அத்தியாயம் 21:
நேராக சங்கர் இறந்த சிறைச்சாலைக்கு சென்றான் ரிஷி.மனதில் கொஞ்சம் தெளிவு இருந்தாலும்…இன்றுடன் இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணினான்.
“கான்ஸ்டபிள்…அந்த ஜெயிலரை வர சொல்லுங்க…!” என்றான்.
நாற்காலியில் அமர்ந்து இரு கைகளையும் தன் முகத்தில் தாங்கியிருந்தவன்….அந்த ஜெயிலரின் வரவுக்காய் காத்திருந்தான்.
“சார் வணக்கம் சார்…!” என்றபடி வந்தார்.
அவரையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான் ரிஷி.அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவர் தலையைக் கீழே போட..
“சங்கர் எப்படி செத்தான்…?” என்றான் திடுதிப்பென்று.
“இதென்ன சார் கேள்வி….தூக்கு போட்டு தான் செத்தான்…” என்றார் அவர்.
“எப்படி தூக்கு போட்டான்…?” என்றான்.
“அது எனக்கெப்படி சார் தெரியும்…??”
“உங்களுக்கு கண்டிப்ப்பா தெரிஞ்சிருக்கணுமே…?”
“இல்லை சார்…நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வரும் போது…தான் பார்த்தேன்.மத்தபடி எனக்கு ஒன்னும் தெரியாது சார்…!”
“சரி சங்கரை ஏன் கொலை பண்ணிங்க..?” என்றான் ரிஷி.
“சார்…!” என்று அவர் அதிர…சில வினாடிகளில்….
“என்ன சார்…பழியைத் தூக்கி என் மேல் போடப் பாக்குறிங்களா…?நான் எதுக்கு சார் அவனைக் கொலை பண்ணனும்…?” என்றார்.
“சிம்பிள்….யாரோ செய்ய சொல்லியிருக்காங்க….நீங்க செய்திருக்கிங்க….சொல்லுங்க யார் சொல்லி செய்திங்க…?” என்றான்.
“என்ன சார் நீங்க…? நான் தான் அந்த கொலையை பண்ணவே இல்லைன்னு சொல்றேன்…திரும்ப திரும்ப இப்படியே சொல்றிங்க…?” என்றார்.
“எந்த கொலையை நீங்க பண்ணல…?”ரிஷி.
“சங்கர் கொலையை தான் சார்…” என்றார்.
“ஓஹோ…அப்ப அது கொலைதான் இல்லையா…?” என்றான் ரிஷி.
“சார்…..அது வந்து..நீங்க தான சார் இப்ப கொலைன்னு சொன்னிங்க…! அதை வைத்து தான் சொன்னேன்..!” என்று அவர் மழுப்ப…
ஓங்கி ஒரு அறை விட்டான் ரிஷி.அந்த ஜெயிலர் மிரண்டு போய் அவனையே பார்த்துக் கொண்டு நிற்க…
“மரியாதையா உண்மையை சொல்லு…இல்லை நானே நிருபிப்பேன்…” என்றான்.
“என்ன சார் அடிக்கிறிங்க…? அடிச்சு கேட்ட மட்டும் பொய் உண்மை ஆகிடாது..” என்றார்.
“சங்கர் தூக்கில் தொங்கும் போது…நீங்க பார்க்கலை…அவன் எப்படி செத்தான்னு உங்களுக்கு தெரியாது…அந்த கொலையில் உங்களுக்கு தொடர்பில்லை….இப்படியே வச்சுக்குவோம்….” என்றவன்…
அந்த லெட்டர் எப்படி உங்க கண்ணில் பட்டது…?” என்றான்.
அவனின் கேள்வியில் அதிர்ந்தவர்…”இதென்ன கேள்வி சார்….அவன் பாக்கெட்ல லெட்டர் இருந்தது…நான் பார்த்தேன்…அதனால் உங்ககிட்ட சொன்னேன்..” என்றார்.
