உயிரின் துளி காயும் முன்பே  –   4

மகேந்திரன் மாதவன் இருவரும் பால்யகால  நண்பர்கள் அவர்கள் நட்போடு தொழிலும் வளர்ந்தது, மகேந்திரன் சுமதியின் மூத்த புத்திரன்  சச்சிதாநந்தனுக்கு, மாதவன் ராதிகா தம்பதியின் மூத்த மகள் வானதியை மனம் முடிக்கத் தந்தைமார் இருவரும் தொழில்முறை  ஒப்பந்தம்போலப் பேசிவைத்துக்கொண்டனர்.

பிள்ளைகள் என்ன யோசிக்கிறார்கள் அவர்கள் விருப்பம் என்ன என்று நண்பர்கள் யோசிக்கவில்லை, இவர்கள் யாரும் யோசிக்கமுடியாத… கனவில் கூடக் கற்பனை செய்யாத நேசத்தை சங்கமித்ரா மீது வைத்திருந்தான் சச்சிதானந்தன்.

அவனைவிட நான்கு வயது சிறியவள் ஒரே பள்ளி, எப்பொழுது என்று தெரியாமல் காதல் என்றால் என்ன என்று அர்த்தம் கூட அறியாத வயதில் அவள்மீது நேசம் வந்துவிட்டது அவனுக்கு.

இருவரின் மனதும் இடம்மாறி காதல் கடலில் அவர்கள் மிதந்து கொண்டிருக்க, இந்த விஷயம் தந்தைகளின் செவியில் எட்டும் நேரம் மித்ரா கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தாள்.

மேல் படிப்புக்கு வெளிநாடு செல்ல விருப்பம் இல்லை என்று இங்கயே தங்கிவிட்ட மகனின் நடவடிக்கையில் சந்தேகம் வந்து கண்காணிக்க உண்மை வெளிவந்தது.

அவனிடம் அதைப் பற்றி ஏதும் கேட்க வில்லை மெல்ல ஆறப்போட்டு அவனின் சந்தேகத்தைத் தூண்டாமல் தொழில் முறை பயணமாக அவனை  மாதவனுடன் அமெரிக்கா அனுப்பினார் மகேந்திரன்.

அவன் சென்ற அன்று இரவு மித்ராவின் வீட்டின் கதவுகள் உடைபடும் அளவு தட்டப்பட இந்த இரவு வேலையில் யார் என்ற பயத்தோடு கதவைத் திறந்தார் சங்கமித்ரா அலக்நந்தாவின் தந்தை பாண்டியன்.

அவர் நெஞ்சில் எட்டி மிதித்தது மகேந்திரனின் கால் தெறித்து போய்த் தூர  விழுந்தார் பாண்டியன் “என்னங்க… ராசா… அப்பா…” என்று குரல்கள் அணைத்து பக்கமிருந்தும் ஒலித்தது.

சாரதாவின் சேலையை பற்றி இழுத்தான் மகேந்திரன் உடன் வந்தவன்,  மானத்தை மறைக்க மூலையில் ஒன்றினார் அவர்.

“ஐயோ… யாருடா நீங்க என்னடா வேணும்” என்று ராஜசேகர் குரல் உயர்த்த.

“ஏய் கிழவா சத்தம் வரக் கூடாது பொட்டப்புள்ளய ஒழுங்கா வளக்க தெரியல  உனக்கு எதுக்கு பேச்சு” என்றவர் மித்ராவை எரிப்பது போல் பார்க்க, பாண்டியன் தடுமாறி எழுந்து பெண்மக்களை தன் அணைப்பில் நிறுத்திக் கொண்டார்.

மஹேந்திரனுடன் அடியாட்கள்போல ஏழு பேர் நின்றனர் “கேவலம் பத்துக்கு பத்துக்கு இடத்துல தேங்கா கடை வெச்சுருக்க உனக்குக் கோடீஸ்வர சம்பந்தம் கேக்குதா??” என்க.

அனைவரின் மனமும் உடலும் தளர்ந்தது “உன் பொண்ணு இனிமே என் பையன் கண்ணுல விழக் கூடாது மீறி நடந்தா மொத்த குடும்பத்தையும்  உயிரோட எரிச்சுருவேன்” என்று மிரட்டிச் செல்ல அனைவரும் அப்படியே சரிந்து அமர்ந்தனர்.

இரவு ஒருவரும் உறங்கவில்லை மனம் முழுதும் பயம் பயம் மட்டுமே அலக்நந்தாவிற்கு அப்பொழுது வெறும் ஒன்பது வயது

இரவு மெல்ல விடிந்தது ஆனால் அவர்கள்  வாழ்வு ??.

