவரை பார்க்கணும். கோகுல் ப்ரெண்ட் நான்” என்றாள் சம்யுக்தா. “அவங்க இப்போ இங்க இல்லை. நீங்க போன் பண்ணி கேளுங்க” “போன் நம்பர் கொடுங்க” என்று வாங்கி கொண்டவள் வேகமாக காருக்கு வந்து இவனிடம் கொடுத்தாள். அழைப்பு இணைந்தவுடன், “நான் சர்வாச்சார்யா பேசுறேன்” என்றான். “நீயா? எங்க இருக்க இப்போ நீ?” என்று மறுபக்கம் பரபரப்பாக கேட்க, “நான் வீட்டுக்குள்ள போகணும். பாஸ்ட்” என்றான் சர்வாச்சார்யா. “கோகுல் சொல்லியிருக்கான். நான் இப்போவே சாவி கொடுக்க சொல்றேன்” என்று அவர் சொல்ல, சம்யுக்தா போனை பக்கத்து வீட்டு மனிதரிடம் கொடுத்தாள் . அவரும் பேசிவிட்டு சாவி கொடுக்க, கேட்டை திறந்து கொண்டு கார் உள்ளே சென்றது. “என்னமா நடக்குது இங்க?” ஓட்டுநர் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டார். “அங்கிள். ப்ளீஸ். நான் வந்து சொல்றேன்” என்று சர்வாச்சார்யாவுடன் வீட்டை திறக்க ஓடினாள். இவர்களும் வீட்டிற்குள் நுழைந்துவிட்டனர். அதுவரை எல்லாம் சரியாக தான் சென்றது. ஆனால் அந்த போன் அழைப்பு எல்லாவற்றையும் மாற்றியது. கோகுல் வீட்டினரின் அனைத்து போன்களும் ஒட்டு கேட்க படுகின்றது என்பது இவர்களுக்கு தெரியாமல் போனது. “அந்த பையன் இப்போ கோயம்பத்தூர்ல இருக்கான்” என்று காட்டு தீயாக விஷயம் பரவ, சர்வாச்சார்யாவை நோக்கி ஆட்கள் விரைந்தனர். ஓட்டுநர் யோசிக்கவே இல்லை. குருமூர்த்திக்கு அழைத்துவிட்டார். அவர் அப்போது தான் எல்லாம் முடித்து மகளுடன் பேசுவதற்காக தள்ளி வந்து கொண்டிருந்தார். மூன்றாம் முறை அழைப்பு கிடைக்கப்பட, ஓட்டுநர் வேகமாக விஷயத்தை அவரிடம் சொன்னார். “என்னடா சொல்ற?” குருமூர்த்தி கார் நடுரோட்டில் ஆட்டம் கண்டது. “எனக்கும் தெரியலை. அந்த பையனோட இங்க ஏதோ வீட்டுக்கு வந்திருக்காங்க” என, “இரு குணா தான் கூப்பிடுறான்” என்று அவன் அழைப்பை ஏற்றவர், இடிந்து போய்விட்டார். குணா மகளுடன் செல்லவில்லை. அப்படியெனில் அவளுடன் இருப்பது யார்? கூடாது. அவனா மட்டும் இருந்திட கூடாது. குருமூர்த்தி மகளுக்கு அழைத்தார். சம்யுக்தா திக்கென அதிர்ந்த நெஞ்சத்துடன் போனை எடுக்க, “சர்வாச்சார்யா உன்கூட இருக்காரா?” என்று கேட்டார் குருமூர்த்தி. “ஆ. ஆ. ஆமாப்பா” சம்யுக்தா திக்கி சொல்ல, “ஏய்” என்று குருமூர்த்தி போட்ட சத்தத்தில் சம்யுக்தா வெடவெடத்து போனாள். “ப்பா” என்று சம்யுக்தா கண்கள் கலங்க திக்கினாள். “நாந்தான் அவளை வற்புறுத்தி அவளோட வந்தேன்” என்று போனை பிடுங்கி சொன்னான் சர்வாச்சார்யா. குருமூர்த்தி உடனே செயல்பட்டாக வேண்டும். “இப்போ எதையும் நான் பேச விரும்பலை. உடனே நான் சொல்ற இடத்துக்கு நீங்க இப்போ போயாகணும்” என்றார் குருமூர்த்தி உத்தரவாக. “நான் எடுக்க வேண்டியதை எடுத்திட்டு, போயிடுறேன்” என்றான் சர்வாச்சார்யா. “டேய் தம்பி. உனக்கு புரியுதா இல்லையாடா? உங்களுக்கு அங்க பாதுகாப்பு இல்லை” என்ற குருமூர்த்தி காரை வேகமாக விமான நிலையம் நோக்கி செலுத்தினார். “ப்ளீஸ். நான் சீக்கிரம் தேடி எடுத்துட்டு கிளம்பிடுறேன். சம்யுக்தா என் பொறுப்பு” “உனக்கு நான் பொறுப்பு எடுத்திருக்கேன்டா” என்று குருமூர்த்தி கத்தியதை கேட்க அவன் அழைப்பில் இல்லை.