“அது எப்படி…?யார் கண்ணுக்கும் படாத லெட்டர் உங்க கண்ணுக்கு மட்டும் பட்டது….?” என்றான் ஆக்ரோஷமாய்.
“இதென்ன சார் வம்பா போய்விட்டது…பாக்கெட்ல இருந்த லெட்டர் உங்க கண்ணுல விழவில்லை என்றால் அதற்கு நானா பொறுப்பு…?” என்று அவர் பேச…
“பாக்கெட்ல இருந்தது சரி….அதெப்படி அவனுடைய பேன்ட் பாக்கெட்டில்…அதுவும் யார் கண்ணுக்கும் தெரியாத படி இருந்த அந்த லெட்டர்…உங்க கண்ணுக்கு மட்டும் தெரிந்தது..?” என்று ரிஷி கேட்க….
அதிர்ந்தார் அந்த காவலர்.இதை எப்படி மறந்தேன்.பதட்டத்தில் என்னை நானே காட்டிக் கொண்டேனா…? என்று அவர் நினைக்க…
“சொல்லுங்க சார்…! சங்கர் பேன்ட் பாக்கெட்டில் இருந்த லெட்டர்…எப்படி உங்க கண்ணுக்கு மட்டும் தெரிந்தது…? யார் உங்களிடம் அதை சொன்னது….இல்லை யார் அந்த லெட்டரை அவன் பாக்கெட்டில் வைத்தது…?” என்று அவன் கேள்வி மேல் கேள்வியாய் கேட்க…
அவனின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் திகைத்தார் அந்த காவலர்.அவன் தான் சரியான இடத்தில் மடக்கி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறானே….?
“சரி இப்பவாவது சொல்லுங்க…ஏன் சங்கரை கொலை பண்ணிங்க…?”என்றான்
“சார்…???”
“இனி நீங்க பேசியே தான் ஆகணும்..வேற வழியில்லை…இது மட்டுமில்லை..என்கிட்டே இன்னும் நிறைய ஆதாரம் இருக்கு…சொல்லவா..?” என்றான்.
“வேண்டாம் சார்…!” என்பதைப் போல் அவர் தலை ஆடியது.
“அப்ப சொல்லுங்க…?ஏன் பண்ணுனிங்க…?யார் சொல்லி செய்திங்க…?” என்றான்.
“நான் தான் செய்தேன்…!” என்றார்.
“பொய்..இதை நீங்க செய்ய வாய்ப்பில்லை…சொல்லுங்க இதுக்கு பின்னால் யார் இருக்காங்க…?” என்றான்.
“இல்லை…நான்…தான்…” என்று அவர் இழுக்க…
“திரும்ப திரும்ப பொய் சொல்லாதிங்க…? இதை நீங்க ஒரே ஆளா கண்டிப்பா செய்திருக்க முடியாது…இப்ப நீங்களா சொன்னா நல்லது… அதையும் நானா கண்டு பிடிச்சா…அப்பறம் நடக்கும் எதற்கும் நான் பொறுப்பில்லை…” என்றான்.
“இல்லை சார்…வேண்டாம்…நடந்த எல்லாத்தையும் நான் சொல்லிடுறேன்…” என்றபடி அவர் பேச ஆரம்பிக்க…ரிஷியின் தாடை இறுகிக் கொண்டே போனது…”
அவர் சொல்லி முடிக்கவும்…அவன் முகம் இறுகிப் போய் அமர்ந்திருக்கவும் சரியாய் இருந்தது.
உங்க பையன் ஜான் எங்க…? என்றான் கண்கள் சிவக்க…
“வேண்டாம் சார்..அவனை விட்ருங்க சார்…அவன் வாழ வேண்டிய பையன் சார்..வேணும்ன்னா என்னை அரெஸ்ட் பண்ணுங்க சார்..!” என்று அந்த ஜெயிலர் கெஞ்ச…
“எப்படி..எப்படி…அப்பாவும்,மகனும் சேர்ந்து எல்லாம் செய்விங்க…தண்டனை மட்டும் ஒருத்தருக்கா..?” என்றான்.
