அலக்நந்தாவால் நம்பவே முடியவில்லை சாரதா இப்படியொரு காரியத்தைச் செய்திருப்பார் என்று, ஆனால் இன்று கண் முன்னில் கண்டாளே…. காதால் கேட்டாளே.
யாருக்கும் தெரியாமல் எப்படி அவனிடம் பேசியிருப்பார் என்பதிலே அவள் சிந்தனை சுழன்றது.
மகனின் பிறந்தநாள் விழாவிற்கு நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்திருந்தான் சம்பத், அதற்காக ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஆட்களிடம் பொறுப்பைக் கொடுத்திருந்தான்.
சிறிய அளவிலான விழா அதற்கான அழைப்புகள் காலை முதல் வந்தவண்ணம் இருக்க இடையில் வந்த அலைப்பேசி என்னைக் கவனிக்காமலே ஆன் செய்து “ஹல்லோ” என்றான்.
“சம்பத் மேல வா” என்றதோடு அழைப்பு முடிந்துவிட அவனுக்கு அந்தக் குரலை உள்வாங்கவே சில நொடிகள் ஆனது “பாரி” என்றவன் உதடுகள் முணுமுணுக்க நின்ற இடத்திலே நின்றிருந்தான்.
“என்ன மாமா” என்று வந்த சூர்யப்பிரிய அவனை உலுக்க “பாரி வந்திருக்கான்” என்றவனுக்கு அப்பொழுதுதான் “மேலே வா” என்று அவன் சொன்னது உரைத்தது.
“மேல இருக்கான் டி” என்றவன் வேகமாகப் படியில் ஏறி ஓடினான் திறந்திருந்த கதவின் உள் நுழையச் சோபாவில் அமர்ந்து மேலே விட்டதை வெறித்துக்கொண்டிருந்த நண்பனைப் பார்த்தான் சம்பத்.
ஆளே பாதியாக இளைத்து முகம் தாடிக்குள்ளே ஒளிந்துகிடக்க, சன்யாசம் போனவன் பாதியிலே திரும்பி வந்ததை போல இருந்தான்.
“என்னடா கோலம் இது” என்ற சம்பத்தை பார்த்தவன் மெலிதாகப் புன்னகைக்க.
“சிரிக்காத கொலைவெறில இருக்கேன், எங்க போய்த் தொலைஞ்ச, இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்தினது நிம்மதியா இருக்கா உனக்கு? உயிரோடுதான் இருந்தியா” என்று அவனை வறுத்தெடுத்தான்.
அதற்கும் புன்னகையே பதிலாக எரிச்சல் அடைந்தவன் நேரே சென்று எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்.
இருவருக்கும் இடையில் பேச்சுக்கள் இல்லை வெகுநேரம் சென்று “எப்படி இருக்கா” என்ற பாரியின் கேள்விக்கு அவனைப் பார்த்து முறைத்த சம்பத் “உயிரோட இருக்காபோதுமா” என்றான்.
“நந்தா அம்மா உன்கிட்ட என்ன சொன்னாங்க” என்றான் அவனைக் கூர்மையாகப் பார்த்து, பாரியின் இதழ்கள் நண்பனின் புரிதலில் மெல்ல விரிந்தது, ஆனால் எதுவும் பேசவில்லை.
அவன் எதையும் சொல்லப்போவதில்லை என்பதை அறிந்தே இருந்தான் சம்பத் என்றாலும் ஒருமுறை கேட்டுப்பார்க்கலாம் என்று முயற்சி செய்யப் பலன் என்னமோ பூஜ்யம் மட்டுமே.
அவன் வீட்டின் பால்கனி கதவைப் பாரியின் பார்வை தீண்ட “உன்னோட பால்கனியிலிருந்து பார்த்தா அவளோட ரூம் தெரியும் அப்படிதான் வீடு பார்த்திருக்கா, என்னைக்காவது இந்தக் கதவைத் திறந்து நீ வரமாட்டியானு எல்லா நாளும் அங்க நின்னு பாத்திட்டு இருப்பா” என்று சம்பத் முடிக்க மனதில் ஏதோ சொல்லமுடியாத ஆசுவாசம்.
விழி மூடிச் சோபாவில் தலை சாய்ந்து அமர்ந்தவன் மனதில் ஓடியது மூன்று வருடத்திற்கு முன்பான அந்த நாள்.சாரதாவின் பேச்சைத் தொடர்ந்து அனைவரும் வெளியேற, தங்கையை ஆறுதல் படுத்த மித்ரா அவளுடன் அவளின் அறைக்குள் சென்றாள்.
சாரதாவின் பேச்சு பிடிக்காத ராஜசேகர் எழுந்து கோவிலுக்குச் சென்றுவிட யாரும் இல்லாத அந்தத் தனிமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த எண்ணிய சாரதா நந்தாவின் அலைப்பேசியை எடுத்துக்கொண்டு பின்பக்கம் இருந்த அந்த மைதானத்திற்கு சென்றார்.
