“மீரா, எனக்குப் புரியுது. இதில் எனக்கும் உன் அண்ணனுக்கும் மருந்துக்கும் உடன்பாடில்லை. ஆனால் அத்தையும், மாமாவும் இதைத் தான் விரும்புறாங்க. அவங்களும் என்ன செய்வாங்க? உனக்குன்னு ஒரு குடும்பத்தை… ஒரு நிறைவான வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்து அவங்களோட நீ மகிழ்ச்சியா வாழ்றதை பார்க்கணும்னு ஆசை இருக்கும்தானே? இந்த ஏற்பாடு எல்லாமே உன் மேல இருக்கிற அக்கறையும் அன்பினாலும் தான்… புரியுது தானே உனக்கு?” சுஜா சமரச வார்த்தைகள் வீசி அவள் உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் வெறுமையை விரக்தியை விரட்ட முயல,
“எத்தனை குழந்தைங்க?” என்று வலிக்க வலிக்க வந்து விழுந்தது மீராவின் எதிர்வினை.
“என்ன?” என்று நெற்றி சுருங்க அவள் கேள்வி புரியாது விழித்தாள் சுஜா.
“எப்படியும் இருபதுகளில் இருக்கும் ஆண்கள் என்னை கட்டிக்க சம்மதிக்க மாட்டாங்க. நல்ல நிலையில் இருக்கும் எந்தக் குடும்பமும் என்னை மருமகளாக ஏத்துக்க மாட்டாங்க. என் கணிப்பு சரியென்றால் நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளை நடுத்தர வயதில் விவாகரத்து ஆனவராகத் தான் இருக்க முடியும். நடுத்தர வயதென்றால் குழந்தை இருக்கவும் வாய்ப்பிருக்கு. ஆனால் குழந்தைகள் எப்படி என்னை ஏற்றுக்கொள்வார்கள்?” என்று நெற்றி சுருக்கி தன் ஆழ்ந்த சிந்தனைகளை தட்டினாள் மீரா.
“உன்னை நீயே வருத்திக்காத மீரா. எல்லாம் நல்லபடியாக நடக்கும்…” என்று சற்று இடைவெளி விட்டவள் பின் தயங்கி, “அத்தை பேசுனதை கேட்டேன், அவருக்கு ஒரு மகன் இருக்கிறதா பேசிட்டு இருந்தாங்க. நேரில் பார்த்து விசாரிச்ச பிறகு வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரலாம்னு உங்கண்ணன் கூட சொன்னாங்க. ஆனா மாப்பிள்ளை வீட்டுல அவசரப்படுத்துறாங்க. போட்டோ கேட்டதுக்கு கூட ஏதோ பழைய போட்டோவை அனுப்பி வச்சிருக்காங்க… க்ளியராவே இல்லை, திரும்ப வேற நல்ல போட்டோ அனுப்பசொல்லி கேட்டதுக்கு அந்த தரகர்…” நடந்தவற்றை கடகடவென மனப்பாடம் செய்தது போல ஒப்பித்துக் கொண்டிருந்த சுஜா சட்டென சுதாரித்து பேச்சை நிறுத்தவும்,
காந்தப் புன்னகை வீசிவேண்டிய மீராவோ அமிலப் புன்னகை வீசி, “உங்க பொண்ணு இருக்குற லட்சணத்துக்கு நீங்க கண்டிஷன் போடுற நிலையில் இல்லை. பாவப்பட்டு எவன் ஓகே சொல்றானோ அவனுக்கு பொண்ணை கட்டிக் கொடுத்துங்கன்னு சொல்லி இருப்பான். எனக்குத் தெரியும்.” என்று மட்டும் விளித்து சுஜாவை வெளியில் செல்லச்சொல்லி சைகை காட்டினாள்.
“மீரா…”
“ப்ளீஸ் அண்ணி… ஐ நீட் டூ கெட் ரெடி.” அழுத்தமாய் கட்டளையை தாங்கி வந்தது மீராவின் மொழி.
அவள் முகத்தில் என்ன கண்டாலோ சுஜா கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டு வெளியேறினாள். அவளுக்குத் தெரியும், மீராவின் அழுத்தப் பார்வையும் அதனுடன் சேர்ந்து வந்த ஆங்கில மொழியும் அதற்கு மேல் என்னிடம் எதுவும் பேசாதே என்ற அர்த்தத்தையே வெளிப்படுத்துமென. மீறி பேசினால் வாய் வார்த்தைகள் விரிந்து ஒரு வாரத்திற்கு அனைவர் நிம்மதியும் கெட்டுவிடுமென்று.
…
சமையல் அறையில் பாத்திரங்கள் உருள, ஐம்பது வயதை சுலபமாய் கடந்தவரோ கடந்த சில நாட்களிலேயே வயது அதிகரித்து மூப்பு ஏறிவிட்ட தோரணையில் அவசர அவசரமாக இனிப்பு வகைகளை வருபவர்களுக்கு கொடுக்க தயார் செய்துகொண்டிருந்தார் அம்புஜம். சுஜா சிறிது நேரம் அமைதியாய் தள்ளி நின்று அவர் பரபரப்பை பார்த்தவள் பின் உள்ளே நுழைந்து மெல்ல தன் பேச்சை ஆரம்பித்தாள்.
“அத்தை மீரா நம்மோடவே இருந்துடட்டுமே. கடைசிவரை நாமே பார்த்துக்கலாம். இல்லைனா இன்னும் கொஞ்சம் வருஷம் போகட்டுமே, இப்போவே இது தேவையா? அவளுக்கு அப்படி என்ன வயசாகிடுச்சு… இருபத்தி ரெண்டு தானே ஆகுது…” நாத்தனாரின் அகம் படித்து அவளை மேலும் வாட்ட உள்ளமின்றி மீரா சார்பாய் சுஜா பேச,
“அவளை கரைசேர்க்க வேண்டியது எங்க கடமை சுஜா. அதிலிருந்து விடுபட எங்களுக்கு விருப்பமில்லை. ஏதோ எங்களால நடமாட தெம்பிருக்கும் போதே அவளுக்கு ஒரு குடும்பம் அமைச்சு கொடுத்திடனும். இன்னைக்கு வேணும்னா மீராவை கடைசி வரை பார்த்துக்கலாம்னு நீ இப்படி சொல்லலாம். ஆனா நாளைக்கே உன் குடும்பம் பெரிசாகும் போது, என் மகள் உங்களுக்கு இடைஞ்சலா தான் தெரிவாள். என் பொண்ணு யாருக்கும் பாரமா இருக்கக்கூடாது. எங்களுக்கு பிறகு அவளுக்கே அவளுக்குன்னு ஒரு துணை வேண்டும். குடும்பம் வேணும். அந்த துணை அவளது பலகீனங்களை விரட்டி பலம் படைத்தவளாக மாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.” என்றவர் குரல் பாதி உள்ளே செல்ல தன் முகத்தை சுஜாவிற்கு காட்டாமல் காபி கலந்துகொண்டே பதிலளித்தார் மீராவின் அன்னை.