ஆதியும் நீயே..அந்தமும் நீயே 10 2989 10 அன்று காலையில் தந்தை தனது அறைக்கு வரசொல்லவும் சாவகாசமாகவே அவரின் அறைக்கதவை தட்டினான்.. “உள்ளே வா கவின்” என்ற தந்தையின் குரலை தொடர்ந்து உள்ளே சென்றவனுக்கு விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.அங்கு குடும்பத்தில் ஏன் கருண் உட்பட அனைவரும் அமர்ந்து இருக்க கண்டதும் மண்டைக்குள் மணி அடித்தாலும் நிதானமாகவே சென்று கருண் சிந்துவிற்கு நடுவில் சென்று அமர்ந்தான்.. கவின் அவ்வாறு வந்து அமர்ந்தவுடன் பெரியவர்கள் ஒருவர் ஒருவரை பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்.சிறுவயதில் இருந்தே கவினுக்கு பொறுப்பான குணம்.கருணையும் சிந்துவையும் எப்பொழுதும் தன்னுடனே இருக்கவேண்டும் என்பான்.அவனின் தாய் “ஏன்டா?” என்று கேட்டால் “அம்மா..கருண் சிந்துவுக்கு ஒன்றுமே தெரியாது..அவங்க நான் இல்லாம சமாளிக்க மாட்டாங்க” என்பான். இப்பொழுது கூட அவர்களை பாதுகாப்பது போல் நடுவில் அமர்ந்து பிரச்சனையை தன்னை நோக்கி திருப்பியவனை பார்த்து புன்னகை மலர்ந்தாலும் கதைக்க வேண்டிய விடயங்கள் இருப்பதால் மனோகர் தான் பேச்சை தொடக்கி வைத்தார்.. “எல்லாரும் ஏன் இங்க அமர்ந்து இருக்கோம் நு குழப்பமா இருக்கா கவின்?” “இல்ல அப்பா..எனக்குள்ள ஒரு கெஸ் இருக்கு..அதுக்காக தான் வர சொல்லி இருப்பீங்க நு நினைக்கிறேன்..இருந்தாலும் நீங்க சொல்லுங்க“ என்றவுடன் தலை அசைத்தவர் “நாங்க கூட்டுகுடும்பமா வாழ்ந்தாலும் எங்க எங்க பிள்ளைங்க என்று உங்களை எப்போவுமே பிரிச்சு பார்த்தது இல்ல..அதோட ஒரு நாளுமே உங்க விருப்பங்களை தடை செய்ய யோசிச்சதும் இல்ல.அதே போல தான் கருணோட காதலும்..கவின் நீ தான் எங்களுக்கு கருண்–பாவனா பத்தி சொன்ன..என்னை பொறுத்த வரைக்கும் ஆதிராவே முக்கியமான காரணம் நான் சம்மதம் சொல்ல.” கவின் புருவம் சுருக்கவும் தடுமாறியவர் “எனக்கு அவங்களோட எந்த பின்னணியும் தெரியாது..ஆனா மூன்று வருஷமா ஆதிராவை நான் நம்ம ஸ்கூல்ல பார்த்திருக்கேன்..அவ்வளவு நல்ல பொண்ணு..அவங்க குடும்பம் தப்ப இருக்காது என்ற நம்பிக்கை தான்” என்று விட்டு மகாதேவனுடைய முகத்தை ஏறிட்டார்.. உடனே மகாதேவன் தொண்டையை செறுமவும் அவர் புறமாக கவினின் பார்வை திரும்பியது “கருண்..பாவனா உனக்காக தற்கொலைக்கு முயன்று இருக்கா..நீ எப்போ அவளை காதலிக்கிற என்று சொன்னியோ அப்போல இருந்து அவ இந்த வீட்டு மருமக தான்..ஆனா உங்க திருமணத்தை தள்ளி போட போட பாவனாவை அக்கம்பக்கத்தில இருக்கிறவங்க தப்பா கதைக்கவும் வாய்ப்பு இருக்கு..அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்க திருமணத்தை முடிக்கனும்“ என்று அவர் கூறி முடிக்கவும் சட்டென்று எழுந்த கருண் “மாமா அப்பா அம் சாரி.ஆதிக்கொரு நல்ல வாழ்க்கை அமைச்ச பிறகு தான் என் திருமணம் என்று முடிவெடுத்திருக்கேன்..தயவு செய்து என்னை வற்புறுத்தாதீங்க” என்று கூறி விடுவிடுவென வெளியேறியவனை வருத்தமாக நோக்கி விட்டு “என்னடா கவின் நடக்குது இங்க..அவன் முகத்தை என்னால பார்க்க முடியல..எதையோ இழந்த மாதிரி இருக்கான்..கேட்டா ஒன்றுமில்லை அத்தை என்கிறான்.புள்ள ஒழுங்கா சாப்பிட்டே நிறைய நாள் ஆகுது..என்ன நிர்வாகம் செய்ய தெரிஞ்சு என்ன?அவனோட கஷ்டத்தை போக்க முடியல உன்னால” என்று ஆற்றாமையில் லக்ஷ்மி புலம்பவும் “அண்ணி அவன் கொழுப்பெடுத்து திரியுறதுக்கு கவின் பாவம் என்ன பண்ணுவான்? கவின் நீ யோசிக்காத..அவன் எக்கேடோ கெட்டு போகட்டும்“ “சுமதி” “பின்ன என்னங்க..இப்படி முகத்தில அடிச்சமாதிரி சொல்லிட்டு போறான்..எங்க இருந்து வந்திச்சு இவ்வளவு திமிர் அவன் கிட்ட? எனக்கு இப்போவே அந்த பாவனா பொண்ண பிடிக்கல..எப்போ அவளை பார்த்தானோ அப்போல இருந்து பிரச்சனை தான்” என்று புலம்பவும் “சுமதி” என்று மனோகர் அதட்டினார்.. “இங்க பாரு சுமதி உனக்கும் ஒரு பொண்ணு இருக்கா..அந்த இடத்தில பாவனாவை வைச்சு பாரு இப்படி கதைக்க உன்னால முடியாது..யாரோ ஒருத்தி அவ எங்கிற நினைப்பை முதல்ல விடு..” என்றூ மனோகர் அழுத்தி கூறவும் அரைமனதாக தலையாட்டினார்.. அதுவரை அவர்கள் பேச்சில் தலையிடாமல் இருந்த கவின் தொண்டையை செறுமியாவாறே “அப்பா,அம்மா,மாமா,அத்தை எல்லாரும் முதல் ஒன்றை புரிஞ்சு கொள்ளுங்க..அவனுக்கு வேண்டியதை நாம எப்போவுமே திணிக்க கூடாது..திணிக்கவும் முடியாது..அவன் பூரண மனதோட திருமணம் செய்தா தான் அவன் வாழ்க்கை நல்லா இருக்கும்..நானும் நிறைய தரம் கதைச்சு பார்த்தாச்சு..ஒன்றும் சரி வரல..இந்த பிரச்சனையை என் கிட்ட விடுங்க..நிச்சயமா நீங்க சொன்ன மாதிரியே கூடிய சீக்கிரம் பாவனாவோட கழுத்தில கருண் தாலி கட்டுவான்” என்று கூறிவிட்டு ஒரு பொதுவான தலை அசைப்புடன் வெளியே வந்தான்.. வெளியில் வந்தவன் கீழே செல்ல படிகளில் காலை பதிக்கவும் “கவின் அண்ணா” என்று அழைத்த படி சிந்து பின்னாலேயே ஓடி வந்தாள்..அவள் அழைக்கவும் திரும்பி புன்னகைத்தவன் “என்னடா?” என்று கேட்க “என்ன அண்ணா இது..பாவனா அண்ணி சீக்கிரமா இங்க வருவாங்க என்று பார்த்தால்..இது இப்படி இழுபறியா கிடக்குது” என்று சோகமாக இழுக்கவும் புன்னகைத்தவன் “என்னடா பண்ணுறது..