உயிரின் துளி காயும் முன்பே – 7
காலை அன்னை தந்த உணவை உண்டு மாத்திரையும் போட்டுப் படுத்தவன் ஏதோதோ நினைவுகளில் சுழன்று ஏதோ ஒரு நொடியில் உறக்கத்தை தழுவினான்.
மீண்டும் எழுந்தபோது நேரம் மாலை நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது, அமைதியான ஆழ்ந்த உறக்கம் குளித்து உடை மாற்றி வர இன்னும் புத்துணர்வாக இருந்தது.
மகனின் வரவை எதிர்பார்த்து மாடியில் ஒரு கண்ணும் செய்தி தாளில் ஒரு கண்ணுமாகக் காத்திருந்த சுமதி அவன் வருவதை பார்த்ததும் வேகமாகப் படியின் அருகில் சென்று அவன் நெற்றிக்காயத்தை பார்த்துக்கொண்டே “இப்போ எப்படி இருக்குப்பா” என்க.
அவர் கையைப் பிடித்தவன் “ஐ ஆம் குட் மா, பசிக்குது என்ன இருக்கு சாப்பிட” என்றான்.
“உனக்கு என்ன வேணும் சொல்லு அம்மா உடனே பண்றேன்” என்றார் சுமதி.
இதழ் பிரிய புன்னகையை சிந்தியவன் “பொடி இட்லி” என்க.
“நீ உக்காரு பத்துநிமிஷம் வந்துடுறேன்” என்று கிட்டத்தட்ட ஓடினார் அடுக்களைக்கு, தன் போனை எடுத்து மெயில் செக் செய்துகொண்டிருந்தான்.
கிச்சனில் மாமியாரும் மருமகளும் என்ன நடந்தது எப்படி காயம் ஆனது என்று கேட்க நினைத்தாலும் அவனிடம் கேட்க முடியாமல் நின்றனர், எப்படியும் பதில் வரப்போவதில்லை, அவனிடம் கேட்கவும் பயம் எடக்காக ஏதேனும் பதில் சொல்லுவான் தெரியாமல் மண்டை வெடிக்கும் போல் இருந்தது இருவருக்கும், சிறிது நேரத்தில் பொடி இட்லியும் சுட சுட இஞ்சி டீயும் அவன் முன் வந்தது, அமைதியாக உண்டவன் அவர்களின் பார்வையை உணர்ந்திருந்தாலும் எதுவும் பேசவில்லை.
உண்டு முடித்தவன் “தென் வாட் நெஸ்ட் அண்ணி” என்றான் வானதியிடம்.
“என்னிடமா?? என்ன கேட்கிறான்….” என்று விழித்தவள் “புரியல பாரி” என்க.
“அடுத்து என்ன பண்ண போறிங்கனு கேட்டேன்” என்க “டேய் எனக்கு இங்கிலீஷ் தெரிலனா சொன்னேன்” என்று அவள் பார்க்க அவளைவிடக் கூர்மையாக அண்ணியை பார்த்தான் பாரிவேந்தன்.
“நிஜமா நீ என்ன கேக்குறன்னு எனக்குப் புரியல” என்றவளை பார்த்தவன் “சச்சிக்கு பேபி இருக்குனு தெரிஞ்ச அப்பறம் உங்க முடிவு மாறும்னு நாங்க எதிர் பாத்தோம், பட்… ஸ்டில் யூ ஆர்” என்று கையை விரித்தவன்.
“நீங்க இப்படி இருக்கறத பார்த்து அவங்க வருத்தப்படணும், தப்பு செஞ்சுட்டோம்னு பீல் பண்ணனும் அப்படினு நினைக்கிறீங்களா” என்றவனை “பாரி என்ன பேசுற” என்று சுமதி தடை செய்ய.
“மா ப்ளீஸ் யு ஆர் பாம்பேரிங் ஹேர், நீங்கத் தெரிஞ்சோ தெரியாமலோ அவங்க பண்றத சப்போர்ட் பண்றீங்க, ஷி நீட்ஸ் எ பெட்டெர் லைப், என்கிட்டே வந்துடுன்னு அவன் கிட்ட கெஞ்ச போறிங்களா, லெட் ஹிம் கோ… ஹி ஆல்ரெடி கான் அண்ணி!! யோசிங்க” என்றவன்.
