அத்தியாயம் 38
சற்று நேரத்திலே கோவிலில் எங்கும் சலசலப்பும், பேச்சுக் குரலிலும் மட்டுமே கேட்க, மேள வாத்தியங்களின் இன்னிசை நின்று விட்டது. முதலில் இராஜமணிக்கத்திற்கு ஆதரவாகப் பேசியவர்கள் இப்போது பேசவும் இயலாது நின்றனர்.
இராஜமணிகத்தின் மச்சான், “ஏய் யாருடி நீ? எந்த ஊருக்காரி? நீ வந்து என் மாமா மேல பலி சொன்னா நம்பிடுவோமா? உன்னையெல்லாம் சும்மா விடலாமா?” என்றவாறு ஸ்வேதாவின் மீது கையோங்கினான்.
சட்டென ஓங்கிய அவன் கையை சந்திரன் பிடித்துக்கொண்டு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அன்பு எழுந்து வந்து அவனின் மறுகன்னத்தில் அறைந்தான்.
“முதல்ல மரியாதையா பேசுடா. இங்க பாரு, அவ ஒன்னும் சும்மா பேசலை அவகிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு. உன் மாமா நம்ம தொகுதி எம்.ல்.ஏவோட மச்சான் கூட கூட்டுச் சேர்ந்து தான் இதையெல்லாம் பண்ணி இருக்கான். அவன் டிராவல்ஸ் லாரி, ஜெசிபி, ட்ராக்டர்,அவன் மில்லு தொழிலங்க வச்சி தான் மணலை கொள்ளையடிச்சி இருக்காங்க. இதுல உன் மாமன், எம்.ல்.ஏ, அவன் மச்சான் எல்லாரும் கமிஷன் பத்தி பேசிகிட்ட ஆதாரம் ஸ்வேதா கிட்ட இருக்கு.
அது மட்டுமில்ல எனக்கு அக்சிடன்ட் நடந்தன்னைக்கு நயிட் ஸ்வேதா பெரியாதுக்குள்ள போய் மணல திருடி லோடு ஏத்துறது எல்லாத்தையும் லாரியோட நம்பர் கூட தெரியிற மாதிரி தெளிவா வீடியோ சூட் பண்ணியும் வச்சி இருக்கா.
அப்பறம் யார் யாருக்கு மணல வித்து இருக்காங்க, யாருக்கு எவ்வளவு கமிஷன், எத்தனை லச்சம் வரை கொள்ளைன்னு எல்லா டீடெயில்ஸ்ஸும் கலெக்ட் பண்ணி கைல வச்சி இருக்கா. அதை இன்னைக்கு அவ பத்திரிக்கையில ஆர்க்டிக்கில எல்லா ஆதாரத்தோடு பிரிண்ட் பண்ணிட்டா.
எல்லா ஆதாரத்தோடு நம்ம டிஸ்ட்டிக் கலெக்டர் கிட்டையும் கம்ப்ளண்ட் கொடுத்து இருக்கா அண்ட் பசுமை தீர்ப்பாயத்தின் வழி ஹைக் கோர்ட்லையும் பொதுநல வழக்குப் போட்டு இருக்கா.
அவ ஒன்னும் சும்மா இல்ல, கடந்த இரண்டு வருஷமா தமிழ்நாட்டுல நடக்குற பல மணல் கொள்ளைய பொது மக்களுக்கு தெரிய வச்சி இருக்கா. ஆதாரமில்லாம இங்க எதுவும் நாங்க பேசல.
அதனால சித்தப்பா உன் அயோக்கிய மாமனுக்கு சப்போர்ட் பண்ணுறேன் உள்ள வந்து நீயும் மாட்டிக்காத உன் நல்லதுக்குத் தான் சொல்லுறேன். அப்பறம் ஸ்வேதா மேல கைவைக்கணும்னு நினைச்ச உன் உடம்புல உசுரு இருக்காது!” என அழுத்தமுடன் அன்பு பேசி முடிக்க அவன் அடங்கி அமைதியுடன் நகர்ந்து கொண்டான்.