முதலில் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டவர் பாண்டியன் தான், மகள்களிடம் “அம்மாடி ரெண்டு பெரும் போங்க குளிச்சுட்டு வாங்க” என்று  இருவரையும் அனுப்பிவிட்டு அன்னையை பார்க்க மகனைப் புரிந்து கொண்டவர் பேத்திகளுடன் அறைக்குள் சென்றார்.

ராஜசேகர் தோட்டத்திற்கும் செல்ல, சுவற்றில் சாய்ந்து  முட்டியில் முகத்தைப் புதைத்து அமர்ந்திருந்த மனைவியை நெருங்கிய பாண்டியன் “சாரதா” என்று அவர் தோள் தொட அப்படியே அமர்ந்திருந்தார் சாரதா.

“இங்க பாரு ஒன்னும் இல்ல எல்லாத்தையும் சரி பண்ணிடலாம், நீ இப்படி இருந்தா புள்ளைங்க பயந்துடுவாங்க எழுந்துக்கோ” என்க அவரிடமிருந்து மெல்லிய கேவல் வெளிப்பட்டது.

கணவனின் கண்முன்னே வேறொரு ஆடவன் கையால் சேலை பறிக்கப் படும்போது அந்தப் பெண்ணின்  மனம் படும்  வேதனை என்ன என்பதை அவரால் உணர முடிந்தது.

அவர் என்ன சினிமா நாயகனா பத்துபேரையும் அடித்து மனைவியின் சேலையை வாங்கி கொடுத்துத் துயரை போக்க.

சாதாரண ஒரு நடுத்தர குடும்ப தலைவன், சிறிதாகத் தந்தை தொடங்கிய கடையைக் கொஞ்சம் பெரிது படுத்தி நிறைய வாடிக்கையாளர்களை வைத்திருக்கும், தொழிலில் சுத்தம் மற்றும் உண்மையைக் கடை பிடிக்கும் மனசாட்சிக்கு பயந்த ஒரு சாமான்யன்.

அந்தக் கடையும் நான்கு படுக்கை அறைகளைக் கொண்ட ஒரு ஓட்டு வீடும் அதைச் சுற்றி இடமும் கொஞ்சம் தோட்டமும் உண்டு, பெண் பிள்ளைகள் என்பதால் சிறுக சிறுக சேர்த்த கொஞ்சம் நகைகள் அவ்வளவுதான் அவர்கள் சொத்து, ஆனால் மிக நிறைவான வாழ்வு.

மனைவியைக் கூட அதட்டி ஒரு வார்த்தை பேசாதவர் அவர், ராஜசேகர் இன்றும் அவருடைய மனைவி தாயம்மாவை  கேக்காமல் எந்த முடிவுகளையும் எடுக்கமாட்டார், தந்தையை பார்த்து வளர்ந்தவர் மனைவியைத் தங்கமாகத் தாங்கினார்.

இரண்டும் பெண் பிள்ளையான போதும் தனக்கு இரண்டு ராஜகுமாரிகள் என்று கொண்டாடுபவர்.

சாரதா மாமியார் மாமனார் மெச்சும் மருமகள், மாமியார் மருமகள் இடையில் ஒரு சின்னப் பூசல் கூட இதுவரை வந்ததில்லை மிக அமைதியாக வாழ்ந்த குடும்பம் அது ஒரு சூறாவளி இப்போது கடந்து போயிருக்கிறது.

கணவனைக் கட்டிக் கொண்டு அவர் கதற பெரியவர்கள் இருவருக்கும் நெஞ்சை அறுத்தது அந்த வேதனையின் குரல், ஒன்றும் செய்ய முடியாமல் நிற்க வைத்துவிட்டதே காலம், ஒரு வழியாக அவரைத் தேற்றி அனுப்பினார்.

அடுத்து என்ன என்ற சிந்தனை அனைவரின் உள்ளத்திலும் ஓடியது, குளித்து முடித்து அனைவரும் கூடத் தாயம்மா விளக்கு வைத்துக் கடவுளை வேண்டி அனைவருக்கும் விபூதி இட்டார், சாரதா அனைவருக்கும் குடிக்க கூழ் கொண்டு வரப் பெரிய மகளைத் தன் அருகில் அழைத்த பாண்டியன் “ராசாத்தி அப்பா சொல்றத நீங்கச் சரியா புரிஞ்சுக்கணும்” என்க அவள் பயத்தோடு அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

“நமக்கு ஒருத்தங்களை புடிக்கறது தப்பு இல்ல, இப்போ அந்தப் பையன் வீட்ல பிரச்னை இல்லனா உங்க படிப்பு முடிஞ்சதும் அப்பாவே பேசி நடத்தி கொடுப்பேன் “.

