அடங்காத நாடோடி காற்றல்லவோ 10 1 13596 அடங்காத நாடோடி காற்றல்லவோ 10 “இன்னைக்கும் வீட்டுக்கு வரலையா மகா நீ..?” கங்கா போன் செய்து மகளிடம் கேட்டார். “இல்லைம்மா.. சின்னு கூடவே இருக்கேனே, இங்க அத்தையும் யாரும் இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க..” மகா சொல்ல, அந்த பக்கம் கங்காவிற்கு என்ன நினைக்க என்றே தெரியவில்லை. “இங்க நானும் தாண்டி தனியா இருக்கேன்..” மகளிடம் கத்த தோன்றியது. மகளும் இல்லை, மகன் ஈஷ்வர் வீட்டிற்கே வருவதில்லை, நரசிம்மன் வீட்டில் இருந்தாலே அபூர்வம், இவர் மட்டும் தான் வீட்டில். “என்னை பத்தி யாருக்கு என்ன அக்கறை இருக்க போகுது, விடு கங்கா இது உனக்கு என்ன புதுசா..?” அமைதியாகி போனை வைத்துவிட்டார். “ம்மா..” மகா இங்கு கூப்பிட, கங்கா தான் வைத்துவிட்டாரே. “போன்ல யாரு மகா அண்ணியா..?” துர்கா கேட்க, “ஆமாத்தை..” என்ற மகாவிற்கு அம்மா போனை வைத்தது குற்ற உணர்ச்சியை கொடுத்தது. “என்ன மகா நீ அங்க அவங்களும் தானே தனியா இருக்காங்க..” தன்னை தானே கடிந்து கொண்டாள். “வீட்டுக்கு வர சொல்லி கேட்டாங்களா..?” துர்கா இவள் முகம் பார்த்து கேட்டார். ஆமாம் என்று தலையாட்டிய மகாவிற்கு இப்போது என்ன செய்ய என்று தெரியவில்லை. துர்காவிடம் இங்கு தங்குகிறேன் என்று சொல்லியாகிவிட்டது. அவரும் கங்கா போல தான் தனிமையில் தான் இருக்கிறார். ஹாஸ்பிடல்க்கு எமெர்ஜென்சி என்றால் மட்டும் தான் செல்கிறார். மீதி நேரம் எல்லாம் சின்னுவுடன் தான். இனியும் மகனை யாரை நம்பி ஒப்படைப்பதில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டார். முழுதும் பாதிக்கப்பட்டது சின்னு தானே. காலம் கடந்த ஞானதோயம் தான். ஆனால் அவ்வளவு காலம் கடந்துவிடவில்லை. மகன் கோமாவில் இருக்கும் போது அவனுடைய பாதிக்கபட்ட உடல் உறுப்புகளை வலிமை படுத்தும் முயற்ச்சியில் இறங்கிவிட்டார். அதற்கு தான் அவருக்கு மகாவின் உதவி தேவைப்பட்டது. முழு நேரமும் அவரால் மகன் உடன் இருக்க முடியவதில்லை. அப்படி இல்லா நேரங்களில் மகா தான் சின்னுவுடன் இருந்து அவனை பார்த்து கொள்கிறாள். விஷ்ணு படுக்கையில் இருக்கும் தம்பி முகம் பார்க்கவே அஞ்சி ஓடுகிறான். சக்ரவர்த்திக்கோ இருபத்தி நான்கு மணி நேரமும் கடமை அழைக்க, அவரால் வீட்டில் இருக்க முடிவதில்லை. இருக்கும் சில மணி நேரங்களும் தூக்கத்திற்கும், சின்னு முகம் பார்ப்பதற்குமே சரியாக இருக்கும். அதனாலே மகா தன்னால் முடிந்தவரை துர்கா, சின்னுவுடன் இருக்கிறாள். காலேஜிற்கும் இங்கிருந்து சென்றுவிடுகிறாள். அதில் கங்காவிற்கு மனத்தாங்கல் இல்லாமல் இல்லை. என்ன இருந்தாலும் அம்மா ஆயிற்றே. மகாவிற்கும் அம்மா நிலை புரிய முகம் வாடி விட்டது. இவளின் வாடிய முகம் பார்த்த துர்கா என்ன நினைத்தாரோ அவர் போன் எடுத்து கங்காவிற்கு அழைத்துவிட்டார். “சொல்லுங்கண்ணி..” கங்கா எடுக்கவும், “நல்லா