“மா” என்று அன்னைக்கு கண் காண்பித்தான் பேசுங்கள் என்று “நான் வண்டலூர் போறேன்” என்றவன் வெளியேறச் சுமதி மருமகளை பார்த்தார், அவள் அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்தாள்.
மகன் சொன்ன விதம் கடினமாக இருக்கலாம் ஆனால் அது நூறு சதவீதம் உண்மை, சச்சி இனி வரப்போவதில்லை அவனுக்காக இவள் ஏன் காத்திருக்க வேண்டும், வானதியின் மனதை மாற்றத் தானும் முயற்சி செய்ய வேண்டும் என்று அந்த நொடி அவருக்குத் தோன்றியது.
இன்னும் கொஞ்சம் கடினமாக அவளிடம் முன்பே கூறி இருக்க வேண்டுமோ, அவளை அவள் வீட்டிற்கு அனுப்பி இருக்க வேண்டுமோ என்று இப்பொழுது யோசித்தார் சுமதி.
தன்னுடைய காரில் அமர்ந்தவன் எப்பொழுதும் கையில் வைத்திருக்கும் சூயிங் கம் எடுப்பதற்காகக் கார் ட்ரையர் திறந்து பார்க்க உள்ளே மூலையில் கிடந்தது அந்த ஜிமிக்கி பொதிந்த பேப்பர்.
அதைத் திறந்து ஜிமிக்கியை கையில் எடுத்துத் தடவிப் பார்த்தான், மீண்டும் அங்கேயே வைத்துவிட்டு போகும் வழியில் அழகான சிறு பரிசுகள் வைக்கும் பெட்டகம் வாங்கினான், அதில் அந்தக் கம்மலை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான்.
நினைவுகள் மீண்டும் நான்கு மாதங்கள் முன்பு சென்று நின்றது, வண்டலூர் வீட்டில் ஒரு நாள் காலைப் பிளாக் காபியோடு பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்க நேரே இருந்த வீட்டின் பால்கனியில் கதவைத் திறந்து வெளியில் வந்தாள் அலக்நந்தா.
முதலில் அவளைப் பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான் “மித்ராவா?” என்ற அவனின் எண்ணத்தைத் தவறு என்றது அவளின் பெரிய விழிகள், மீண்டும் பார்த்தபோது மித்ரா அல்ல என்று புரிந்த நொடி அவளின் தங்கையா என்று சந்தேகம் வந்தது.
உடனே கீழிறங்கினான் இவனின் வீட்டின் நேரே கீழே சம்பத்தின் வீடு “வாடா” என்றவனை தள்ளிக்கொண்டு பால்கனி சென்றவன் அங்கு எதிர்ப்பக்கம் நின்றவளை காண்பித்தான்.
நண்பனைத் திரும்பிப் பார்த்த சம்பத் “மித்ராவோட தங்கச்சி அலக்நந்தா” என்க அவளின் விழிகளைப் போலே அவளின் பெயரும் பதிந்துவிட்டது மனதில் அவன் அறியாமலே.
“இங்கதான் இருக்காங்களா” என்றான் கடுமையாக அண்ணன் அவனின் காதலியின் குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறானா என்ற வெறுப்போடு.
“இல்ல பாரி, அவ இங்க வீட்டு வேலை செய்யறா” என்ற நண்பனை நம்பாமல் பார்த்தான் பாரிவேந்தன்.
மித்ரா அவனின் அண்ணனுடன் காதல் வயப்பட்டபோது நடந்த பிரச்சனை, அவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு நடந்தது அனைத்தும் சரியாக இப்பொழுதுதான் பாரிவேந்தனுக்கு தெரியவந்தது.
“என்ன? இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு பாக்கறியா” என்றான் சம்பத் பாரிவேந்தனிடம்.
அவன் தலை அசைக்க “உன் மாமனார்தான் சொன்னார், பெரிய பொண்ணு லைப் நல்லா இல்ல அட்லீஸ்ட் சின்னப் பொண்ணு நல்லா வாழ்வானு பாத்தா நீயும் வீணாவும் டைவோர்ஸ்ன்னு வந்து நிக்குறீங்க, பாவம் மனுஷன் என்ன பண்ணுவாரு”.