“ஆனா அவங்க ரொம்ப பெரிய இடம் நம்மள வாழ விடமாட்டாங்கடா, அவங்க ஆள் பலமும் பண பலமும் பாத்தீங்களா நம்மள மொத்தமா அழிச்சுடுவாங்க டா  வேண்டாம்மா நீங்க மேல படிங்க, அப்பா எங்க வேணா உங்கள படிக்க அனுப்புறேன், காலம் எல்லாத்தையும் மாத்தும் ராசாத்தி அப்பா சொல்றத கேளுங்க” என்க தந்தையின் மடியில் படுத்துக் கதறினாள் சங்கமித்ரா.

அவளை யாரும் ஒரு சொல் தவறாகப் பேசவில்லை அடிக்கவில்லை, காயப்படுத்தவில்லை உன்னால் தான் என்று குற்றம் சொல்லவில்லை அதுவே அவளுக்குக் குற்ற உணர்வைத் தந்தது.

நேற்று தந்தை வாங்கிய அடி, தாய் பட்ட அவமானம் அனைத்தும் தன் காதலால் என்று தெளிவாகப் புரிந்தது இது நடக்க வாய்ப்பில்லை என்றும் தெரிந்தது ஆனால் எப்படி மறக்க அவனை, மறக்க இயலுமா அழுது அழுது ஓய்ந்து போனாள் அவள்.

நேரம் ஒன்பதை நெருங்க இவர்களின் கடைக்கு அருகில் இருந்த பழக் கடையில் வேலை பார்க்கும் பையன் மூச்சிரைக்க ஓடி வந்து “அண்ணே உங்க கடைல வேற யாரோ ஒக்காந்திருக்காங்க, முதலாளி கேட்டதுக்கு நீங்கக் கடைய வித்துடீங்கன்னு சொல்லுறாங்க, அதுதான் முதலாளி உங்ககிட்ட கேட்டு வரச் சொன்னாரு” என்க உலகமே ஸ்தம்பித்துவிட்டது வீட்டினருக்கு.

பிரச்சனை இன்னும் முடியவில்லையா என்று தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள “நீ போ நாங்க வரோம்” என்று இருவரும் புறப்பட “எதா இருந்தாலும் பொறுமையா பேசுங்க அய்யா” என்றார் தாயம்மா.

அவர் முகத்தில் பதட்டம் “ஒன்னும் இல்ல தாயி நாங்க என்னனு பாத்துட்டு வரோம் நீங்கக் கதவை அடைச்சிக்கோங்க யாரு வந்தாலும் தொறக்காதீங்க” என்றவர்கள் கடைக்குச் செல்ல, பெண்கள் உயிரைக் கையில் பிடித்து உள்ளே அடைந்தனர்.

“ஏய் யாருப்பா நீங்க?? எங்க கடைல என்ன செய்றீங்க” என்ற ராஜசேகர் கேள்விக்கு அவரை நக்கலாகப் பார்த்தான் கல்லாவில் அமர்ந்திருந்தவன்.

“நீங்க வாங்குன கடனுக்குக் கடை என் பேருக்கு மாத்தியாச்சு, இப்போ வந்து ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குற” என்றவனை அதிர்ச்சியாகப் பார்த்தார் அவர்.

“ஏய் என்னாப்பா யாரு நீங்க என்ன பிரச்சனை” என்று மற்ற கடைக்காரர்கள் அருகில் நெருங்க, “என்ன பாண்டியன் ராத்திரி நடந்தது மறந்துடுச்சா” என்றவன்.

“பாண்டியன் என்கிட்டே கடன் வாங்கினான் இன்னும் கொடுக்கல, குடுக்க முடியலைன்னா கடையை எடுத்துக்க சொல்லிப் பத்திரம் கொடுத்துருக்கான் நான் போலீசுக்கு போவேன்” என்றவன் கூற.

“சரி வாப்போலீஸ் கிட்ட போய் எது உண்மை எது பொய்னு கேக்கலாம்” என்று ராஜசேகர் முன்னே நடக்க பாண்டியனுக்கு மனதில் எச்சரிக்கை மணி அடித்தது.

“அப்பா” என்று அவரை நிறுத்தியவர் “இருங்க அவசரப்படாதீங்க” என்றவர் மற்ற கடை காரர்களிடம் “நாங்க பாத்துக்கிறோம் நீங்கப் போங்க” என்று சொல்லிக் கடையின் உள்ளே சென்றார்.

 “அப்படி வா, இங்க பாரு உன் குடும்பத்தை இந்த ஊர்ல வெச்சுருக்க முடியாது கடை வீடு எல்லாத்தையும் குடுத்துட்டு இங்க இருந்து போற வழிய பாரு, உங்கள இங்க இருக்க விடக் கூடாது அது ஒண்ணுதான் அவர் கண்டிஷன்” என்றனர் மகேந்திரனை குறிப்பிட்டு.