உங்க அண்ணன்,பாவனா எல்லோருமே ஆதிரா கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று சொல்றாங்க..அதுவும் பாவனா ஆதிரா கூடவே இருக்க போறேன் என்றா…என்ன செய்யட்டும்?” என்று கூறவும் “அண்ணா ஒன்று கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே?” என்று பீடிகை போட்டவளை விநோதமாக நோக்கினான்.. “ஏன் கவின் அண்ணா நீங்க யாரையும் காதலிக்கிறீங்களா?” “அடி கழுதை“ “ப்ளீஸ் ணா..சொல்லுங்கவேன்“ “ஹூஹூம்..இல்லடா..எனக்கு நிறைய லட்சியம் இருக்கு..கல்யாணம் குழந்தை குட்டிலாம் நினைச்சே பார்க்க முடியாது” என்று கூறியவனிடம் இருந்து இரண்டடி பின்னோக்கி சென்றவள் “அப்போ..அப்போ..” “அப்போ?” “ஆதிரா அக்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்குங்க” என்று கூறியவாறு சிரித்தவள் “அடிங்க“என்றவாறு கையை ஓங்கியபடி தன்னை நெருங்கியவனிடம் இருந்து தப்பித்து கீழே ஓடினாள்.. அறையில் இருந்தபடி நடந்த அனைத்தையும் யோசித்து கொண்டு இருந்தவன் அறைக்கதவை யாரோ தட்டவும் சலிப்பாக “யெஸ்..கம் இன்” என்றான்.. அங்கு நின்ற அவனது செக்ரட்டரி விக்ரம் “சார்..உங்களை பார்க்க ஒரு மேடம் வந்து இருக்காங்க” என்று சொல்லவும் கூறியவனை முறைத்தவன் “என்னை கொஞ்ச நேரம் தனிய விட சொன்னேனா இல்லையா” என்று உறுமினான்.. “யெஸ் ஸர்..பட் அவங்க ரொம்ப ரிக்குவெஸ்ட் பண்ணி கேட்டாங்க..தன்னோட பெயர் ஆதிரா..நீங்க அவர் கிட்ட சொல்லுங்க..கண்டிப்பா திருப்பி அனுப்ப மாட்டார் என்று சொன்னாங்க“ என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தவன் “வாட்..கம்..கம் எகெய்ன்..ஆதிரா வா?’ என்று ஆச்சர்யமாக கேட்டவனை அவனை விட ஆச்சர்யமாக நோக்கியவன் “யெஸ் ஸர்” என்றான்.. முகம் மென்மையாக மாறி புன்னகையை தத்தெடுக்க “கோ கோ..உடனே அவங்களை உள்ள அனுப்பு” என்று பட படத்தவனுக்கு ஒரு தலையாட்டலையே பதிலாக தந்து அவனது அந்த முகத்தை திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்றான்.. உள்ளே வந்த ஆதிரா தன்னையே ஆச்சர்யமாக பார்த்த கவினை பார்த்து புருவம் தூக்கியபடி அவன் அமர சொல்லி கைகாட்டிய இருக்கையில் நன்றி கூறி அமர்ந்தாள். “ரொம்ப தாங்க்ஸ்“ “எதுக்கு?” “உள்ள விட மாட்டிங்களோ என்று பயந்தே போனேன்“ “ஓஓ..பெருசா ஒன்றும் இல்ல..