உயிரின் துளி காயும் முன்பே – 9
“எங்க இருக்க பாரி… வந்தா நிக்க நேரம் இல்லாம உடனே யு.எஸ் ஓடுவ இப்போ ஒரு மாசமா இங்கேயே இருக்க, ஆனா நம்ம வீட்டுக்கு வராம உன் வீட்லயே இருக்க” என்ற தந்தைக்கு எந்தப் பதிலும் கூறாமல் மொட்டை மாடியில் நட்சித்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் பாரிவேந்தன்.
“உன்ன தான் பாரி” என்று அவர் மீண்டும் கேட்க.
“நட்சத்திரத்தை எண்ணிட்டு இருக்கேன் முடிச்சுட்டு சொல்றேன்” என்று அலைபேசியை அப்படியே கீழே வைத்துவிட அவர் அந்தப் பக்கம் கத்திக்கொண்டிருப்பது கேட்டது.
ஆம் அவன் இங்கேயே ஒரு மாதமாக இருக்கிறான்!! புதிய படத்தின் வேலையை அவன் டீம் தொடங்கி விட்டது, இங்கிருந்தே அனைவரையும் வறுத்துக் கொண்டிருக்கிறான், செல்லத் தோன்றவில்லை செல்ல முடியவில்லை, என்ன செய்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.
சம்பத்திடம் வேலைக்கு வருவதாக ஒப்புக்கொண்ட அன்று இரவு வீட்டில் அதைப் பற்றிச் சொல்லுவோமா என்று யோசித்தவள் “வேண்டாம்” என்று முடிவுசெய்து அதை அப்படியே விட்டுவிட்டாள்,
மறுநாள் காலை அவள் சென்றபோது ஐம்பது வயது மதிக்கத் தக்க பெண்மணி அங்கு நின்றிருந்தார் “நந்தா இவங்க அன்னம்மா நம்ம வீட்ல முன்னாடி வேலை செஞ்சாங்க “.
“சூர்யா வீட்டுக்குப் போன அப்புறம் வர வேண்டாம்னு நான் சொல்லிட்டேன் இனிமே இவங்களும் வருவாங்க குழைந்தையை குளிப்பாட்டவும் பாத்துக்கவும், இன்னைக்கு கிளீன் பண்ண இவங்க ஹெல்ப் பண்ணுவாங்க நீ தனியா கஷடப்பட வேண்டாம்” என்றான் சம்பத்.
இவர்கள் இருவர் மட்டும் இருக்கும் வீட்டில் அவள் வந்து வேலை செய்யத் தயக்கம் கொள்ளுவாள் என்று அறிந்திருந்தான் பாரி, அதனாலே நண்பனிடம் கூறி அன்னம்மாவை வேலைக்கு அழைத்துவிட்டான்.
தனக்காக ஒருவன் பார்த்துப் பார்த்து அனைத்தையும் செய்கிறான் என்பது தெரியாமலே வேலையைத் தொடங்கினாள் அலக்நந்தா.
அன்று அவள் வேலை முடிந்து போகும் வரை அவள் கண்ணில் படவில்லை பாரிவேந்தன்.
அவனைப் பற்றிய யோசனைகள் ஏதுமின்றி அவள் வேலையைச் செய்துகொண்டிருந்தாள் அவள், இரவெல்லாம் வேலை செய்தவன் தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தான் மதுவின் தயவில்.
அடுத்த நான்கு நாட்களில் சூர்யப்பிரிய குழந்தையுடன் வந்து சேர்ந்தாள், அழகாக இருந்தாள் குழந்தை கொழு கொழு என்று கண்ணை நிறைதான்.
அவளின் தாயும் தந்தையும் மிக அன்பாக நடந்து கொண்டனர், அலக்நந்தாவிடம் ஆரத்தி எடுக்கச் சொல்லிச் சம்பத் சொல்ல அவள் தயங்கினாள்.