“அந்த சங்கர் ஒன்னும் நல்லவன் கிடையாது…” என்றார் அவர் கோபமாய்.
“ஓஹோ அப்ப உங்க பையன் ரொம்ப நல்லவன் இல்லையா..?” என்றான் நக்கலாய்.
சங்கர் கெட்டவன்னா….உங்க பையனும் கெட்டவன் தான்….சங்கர் செஞ்ச அதே தப்பை தான் உங்க பையனும் செஞ்சிருக்கான்..அப்ப அவனுக்கும் இவனுக்கும் என்ன வித்யாசம்…சும்மா சொல்லக் கூடாது…நல்லாவே நடிச்சான்…இனி யாரும் எதில் இருந்தும் தப்பிக்க முடியாது.
சங்கரை கொலை செய்ததற்கான நியாயமான காரணம் உங்ககிட்ட இருக்கலாம்…ஆனா அதுக்காக உங்க பையன் செய்த எல்லாத்தையும் தப்பில்லைன்னு சொல்ல முடியாது….சட்டப்படி என்ன செய்யணுமோ அதை நான் செய்வேன்…” என்றவன் ஜானை தேடித் புறப்பட்டான்.
அன்று அந்த மாநகரமே பரபரப்பாய் இருந்தது.சங்கர் கொலைவழக்கின் குற்றவாளி இன்னும் சற்று நேரத்தில் கைது செய்யப் படுவார்….என்ற செய்தி தீயாய் பரவ…..
அனைத்து மீடியாக்களும்…தங்கள் செவிகளையும்,கண்களையும் பட்டை தீட்டிக் கொண்டு காத்திருந்தன.
இதோ ஜானை கைது செய்கிறான் ரிஷி வர்மா….ஜானை வண்டியில் ஏற்றுகின்றனர்.அவனை நேராக கோர்ட்டிற்கு அழைத்து செல்கிறான் ரிஷி.அனைத்து மீடியாக்களும் அவர்கள் பின்னால் செல்ல….அந்த கோர்ட் வளாகமே பரபரப்பாய் காணப்படுகிறது.கூண்டில் ஏற்றப்படுகிறான் ஜான்.அவனுடன் சேர்த்து அவன் தந்தையும் ஏற்றப்படுகிறார்.
“குற்றத்தை நீங்க தான் செய்திங்களா..?” என்றார் நீதிபதி.
“ஆமா நாங்கதான் செஞ்சோம்..” என்றனர்.
“காவல்துறையில் இருந்து கொண்டு இப்படி ஒரு கொலையை செய்ய உங்களால் எப்படி முடிந்தது…?” என்று நீதிபதி கேட்க.
தனது வாக்கு மூலத்தை கொடுக்க தயாரானான் ஜான்.
“எங்கப்பா ஒரு ஜெயிலர்.எனக்கு பிறகு ஒரு தங்கை.சங்கர் முதலில் படித்த கல்லூரியில் முதல் வருடத்தில் சேர்ந்தாள்.என் தங்கையை காதலிக்கிறேன் என்று சொன்ன சங்கர்….அவளையும் மனம் மாற செய்து…தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டான்.
பிறகு அவளை கண்டுகொள்ளாமல் இருக்க…என் தங்கை அவனிடம் கேட்க…’உன்னை யார் என்றே தெரியாது..!’ என்று சொல்லிவிட்டான்.
என் தங்கை..கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுக்க….”நீங்கள் வந்தது படிக்கத்தான்…இப்படி ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதற்காக அல்ல…” என்று சொல்லி..இருவருக்கும் டிசி கொடுத்து விட்டனர்.கல்லூரி முழுவதும் பரவியதால்…பதினெட்டே வயதான என் தங்கை தற்கொலை செய்து கொண்டாள்.