அபார்ஷன் செய்ததாகச் செய்தி வந்தபிறகு நடந்த களோபரத்தில் நந்தாவின் அலைப்பேசியை தன்னிடமே வைத்துக்கொண்டார் சாரதா, இப்பொழுது அதிலிருந்து அவனின் எண்ணைத் தேட “வேந்தரே” என்ற பெயரில் அவர் பார்வை நிலைத்தது.
ஒரு யூகம் வைத்து அந்த எண்ணிற்கு அழைக்க முதல் ரிங்கிலே எடுத்தவனின் “அழகி…” என்ற ஆழ்ந்த அழைப்பில் ஒரு நொடி சாரதா பேசமறந்து நின்றார்.
இப்படி உருகுபவனிடம் பெண் மயங்காமல் எப்படி இருப்பாள் என்றுதான் தோன்றியது அவருக்கு.
“நான் சாரதா பேசுறேன்” என்றவரின் குரலில் “சொல்லுங்க” என்றான் உணர்ச்சிகள் அற்ற குரலில்.
“என் பொண்ணுக்கு உங்களைவிட பன்னண்டு வயசு கம்மி” என்றவரின் பேச்சில் உள்ளே அவனுக்கு எரிச்சல் மண்ட தொடங்கியது.
“என்னமோ உங்கள பிடிச்சுருக்கு, நீங்கதான் எல்லாமேன்னு ஏதோ தப்பா நெனச்சுட்டு பேசுறா நாளைக்கே வேலைக்குப் போக ஆரம்பிச்சு புதுசா ஆளுங்கள பார்த்தா இது எல்லாம் மாறிடும்”.
“என்னால என் பொண்ணை மாத்த முடியும், உங்களுக்கு அவளைக் கல்யாணம் செஞ்சு குடுக்க எனக்கு விருப்பம் இல்லை நீங்க அவ கண்ணுல படாம இருந்தா உங்களைப் பத்தி எந்த விஷயமும் அவளுக்குத் தெரியாம இருந்தா அவ சீக்கிரமா உங்கள மறந்துடுவா”.
“இது வெறும் வயசு கோளாறு அவளுக்குத்தான் புரியல உங்களுக்குமா புரியல, நீங்கக் கொஞ்ச நாள் விலகி இருந்து பாருங்க… அவ வாழ்க்கையே வேறமாதிரி நல்லவிதமா மாறிடும்” என்று இன்னும் என்ன என்னமோ பேசினார் அவர்.
அதன் பிறகு பேசிய எதுவும் அவன் சிந்தையில் பதியவில்லை அலைபேசியை அப்படியே வைத்துவிட்டு எழுந்துகொண்டான்.
ஒருவேளை அவர் சொல்வதுபோல் அவளுக்குத் தன் மீது வெறும் ஈர்ப்பாக இருந்தால், அவளுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை இது தடுத்துவிட்டால், அவளுக்குத் தான் செய்யும் மிகப்பெரிய துரோகம் அல்லவா இது.
அவள் என்னைத் தேடி வரவில்லையே அவள் பின்னையே சுற்றி நந்தாவின் மனதை கலைத்தவன் நான் தானே, தாய்க்கும் எனக்கும் இடையில் கிடந்து அவள் அல்லாடும் நிலைக்கு நான்தானே காரணம்.
அவள் வாழ்விலிருந்து கொஞ்சம் நாட்கள் நான் விலகி இருப்பது அவளில் மாற்றம் கொண்டு வருமா, அப்படி தன்னை அவள் மறந்து வேறொரு வாழ்வை ஏற்றுக்கொண்டால்…. ஏற்றுக்கொள்வாளா?? தன் அழகியல் அது முடியுமா….. முடியாது நிச்சயமாக முடியாது என்று பல சிந்தனைகள் மண்டைக்குள் மத்தளம் கொட்டியது.
என்ன செய்ய என்று வெகுநேரம் “என் அழகியை இன்னொருவனுக்கு முடியாது அவளை யாருக்கும் தர முடியாது” சிந்தனைகளின் தாக்கம் அவனுக்கு மண்டை வெடிப்பதை போல இருந்தது.
வண்டியை எடுத்தவன் நேரே சென்றது அவனின் அழகிக்காகப் பார்த்துப் பார்த்து அவன் வாங்கிய கடற்கரை பங்களாவிற்கு, அவளுடனான வாழ்விற்கு பல கனவுகளும் அவனுள் நிறைந்து கிடந்தது.
அவளுடைய ரசனைகள் படி ஒரு அழகான வீடு, திருமண இரவை அவளுடன் அங்குதான் கழிக்க வேண்டும் என்ற தீரா மோகம் அவனுள் இருந்தது.
சம்பத்திற்குக்கூட அவன் அங்கு வீடு வாங்கியது தெரியாது, யாரிடமும் அந்த ரகசியத்தை அவன் பகிர விரும்பவில்லை, அதை முதலில் பார்ப்பவள் அவளாக இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தான்.