“நான் எப்படின்னா? நீங்க உங்க அத்தைய எடுக்கச் சொல்லுங்க” என்க.
“அட என்னமா மாப்பிளையை வாய் நெறய அண்னானு கூப்பிடுற அண்ணிக்கு ஆரத்தி எடுக்க மாட்டியா” என்றார் சூர்யாவின் தாய், தாயும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு அவர்களுக்கு ஆரத்தி எடுத்து முடித்தாள்.
அன்று அலக்நந்தாவின் கைமணத்தில் விருந்து தயாரானது மிக அருமையாகச் சமைப்பாள் நந்தா, அன்னம்மா உதவி செய்ய விறு விறு என்று விருந்தைத் தயார் செய்துவிட்டாள்.
நந்தா அனைத்தையும் டேபிளில் அடுக்கி வைத்தாள் அனைவரும் சாப்பிட அமர, வேக நடையில் உள்ளே நுழைந்தான் பாரிவேந்தன்.
“வாங்க எப்படி இருக்கீங்க” என்று சூர்யாவின் பெற்றோரிடம் நலம் விசாரித்தவன் “எப்படி இருக்க சூர்யா” என்று அவளிடமும் சிறிது பேசினான் குழந்தையைத் தூக்கி கொஞ்சம் நேரம் வைத்திருந்தான்.
“வாடா எவ்ளோ தடவ கூப்பிடுறது” என்றான் சம்பத்.
“வேல இருந்தது” என்றவன் விழிகள் அவன் அழகியைத் தொட்டு நின்றது.
அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க அவளை அழைக்கவும் முடியாது, அவள் வேலைக்காரியாய் ஒதுங்கி நிற்க அவர்களுடன் அமர்ந்து சாப்பிடவும் அவன் மனம் ஒப்பவில்லை.
சம்பத்தும் அந்தச் சூழலை எப்படி கையாள என்று தெரியாமல் சங்கடமாக நண்பனைப் பார்த்தான், ஆரத்தி எடுப்பது வேறு ஆனால் அவளைச் சமமாகத் தங்களுடன் அமர்ந்து உணவு உண்ண அவர்கள் ஒத்துக்கொள்வார்களா.
அவளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கேள்வி கேட்கப்படும், அனைவரையும் பார்த்த பாரிவேந்தன் “அவசர வேலை இருக்கு உங்கள பாக்கத்தான் வந்தேன் அப்புறம் வரேன்” என்று கிளம்பிவிட்டான்.
அனைவரும் உண்டு முடிக்க அன்னம்மாவிற்கு வீட்டிற்கு எடுத்த செல்ல உணவு பாத்திரங்களில் நிரப்பப்பட்டது, நந்தா தனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டாள், இதுவரை அவள் வேலை பார்த்த எந்த வீட்டிலும் ஒரு மிடறு தண்ணீர் கூட அவள் எடுத்துக் கொண்டதில்லை.
அவளுடன் ஒரு சிறிய பையும் கொண்டுவருவாள் அதில் அவளுக்குத் தண்ணீர் தேநீர் பிஸ்கேட் அனைத்தும் இருக்கும், இன்றும் அதுபோல் மறுத்துவிட்டு பாத்திரங்களைக் கழுகி வைத்துவிட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வெளியேறினாள்.
அவளைத் தடுத்த சம்பத் “நந்தா ப்ளீஸ் ஒரு ஹெல்ப், மேலே பாரி இருப்பான் அவனுக்கு இதைக் குடுத்துடுறியா” என்று உணவுப் பாத்திரங்கள் நிரம்பிய பையை அவளிடம் நீட்டினான்.
“நான் குடுத்தா அவர் வாங்குவாரா” என்றவளை பார்த்தவன் உள்ளம் சொல்லிவிட துடித்தது “நீ அமர்ந்து உண்ணமுடியாத இடத்தில் அவனால் இருக்க முடியவில்லை அதுவே அவன் ஓடியதின் காரணம்” என்று.
அவளிடம் புன்னகை முகமாக “அவனுக்குக் கோபம் உங்க அக்கா மேலே அவனோட அப்பா அண்ணா மேலே, உன்மேல இல்ல போ” என்ற பிறகு லிப்ட்டில் உணவுடன் மேலேறினாள் அழைப்புமணி ஓசையில் சட்டென்று கதவைத் திறந்தவன் நிச்சயம் அவளை எதிர் பார்க்கவில்லை.
“உங்களுக்குச் சாப்பாடு சம்பத் அண்ணா குடுத்தாங்க” என்று நீட்ட வாங்கிக்கொண்டான் “தேங்க்ஸ்” என்றவனை ஆச்சர்யமாகப் பார்த்தவள்.
சற்றுமுன் சம்பத் சொன்ன “உன்மேல கோவம் இல்லை” என்ற வார்த்தையில் பெற்ற தைரியத்தோடு “நீங்க எல்லார்கூடவும் அங்கேயே சாப்பிட்டிருக்கலாம் இப்போ ஆறி போயிருக்கும்” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்.
“உன்னால உரிமையா ஒக்காந்து சாப்பிட முடியாத இடத்துல என்னால சாப்பிட முடியாது அழகி…” என்க அவன் பார்வையும் மொழியும் உணர்த்திய செய்தியில் அவளுக்குச் சர்வமும் நடுங்கியது.
ஒ… காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஒ… அமிலம் அருந்தி விட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே
ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றவள் வேகமாகப் படிகளில் இறங்கி ஓடினாள், வீட்டில் வந்து அறைக்குள் நுழைந்தவள் மூலையில் ஒடுங்கி கால் முட்டியில் முகம் புதைத்து அமர்ந்துவிட்டாள்.
உடல் இப்பொழுதும் நடுங்கி கொண்டிருந்தது “ஏன் இப்படி ? என்னிடம் ஏன் அப்படி சொன்னான், எங்குத் தவறிழைத்தேன் என்னை எப்படி அவனுக்குப் பிடிக்கும்! பிடிக்குமா? இது பிடித்ததின் வெளிப்பாடா…. இல்லை அவர்களுக்கு நேர்ந்த அவமானத்திற்கு என்னை வைத்துப் பழிதீர்க்கப் பார்க்கிறார்கள்”.
“அந்த விழிகளில் பொய் இருந்ததா, அந்த வார்த்தைகளில் கள்ளம் இருந்ததா, இல்லையே…. இல்லையா எனக்குத் தெரியவில்லையா… அம்மா!!” என்று உரக்க அலறித் தவித்தாள்.
“என்ன செய்ய வேண்டும் இனி அங்கு வேலைக்குப் போகாமல் இருந்துவிட வேண்டும், வேறு வேலை பார்த்துக்கொள்ளலாம், இது தவறு இது தவறு”.
தெளிந்த அவள் மனதில் முதல் சலனம் விழுந்துவிட்டது, அந்தக் குரலும் பார்வையும் மனதை குடைந்துகொண்டிருந்தது.
“என்ன ஆச்சு” என்ற அன்னையிடமும் தாத்தாவிடமும் “தலை வலி” என்றவள் அறைக்குள்ளே சுருண்டுகொண்டாள்.
அடுத்தநாள் அதிகாலையே எழுந்து அமர்ந்துவிட்டாள் “போகாதே” என்றது மூளை “பாவம் நீ பார்த்துக்கொள்வாய் என்று நம்பித்தானே சம்பத் அண்ணா அந்த அக்காவை அழைத்து வந்தார், இப்பொழுது நீ திடீர் என்று வரவில்லை என்றால் என்ன செய்வார்கள்” என்றது மணம்.
“போகாதே அலக்” என்று தனக்கு தானே கடிவாளம் இட முயன்றாள் “இல்லை அவன் அப்படி பேசினால் இவர்கள் என்ன செய்வார்கள் போவதுதான் சரி” என்ற முடிவுக்கு வந்து அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
அன்று என்ன சொன்னான் “நீங்கள் தான் பரிகசிக்கப் படும் நிலையில் இருக்கீர்கள்” என்றான், அப்படி சொன்னவன் இப்பொழுது எப்படி தன் எண்ணத்தை மாற்றி இருப்பான் இது பொய் என்று மீண்டும் மீண்டும் பதியவைத்தாள்.
வந்துவிடுவானோ என்று பயந்தாளா, வருவான் என்று எதிர் பார்த்தாளா தெரியவில்லை, வேலையில் கவனம் சிதறியது.
அவன் வரவில்லை அதன் பிறகு பத்து நாட்கள் அவள் கண்முன்னே அவன் வரவே இல்லை, ஆனால் அவள் சிந்தை முழுதும் நிறைந்து கிடந்தான்.
சொல்ல வேண்டும் என்று எண்ணவில்லை, தன் வீட்டின் வாயிலில் அவளைப் பார்த்தவன் பரவசநிலையில் இருக்க முன்பே சாப்பிட்டிருக்கலாம் என்று அவள் அக்கறையாக (அப்படிதான் அவனுக்குத் தோன்றியது) கேட்டவுடன் அவன் காதல் கரை உடைத்துவிட்டது.
அதற்காக அவன் வருந்தவில்லை என்றேனும் அவளிடம் கூற வேண்டும் இப்பொழுதே தெரிந்துவிட்டது என்று தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டான்.
விடியும் வரை விண்மீன்களை ரசித்தவன் அதிகாலை அவன் வீடு சென்றான், அந்த நேரத்தில் மகனை எதிர்பார்க்காத சுமதி “யாரப்பா நீ இவ்ளோ காலைல வந்திருக்க காபி போடப் பால் கூட இன்னும் வரல” என்க.
“மா” என்றவனை பார்த்து முகத்தை வெட்டியவர் “வந்துட்டான் அம்மா பொம்மான்னு… ஒருத்தன் இருக்கானா இல்லையானே தெரியாம அவன் இஷடத்துக்கு போய்ட்டான், பெத்து வளத்த அம்மா பத்தி கவலை இல்ல”.
“நீ என்னடானா தனியா தனிக்குடித்தனம் பண்ற, என்னடா பாவம் பண்ணினேன் நான்” என்றவரை பார்க்க வருத்தமாக இருந்தது.
தவறை யாரோ செய்யத் தண்டனையை யாரோ பெறுகின்றனர் “மா ரொம்ப வேல தலை வலிக்குது, அடிபட்டுப் போன பிள்ளை வந்திருக்கேன் எப்படி இருக்கேன்னு ஒரு வார்த்தை கேக்குறியா”.
“அதெல்லாம் சம்பத் கிட்ட போன் போட்டுக் கேட்டுட்டேன்” என்றார் சுமதி.
அவனுக்கும் தெரியும் சம்பத் இவன் குடும்பத்தோடு இவனை இணைக்கும் பாலம், பேசிக்கொண்டிருக்கும்போதே காப்பியை போட்டு அவன் கையில் கொடுத்தவர் “பாரி சூர்யா வந்தாச்சுல அவளையும் குழந்தையையும் பாக்கனும்டா எப்போ கூட்டிட்டு போற” என்க.
காபி குடித்து கொண்டிருந்தவனுக்கு புறை ஏறியது “பாத்துப்பா என்ன ஆச்சு” என்க ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டியவன் திரும்பி ஹாலிற்கு நடந்தான்.
நந்தா அங்கிருப்பாளே அவளைப் பார்த்தால் என்ன செய்வார்கள் என்ன சொல்லுவார்கள் என்று யோசனை சென்றது, அவளைக் காயப்படுத்தும் விதத்தில் பேசினால் தன்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
தன் காதல் கூட முழுதாக அவளுக்குப் புரியவில்லை, இப்பொழுது அவளுக்கு ஆதரவாகத் தான் ஏதேனும் பேசினால் அணைத்து பழியும் அவள்மீது விழுந்துவிடும்.