இராஜமணிக்கத்திற்கு கோபம் பொங்க ஸ்வேதாவையும் அன்புவையும் கொன்று விடுவது போல் ஒரு பார்வை பார்த்தார். இனி கேஸ் நடக்கையில் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணினார்.
கைது செய்ய வந்த அதிகாரிகளிடம் தன் மகளின் திருமணத்தைப் பார்க்க ஐந்து நிமிடம் அவகாசம் மட்டும் கேட்டு நின்றார். அவர் அன்புவை பார்க்க, அவன் சந்திரனைப் பார்த்தான்.
“ஏன் மாமா இவ்வளவு நடந்த பிறகும் இந்த கல்யாணம் நடக்குமுன்னு நீங்க எதிர்பார்குறீங்களா? இனி இந்த கல்யாணம் நடக்காது என்னால ஒரு அயோக்கியன், கொள்ளக்காரனோட மகள கல்யாணம் பண்ணிக்க முடியாது!” எனச் சந்திரன் கூறினான்.
உறவுகள் அனைவருமே மேலும் அதிர்ந்து நின்றனர். தான் செய்த பாவங்கள் மகளின் வாழ்வைப் பாதிக்கையில் தான் அவரும் தான் செய்தது தவறு என்று உணர்ந்து வேதனையுடன் நின்றார். பூங்கோதை மட்டும் மேடையிலிருந்து இன்னும் எழாமல் இருந்தாள்.
செல்வா எதுவும் பேசவில்லை எனினும் அமைதியுடன் நின்றிருந்தான். எது எல்லாம் நடக்கக் கூடாது என்றெண்ணினானோ அதெல்லாம் அவன் முன்னே நடந்து கொண்டிருந்தது. பூங்கோதையின் சொந்தங்கள் எதுவும் பேசும் தகுதியின்றி நிற்க, சந்திரனின் நெருங்கிய சொந்தங்கள் அவன் செயலை கண்டித்தனர்.
விஜயராகவனும், “சந்திரா, உனக்கு என்ன கல்யாணம் விளையாட்டாப் போச்சா? அப்பன் பண்ண தப்புக்குப் புள்ள என்ன பண்ணும் அவள எதுக்குடா வேண்டாங்குற?” என்றார் அதட்டலுடன்.
“ஒரு பொண்ண மனையில உக்கார வச்சி வேண்டாம்னு சொல்லுறது பாவம்டா! இதுக்கு முன்னாடி ஒரு தடவை உனக்கும் கல்யாணம் ஏற்படாகி நின்னுருக்கு மறுபடியும் நிக்க வேண்டாம்ப்பா” என வசந்தா வேண்ட, ” எனக்கு அத பத்திலாம் எந்த கவலையுமில்ல” என அசால்ட்டாக கூறினான்.
“ஏன்டா பெரியவங்க நாங்களே ஏத்துக்கிட்டோம் அப்பறம் என்னடா உனக்கு?” என சங்கரலிங்கமும் கேட்க, “அதெல்லாம் சரி, இந்த பொண்ண ஏத்துக்க முடியாது. நாளைக்குச் சொந்த பந்தம் முன்னாடி திருடன் வீட்டுக்கு சம்பந்தின்னு சொல்லிகிட்டா நிக்க முடியும்!” என்றார் ருக்மணி.
தன் பெண்ணிற்காகச் சந்திரனின் குடும்பமே அவனிடம் பேசுவதை பார்க்கையில் அவர்களின் பெருந்தன்மை எண்ணி வியந்தார் இராஜமணிக்கம். யார் கூறியும் சந்திரனின் பிடிவாதம் தளரவில்லை, அனைவரும் என்ன செய்வது என்று தெரியாது இயலாமையில் நின்றனர்.