இப்பொழுதே அவள் வேண்டும் என்ற உணர்வு அவனுள் தகித்தது, நீச்சல் குளத்தில் தன்னை மறந்து மூழ்கிக் கிடந்தான், இரு தினங்கள் அங்கேயே இருந்தவன் மூன்றாம் நாள் ஒரு முடிவோடு தன் வீட்டிற்கு சென்று அங்கிருந்து யு.எஸ் சென்றுவிட்டான்.
முழுதாக மூன்று வருடம் தன்னை தனிமை படுத்திக்கொண்டான், அவனுக்குத் தெரிந்துகொள்ள வேண்டியதிருந்தது தன்னை அவள் தேடுவாளா என்பதை, தன்னை அவள் தேட வேண்டும் என்று ஆசை கொண்டான், அவள் விழிகளில் தனக்கான காதலை காண விரும்பினான்.
அமைதியாக அமர்ந்திருந்த நண்பனைப் பார்த்த சம்பத்துக்கு அவன் மனதில் என்ன ஓடுகிறது என்றே தெரியவில்லை, ஆனால் பாரி தெரிந்துகொள்ள வேண்டிய அவன் விரும்பும் ஒரு தகவலைத் தெரிவித்தான்.
“நந்தா இன்னைக்கு வருவா சாயந்திரம்” என்றபோது அவன் இதழில் கீற்றாக மென்னகை.
“உன்னைப்பத்தி வாய் ஓயாம பேசினது ஆண்ட்டி தான், கோவில்ல சந்திச்சிப்பாங்க ரெண்டுபேரும், மகன் பக்கத்துல இல்லாத ஏக்கத்தை மருமகளை பார்த்துத் தீர்த்துக்கிட்டாங்க போல”.
“நந்தாவை பாக்கவே அங்க இருந்து மாசத்துல மூணு தடவ வருவாங்க, ஒரு நாள் நந்தா அம்மாக்கு சந்தேகம் வந்து கவனிச்சருக்காங்க, அன்னைக்கு கோவில்னு கூடப் பாக்காம அவ்ளோ பேசிட்டாங்க, ஆண்ட்டி முகத்தைப் பாக்கவே முடியல எல்லார் முன்னடியும் ஒரு மாதிரி அவமானப்பட்டு நின்ன மாதிரி இருந்தது”.
“அந்தப் புள்ள அம்மாவைப் பார்த்துக் கை எடுத்துக் கும்பிட்டு அப்படியே கீழ ஒக்காந்துடுச்சு, இனிமே அவரைப்பத்தி யார்கிட்டயும் பேசமாட்டேன் யார்கிட்டயும் கேட்கமாட்டேன் இவங்கள பாக்கமாட்டேன் அவங்கள ஒன்னும் சொல்லாதீங்கன்னு”.
அதற்கும் பதில் இல்லை, இதோ இப்பொழுது அவள் முன் வந்து நிற்கிறான், அவனை நோக்கி வேகமாக முன்னேறியவளின் கையைப் பிடித்துத் தடுத்தார் சாரதா.
“நெனச்சேன் நீ பர்த்டே பார்ட்டிக்குனு சொல்லிப் போகும்போதே, இவர் வந்தது உனக்கு எப்படி தெரியும் யார் சொன்னா” என்று அலறிக்கொண்டிருந்தவரை கூர்மையாகப் பார்த்து நின்றிருந்தான் பாரி.
இவரின் சத்தத்தில் ஓடி வந்த சம்பத் “என்ன பண்றீங்க நீங்க, சொன்ன மூணு வர்ஷம் அவங்க ஒதுங்கித்தானே இருந்தாங்க இன்னும் என்ன வேணும் உங்களுக்கு” என்றான் ஆத்திரத்தோடு.
வீட்டில் ஒரே சத்தம், ராஜசேகர் ஒரு பக்கம் மித்ரா ஒரு பக்கம் என்று சாரதாவை நிற்க வைத்துக் கேள்வி கேட்டனர், இருவரில் யாரவது ஒருவர் மனம் மாறிவிடுவார் என்று நினைத்திருக்க இப்படி அவன் வந்து நின்றது உள்ளுக்குள் ஒரு வித பயத்தை கொடுத்தது.
அவர்களுடன் உறவாக நிற்க வேண்டுமா என்று உள்ளுக்குள் புகைந்தது, ஒட்டுமொத்தமாகக் கோபத்தில் இருந்தவர் உணவு மேசையில் இருந்த கத்தியில் கையைக் கிழித்துக்கொண்டார்.
மருத்துவமனை காரிடாரில் அமர்ந்திருந்த நந்தாவின் அருகில் வந்து அமர்ந்தார் சுமதி, அனைவரும் அங்குதான் இருந்தனர்.
“நந்தா” என்றவரின் கையைப் பிடித்தவள்.
“எனக்கு அவர் வேணும் அத்த… நீங்களாவது அவரை எனக்குக் குடுத்துருங்க அத்த, நான்… நான்…. அவரோட ரொம்ப கனவெல்லாம்…” என்றவளை “நந்தாமா….” என்று அவர் தன்னோடு சேர்த்தனைக்க.
அவளை அப்படியே வாரி இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான் பாரிவேந்தன்.