இருக்கீங்களாண்ணி..” என்று இருவரும் பொதுவாக நலம் விசாரித்து முடித்தனர். “அப்பறம் அண்ணி வீட்டுக்கு வரீங்களா..? நைட் இங்க தங்கலாம்.. ரொம்ப நாள் ஆச்சு நீங்க இங்க தங்கி, சின்னு பர்த் டேக்கு கூட வந்து போயிட்டிங்க..” துர்கா கூப்பிட, “என்ன மகா சொன்னாளா..?” கேட்டார் கங்கா. “ஏன் அண்ணி உங்களை வீட்டுக்கு கூப்பிட மகா எனக்கு சொல்லணுமா..? நானே தான் கூப்பிடுறேன்.. வாங்கண்ணி..” என, கங்காவிற்கும் இடமாற்றம் தேவைப்பட்டது. வரேன்.. என்றவர், நரசிம்மனுக்கு தகவல் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். சக்கரவர்த்தி போன் செய்து ஏதோ பேச வேண்டும் என்று சொல்லியிருக்க, நரசிம்மனும் நேராக அங்கு சென்றுவிட்டார். அவருக்கும் அவரிடம் பேச வேண்டும். நெடு நாட்கள் கழித்து ஒன்று கூடினர். அந்நேரத்தில் வீட்டின் மூத்த பிள்ளைகள் ஞாபகம் வராமல் இல்லை. ஆனால் கூப்பிட்டாலும் வர மாட்டார்களே. பெருமூச்சுடன் அம்மாக்கள் இரவு உணவு எடுத்து வைத்தனர். கங்கா போன் செய்து விஷ்ணு வீட்டில் சமைப்பவரிடம் என்ன டின்னர் என்று கேட்டு கொண்டார். பிள்ளைகள் இருவரும் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்று தெரிய, அம்மாவாக கவலை கொண்டார். அதிலும் இப்போதெல்லாம் இருவரும் பாருக்கு செல்வது அவ்வளவு வேதனையை கொடுத்தது. அம்மாவாக கண்டிக்க கூட முடியாத நிலை. “மகன் நின்று பேசினால் தானே..? என்னவோ செய்யட்டும்..? என் கடமை நான் வளர்த்துவிட்டேன், அப்பறம் அவங்க பாடு..” மனதை இப்படி தான் தேற்றி கொண்டிருக்கிறார் அவர். “என்ன ஆச்சுண்ணி..?” அவர் வதங்கிய முகம் பார்த்து துர்கா கேட்க, “எனக்கென்ன கவலை இருக்க போகுது அண்ணி இவனுங்களை தவிர.. இன்னும் வீட்டுக்கு வரலையாம்..” என்றார். “ஈஷ்வர், விஷ்ணு இப்படி மாறுவாங்கன்னு நினைக்கல அண்ணி, ரெண்டு பேரும் ரொம்ப ஸ்ட்ராங்ன்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா இவ்வளவு சீக்கிரம் இப்படி உடைவாங்கன்னு தெரியல..” அவரும் வேதனைபட, கேட்டு கொண்டிருந்த மகாவிற்கு தான் இருவர் மீதும் கொதித்து கொண்டு வந்தது. “அவங்க அங்க ஜாலியா தண்ணி அடிச்சி சுத்திட்டு இருக்காங்க, நீங்க தான் அவங்களை நினைச்சு அழுதுட்டு இருக்கீங்க..” கோபத்துடன் இருவரிடமும் பொரிந்தவள், சக்கரவர்த்தி தண்ணீர் கேட்க எடுத்து சென்றாள். அவர் வாங்கி குடித்தவர், “மகா கொஞ்சம் உட்காரும்மா.. உன்கிட்ட பேசணும்..” என, மகா அவரை கேள்வியாக பார்த்து அமர, துர்கா, கங்கா இருவரையும் வர சொன்னார். நரசிம்மன் முகம் சுருங்கி அமர்ந்திருக்க, பெண்கள் மூவரும் கேள்வியுடன் பார்த்தனர். “அது உங்களுக்கு குமரேசன் தெரியுமில்லை, என்னோட ஒன்னுவிட்ட அண்ணா, அவர் இன்னைக்கு போன் பண்ணியிருந்தார், அவர் மகனுக்கு வரன் பார்த்துட்டு இருக்காராம், மாப்பிள்ளை பையன் சிவில் எஞ்சியனிரிங் முடிச்சிட்டு