“முழ போதைல மாப்பிள்ளையோட பிரெண்ட்னு என் கிட்ட நியாயம் கேட்டு வந்தாரு மொத்தமா எல்லாத்தையும் உளறிட்டு போய்ட்டாரு” என்க பாரிவேந்தன் கைகளைக் கட்டிக்கொண்டு தூரே பார்வை பதித்து நின்றான்.
தங்களின் திருமண முறிவில் தன் மீது தவறும் இல்லை தான் செய்வதற்கும் எதுவும் இல்லை என்பதால் அமைதியாகவே நின்றான், அவன் தோளில் தட்டிய சம்பத் “ரிலாக்ஸ் பாரி உன்மேல தப்பில்லன்னு எல்லார்க்கும் தெரியும்” என்றபோது.
“என் மேல தப்பே இருந்தாலும் யாருக்கும் விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றான் பாரி.
“அதான உனக்குப் போய் ஆறுதல் சொல்லணும்னு நெனச்சேன் பாரு என்ன சொல்லணும்” என்று மனதில் எண்ணியவன் “சரி வாச்சாப்பிட போலாம்” என்று அவனையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
அடுத்து வந்த ஆறு நாட்களும் காலைவேளை காபி கப்போடு பால்கனியில் தஞ்சம் அடைய தொடங்கினான், ஏன் எதற்கென்று தெரியவில்லை என்ன எதிர் பார்க்கிறான் என்றும் புரியவில்லை.
ஆனால் அவளைக் காணும் நொடிகள் எல்லாம் வறண்ட பூமியில் விழுந்த மழைத்துளியை இழுத்துக்கொள்ளும் மண் போல அவன் மணம் அவளை உள்ளே மெல்ல மெல்ல நிறைத்துக்கொண்டிருந்தது.
அவள் சென்றபிறகு அங்கேயே விழிமூடி அமர்ந்திருப்பான், தன்னை சுற்றிலும் அவள் நிற்பதை போன்ற உணர்வு ஏதோ சொல்லமுடியாத அமைதியும் நிம்மதியும் இந்த ஆறு நாட்களில் அவன் மனதில் வந்து சேர்ந்திருந்தது.
அவள் வேலை செய்யும் வீட்டில் இருக்கும் இளைஞர்கள்பற்றி விசாரித்து அறிந்து கொண்டான், அவளுக்கு அங்கே பாதுகாப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டான்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு தாத்தாவுடன் கோவிலுக்குச் சென்று வந்தவளை பார்த்தான், புதிய உடை அணிந்திருந்தாள் தலையில் பூச்சூடி காதில் அந்தக் கிளிக்கூண்டு ஜிமிக்கி ஆடிக் கொண்டிருந்தது
அங்கு இருந்த இரண்டு வாரமும் அவள் மட்டுமே அவன் சிந்தை முழுதும் நிறைந்திருந்தவள்.
அமெரிக்கா சென்றவன் மூன்று மாதம் கடந்து திரும்பிவந்திருக்க அதன் அடுத்த நாள் சச்சி வானதியின் ஒன்பதாம் வருட திருமண நாள்.
அன்று முழுதும் அவள் ஒன்றும் சாப்பிடாமல் அறைக்குள்ளே முடங்கிக் கிடக்க, அன்னை ஒரு புறம் அழுது கரைய, அலக்நந்தாவின் நினைவு அவனைப் பித்தம் கொள்ள செய்தது.
அவள்மீது தனக்கு அளப்பரிய காதல் வந்துவிட்டதை அவன் இந்த மூன்று மாதத்தில் அறிந்துகொண்டான், அவள் இந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக வந்தாள்!! என்ன ஆகும் என்ற சிந்தனை தோன்ற மண்டை வெடித்தது.
அத்தனை அழுத்தங்களையும் தாங்க முடியாமல் மதுவை நாடி சென்றான், முதன் முதலில் அவளை அருகில் பார்த்த நொடி அப்படியே அவளை அணைத்துக்கொள்ள சொல்லி மணம் கூச்சலிட்டது.