எனது தங்கையின் இறப்புக்கு காரணமானவனை பழி வாங்க வேண்டும் என்று நினைத்தேன்.அவன் மீண்டும் ஒரு கல்லூரியில் சேர…நானும் அங்கு சேர்ந்தேன்.அவனிடன் நண்பனாக பழகினேன்.ஜான் என் உயிர் நண்பன் என்று சொல்லும் அளவிற்கு அவனுடைய நம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன்.
அதே வகுப்பில் பயின்ற அபிராமியை உயிருக்கு உயிராக நேசிக்க துவங்கினேன்.அவளானாள் என்னை கண்டு கொள்ளவேயில்லை.
இந்த நேரத்தில் தான்…சங்கர் ஒரு பெண்ணின் மீது ஆசீட் ஊற்றி விட்டான் என்ற செய்தி வந்தது.அதைப் பற்றி அவன் என்னிடம் கூட சொல்லவில்லை.அவனுக்கு உதவுபவனைப் போல் உதவி…அவனை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று எண்ணினேன்.
அந்த கேசை விசாரிப்பதற்காக….ரிஷி வர்மா அங்கு வந்தார்.அவர் என்னிடம் துருவி துருவி கேட்க…எங்கே நான் செய்ய போகும் கொலைக்கு அவரால் பிரச்சனை வருமோ என்று நினைத்தேன்.
சங்கரின் தந்தையிடம்….நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் ரிஷி வர்மா தான் காரணம் என்பதை போல் சொல்லி…அவரின் மனதில் ரிஷி சார் மீதான வன்மத்தை வளர்த்தேன்.அதற்கு காரணம் அந்த கேஸ் மட்டுமல்ல…அபிராமியும் தான்.
“அவரைத்தான் காதலிக்கிறேன்…அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறேன்…!” என்று அவள் ஆணித்தரமாய் கூறியதைக் கேட்டு…எனக்குள் நான் மிருகமாகவே மாறினேன்.
சங்கரையும் பழி வாங்க வேண்டும்..அதே சமயம் அபிராமியையும் அடைய வேண்டும் என்று நினைத்தேன்.அதே நேரத்தில் இதில் ரிஷி சாரின் தலையீடும் இருக்க கூடாது என்று நினைத்தேன்.
சங்கர் போலீஸ் கையில் சிக்காமல் இருக்க உதவி செய்தேன்.அப்படியே அவனைத் தீர்த்துக் கட்ட பிளான் போட்டேன்.அப்பொழுது தான் ரிஷி சார்க்கு திருமணம் என்ற செய்தி என் மனதில் இடியாய் தாக்கியது.
இதை எப்படியும் நடக்க விடக் கூடாது என்று எண்ணினேன்.எப்படியாவது அபிராமியை கடத்தி…அவளுடன் ஒரு நாள் வாழ்ந்து விட்டால்….அவள் எனக்கு சொந்தமாகி விடுவாள் என்று தப்புக் கணக்கு போட்டேன்.
அந்த நேரத்தில்….சங்கர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து…எப்படியோ அவனை ரிஷி சார் கைது செய்து விட்டார்.அந்த கோபமும் அவர் மேல் சேர்ந்து கொள்ள…
திருமண மண்டபத்தில் இருந்து அபியைக் கடத்தினேன். இங்கு அருகில் வைத்திருந்தால்….எப்படியும் கண்டு பிடித்து விடுவார்கள் என்று….கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு அவளைக் கடத்தி சென்றேன்.
இதற்கு சங்கர் தந்தையின் ஆட்கள் எனக்கு உதவி செய்தனர்.சங்கர் தந்தையிடம்….ரிஷியை பழி வாங்க என்று சொல்லி எனக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொண்டேன்.
ஆனால் அபிராமியோ…எப்படியோ என்னிடம் இருந்து தப்பி சென்று விட்டாள்.அவளைத் தேடி அங்கேயே அலைந்ததில்…அவள் ரிஷியின் பாதுகாப்பில் இருப்பது தெரிந்து அதிர்ந்தேன்.