சொந்தமா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சிருக்கான், அவனுக்கு தான் மகாவை கேட்கிறார்..” என, பெண்கள் மூவருக்குமே பிடிக்கவில்லை. “அண்ணா நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியுதா..?” கங்கா கேட்டேவிட்டார். “ஏம்மா உனக்கு இந்த வரன் பிடிக்கலையா..?” சக்கரவர்த்தி கேட்க, “என்னங்க.. போதும் நிறுத்துங்க, என் வீட்டு மகாலக்ஷ்மியை போய் இன்னொரு வீட்டுக்கு அனுப்ப பார்க்கிறீங்க..? அவங்களுக்கும் தெரியாதா விஷ்ணுக்கு தான் மகான்னு..” துர்கா சண்டைக்கு நின்றார். “துர்கா.. அவர் சொன்னதை நான் உங்ககிட்ட சொல்றேன் அவ்வளவு தான்.. அதோட விஷ்ணு இப்போ இருக்கிற நிலைமைக்கு நாம மகாவை அவனுக்கு கேட்க முடியுமா..?” சக்கரவர்த்தி வருத்தத்துடன் சொன்னார். “மாமா.. விஷ்ணு எப்படி இருந்தாலும் என் மருமகன் தான், இந்த பேச்சை விடுங்க..” நரசிம்மன் இடையிட்டு உறுதியாக சொன்னார். “மச்சான்.. எனக்கும் மகா என் வீட்டு மருமகளா வரணும்ன்னு கொள்ளை ஆசை தான், ஆனா என் மகன் நேரத்துக்கு ஒரு அவதாரம் எடுக்கிறான், அவன் எப்போ எப்படி இருப்பான்னு தெரியாம அவனுக்கு எப்படி மகாவை கொடுக்க..?” “அதெல்லாம் சின்னு சரியானா மாறிடுவான்..” துர்கா இடையிட்டார். “துர்கா.. இது நம்ம வீட்டு பொண்ணு வாழ்க்கை, நம்ம சுயநலத்துக்காக அவ வாழ்க்கையை பணயம் வைக்க கூடாது..” கண்டிப்புடன் அதட்டினார். “அப்போ மகா மேல எனக்கு அக்கறை இல்லை சொல்றீங்களா..? என் அண்ணன் பொண்ணு அவ, எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரத்தம், என் ரத்தம் கஷ்டப்பட நான் விட்டுருவேனா..?” “நீயா அவளை கட்டிக்க போற..?” “என்னங்க பேசுறீங்க..” துர்கா விடாமல் பேச, நரசிம்மன், கங்கா, மகா மூவரும் அமைதியாக பார்த்திருந்தனர். அதிலும் மகா என்ன நினைக்கிறாள் என்றே தெரியவில்லை. “துர்கா.. போதும், மச்சான் நீங்க சொல்லுங்க..” கேட்டார் அவரிடம். மகனை பெற்றவர் இப்படி கேட்கும் போது நரசிம்மனுக்கு என்ன சொல்ல முடியும், அதுவும் விஷ்ணு தான் என் மருமகன் சொல்லியும் கேட்கிறார் என்றால் அப்பாவாக கோவம் வராமல் இல்லை. மனைவியை பார்க்க, அவரும் அதே கோபத்துடன் தான் நின்றிருந்தார். “மகா, ஈஷ்வர் கிட்ட கேட்டு சொல்றேன் மாமா..” என்றுவிட்டார். மகா.. என்று சக்கரவர்த்தி அவளை பார்க்க, அவள் வேகமாக எழுந்து சின்னு ரூமிற்கு சென்றுவிட்டாள். “சரி விடுங்க நான் ஈஷ்வர்கிட்ட பேசுறேன்..” என்றவர் போன் எடுத்து அவனுக்கு அழைத்தார். அப்போது தான் ஈஷ்வர், விஷ்ணு, சுப்ரமணி மூவரும் பாரிற்குள் நுழைந்திருந்தனர். ஈஷ்வர் முகம் யோசனைக்கு சென்றது. அவர்களின் ரகசிய நம்பர் இல்லை இது. பெர்சனல் நம்பரில் இருந்து ஏன் கூப்பிடுறார்.. இவர்களின் போன் கால்கள் எல்லாம் கண்காணிக்க படும் என்று தான் பிரைவேட் நம்பர் ரகசியமாக பயன் படுத்தி கொண்டிருக்கின்றனர். இதில் இருந்து கூப்பிடுகிறார் என்றால் யாருக்கு