Advertisement

அத்தியாயம் – 31

இன்டர்காம் ஸ்பீக்கரை ஆன் செய்த பாரதி சைகையிலேயே ரிஷியிடம் “கேளுங்க…” என்றுவிட்டு கங்காவிடம் பேசத் தொடங்கினாள்.

அதைக் கேட்கக் கேட்க ரிஷியின் முகம் அதிர்ச்சியில் வெளுத்துப் போக பாரதியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“ஹலோ, சொல்லுங்க மேடம்…”

“ஏய் பாரதி, நான் அங்க இல்லன்னதும் உனக்கு துளிர் விட்டுப் போச்சா…? ரிஷி ரூம்ல இவ்ளோ நேரமா என்னடி பண்ணிட்டு இருக்க…?”

“அது..வந்து, மேடம்… ஒரு வேலை சொல்லறதுக்காக சார் தான் ரூமுக்கு வர சொன்னார்…”

“ஏய்…! உன் ரூம்ல இருந்தா நான் வாட்ச் பண்ணுவேன்னு அந்த முட்டாள் ரிஷி ரூமுக்குப் போயி என்னைப் போட்டுக் கொடுக்க பிளான் பண்ணறியா…? தொலைச்சிருவேன்…”

“அ..ஐயோ…! அப்படில்லாம் எதுவும் இல்லை மேடம்… இதோ, நான் என் ரூமுக்கு கிளம்பிட்டேன் மேடம்…”

“இங்க பார்…! ஆல்ரெடி உனக்கு சொல்லிட்டேன்… நீ என்ன பேசணும், எப்படி நடந்துக்கணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன், ஒழுங்கு மரியாதையா வாயை மூடிட்டு எனக்கு அடிமையா இருக்கற வரைக்கும் தான் நான் சும்மாருப்பேன்… என்கிட்ட வாலாட்ட நினைச்சா அடுத்த நிமிஷம் அந்த வீடியோ நெட்ல பறக்கும்… பி கேர்புல்…! முதல்ல உன் ரூமுக்குப் போ…” சொன்னவள் அழைப்பைத் துண்டிக்க, ஒரு பெருமூச்சுடன் ரிசீவரை அதன் இடத்தில் வைத்தாள் பாரதி. ரிஷியை நோக்க நடப்பதை நம்ப முடியாத அதிர்ச்சியில் அவன் முகம் இருண்டு சுருங்கிக் கிடந்தது.

“ர..ரதீ…!”

“ம்ம்… கேட்டிங்களா ரிஷி, உங்க அண்ணி என்கிட்ட எவ்ளோ அன்பா பேசினாங்கன்னு கேட்டிங்களா…? இதுதான் உங்க அண்ணியோட உண்மையான முகம்…! உங்ககிட்டயும், உங்க அண்ணன் கிட்டயும் காட்டறது அன்புங்கற முகமூடி போட்ட முகம்… இது அவங்க செய்யற தப்புல சின்ன சாம்பிள் மட்டும்தான்… மெயின் பிச்சர்ல இன்னும் எவ்ளோ பெரிய தப்பெல்லாம் பண்ணறாங்கன்னு தெரியுமா…?”

பாரதியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிலைகுலைந்து கண்கள் கலங்க அமர்ந்திருந்தான் ரிஷி. அவனால் அண்ணியின் அந்த அகம்பாவப் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“பாரதியிடம் இப்படி அதிகாரமாய் பேசிவிட்டு என்னிடம் அவளை அருமை, பெருமையாய் கொண்டாடிப் பேசுவது எல்லாம் வேஷமா…?” மனம் கசந்தது.

“ரிஷி…! உங்களைப் புண்படுத்த வேண்டி நான் இதெல்லாம் பண்ணலை, உண்மை தெரியாம ஒரு ராட்சசி கிட்ட உங்க வாழ்க்கையைத் தொலைச்சிட்டு இருக்கீங்களேங்கற வருத்தத்துல தான், உங்களுக்கு எப்படியாச்சும் புரிய வச்சிடனும்னு முயற்சி பண்ணிட்டே இருந்தேன்… இனியும் நான் உங்க ரூம்ல இருந்தா ஆபத்து, நாம ஈவனிங் வெளிய போயி பேசிக்கலாம்…” சொன்னவள் சென்று விட்டாள்.

ஆனால் ரிஷியின் மனம் தான் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மெல்ல வெளியே வந்தவன் நிதானமாய் அண்ணி பேசியதை யோசிக்க, “அது என்ன வீடியோ…? அதை சொல்லி எதற்கு பாரதியை பிளாக்மெயில் செய்ய வேண்டும்…?” யோசிக்க பிடிபடவில்லை. உடனே தெரிந்து கொள்ள வேண்டும் எனத் தோன்ற பாரதிக்கு இண்டர்காமில் அழைத்தான்.