அவளை எப்படியாவது அங்கிருந்து கடத்தி விட வேண்டும் என்று நேரம் பார்த்து அவர்கள் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் ரிஷி கோபமாக பேச…அபி அழுது கொண்டே செல்வது கண்ணில் பட்டது. இது தான் சமயம் என்று நான் அவளைப் பின் தொடர…அதற்குள் ரிஷி அவளை தொடர்ந்து செல்ல…
யாரும் எதிர்பார்க்காமல் அம்பிராமி தண்ணீருக்குள் குதித்து விட்டாள்.ரிஷி அவளைக் காப்பாற்ற போக…அதை எனக்கு சாதகமாக்கி….எனது செல் போனில் அவர்களை இணைத்தபடி போட்டோ எடுத்தேன்.
அதை சங்கர் தந்தை உதவியுடன் மறுநாள் பேப்பரில் வருமாறு செய்தேன்.அவள் எனக்கு கிடைக்கவில்லை என்றாலும்…..ரிஷியுடன் இணையக் கூடாது என்று நினைத்தேன்.ரிஷியின் வேலையும் பறி போகும் என்று எண்ணினேன்.சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் கொடுத்தால்…சங்கர் வழக்கை மறந்து விடுவார் என்று பிளான் போட்டேன்.
ஆனால் அன்றே அவர்கள திருமணம் நடந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ரிஷி விடுமுறையில் இருப்பது தெரிந்து சங்கருக்கு ஜாமீன் அப்ளை செய்தோம்…அவனை வெளியே அழைத்து வந்து போட முடிவு செய்தேன்.ஆனால் ரிஷியால் அதுவும் நடக்கவில்லை.
இறுதியில் எனக்கு இருந்த ஒரே வழி…ஜெயிலுக்குள் வைத்து அவனைப் போட்டுத் தள்ளுவது தான்.அதற்கு என் அப்பாவிடம் சொன்ன போது முதலில் மறுத்தார்.பின் என் தங்கையின் இழப்பை சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன்.
சங்கரை நான் தான் கழுத்தை இறுக்கி கொலை செய்து …அது தெரியாமல் இருக்க தூக்கில் தொங்க விட்டேன்….இந்த கேஸில்..விசாரணை அதிகாரி என்ற முறையில்…ரிஷி சஸ்பென்ட் செய்யப்படுவார்….என்று நினைத்தேன்.ஆனால் நான் செய்த சிறு தவறு…என்னை மாட்டிக் கொள்ள வைத்தது.
லெட்டரை அவனின் பேன்ட் பக்கெட்டில் வைத்ததும்…உணர்ச்சிவசப்பட்ட நிலையில் என் அப்பா அதைத் தானாக சொன்னதும் தான்…எங்களைக் காட்டிக் கொடுத்து விட்டது…” என்று தனது நீண்ட வாக்கு மூலத்தை முடித்தான் ஜான்.
குண்டூசி விழுந்தாள் கூட சத்தம் கேட்கும் என்ற அளவிற்கு அங்கு அமைதி நிலவியது.
குற்றத்தை அவர்களே ஒப்புக் கொண்டதால்….
ஆள்கடத்தல்..கொலை வழக்கு…ஆகிய இரண்டு வழக்குகளும் ஜானின் மீது போடப்பட்டு….ஜாமீன் அற்ற…பதினைந்து வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
கொலைக்கு உதவியதாக…அவனின் தந்தைக்கு இரண்டு வருடமும்…. ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டது.
அனைத்து விதி முறைகளும் முடிந்து….ஜானும் அவன் தந்தையும் கோர்ட்டில் இருந்து …..சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தனது பார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்த ரிஷி வெளியே வர….அனைத்து மீடியாக்களும் அவனை சூழ்ந்து கொண்டனர்.
“ஜாணிற்கு வழங்கட்ட தந்தையைப் பற்றி என்ன நினைக்கிறிங்க சார்..?”
“அதைப் பற்றி நினைக்க ஒன்றும் இல்லை…”
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அபிராமி உங்கள் மனைவி தானே சார்..?