என்ன..? சின்னு.. நினைத்த நொடி உடனே கால் எடுத்தவன், “எல்லாம் ஓகே தானே மாமா..?” கேட்டான். “எல்லாம் நல்லா இருக்கோம் ஈஷ்வர், நான் கூப்பிட்டது மகா கல்யாண விஷயம் பேச..” என்றார். “மகா கல்யாண விஷயமா..?” ஈஷ்வர் புரியாமல் சத்தமாக கேட்க, பக்கத்தில் இருந்த விஷ்ணு புருவம் சுருங்கியது. “ஆமா ஈஷ்வர்.. குமரேசன் மகனுக்கு..” என்று முழு தகவலும் சொன்னார். விஷ்ணு இருக்க அவன் தங்கைக்கு வேறு மாப்பிள்ளையா..? நினைக்க கூட பிடிக்கவில்லை. “வீட்ல பேசினீங்களா மாமா..?” ஈஷ்வர் கேட்டான். “உன்கிட்ட, மகாகிட்ட கேட்கனும் சொன்னார் மாமா, எல்லாம் இங்க தான் இருக்கோம்..” என்றார். “ஓஹ்.. மகா என்ன சொன்னா..?” “எதுவும் சொல்லலை ஈஷ்வர், அமைதியா சின்னு ரூம் போயிட்டா..” என, இங்கு ஈஷ்வர்க்கு முகம் இலகுவானது. அன்று விஷ்ணு அவளை அணைத்து நின்ற போது இவனை பார்த்து பயந்த தங்கை முகம் நினைவிற்கு வந்தது. “ஈஷ்வர்.. மகாக்கு நல்ல பொருத்தமான வரன், யோசிக்காம கொடுக்கலாம், உன் ப்ரண்ட் மாதிரி இல்லை மாப்பிள்ளை.. நாளுக்கொரு கோலமா..” அவர் பேசி கொண்டே போக, ஈஷ்வர்க்கு அவர் மனம் புரிந்தது. முகத்தில் லேசான சிரிப்பும். திரும்பி விஷ்ணுவை பார்க்க, அவன் எதிரில் இருந்த பாட்டிலை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். “நீங்க மாப்பிள்ளை டீடைல்ஸ் அனுப்புங்க எனக்கு..” என்று வைத்துவிட்டான். “என்னவாம் கமிஷனருக்கு..?” விஷ்ணு ஆர்வம் இல்லாதவன் போல கேட்டான். உனக்கு சொல்லாமலா மாப்பிள்ளை.. மனதில் நினைத்து குறும்பாக சிரித்த ஈஷ்வர், “மகாக்கு வரன் வந்திருக்காம், மாப்பிள்ளை பிஸ்னஸ் மேக்னெட், டீடோட்லர், ரெண்டு பேருக்கும் அவ்வளவு பொருத்தமா இருக்குமாம்..” “உனக்கு கூட தெரியும் உங்க குமரேசன் பெரியப்பா பையன் தான், அதாவது உனக்கு அண்ணா முறை, மகா உனக்கு..” “ஈஷ்வர்.. ஜஸ்ட் ஸ்டாப் இட்..” விஷ்ணு அதட்டல் பெரிதாக வந்தது. “என்ன ஆச்சு விஷ்ணு..?” “ம்ப்ச்..” விஷ்ணு சத்தம் உணர்ந்து பீர் பாட்டிலை கையில் எடுத்தவன் ஒரே மூச்சில் முழுதும் குடித்துவிட்டான். “ஏய் விஷ்ணு என்ன செய்ற..?” ஈஷ்வர் பாட்டிலை பிடுங்கி வைத்தான். “உன் தங்கச்சி என்ன சொன்னாளாம்..?” விஷ்ணு கேட்க, “மறுப்பா ஒன்னும் சொல்லலை போல..” என்றுவிட்டான் ஈஷ்வர். “ஏன் சொல்ல போறா..? அவளுக்கு கொண்டாட்டமா தான் இருக்கும்.. எங்க என்னை அவ தலையில கட்டிடுவாங்கன்னு பயந்துட்டு இருந்தவளாச்சே..” “அப்படி இருக்காது விஷ்ணு, நீ இப்படி இருக்கிறதால மாமா, அத்தை உனக்கு மகாவை கேட்க வருத்தப்படுறாங்க.. எல்லாம் உன் கையில தான் இருக்கு..” ஈஷ்வர் மெதுவாக ஆரம்பித்தான். “ஓஹோ.. அப்போ நான் இப்படி இருந்தா உன் தங்கச்சி என்னை கட்டிக்க மாட்டளாமா..?” “டேய் முதல்ல நாங்க எப்படிடா கொடுப்போம்..?” “கொடுக்காத, அந்த அரைவேக்காடு எனக்கு வேண்டவும் வேண்டாம்..” என, ஈஷ்வரிடம் இன்னும் சிரிப்பு. அடக்கி கொண்டவன்,