“ரதீ… ஒரு வொர்க், கொஞ்சம் என் ரூமுக்கு வர முடியுமா…?”

“சார், மேடம் ஒரு முக்கியமான வேலை கொடுத்திருக்காங்க, அதை முடிக்காம என்னால வர முடியாது, அப்புறம் அவங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது… ப்ளீஸ், புரிஞ்சுக்கங்க சார்…” சொன்னவள் அவனது பதிலை எதிர்பாராமல் ரிசீவரை வைத்துவிட ரிஷிக்கு புரிந்தது.

தனது அலைபேசியில் பாரதியின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த கங்கா சந்தோஷப்பட்டாள்.

“நான் போட்ட போடுல பயந்துட்டா போலருக்கு… அந்த பென் டிரைவ் என்கிட்ட இருக்கிற வரைக்கும் இந்த பாரதி நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டா…!” சந்தோஷித்தவள், ஹரியின் அழைப்பில் திரும்பினாள்.

“கங்கா…! ரொம்ப நேரமா மொபைல்ல பார்த்துட்டே இருக்க… என்னமா, ஏதாச்சும் முக்கியமான விஷயமா…?”

“இல்லங்க…! ஆபீஸ்ல வொர்க்கர்ஸ் எல்லாம் சரியா வொர்க் பண்ணறாங்களான்னு காமரா மூலமா நெட்ல செக் பண்ணிட்டு இருந்தேன்…”

“இங்க வந்தும் உனக்கு ஆபீஸ் நினைவு தானா…? நான் கூட பிஸினஸ், மீட்டிங் எல்லாம் மறந்து இயற்கையை ரசிக்கத் தொடங்கிட்டேன்… நீ இப்பவும் அதே நினைப்புல இருக்க, கொஞ்சமாச்சும் உன்னை ப்ரீ பண்ணிக்க  மா… நாம கார்டன் போயிட்டு ஈவனிங் பிளைட்ல சென்னை கிளம்பிடலாம்…”

“ம்ம்… சரிங்க…!” என்றவள் உற்சாகத்துடன் அருகில் இருந்த மகனின் தலைமுடியைக் கலைக்க சிணுங்கினான் ரோஷன்.

‘எல்லாம் என் கைக்குள்’ எனும் கங்காவின் அகம்பாவத்தை உடைக்க அங்கே ஒருவன் தயாராகிக் கொண்டிருப்பது தெரியாமல் தன்னை மீறி எதுவும் நடந்திடாது என்று சந்தோஷமாய் வெளியே ரசிக்கத் தொடங்கினாள் கங்கா. ரிஷி, பாரதியின் ஆட்டம் இனிதான் தொடங்கப் போகிறது.

அன்று இரவு ஹரியும், கங்காவும் வீட்டுக்கு வருகையில் ரிஷி உறங்க சென்றிருந்தான். காலையில் உற்சாகத்துடன் கையில் காபியோடு அவனை எழுப்பினாள் அன்பு அண்ணி.

“டேய் ரிஷி..! விடிஞ்சு ரொம்ப நேரமாச்சு, எழுந்திரு…” அவள் குரலைக் கேட்டதும் நெஞ்சுக்குள் மூண்ட தீயை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவளது நடிப்புக்கு சற்றும் இளைத்தவன் இல்லை என்பது போல் அட்டகாசப் புன்னகையுடன் எழுந்து அமர்ந்தான் ரிஷி.

“குட் மார்னிங் அண்ணி…!”

“ம்ம்… நேத்து நாங்க வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுவேன்னு பார்த்தா அதுக்குள்ள தூங்கப் போயிட்ட…”

“சாரி அண்ணி… கொஞ்சம் டயர்டா இருந்துச்சு, அதான் நேரமா படுத்திட்டேன்… அண்ணா எழுந்துட்டாரா…?”

“ம்ம்… வாக்கிங் போக ரெடியாகிட்டு இருக்கார்… நேத்து ஆபீஸ்ல எப்படிப் போச்சு, என்னெல்லாம் வொர்க் முடிச்ச… பாரதி ஏதாச்சும் சொன்னாளா…?” கேள்விகள் நீண்டது.

“எதைப் பத்தி…?” என்றான் ரிஷி யோசனை முகம் காட்டி.

“இல்ல, வொர்க் பத்தி எதுவும் சொன்னாளான்னு கேட்டேன்…”

“அவளை தான் என் அசிஸ்டன்ட் போஸ்ட்ல இருந்து உங்க பிஏ வாக பிரமோட் பண்ணிட்டிங்களே, இனி நீங்க சொல்லுறதைத் தானே செய்வா…?”

“என்னடா படவா, லைட்டா பொறாமை எட்டிப் பாக்குது… ஹாஹா, அது பாரதி நல்ல டாலன்ட் என்கிறதால மட்டும் இல்ல ரிஷி, அவ நம்ம வீட்டுக்கு வாழ வரப் போற பொண்ணு… கல்யாணத்துக்கு முந்தி நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாவே சுத்திட்டு இருந்தா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க, அதும் ஒரு காரணம்…”

“ம்ம்… நல்ல காரணம் கண்டு பிடிச்சீங்க, அவ என்னடான்னா நான் ஏதாச்சும் டவுட் கேக்க கூப்பிட்டா கூட மேடம் எனக்கு வேலை கொடுத்திருக்காங்க, என் ரூமை விட்டு வெளியே வர மாட்டேன்னு சிலிர்த்துக்கறா… கடைசில நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டு அண்ணனையும், என்னையும் ஓரம் கட்டிடாதிங்க தாய்க்குலமே…” அவன் கிண்டலாய் சொன்னபடி காலிக் காபி கோப்பையை நீட்ட கங்கா அவன் கேசத்தைக் கலைத்தபடி, “போடா…” எனக் கூறிச் சென்றாள்.

“நேத்து பாரதியை போன்ல அந்த விரட்டு விரட்டிட்டு இப்ப இப்படிப் பேசிட்டு போறிங்களே, உங்களுக்கு மட்டும்தான் நடிக்கத் தெரியுமா அண்ணி, கூட இருந்தே குழி பறிக்கறதுல நீங்க பிஹெச்டி பண்ணி இருக்கலாம்… நான் உங்க வளர்ப்பு, என் நடிப்பை இனி நீங்க பாருங்க…” மனதுக்குள் கருவிக் கொண்டவன் கிளம்பத் தயாரானான். ரிஷி உணவு மேஜைக்கு வருகையில் ஹரி சாப்பிட்டு எழுந்திருந்தான்.

“என்னண்ணா, அதுக்குள்ள கிளம்பியாச்சா…?”

“ஆமா ரிஷி, புது பிராஜக்ட் விஷயமா ஒரு முக்கியமான கான்பரன்ஸ் இருக்கு…”

“ஓ…! சரிண்ணா…” என்றவன் சாப்பிட அமர, “நீயும் என்னோட வர்றியா ரிஷி…!” என்றான் ஹரி.

“எனக்கு என்ன தெரியும் அண்ணா, இப்பதான் ஆபீஸ் வேலையே பழகத் தொடங்கியிருக்கேன்…” ரிஷி மறுக்க ஹரி வற்புறுத்தாமல் கிளம்பி விட்டான்.

“என்ன ரிஷி…? நீயும் போயிருந்தா பிசினஸ் சர்க்கிள்ல ஒரு அறிமுகம் கிடைச்சிருக்குமே, எதுக்கு தயக்கம்…?”

“எனக்கு பிசினஸ் பத்தி எல்லாம் என்ன தெரியும் அண்ணி…?” அவன் கேள்விக்கு கங்கா சிரித்தாள்.

“எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிடுதா என்ன…? எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லவே கூடாது… எனக்கு எல்லாம் தெரியும், என்னால எதையும் சாதிக்க முடியும்னு நம்புறது தான் கான்பிடன்ஸ்… பிசினஸ்க்கு அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியம், நீ எப்ப கத்துக்கப் போறே…?”

“மெதுவா கத்துக்கறேன் அண்ணி… இன்னிக்கு எனக்கு வேற ஒரு பர்சனல் புரோகிராம் இருக்கு…”

“என்னடா…? ஏதாச்சும் தண்ணிப் பார்ட்டியா…?”

“ச்சே, அதில்ல அண்ணி…! வெளில ஒரு வேலை…” என்றவனை அவளது கண்கள் சந்தேகமாய் பார்த்தன.

“சரி, அப்படியே நான் கொடுக்கிற வெளிவேலையும் முடிச்சிரு… பத்து லட்ச ரூபாய் ஒருத்தர்கிட்ட வசூல் பண்ணனும், டீடைல்ஸ் தர்றேன்… ரொம்ப நாளா இழுத்தடிச்சிட்டு இருக்கான், எப்படியாச்சும் வாங்கிரு…”

“சரி அண்ணி…” தலையாட்டியவன் கிளம்ப கங்காவின் மனதில் ரிஷியிடம் பாரதி ஏதாவது சொல்லி இருப்பாளோ என கொஞ்சமாய் இருந்த உறுத்தலும் காணாமல் போயிருக்க நிம்மதியாய் கிளம்பினாள்.

கங்காவை நினைத்து ஆத்திரமாய் வந்தது ரிஷிக்கு. அண்ணனை யோசிக்கப் பாவமாய் இருந்தது. அவரிடம் அண்ணியின் சுயரூபத்தை வெளிப்படுத்தி விடலாமா…? மனது தவித்தது.

Advertisement