“இந்த அழகை கொண்டு யார் வாழ்வை அழிக்கப் போகிறாள் இவள்” என்று மித்ராவின் வீட்டில் அவளைப் பார்த்துப் போதையில் அவன் மணம் கேட்டபோது, “அழிப்பதற்கல்ல என் வாழ்வை மலர்விக்க வந்தவள் இவள்” என்ற எண்ணத்தோடு தான் அவளை நெருங்கினான்.
அருகில் வந்தவனின் மீது இருந்து வந்த மதுவின் நெடியில் அவள் முகம் சுருங்கிவிட அவனின் காதல் காயம் கண்டது, என்னைப் பார்த்து முகம் சுளிப்பாளா இவள் என்ற உரிமையுணர்வில் அவளிடம் கோபம் கொள்ள அந்த விபத்து நிகழ்ந்துவிட்டது.
நினைவுகளிலிருந்து மீண்டவன் தன்னுடைய வண்டலூர் வீட்டிற்கு வந்திருந்தான்.
அவள் எப்படி இருக்கிறாள் என்று அறிந்துகொள்ள வேண்டும் யாரிடம் கேட்க மித்ராவிடம் பேச விருப்பம் இல்லை, சம்பத்திடம் இப்பொழுது சொல்லுவதை பற்றி அவன் இன்னும் முடிவு செய்ய வில்லை.
சம்பத் மனைவியையும் குழந்தையையும் பார்க்க ஏர்க்காடு சென்றிருந்தான், அவனின் மனைவியின் ஊர் அது குழைந்தை பிறந்து நான்கு மாதம் ஆகிறது.
தினமும் காலை அவளுக்காகப் பால்கனியில் காத்திருந்தான் அவள் வரப்போவதில்லை அவன் அறிவான், கையில் காயம் பெரிது அதை வைத்துக்கொண்டு அவளால் வேலை செய்ய இயலாது, என்றாலும் மணம் அவளைக் காண தவம் கிடந்தது.
நான்காம் நாள் சம்பத் அழைத்துத் திட்டிக்கொண்டிருந்தான், இரண்டு நாட்களுக்கு முன்பே மருத்துவமனைக்குச் சென்றிருக்க வேண்டும் இன்னும் செல்ல வில்லை, அவர்கள் அழைப்பையும் பாரி எடுக்கவில்லை.
காலை அவனை அழைத்த சம்பத் “இன்னைக்கு நீ போகலானா நைட் நான் அங்க வந்துடுவேன்” என்று அழைப்பைத் துண்டித்தான், அதனால் காலைத் தயாராகி மருத்துவமனை சென்று திரும்பி வரும் வழியில் ஒரு குருட்டு நம்பிக்கையில் அரசு மருத்துவமனை முன்பு சென்று நிற்க.
அங்கிருந்த பெரிய மரத்தின் நிழலில் தாயின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்தாள் அலக்நந்தா, கையில் சில பேப்பர் வைத்துக்கொண்டு அருகில் நின்றிருந்தார் ராஜசேகர்.
பார்த்தவனின் விழிகள் அவளில் மட்டுமே நிலைத்திருந்தது, எங்கெல்லாமோ வெயிலில் அலைந்து திரிந்து இறுதியில் நிழலைக் கண்ட பறவையைப் போலச் சட்டென்று உடல் இறுக்கம் தளர்ந்தது.
மிகவும் இளைத்துவிட்டாள் வாடிய கொடிபோலச் சுருண்டு படுத்திருந்தாள், சீட்டில் சாய்ந்து விழிகள் மூடிக்கொண்டவன் இதழ்கள் மட்டும் மெல்லிசையாக அழைத்தது “அழகி……” என்று.
ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய் ஏன் ஒரு பாதி
சிரித்தாய் என் உயிர் பூவை
எரித்தாய்
முதல் நாள்
பார்த்தாய் உறக்கம்
கெடுத்தாய் முறையா
என்றேன் கண்கள்
பறித்தாய் என் வலி தீர
ஒரு வழி என்ன என் பனிப்
பூவே மீண்டும் பார்த்தால்
என்ன