அன்பு சரவணனிடம் பொதுவாகப் பேசுவது போல் விஜயராகவன் முன், “என்ன அண்ணா அந்த செல்வாவ என் புள்ள மாதிரி, புள்ள மாதிரின்னு சொல்லுவாங்களே அதெல்லாம் சும்மா போல இருக்கே!” என்றான்.
அன்பு எடுத்துக் கொடுத்ததை பிடித்துக் கொண்ட விஜயராகவன் செல்வாவின் அருகே சென்று அவன் கழுத்தில் ஒரு மாலையிட்டு மேடையில் பூங்கோதையின் அருகே அமர்த்தினார். சந்திரனும் எதுவும் மறுப்பு தெரிவிக்காமல் இருக்க, பூங்கோதையும் மௌனமாகவே இருந்தாள்.
பூங்கோதையின் தாய், மற்றும் நெருங்கிய உறவுகள் சிலர் மறுத்தனர். “அது எப்படி நீங்க செல்வாவை உக்கார வைக்கலாம்? அவன் ஜாதி என்ன? அவன் அத்தஸ்து என்ன?”
“நீங்க உங்க புள்ள மாதிரின்னு சொல்லிக்கிட்டா மட்டும் உங்க புள்ளையாகிடுவானா? என்ன இருந்தாலும் அவன் வேற ஜாதி தானே?”
“இதுக்கு எங்க பொண்ணு கல்யாணம் நடக்காம வீட்டுலயே இருந்தா கூட பரவாயில்லை” என்பது போல் ஒவ்வொருவரும் பேசினர். உருவமில்லா வறட்டு கௌரவத்தைக் காக்க துடிக்கும் கூட்டம்.
விஜயராகவன், “என் சொல் பேச்சை கேட்காத என் சொந்த புள்ளைக்கு எவ்வளவு செய்வேனோ அதே மாதிரி என் செல்வாக்கும் செய்றேன்” எனச் சபையில் வாக்களித்தார்.
அப்போதும் உறவுகள் அமைதியடையாமல் இருக்க, அன்பு முன் வந்து நின்றான். “தன் புள்ள கல்யாணம் நின்னதை கூட பெருசா நினைக்காம உங்க பொண்ணு கல்யாணம் நிக்கக் கூடாதுன்னு நடத்துராரு. நீங்க என்னடான்னா இப்படி பேசுறீங்க? அப்படி ஜாதி தான் வேணும்னா உங்க ஜாதியில உங்க வீட்டு மாப்பிள்ளை யாருக்காவது இப்பவே இந்த பொண்ணை கட்டிவைங்க, கட்டிக்க போற அந்த புள்ளையே அமைதியா ஏத்துகிச்சு, இதுக்கும் மேல எவனாவது பேசுனீங்க” என்றான். அவன் பேச்சில் அனைவரும் அடங்கிவிட்டனர்.
உறவுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு அமைதியாகி விட, அப்போது மேடையிலிருந்து எழுந்த பூங்கோதை, “அவர் இருக்குற வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நான் கல்யாணம் பண்ணிகனும்னா அவரை முதல்ல இங்க இருந்து போகச் சொல்லுங்க” என்றாள் ஆத்திரத்துடன்.
என்னதான் தவறு செய்திருந்தாலும் தந்தையை அவ்வாறெல்லாம் சொல்ல வேண்டாமென்று அன்னையும், உறவுகளும் கூறியும் கேட்கவில்லை. நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் தந்தை இங்கு இருக்கக் கூடாது என்றே பிடிவாதம் பண்ணினாள்.
இராஜமாணிக்கம் சர்வமும் அடங்கி நின்றார். அவர் செய்தது தவறு என்று அப்போது தான் உணர்ந்தார். மரணமே தண்டனையாக வந்திருந்தாலும் அயர்ந்திருக்க மாட்டார் ஆனால் மகள் தந்த தண்டனை அவருக்கு மரணத்திற்கு இணையான வலியைத் தந்தது.