 “நாங்க எந்தப் பிரச்னையும் பண்ண மாட்டோம் அவங்க பணபலம் எங்களுக்குத் தெரியுது, எங்க பொண்ண கூட வெளியூருக்கு அனுப்பி வெச்சுடுறோம் இது தான் எங்க பூர்விகம் இத விட்டு நாங்க எங்க போவ” என்ற பாண்டியனை பார்த்தவன்.

“நான் சொல்றது உனக்குப் புரியுதா இல்லையா, நீங்க இங்க இருந்தா வீட்டை விட்டு வெளில வேலைக்குனு போற நீங்க உயிரோட வீடு சேராம போக வாய்ப்பிருக்கு, கோவிலுக்குப் போற உன் அம்மா கடைக்குப் போற பொண்டாட்டி வண்டில அடிப்படை வாய்ப்பிருக்கு, ஸ்கூலுக்கும் காலேஜுக்கும் போற பொண்ணுங்க காணாம போக வாய்ப்பிருக்கு அதுதான் வேணுமா உனக்கு?” என்று இங்கு இருந்தால் என்ன நடக்கும் என்பதை கோடிட்டு காட்டினான்.

“அந்தத் தம்பி வந்தவுடனே உன் பொண்ண தேடி வரும் அப்படி ஒன்னு நடக்க கூடாது, நீங்க எங்க இருக்கீங்க என்ன ஆனீங்க எதுவும் அந்தத் தம்பிக்குத் தெரியக் கூடாது அவ்ளோதான், ஒரு குடும்பம் இருக்கே எங்கயாவது போய் வாழ்ந்துட்டு போகட்டும்னு நல்ல எண்ணத்துல சொல்றேன் கேக்கறதும் கேக்காததும் உன் இஷ்டம்” என்க.

இரண்டே நாட்களில் அந்த ஊரைக் காலி செய்து எங்கோ சென்றுவிட்டனர், அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தவன் அவளைத் தேடி பல இடங்களில் அலைந்தான்.

அனைவரும் சொன்ன ஒரே பதில் நிறைய கடன் வாங்கி இருந்தார்கள் அதில் சொத்துக்கள் பறி போன அவமானத்தில் எங்கோ சென்றுவிட்டார்கள் என்பதுதான்.

மஹேந்திரனும் மாதவனும் அவனை எப்பொழுதும் பிஸியாக வைத்திருக்கும் வேலையைப் பார்த்தனர், அவளைத் தேடும் பணியில் நிறைய முட்டுக்கட்டைகளை போட்டனர், தனக்கு எதிராக நடக்கும் சதி தெரியாமலே அவளுக்காக ஐந்து வருடங்களைக் காத்திருந்து கடத்தினான் சச்சிதானந்தன்.

சுமதியின் வழி பேசிப் பேசிக் கெஞ்சி அவனுக்கும் வானதிக்கும் திருமணம் நடத்தினர், இனி அவள் வரப்போவதில்லை என்ற எண்ணம் அவனுள் வந்திருந்தது.

வானதியுடன் திருமணம் முடிந்த பிறகும் இருவரும் வாழ்வை தொடங்க வில்லை, ஆறு மாதம் நேரம் எடுத்துக்கொண்டான் மித்ராவின் நினைவுகளை மனதில் புதைத்து வைத்துவிட்டு வானதியுடன் வாழத் தொடங்கினான்.

பெரிதாகப் பேச்சுக்களோ காதல் பார்வைகளோ, அவளுக்கென்று பரிசுப் பொருட்கள் சினிமா இப்படி எதுவும் கிடையாது, சச்சிதானந்தனுக்கு எப்படியோ… வானதி அவனை விரும்பியே மணந்து கொண்டாள்.

விவரம் தெரிந்த நாள் முதல் அவனைப் பற்றிக் கேட்டுக் கேட்டு வளர்ந்தவள், அவன் குணமே யாருடனும் அதிகம் ஒட்டாத தன்மையே அதனால் அவளுக்கு ஏக்கங்கள் இருப்பினும் பெரிதாகக் காட்டியதில்லை, அவர்களுடைய முதல் திருமண நாள் முடிந்து ஒரு மாதம் ஆனபோது வானதி தாய்மை அடைந்தாள்.

அவனுக்குமே கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு எழுந்தது, ஆனால் காரணம்  தெரியாமலே அந்தக் கரு களைந்து போனது, அந்த வருத்தத்தில் இருந்தவள் கொஞ்சம் நாட்கள் தாய் வீட்டில் சென்று தங்கினாள்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு கணவனுடன் சேர அவள் விரும்ப, அவன் ஒதுக்கம் காட்டினான் வேலை வேலை என்று ஓடினான், அவளிடமிருந்து தள்ளிப்போனான், காரணம் தெரியாமல் தவித்தவள் ஒரு நாள் அந்தக் காரணத்தை அறிந்து கொண்டாள் அவன் வாய்மொழியாக, அவள் வாழ்வே நரகமாக மாறிய நாள் அன்றுதான்.