“அம்மு பிளீஸ்… நீயும் வருத்திக்கிட்டு எங்களையும் இப்படி வார்த்தைகளால் வாட்டாத.” அம்புஜமும் சுஜாவும் அவள் வார்த்தைகளை முறியடிக்க முயன்று தோற்க இருவர் கண்களிலும் நீர் கோர்த்துக்கொண்டது. எதற்கும் அசையாமல் சிலையென இறுகிப் போய் நின்றாள் மீரா.
“இன்னும் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க மூணு பேரும்? இங்கே மாப்பிள்ளை வீட்டில் வந்துட்டாங்க, வாசல்ல வந்து வரவேற்க வேணாமா?” என்று ஒரு ஆண் குரல் வெளிப்பட சுஜாவும், அம்புஜமும் கண்களை துடைத்துக்கொண்டனர்.
“பூ பிரிட்ஜ்ஜில் இருக்கு, அவள் தலையை ஒதுக்கிவிட்டு பூ வைச்சுவிடு சுஜா.” என்று சுஜாவிடம் முணுகிவிட்டு வெளியே வரவேற்க சென்றார் அம்புஜம்.
“பூ ஒன்னு தான் இப்போ குறைச்சல். நீங்க பூ வச்சிக்கோங்க அண்ணி.” என்று மீரா கடுகாய் வெடித்து வெறுமை கோர்த்து துள்ள, திடுமென வெளியில் காரசாரமான பேசும் அரவம் விழுந்தது. திடுக்கிட்டு இருவரும் வெளியே ஹாலுக்கு செல்ல, ருத்திர மூர்த்தியாய் தாண்டவமாடிக் கொண்டிருந்தார் ரகுநாதன்.
“நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்? நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? மனசாட்சி உறுத்தலையா உங்களுக்கு? எம் பொண்ணுக்கு…” என்று மீராவின் தந்தை ரகுநாதன் தன் எதிர் இருப்பவரை பார்த்து கர்ஜிக்க, அவர் தன் பங்கிற்கு பதிலளித்து விவாதத்தை சூடுபடுத்தினார்.
“சார், உங்க பொண்ணை திருமணம் செய்துக்க இவர் மட்டும் தான் ஒத்துக்கிட்டார். அதனால தான் அழைச்சிட்டு வந்தேன். ஏதோ உலக அழகியை பெற்றது போல் இப்படிக் குதிக்கிறீங்க. நீங்களே சொல்லுங்க நீங்க கேக்குற மாதிரி உங்க பொண்ணு வயசுக்கு தோதா உங்கள் மகள் வயதை ஒற்ற எவனாவது ஒத்துப்பானா இல்லை அவங்க குடும்பமும்தான் ஓகே சொல்லுவாங்களா? இது தான் சார் நிதர்சனம். அதை புரிஞ்சிக்காம தாம்தூம்னு குதிக்கிறீங்க?”
“அதற்காக என் வயதுள்ள ஒருவரை அழைச்சிட்டு வருவீங்களா?” என்று இடைத்தரகரிடம் கத்தியவர் அவர் அழைத்து வந்த வயோதிகனிடமும், “உங்களுக்குமா அறிவில்லை? என் பெண்ணின் தகப்பன் வயதில் இருக்கிறீர்கள்… உங்களுக்கு என் மகளை மணமுடித்து தரவேண்டுமா?” என்று எகிற,
“நீங்கள் யாரா வேணும்னாலும் இருந்துட்டு போங்க… எனக்கு அது முக்கியம் இல்லை, இப்போ இங்கிருந்து கிளம்புங்க. எங்களுக்கு இதுல துளியும் சம்மதமில்லை. யோவ் தரகரே இனி வரன் அதுஇதுன்னு எதையாவது இழுத்துட்டு வந்த நடக்குறதே அவ்வளவுதான்…” என்று ரகுநாதன் இருவரையும் விரட்ட,
“இது என் ஒருவனால் மட்டும் முடிவிற்கு வரவில்லை, டீம்ஒர்க் சார்.” என்று கார்த்திக் பளிச்சென்று புன்னகைத்தான்.
“இது உன்னுடைய முதல் கேஸ் அண்ட் இது உன்னுடைய முதல் வெற்றி. வாழ்த்துக்கள் கார்த்திக். பட் நாங்கள் உன்னிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.” என்று அவன் உயர் அதிகாரி புகழ்ந்ததுடன் அவனின் வளர்ச்சியை தூண்டும் விதமாய் கூற, காக்கி சட்டையில் மூன்று நட்சத்திரங்களை தாங்கி கம்பீரமாய் நின்ற கார்த்திக் மெலிதாய் தலையசைத்தான்.