உயிரின் துளி காயும் முன்பே   23

காலைத் தேநீரை பால்கனியில் நின்று நிதானமாக அருந்திக்கொண்டிருந்தாள் அலக்நந்தா, பார்வை தூர தெரிந்த மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் நிலைத்திருந்தது.

தேநீர் அருந்தி முடித்து நிதானமாக உள்ளே வந்தவள் நேரே கிட்சன் சென்று காலை வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள்.

பூஜை அறையிலிருந்து வெளியில் வந்த சாரதா கிட்சன் உள் நுழைய மணக்கும் காப்பியை அவர் கையில் வைத்தவள் மீண்டும் தன் வேலையைத் தொடங்கினாள்.

அவளையே பார்த்து நின்றார் சாரதா கடந்துபோன இந்த இரண்டு வருடம் ஒன்பது மாதங்களில் மகளிடம் வந்த மாற்றங்களை அவர் மனம் எண்ணிப்பார்த்தது.

பாரிவேந்தன் சென்றபிறகு அனைவரும் அந்த வீட்டிலிருந்து வெளியேறினர் தங்கையுடன் இருக்க விரும்புவதாக மித்ரா கூற அவளையும் குழந்தைகளையும் அங்கே விட்டுச் சென்றான் சச்சி ