அந்த நொடி முடிவு செய்தான் என் ஊரிலே இனி இருந்து வேலை பார்க்க வேண்டும் என் திறமைமீது நம்பிக்கை இருப்பவன் நான் எங்கிருந்தாலும் வரப்போகிறான் என்று.
அவளிடம் அதைக் கூறவில்லை தன் அழகிக்கு ஒரு சர்ப்ரைஸ்க்காக வைத்துக்கொண்டான், அவளுடன் இரண்டு நாட்களில் திரும்பி வந்தவன் தாயிடம் அவள் பொறுப்பைக் கொடுத்து மீண்டும் சென்றான்.
நந்தா வந்தபிறகு இரண்டு முறை வீட்டிற்கு வந்து சென்றாள் பத்மா, நந்தாவிடம் தேனொழுக பேசினாள் பாரியை பற்றி உயர்வாகக் கூறினாள் ஒரு மாதத்தில் பாரி திரும்பி வர அவர்களின் தினசரி வாழ்க்கை அழகாக நகர்ந்தது.
திருமண வாழ்வின் ஆறாம் மாதம் நிறைவடைய அன்று கடற்கரை வீட்டில் இருந்தனர் இருவரும், கூடலின் நிறைவில் முத்தங்களால் அவளை நிறைத்துக் கொண்டிருந்தவன் அவள் வயிற்றில் முத்தம் வைக்க அவன் முடியைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தாள்.
“எனக்கு அப்புறம்தான் உங்களுக்கு யாரா இருந்தாலும் இங்க குடுங்க” என்று அவள் இதழைக் காட்டினாள் சிரித்துக்கொண்டே அவள் இதழைச் சிறை எடுத்தவன் “எனக்கு வேற யாரும் இல்லடி உன்னைவிட…” என்றவனின் பேச்சு பாதியிலே நின்றது.
“அழகிமா” என்று அவள் மணிவயிற்றில் கை வைத்தவன் அவள் விழிகளைப் பார்த்து “உண்மையா” என்க “ஆம்” என்று தலை ஆட்டினாள் அவள்.
“யாஹூ” என்று துள்ளிக்குதித்து ஆர்ப்பரித்தான் அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டு சுற்றினான்.
“என் பொண்டாட்டி கர்ப்பமா இருந்து இருந்தா தூக்கி சுத்திருப்பேன்” என்று அன்று மருத்துமவனையில் கூறியதை நினைவு கூர்ந்தவள் அவனைக் கட்டிக்கொண்டாள்.
அனைவரும் விஷயம் அறிந்து சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
மருத்துவமனை சென்று வந்திருக்க ஒரு வாரம் தன்னுடன் வந்து இருக்க அவளிடம் கேட்டிருந்தார் சுமதி, அவர் மனதில் நிறைய ஏக்கங்கள் இருந்தது.
வானதிக்கு குழந்தை தங்காமல் போனபிறகு ஒரு பேரக்குழந்தைக்கு மனம் ஏங்கியது, ஆனால் மித்ராவை ஏற்க முடியாமல் குழந்தைகளை வளர்க்கவோ பார்க்கவோ முடியாமல் போனது.
ஆகையால் மருத்துவமனை சென்றவர்கள் அங்கிருந்து வீட்டிற்கு சென்றனர் மருமகளை அப்படி கவனித்துக்கொண்டார் சுமதி, ஒருவகையில் பாரிவேந்தனுக்கு நிம்மதியாகவும் இருந்தது அவனுடைய வேலை பளுவில் அவள் நிறைய நேரம் தனிமையில் தவிப்பதை அறிந்தே இருந்தான்.
ஆனால் அவனிடம் இதுவரை ஒரு சிறிய குறையாகக் கூடச் சொன்னதில்லை இப்பொழுது சுமதியுடன் அவள் நன்றாகப் பொருந்தி நின்றாள் இருவரும் கதை கதையாகப் பேசித் திரிந்தனர்.
அன்று காலையே விஷயம் அறிந்து வந்திருந்தாள் பத்மா “ரொம்ப சந்தோசம் இப்போதான் சித்தி முகமே பிரகாசமா இருக்கு, கவனமா இருக்கணும் நல்ல சாப்பிடு, பிடிச்சது என்ன வேணும் சொல்லு நான் செஞ்சு தரேன்” என்று அன்பை பொழிந்தாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்தவள் “ரொம்ப விசேஷமான சாமி தீர்த்தம் அம்மனுக்கு விரதம் இருந்து பூஜை பண்ணி வாங்கினது, காலைல குளிச்சுட்டு வெறும் வயித்துல அஞ்சு நாள் குடி” என்று கூறி ஓரு பாட்டில் கொடுத்துச் சென்றாள்.
முதல் நாள் அவள் சொன்னதுபோலக் குடித்தாள் அலக்நந்தா அனால் சிறிது நேரத்தில் அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டாள்.
மறுநாள் காலைப் பாரி எழுந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவன் அழகி, மசக்கை அவளைப் படுத்தி எடுத்தது ஒன்றுமே சாப்பிட முடியாமல் திணறினாள்.
அதிகம் பழச்சாறுகளை கொடுத்து அவளைப் பார்த்துக்கொண்டார் சுமதி, அவள் தலை கோதி முத்தம் வைத்தவன் குளித்துக் கீழே சென்றான்.
இன்று தந்தையோடு சச்சி மித்ராவை பற்றிப் பேச வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான் பேரப்பிள்ளைகளை அருகில் வைத்துக்கொள்ள ஆசை இருக்கிறது தம்பதிகளுக்கு ஆனால் இவர்கள் அழைத்தால் சச்சியும் மித்ராவும் வருவார்களா என்ற சந்தேகமும் உண்டு.
சச்சி பெற்றறோரின் அழைப்பிற்காகக் காத்திருக்கிறான், தங்களுக்குள் பேசிக்கொள்ளாமல் உள்ளுக்குள் மருகுகிறார்கள் ஆகையால் தானே அதைப் பற்றிப் பேசுவது என்று முடிவு செய்துவிட்டான்.
நந்தாவுடன் தானும் இங்கேயே தங்கிவிட்டால் என்ன என்ற யோசனை கூட உள்ளது அவனுக்கு, ஆளுக்கு ஒரு திசையில் என்ன செய்கிறோம் வாழும் காலம் ஒன்றாக இருக்கலாமே உறவுகளோடு என்ற சிந்தனையும் உள்ளது.
தாய் தந்தையோடு பேசியதில் சச்சி மித்ராவை குழந்தைகளுடன் இங்கேயே அழைத்து வந்துவிடுவது என்று முடிவு செய்தனர், “நீயும் நந்தாவோட இங்கேயே வந்துடு பாரி” என்றார் சுமதி.
“சொல்றேன்மா…” என்றான் அவன் புன்னகையோடு, அதன்பிறகு அவனை வற்புறுத்தவில்லை வானதியை பற்றிய விஷயங்களையும் பெற்றோரிடம் பகிர்ந்துகொண்டான்.
“பத்மாவுக்கு ஏதும் குடுக்கணும்னா குடுத்துட்டு புள்ளைங்களுக்கு பங்க எழுதி வெச்சுடலாம் நாம நல்லா இருக்கும்போதே” என்றார் சுமதி கணவனிடம்.
“மா இப்போ எதுக்கு சொத்து பத்திலாம், எதையும் மாத்த வேண்டாம்பா உங்க பேர்லயே இருக்கட்டும் எனக்கும் சச்சிக்கும் இடையில சொத்து பத்தின பேச்சே வராது” என்றவன்.
“பத்மாவுக்கு எதுக்கு குடுக்கணும் இன்னும் ஏன்மா அவங்கள நீக்கத் தாங்குறீங்க” என்றான் கோபமாக.
“என்ன இருந்தாலும் இந்த வீட்டு பொண்ணுடா” என்றவர் “எவ்ளோ மாறிட்டா தெரியுமா…. நந்தா கிட்ட ரொம்ப அன்பா இருக்கா, இப்போ பாரு உங்களுக்காக வேண்டிக்கிட்டு தீர்த்தம்லாம் கொண்டு வந்தா”.
“அஞ்சு நாள் குடிக்க சொல்லியிருக்கா, ஏன் வானத்திற்கு கூடக் கொண்டுவந்து குடுத்தா ஆனா நமக்குத்தான் அந்தக் குழந்தையை வலக்குற கொடுப்பினை இல்லாம போச்சு” என்று அவர் புலம்ப.
ஒரு நொடியில் மூலையில் ஏதோ மின்னல் வெட்டியது, புயல் வேகத்தில் தங்கள் அறை நோக்கி ஓடினான், நந்தா குளித்து முடித்து முடியை உலர்த்திக்கொண்டிருந்தாள்.
“அழகிமா” என்று அருகில் சென்றவன் “பத்மா குடுத்த தீர்த்தம் குடிச்சியா” என்க.
“ஹ்ம்ம் ஆமாம் வேந்தரே, நேத்து குடிச்சேன் ஆனா உடனவே எல்லாம் வெளில வந்துடுச்சு, இன்னைக்கு இன்னும் குடிக்கல” என்றாள்.
அவள் வயிற்றில் கை வைத்தவன் “ஆர் யு ஒகே, ஏதும் வலி அந்தமாதிரி இருக்கா” என்க.
“இல்ல” என்றாள் குழப்பமாக அவனைப் பார்த்துக்கொண்டே
ஆழ மூச்செடுத்தவன் “இது எனக்கு வந்த ஒரு தேவையில்லாத பயமா கூட இருக்கலாம், பட் நீ ரெடி ஆகு நாம ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்” என்றான்.
“எனக்கு ஒன்னும் இல்ல என்ன ஆச்சு உங்களுக்கு” என்றாள் அவன் முகத்தைக் கைகளில் ஏந்தி.
“ப்ளீஸ் அழகி எனக்காக” என்க.
உடனே தயாராகி வந்துவிட்டாள், கையில் அந்தப் பாட்டிலையும் எடுத்துக்கொண்டான், பரிசோதனை செய்யக் கொடுத்துவிட்டு மருத்துவரைக் கண்டு அவர் ஒன்றும் இல்லை என்று சொல்லியபிறகே அவனுக்கு நிம்மதி ஆனது.
ஆனால் இரு தினங்களுக்குப் பின் வந்த லேப் ரிசல்ட் அவன் சந்தேகத்தை உறுதி செய்தது, கருவில் இருக்கும் குழந்தையை மெல்ல அழிக்கும் மூலிகை மருந்து.
பத்மாவை கொன்று புதைக்கும் ஆத்திரத்தை அடக்கியவன் சச்சி சம்பத்திடம் விஷயத்தைப் பகிர்ந்து நம்பிக்கையான காவல் அதிகாரியைத் தொடர்ப்புக்கொண்டு விஷயத்தைத் தெரியப்படுத்தினர்.
பத்மாவின் நேரடி வாக்குமூலம் இன்னும் வலு சேர்க்கும் என்ற அவரின் கூற்றை ஏற்று அவள் இங்கு வரும் நாளுக்காகக் காத்திருக்க, சரியாக ஐந்து நாட்கள் கடந்து வந்தாள்.
இரண்டு நாட்களாக ஒரே யோசனை அவளுக்கு இன்னும் செய்தி வரவில்லையே, இந்நேரம் கரு கலைந்திருக்க வேண்டுமே, வருத்தம் சுமந்த அவன் முகத்தையும் கண்ணீர் சிந்தும் மாமியார் மருமகளையும் காண ஆவலோடு இருந்தும் செய்தி வந்து சேரவில்லை.
ஒருவேளை குடித்திருக்க மாட்டாளோ எதற்கும் நேரில் போய்ப் பார்த்துவிடுவோம் என்று புறப்பட்டு வந்திருந்தாள், ஹாலில் பாரிவேந்தன் மஹேந்திரனுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க அவளிடம் கொஞ்சம் தடுமாற்றம் வந்தது.
“ஐயோ இவன் இருக்கானே எப்படி கேட்டுத் தெரிஞ்சிக்க” என்று யோசித்தவள் தயங்கி நிற்க.
“மா மூலிகை சரியா வேலை செஞ்சுதான்னு தெரிஞ்சிக்க ஆள் வந்திருக்காங்க பாரு” என்க அதிர்ச்சியை அப்படியே காட்டியது அவள் முகம்.
“என்ன? குடுத்து அஞ்சு நாள் ஆச்சே இன்னும் செய்தி வரலயேன்னு கேக்க வந்தியா” என்றான் கூர்மையாக அவளைப் பார்த்து.
“என்ன உளர்ர உனக்கு என்னைப் பிடிக்காது எனக்குத் தெரியும் அதுக்காக உன் இஷ்டத்துக்கு பழி போடுவியா” என்றவள் முன்னே லேப் ரிப்போட்டை எடுத்துப் போட்டவன்.
“படிச்சு பாரு என் மனைவிக்கு நீ என்ன குடுத்தன்னு அதுல தெளிவா இருக்கு” என்க.
“இது நான் குடுத்துன்னு நீ சொன்னா ஆச்சா என் மேல பழிபோட நீயே செஞ்சன்னு சொல்லுவேன்”.
“கரக்ட்தான் அப்போ இது என்ன” என்று அவள் கைப்பையை பிடுங்கி அதிலிருந்து இன்னொரு பாட்டிலை எடுத்தான்.
“முன்னாடி குடுத்தது வேலை செய்யல அப்போ புதுசா ஒன்னு குடுப்போம்னு தானே கொண்டு வந்திருக்க” என்றதும்.
“இது எனக்குத் தெரியாது நீ பொய் சொல்ற”.
“சரி விடு யார்கிட்ட இதை வாங்கினியோ அவனே வந்து சொல்லுவான், இப்போ நீ சொல்லு எதுக்கு பண்ணின” என்க.
“நான் ஒண்ணுமே பண்ணல நீ என்ன மாட்டிவிட பாக்குற” என்றாள்.
பாரியின் கோபம் உச்சம்தொட “இப்படி கேட்டா சொல்லமாட்ட விசாரிக்கறவங்க வந்து விசாரிக்கட்டும், எவ்ளோ பணம் செலவானாலும் உனக்குள்ள என்ன நடக்குதுன்னு வெளில தெரியாம நான் பாத்துப்பேன்” என்று அலைபேசியை எடுக்க.
“ஆமாம் டா… நான் தான் பண்ணேன் இவ்ளோ சொத்தும் உங்க ரெண்டு பேருக்கு, அப்புறம் உங்க புள்ளைங்களுக்கு அப்படி நடக்க கூடாது அதான் வானதி கருவையும் கலைச்சேன் இப்போ உன் பொண்டாட்டிக்கும் குடுத்தேன்” என்று வெறி கொண்டு கத்தினாள்.
மகேந்திரனும் சுமதியும் அதிர்ச்சியில் நிற்க “இது போதும் மிஸ்டர் பார்வேந்தன் வாக்குமூலம் பக்காவா இருக்கு” என்று வெளியில் வந்தார் அவனின் அட்வகேட்.
“சொல்றேன்பா” என்றவன் இன்ஸ்பெக்டருக்கு அழைத்து விவரத்தைக் கூற பத்மா கைது செய்யப்பட்டாள்.
அணைத்து விவரத்தையும் கேட்ட சுமதி மஹேந்திரனுக்கு மிகுந்த வருத்தமாகிவிட்டது, பணம் எப்படி எல்லாம் அவளை மாற்றி இருக்கிறது “தானும் ஒரு காலத்தில் இந்தப் பணத்தை வைத்துத் தானே மனிதனை எடை போட்டேன்” என்று இன்று வருந்தினார் மகேந்திரன்.
இதற்குமேலும் அவளுக்குச் சலுகை காட்ட மனம் இல்லை, அவளுக்குக் கொடுத்த அனைத்தையும் திரும்ப வாங்கிக்கொண்டார்.