தன் நேசத்தின் பெயரில் அவளை யாரும் காயப்படுத்த கூடாது பழியோ பாவமோ தன்னோடு போகட்டும்.
“சாயந்திரம் போலாம் ரெடியா இருங்கமா” என்றான் காரணம் மாலையில் அவன் அழகி அங்கிருக்க மாட்டாளே.
“என்ன சித்தி அம்மாவும் புள்ளையும் காலையிலே அரட்டைல இறங்கிட்டீங்க” என்று வந்தவளை பார்த்தவன் விழிகள் இடுங்கியது.
“இவ எப்போ வந்தா” என்றான் அன்னையிடம்.
“நேத்து வந்தா, மாப்பிள்ளையும் இங்கதான் இருக்கார்” என்க.
அவனுக்குச் சுறு சுறு என்று கபம் ஏறியது “காபி எடுக்கட்டுமா பத்மா” என்ற சுமதியை முடிந்தவரை முறைத்தவன் “நீங்கத் திருந்த மாட்டீங்க” என்றான் எரிச்சலோடு.
“பசங்களுக்கு ஸ்கூல் இல்லையா” என்றான் அவளிடம் “இருக்கு பாரி இங்க இருந்தே நம்ம கார்ல அனுப்பிடலாம் கொஞ்சம் நேரம் ஆகும் அவ்ளோதானே” என்றாள் எப்பொழுதும் போலச் சாதாரணமாக.
இந்தக் கேள்வியை அவனும் இதே பதிலை அவளும் வருடங்களாக மாற்றாமலே இருக்கிறார்கள்.
பத்மா மகேந்திரனின் அண்ணன் மகள் தந்தையை விபத்தில் இழந்துவிட்டாள், அவளுடைய தாய் பார்வதிக்கு அப்பொழுது வெறும் முப்பது வயது ஆகையால் மறுமணம் செய்து வைத்தனர்.
பத்மாவை மகேந்திரனும் சுமதியும் வளர்த்துக்கொள்வதாகக் கூறி தங்களுடன் வைத்துக்கொண்டனர், பத்மாவை பொறுத்தவரை இந்த மொத்த சொத்தையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும், ஒரு பங்கு அவளுக்கு ஒரு பங்கில் அண்ணன் தம்பி பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
காரணம் அவள் அவளுடைய பெற்றோர்க்கு ஒரே மகள் ஆதலால் சொத்தில் ஒரு பகுதி அவளுக்கு வந்து சேர வேண்டும் என்ற பேராசை கொண்டவள், அனைத்தும் அவள் தாயின் வழி காட்டுதல்.
முதல் கணவர் குடும்பம் பணக்காரர்கள் இரண்டாம் கணவர் அத்தனை வசதி இல்லை என்ற கோபம் அவருக்கு, இவர்கள் மறந்து போன ஒரு விஷயம் அவள் தந்தை இறக்கும்போது பூர்விக சொத்துக்கள் தவிர பெரிதாகச் சொத்துக்கள் இல்லை இந்தக் குடும்பத்தில்.
அனைத்தும் மகேந்திரனின் உழைப்பு அதன் பிறகு அவருடைய மகன்களின் உழைப்பு, இது அனைத்தும் சச்சிக்கும் பாரிக்கும் உரியது இவர்களாகப் பார்த்துச் செய்தால் மட்டுமே பத்மாவுக்கு, அதிலும் அவள் திருமணத்தை ஆடம்பரமாக நிறைய நகை சொத்து கொடுத்துச் செய்து வைத்தார்கள்.
ஆனால் அவள் தாய் மற்றும் கணவனின் பேராசை அவளைச் செய்யக் கூடாத பல வேலைகளையும் செய்ய வைக்கிறது.