ஆசைமகளின் திருமணத்தைப் பார்க்க எண்ணியவரை அவர் மகளே பார்க்க விடாது செய்துவிட, நெஞ்சடைக்கும் வேதனையையோடு அவளை பார்த்தார். பூங்கோதையின் ஒரு கை செல்வாவின் கையை பற்றியிருக்க இதழில் வெற்றி புன்னகை, மாறாகக் கண்கள் ஏனோ கலங்கி இருந்தது.
அதற்குள் அன்பு நெருங்கி வந்து இராஜமாணிக்கத்திடம், “நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்” என்றான். சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்து கோடி மடங்கு நன்மையாம் என்ற அர்த்தம் உணர, அவனைத் தலை நிமிர்ந்தும் அவரால் பார்க்க இயலவில்லை.
பின் போலீஸின் பக்கம் திரும்பியவன்,”இன்னுமா அவர் கேட்ட டைம் முடியல?” என்க, அவர்கள் தலையாட்டியவாறு இராஜமாணிக்கத்தை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
நல்லுள்ளங்களும், நட்பும் சூழ ஐயர் தந்த மாங்கல்யத்தை மனநிறைவோடு வாங்கி பூங்கோதையின் கழுத்தில் கட்டினான் செல்வா. அனைவரும் தங்கள் ஆசியை அட்சதையோடு தூவி வாழ்த்தினர். பூங்கோதை நன்றியுடன் அன்புவை பார்க்க, செல்வா நன்றியுடன் சந்திரனைப் பார்த்தான்.
அம்மனை வணங்கி வந்தவர்கள், சந்திரன் வீட்டுப் பெரியோரிடமும் ஆசி பெற்றுக்கொண்டனர். பின் அனைத்து சடங்குகளும் இனிதே நிறைவடைந்தது.
இம்முறையும் சந்திரனின் திருமணம் தடைப்பட்டதால் அவன் உறவுகள் ஆளுக்கொன்றை பேசிச் சென்றனர். அதில் சந்திரனின் மீது விஜயராகவனுக்கு அதீத கோபம்.
சந்திரன் வீட்டிற்குள் நுழையும் போதே உறவுகள் எல்லாம் சிலர் சென்றிருக்க, சிலர் அப்போது தான் ஏதேதோ பேசியவாறு சொல்லிச் சென்றனர். அவனிடம் விடை பெற்றுச் செல்பவர்கள் கூட அவனை பரிதாபமாகப் பார்ப்பது போல் தோன்றியது.
எரிச்சலோடு வெளியே அமர்ந்திருந்தவன் தன் அறைக்குச் செல்ல எதிரே வந்த விஜயராகவன் எதுவும் பேசாது முகம் திருப்பிக் கொண்டு சென்றார். அவருக்குச் சந்திரனின் மீது கோபம், என்றுமே தந்தை இவ்வாறு செய்ததில்லை. அவர் உதாசீனம் மேலும் அவன் வலியைக் கூட்டியது.
அறைக்குள் சென்றவன் உடை மாற்றினான். ஏதோ வெறுமையான உணர்வு நெஞ்செல்லாம் பரவியது. அங்கு இருப்பதே மூச்சு முட்டுவது போன்ற உணர்வில் தவித்தான்.
மீண்டும் வீட்டிலிருந்து வெளியே வந்தவன் பைக்கை எடுத்துக் கொண்டு தோப்பு வீட்டிற்குச் சென்றான்.
மாலை நெருங்கும் நேரம் சந்திரனைக் காண வந்தான் செல்வா. தோப்பு வீட்டில் வெளியே மரத்தடியில் ஒரு கட்டிலில் சோர்வோடு படுத்திருந்தான் சந்திரன். செல்வா நெருங்கி வர விழித்திறந்து எழுந்தவன் அவனைக் கோபம் பொங்க முறைத்தான்.