அவள் கணவனை வேலையை விட்டுத் தூக்கிவிட்டார், தங்க இடமின்றி பத்மாவின் இரண்டாம் தகப்பனின் வீட்டிற்கு சென்றனர், பணம் இருந்தபோது அவர்களை மதிக்க வில்லை இப்பொழுது அடைக்கலம் என்று போனால் அவர்கள் எப்படி மதிப்பார்கள்.
பத்மாவின் கேஸை எப்படி நடத்த என்று தெரியாமல் தடுமாறினான் அவள் கணவன், மகேந்திரன் விட்டாலும் பாரி விடமாட்டான்.
தன் குழந்தையை அழிக்க நினைத்தவள் என்ற எண்ணமே போதுமானதாக இருந்தது, ஒருவேளை தன் அழகிக்கு ஏதேனும் ஆகியிருந்தால்…. அவனால் அதைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை அந்த ஒரு எண்ணமே அவனுள் எரிந்த நெருப்பை அணையாமல் வைத்திருந்தது.
அவனைப் போன்று ஆண் மகவை பெற்றேடுத்தாள் நந்தா, மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
ஆறு வருடங்களுக்கு பிறகு
அந்தப் பெரிய வீட்டின் ஹாலில் பெரியப்பாவின் மார்பில் படுத்துச் சுகமாக உறங்கிக்கொண்டிருந்தான் பாரி நந்தாவின் இரண்டாவது புதல்வன், சச்சியும் ஆழ்ந்த உறக்கத்தில்.
குழந்தைகளுக்கான தனி அறையில் சச்சியின் இரண்டு பிள்ளைகளுடன் பாரியின் மூத்த புதல்வனும் உறக்கத்தில் இருந்தனர், சுமதி மகேந்திரன் அவர்கள் அறையில்.
மித்ராவும் நந்தாவும் அனைத்தையும் சரி பார்த்து வர “நானும் படுக்குறேன் நந்தா நீயும் போ” என்றாள் மித்ரா.
“அக்கா… மாமா இங்கேயே தூங்குறாங்களே அவனை நான் தூக்கிட்டு போகவா” என்றாள் நந்தா.
“இது என்ன புதுசா… பெரியப்பா கிட்ட இருந்து தூக்கினா வீடே அதிர கத்துவான், அவருக்கும் அவன் அப்படி தூங்குறதுதான பிடிக்கும் நீ ரூம்க்கு போ” என்றவள் அவர்கள் அறைக்குச் சென்றாள்.
மேலே தங்கள் அறைக்குள் வந்து பார்க்க ஆசை மகளைத் தோளில் போட்டுத் தட்டிக்கொண்டு நடந்துகொண்டிருந்தான் பாரிவேந்தன்.
அவன் அருகில் சென்றவள் மகளை வாங்கி தொட்டிலில் கிடத்திவிட்டு கணவனை இறுக்கி அணைத்தாள்.
“எப்ப டி சொன்னேன் எனக்கு அழகி வேண்டாம்னு அழகிய தவிர எதுவும் வேண்டாம்” என்றவன் அவளில் தொலைய தொடங்கினான்.
இன்று அவர்களின் செல்ல மகளுக்கு மொட்டைபோட்டு காதுகுத்து விழா நடந்து முடிந்திருந்தது, ராஜசேகருக்கும் சாரதாவுக்கும் பக்கத்திலேயே ஒரு வீடு வாங்கி குடியமர்த்திருந்தான் பாரிவேந்தன்.
இப்பொழுது அண்ணாநகர் வீட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள், ஆண் பிள்ளைகளாக நிறைந்திருந்த வீட்டில் முதல் மஹாலக்ஷ்மி பிறந்திருக்க அவளின் முதல் பிறந்தநாளுக்கு அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு நடத்தி மொட்டைபோட்டனர்.
இன்று விழா நடந்து முடிந்திருக்க அனைவரும் மிகவும் களைப்பில் இருந்தனர், அந்த உறக்கத்தில் அனைவரும் இருக்க அழகி மட்டும் வேந்தனை தேடினாள்.
காதலால் அவளைத் தினம் தினம் திணறடித்துக் கொண்டிருந்தான் அவன்மீது பித்தாகி கிடந்தாள் அலக்நந்தா.