ஜஸ்ட் தலை வலி“ “ம்ம்” அதற்கு பிறகு அங்கே வார்த்தைகளுக்கு பஞ்சமாகி போக என்னவென்று தமது நிலையை விவரிப்பது என்று தெரியாமல் குழம்பியபடி ஒவ்வொரு இடமாக தத்தமது பார்வையை பதியவிட்டு கொண்டிருந்தவர்கள் ஒரு கணம் நேர்கோட்டில் பார்வைகளை கலக்க விட்டனர். அது தான் சமயம் என்று எண்ணிய இருவருமே “அது வந்து“ “ஆதிரா” என்று தொடங்கவும் தத்தமது பேச்சுக்களை நிறுத்தி விட்டு முழித்துக்கொண்டு இருந்தனர்.. ஒரு கட்டத்தில் அடக்கமுடியாமல் இருவரும் சிரித்துவிட்டு பின்னர் அதற்கும் சேர்த்து சங்கடப்பட்டனர்..பின்னர் ஆதிராவே “கவின் சார்..நான் பாவனா கல்யாண விஷயமா கொஞ்சம் பேச வந்திருக்கேன்” என்றவுடன் தலை அசைத்த கவின் “நானும் அது விஷயமா உன் கூட பேசனும்” என்று கூறினான்..பேசவேண்டும் என்று கூறி விட்டாளே தவிர எப்படி அதை தொடங்குவது என்று மிகுந்த தயக்கமாக இருந்தது ஆதிராவிற்கு “கவின் சார்..அ..அது ..அதுவந்து..பாவனாவிடம் நான் எவ்வளவோ பேசி பார்த்து விட்டேன்..அவள் தன் முடிவிலிருந்து அசைவதாக இல்லை” என்று இழுத்து பிடித்த மூச்சுடன் கூறிமுடிக்கவும் “ஓஹ்” என்று கூறி தன் கதிரையில் நன்கு சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டான்.. ‘என்னடா இது?ஒன்றுமே சொல்லாம இருக்கிறார்? ஒருவேளை திட்டுறதுக்கு வார்த்தை தேடுறாரா‘ என்று எண்ணியவாறே “சார்” என்று மெதுவாக அவள் விழிக்கவும் விழிகளை திறந்து கேள்வியாக நோக்கினான். “இல்லை..ஒன்றுமே சொல்லலயே” என்றவுடன் தலை அசைத்தவன் “இல்ல ஆதிரா எங்க வீட்டயும் இப்போ ஒரே ப்ரொப்ளமா இருக்கு” என்று கருணின் நடவடிக்கைகளையும் காலையில் நடந்த உரையாடலையும் கூறியவன் “என்ன பண்றது என்றே தெரியல” என்று கூறிமுடித்துவிட்டு ஆதிராவை நோக்கினான்.. அவன் கூறியதை கேட்டவள் சோர்வாக “இதுக்கு என்ன முடிவு என்றே தெரியலயே? என்னால அவங்க கல்யாணம் நிற்கிறத என்னால ஒத்துக்கொள்ளவே முடியல சார்” என்று கூறினாள்.. “முடிவு” என்ற வார்த்தையிலேயே கவினின் மூளையில் சிந்து கூறிய முடிவு ஒலிக்கவும் விழிகளை மூடி ஒரு நிமிடம் யோசித்தான்.. பின்னர் விழிகளை திறந்து ஆழ ஆதிராவை ஊடுருவியவன் ‘இவள் என்ன கூறுவாளோ என்று தெரியவில்லையே‘ என்று நினைத்தவாறே எழுந்து ஆதிராவின் பக்கமாக சென்று மேசையில் சாய்ந்து நின்றவாறே “ஆதிரா” என்று இழுத்தான். அவன் ஏதோ தன்னிடம் கூறவிழைவதை உணர்ந்து கொண்டவள் “என்ன சார்?” “அது வந்து..கருணும் சரி பாவனாவும் சரி உங்களுடைய திருமணத்தை தான் பகடைக்காயா வைச்சு இந்த விளையாட்டை தொடங்கி இருக்காங்க..அவங்க வாழ்க்கைக்காக உங்க வாழ்க்கையை பணயம் வைக்கிறது எந்த விதத்திலயும் நியாயம் இல்லை தான். பட்..ஏன் உங்களுக்கு திருமணத்துல விருப்பம் இல்லை என்று தெரிஞ்சுக்கலாமா?” என்று வினவினான்.. ஆதிரா அண்ணாந்து அவனை பார்க்கவும் “இல்ல..