“ஏன்டா இப்படி பண்ண? உன் கல்யாணத்தை நிறுத்தித் தான் அவளை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணுமா?” என முடிப்பதற்குள் எழுந்து வந்து அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான் சந்திரன்.
செல்வாவின் ஒரு கன்னத்தில் அறைந்தவன், அவன் சட்டையைப் பிடித்து இழுக்க முதல் இரண்டு பட்டன் தெறித்து வீழ்ந்தது. அவன் சட்டையை விலக்கி, நெஞ்சின் முன் விரல் நீட்டியவாறு,”இது என்ன சொல்லுடா? இது என்ன? உனக்கு என்ன பெரிய தியாகினு நினைப்பா?” என்றான் ஆத்திரமுடன்.
செல்வா நெஞ்சில், இதயவடிவத்திற்கு நடுவில் கோதை என்ற பெயர் பச்சைக்குத்தி இருந்தது.
மீண்டும் நெருங்கி வந்து கோபமுடன் அவன் சட்டையைப் பிடித்தவன்,”எப்படிடா நீ நெஞ்சில சுமக்குறவள நான்..ச்சே..” என பேசயியலாது அவனை உதறியவாறு திரும்பி நின்று தலை கோதினான் சந்திரன்.
செல்வா என்ன பேசுவதென்று தெரியாது மௌனமுடன் நிற்க, மீண்டும் அவன் புறம் திரும்பிய சந்திரன்,”அப்படி என்னடா பண்ணிட்டேன் நான் உனக்கு?” என மென்குரலில் கேட்க, “எனக்கு எல்லாமே நீ தானடா!” என்றான் செல்வா.
சட்டென செல்வாவை ஆரத்தழுவிக் கொண்டான் சந்திரன். எத்தனை உறவுகள் தன்னை வீழ்த்தினாலும் விழாது தாங்கிப் பிடிக்க இவனின் ஒற்றை நட்பு போதும். நல்ல நட்பு கிடைப்பதெல்லாம் கடவுள் கொடுக்கும் வரமல்லவா?
அவனை விலக்கிவிட்டு நிமிர்ந்து நின்றவன்,மீண்டும் அவனைக் கோபமாக முறைத்தவாறு,”இந்த மாதிரி எல்லாம் பேசிகிட்டு என் பின்னாடி திரிஞ்ச உன்ன கொன்னுடுவேன், இனியாவது அந்த புள்ள கூட சந்தோஷமா வாழு போ!” என்க, செல்வா சிரித்தான்.
“ஏன்டா அவளுக்குன்னு ஒரு மனசு இருக்கும்னு தோணவே இல்லையா உனக்கு? எனக்கு வரக் கோபத்துக்கு உன்ன….என் மூச்சிலையே கொஞ்ச நாளைக்கு முழிக்காத போயிடு. பூவுக்காகத் தான் உன்ன விட்டு வைக்குறேன், அவ கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வந்தது உன்ன தொலைச்சிடுவேன்” என பூங்கோதையின் அண்ணன் போல் மிரட்டினான்.
மேலும் சிரிப்புடனே சந்திரனை நெருங்கி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு,”ரொம்ப நன்றிடா சந்திரா!” என்க, “அதை அந்த அன்புகிட்ட போய் சொல்லு, உன் மேல கேஸ் கொடுக்காம விட்டதுக்கு” என்றான்.
தவறு செய்தவர்களை அத்தனை எளிதில் விடுவானா அன்பு? அதுவும் தான் செய்தது சிறு தவறா? அப்படி இருந்தும் விட்டிருக்கிறான் எனில் தனக்காக பூங்கோதையோ,சந்திரனோ அவனிடம் பேசி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து மௌனமுடன் நின்றான்.
“போங்க புது மாப்பிள்ளை, போய் உங்க வேலைய பாருங்க!” எனக் கிண்டலோடு அவனை அனுப்பி வைத்தான் ஜெயசந்திரன்.