“ஆமாம்…”
“உங்களுக்கு வைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் பற்றி..?”
“இப்போ அதற்கு அவசியமில்லாமல் போனது..குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டான்….அதற்கு பிறகு என்ன கமிஷன்..?” என்றான்.
“இந்த கேசைப் பற்றி நீங்க ஏதாவது சொல்ல விரும்புறிங்களா சார்…?”
“இந்த வழக்கைப் பற்றி நான் சொல்வதை விட…இதிலிருந்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்…இந்த வழக்கில் சம்பந்த பட்ட…சங்கர்,ஜான் இருவருக்குமே வயது இருப்பத்தி ஒன்று…இந்த சின்ன வயதில்…சிறை செல்லும் அளவிற்கு அவர்கள் குற்றம் புரிய யார் காரணம்…எதற்கு எடுத்தாலும் பழிக்கு பழி..எதற்கெடுத்தாலும் வன்முறை….எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொலை தான் என்ற நிலைமையில் சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது.
இதற்கு அவர்கள் மட்டும் காரணமில்லை..பெற்றவர்களும் ஒரு காரணம்…தங்களுடைய பிள்ளைகள் எதைக் கேட்டாலும்…அதை உடனே வாங்கித் தந்து விடுவது…மனதில் நினைத்தை எல்லாம் நிறைவேற்றி வைப்பது…அதுவே அவர்களுக்கு நாளடைவில் வழக்கமாக மாறிப் போகிறது.தான் நினைத்தை அடைய வேண்டும் என்ற தீவிர எண்ணம் அவர்களுக்குள் ஊறிப் போய் விடுகிறது.அதை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினால் பரவாயில்லை…ஆனால் இது போன்ற செயல்களுக்கு பயன்படுத்தினால்..???
ஏதோ கடையில் இருக்கும் பொருளைக் கேட்பதைப் போல்..ஒரு பெண்ணின் மனத்தைக் கேட்பது.அந்த பெண் மறுத்தால் ஆசீட் ஊற்றுவது…கொலை செய்வது,கற்பழிப்பது…
இப்பொழுது ரவுடிகளை விட…மாணவர்கள் கொலை செய்வதும்…குற்ற செயல்களில் ஈடுபடுவதும் அதிகமாகிக் கொண்டே போகிறது.
எந்த செயல்களுக்கும் வன்முறைத் தீர்வாகாது.உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு மேல்..பாலியல் கல்வியை கற்றுக் கொடுங்கள்…. பெண்களை சக மனுஷியாய் மதிக்க கற்றுக் கொடுங்கள்…
பணம்..பணம் என்று பணத்தை நோக்கி ஓடாமல்….அவர்களுக்கு மனஅழுத்தம் இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்… அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்…ஐந்தில் வளையாதது…ஐம்பதில் வளையாது.ஐந்து வயது வரை தான் அவர்கள் களிமண்…நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல்..வடிவமைத்துக் கொள்ளலாம்.அதைத் தாண்டினால்… யாராலும் அவர்கள் குணத்தை மாற்ற முடியாது.
அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களுக்கு துணை போங்கள்…கெட்ட விஷயங்களுக்கு துணை நின்று..அவர்களுக்கும்,சமுதாயத்திற்கும் ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்து விடாதீர்கள்….
பெண்களும்..எங்களுக்கு இவனால் பிரச்சனை என்று தைரியமாக வீட்டில் சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்…நீங்கள் வாய் விட்டு சொன்னால் தான் உங்கள் பிரச்சனை உங்கள் பெற்றவர்களுக்கு புரியும்…எந்த சூழ்நிலையிலும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தாயாரயிருங்கள்…..
காவல் துறை உங்கள் நண்பன்..எங்கள் சேவை எப்பொழுது மக்களுக்காக மட்டுமே..!” என்று தனது கூற்றை முடித்தவன்….
“நோ..மோர்..கொஸ்டின்ஸ்..” என்றபடி அங்கிருந்து கிளம்பினான்.