உங்க பழைய வாழ்க்கையை மறக்க முடியாமலா” என்று கவின் இழுக்கவும் ஆழ மூச்சை இழுத்துவிட்டவள் “ஆமா சார்..என்னோட பழைய வாழ்க்கையால தான்..அதோட எனக்கு கணவன் என்ற உறவை ஏற்றுக்கொள்ள முடியாது..ஸ்ரீ மட்டும் தான் என் வாழ்க்கையா இருப்பா..இருக்கணும்” என்றாள். “சரி..அப்போ நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அவன் சடுதியாக கூறவும் விழிகளை விரித்து அதிர்ந்து கவினை நோக்கியவள் “என்..என்னது?” என்று வினவவும் “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அழுத்தி ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தவனை கனல் பார்வை பார்த்தான். ‘லூஸா இவன்‘ என்றது போல ஒரு கோபமான பார்வையுடன் எழுந்தவள் “நான் வரேன்” என்று கூறி எழுந்து செல்ல போனவளை சென்று மறிப்பது போல நினறவன் “நீ இன்னும் பதிலை கூறல.எனக்கு பதில் சொல்லாம இங்க இருந்து ஒரு அடி எடுத்து வைக்க முடியாது” என்று கூறும் போது பழைய கவின் திரும்பி இருந்ததை கண்டாள்.. “என்ன? என்ன பதில் வேணும் மிஸ்டர்?” என்று கேட்கும் போது பழைய ஆதிராவை கவினும் கண்டான். “இங்க பாரு நம்ம கல்யாணம் பண்ணிக்கிறது தான் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு“ “என்ன மண்ணாங்கட்டி தீர்வு..இந்த எண்ணம் எவ்வளவு நாளா உங்க மனசுல இருக்கு? ச்சே என்ன மனுஷர் நீங்க? ஒரு குழந்தைக்கு தாய் என்ற எண்ணம் கூட இல்லாம” என்று மேலும் ஏதோ கூறவந்தவளை கைகாட்டி மறித்தவன் “ பெரிய மைசூர் மகாராணி..இவங்களோட ஜோடி சேரத்தான் இங்க லைன்ல நிற்கிறாங்க” என்று நக்கலாக கூறவும் கோவத்துடன் முகம் திருப்பினாள்.. “ஏய் இந்த முகம் திருப்புற வேலையெல்லாம் இங்க வேணாம்..இந்த பிரச்சனை தீரத்தான் உன்ன போல ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன்..இல்லனா உன்ன போல ஒருத்தியோட ஜோடி சேர நான் என்ன லூஸா? என்ன முறைப்பு? இங்க பாரு..உன்னை பொறுத்தவரைக்கும் இன்னொரு வாழ்க்கை தேவையில்லை..என்னை பொறுத்தவரைக்கும் திருமணமே தேவையில்லை..நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணா நம்ம வாழ்க்கையில கணவன் – மனைவி என்ற உறவை தவிர வேற எந்த மாற்றமும் வரபோறதில்லை.. அப்பிடி இருக்கிறப்போ உனக்கு இதுல என்ன பிரச்சனை..ஜஸ்ட் ஒரு அக்ரிமன்ட் போல தான் இதுவும்..இவ்வளவு தான் நான் சொல்ல இருக்கு..இனி உன்னோட முடிவு தான்..ஆறுதலா யோசிச்சு முடிவை சொல்லு..இப்போ நீ போகலாம்” என்று கூறி ஒதுங்கியவனை மறுபடியும் முறைத்தவாறே புயல் போல வெளியேறினாள்.. அவளின் வேகத்திலேயே அவளது கோபம் உணர்ந்தாலும் வேறு வழி இல்லையே என்பதாக தோளை குலுக்கிய படி தனது இருக்கையில் சென்று அமர்ந்தான் கவின் சக்கரவர்த்தி.. “என்னை பத்தி என்னதான் நினைச்சு கொண்டிருக்கான்? கல்யாணம் பண்ணிக்கலாமாவாம்.. கேட்ட மூஞ்சியிலயே ஓங்கி ஒன்று போட்டிருக்கனும்“ “என்னை கல்யாணம் பண்ண அவன் ஏதோ பெரிய தியாகி போல கதைக்கிறான்“ “எல்லாம் என்னைய சொல்லனும்“ “போயும் போயும் அவனோட பேசலாம் என்று போனேன் ல..நான் ஒரு மட்டி ..மடச்சி“ “மனோகர் சாரோட கதைச்சு இருக்கலாம்“ “பெரிய இவன்..இனி ஏதும் கதைக்கட்டும் இருக்கு அவனுக்கு“ போகும் வழி முழுவதும் புலம்பிக்கொண்டு போனவளை சிலர் அய்யோ பாவம் என்று பார்த்தனர்..சிலரோ கிண்டலாக பார்த்தனர்..ஆனால் ஆதிராவோ யாரையுமே பார்க்கவில்லை..விடு விடுவென வீட்டை நோக்கி நடந்தவளின் மனம் முழுவதும் கவின் கூறியவையே நிறைந்து இருந்தது.. வீட்டுக்கு வந்து சேர்ந்த பின்பும் கூட அவளின் கோவம் அடங்கவில்லை.கிட்சனுக்குள் சென்றவள் ஃப்ரிஜ்ஜை திறந்து தண்ணீர் போத்தலை அப்படியே வாயினுள் சரித்தாள். அந்த குளிர்ந்த நீர் சற்று அவளது உள்ளக்கொந்தளிப்பை அடக்கியது போல தோன்றவும் வாயை புடவை முந்தானையால் துடைத்தபடி ஹாலினுள் நுழைந்தவள் பாவனாவின் அறையில் இருந்து அவளின் குரல் கேட்கவும் சத்தம் எழுப்பாது மெல்ல அவள் அறையை நோக்கி நடந்தாள். “கருண் என் மேல கோவமா இருக்கிங்களா?” “நான் கேட்ட ஒரே ஒரு வாக்கிற்கு கட்டுப்பட்டு என் கூட பேசாமல் இருக்கிங்களா?” “நான் லூஸு தானே“ “ஆனாலும் என்னை புரிஞ்சுக்கிட்டதுக்கு தாங்க்ஸ் பா“ “நீங்க எனக்கு கிடைப்பிங்களா?” என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவள் “ஆதிரா அண்ணீயா என் வாழ்க்கையா என்று வரும் போது நிச்சயம் என்னால என் வாழ்க்கை தான் என்று முடிவு எடுக்க முடியாது கருண்“ “நீங்க வேறு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க“ “நான் வேணாம் உங்களுக்கு“ “ஆனாலும்..ஆனாலும்..என்னால வேற திருமணம் ஹூஹூம்..நினைச்சே பார்க்க முடியாது“ “ஐ..ஐ..லவ் யு கருண்” என்று கூறி கையில் தனது போனில் புன்னகைத்து கொண்டிருந்த கருணின் முகத்தில் தன் முகத்தை புதைத்தாள்.. அதுவரை பாவனாவின் பேச்சுக்களை அவளது வேதனைகளை மௌனமாக கேட்டு கொண்டிருந்த ஆதிரா சிலையென நடந்து சென்று ஹாலில் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த டைனிங் டேபிளின் கதிரையில் அமர்ந்தாள். இது சாதாரணமான பிரச்சனை அல்ல ..பிரம்மாண்டமாக உருவாகி பாவனாவின் வாழ்க்கையையே அழிக்க கூடியது என்று இப்பொழுது விளங்கியது.