நடந்த அனைத்து விஷயங்களையும்..மீடியாக்கள்…விடாமல் ஒளிபரப்ப….அனைத்து டிவிக்களும் ரிஷியையே படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தது.
தங்கள் வீட்டில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமிர்தவள்ளி….. தன்னையும் மீறி அழுதே விட்டார்.தன் வளர்ப்பு பொய்யாக போகவில்லை…. என்ற திருப்தியே அந்த அழுகைக்கு காரணம்…
கணபதியோ…’ஐயோ..! என்மகளை நம்பாமல் போனேனே..!’ என்று மனதிற்குள் அரற்றினார்.
கோவிந்தன் ‘என் பேத்தி’ என்ற இறுமாப்பில் இருக்க…சரண்யாவிற்கோ ஏகத்திற்கும் கடுப்பாய் இருந்தது.
“என்ன பாட்டி…இதுக்கு போய் அழுகுறிங்க..?” என்றாள் எரிச்சலாய்.
கோபத்தில் திரும்பிய வள்ளி…அவளை ஓங்கி ஒரு அறை விட்டார்.
“அபி…அன்னைக்கு சொன்ன எதுவும் பொய்யில்லை….இதோ இப்ப தெளிவா தெரிந்து விட்டது…அப்ப அன்னைக்கு மண்டபத்தில் அந்த பையன் சொன்னது எல்லாம் உண்மையா..?சொல்லு உண்மையா..?” என்றார் வள்ளி.
“என்ன பாட்டி…அவளுக்காக என்னையவே அடிக்கிறிங்க…? நான் பொய் சொல்லை..” என்று கண்ணீர் விட்டாள்.
“உன் கண்ணீரை..உன் பாட்டியும்,அப்பனும் நம்பலாம்.ஆனால் நான் நம்ப மாட்டேன்..” என்றார் கோவிந்தன்.
“இவகிட்ட என்ன பேச்சு…நடந்தது தெரியாம…நான் வேற அவங்க வீட்டுக்கு போய்..வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிட்டேன்….உடனே கிளம்பலாம்ங்க… நான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்….” என்று வள்ளி சொல்ல…
“ஆமாம்ப்பா…எனக்கும் என் பெண்ணைப் பார்க்கணும்..” என்றார் கணபதி.
கணபதி..”என் பெண்ணை..” என்று சொன்னதைக் கேட்டு சரண்யாவின் முகம் மாற….ஆனால் அவர்கள் யாரும் அதை சட்டை செய்யவில்லை.
“அபி இப்போ…சேலத்தில் இல்லை…இங்க கோவையில் தான் இருக்கா..” என்றார் கோவிந்தன்.
“உங்களுக்கு எப்படி தெரியும்…?” என்று வள்ளி கேட்க…
முதல் நாள் லட்சுமி வந்ததையும்…தான் அபியிடம் பேசியதையும் சொன்னவர்…அபி அங்கு வராததற்கான காரணத்தையும் சொன்னார்.
“நாம போய் மன்னிப்பு கேட்டா..மாப்பிள்ளை மன்னிச்சுடுவார் தானங்க…?” என்று வள்ளி கேட்க…
“அது தான் தெரியலை..!” என்றார் கோவிந்தன்.
அங்கே ரிஷியின் வீட்டிலோ….செய்தியைப் பார்த்தவள் சிலையென அமர்ந்திருந்தாள்…..அபிராமி.
அவள் கண்கள் கலங்கிப் போயிருக்க….ரிஷியின் வரவுக்காய் காத்திருந்தாள்.
காற்று வந்து காது கடித்தும்…
இன்னும் என்ன மவுனமோ…!
மோதி வந்து முத்தமிட்டால்…
மவுனம் தீருமோ…!
அச்சம் தான் உன் ஆடையோ…!
வெட்கம் தான் முந்தானையா…
மவுனம் தான் உன் வேலியோ…
செம்பூவே வா..வா…!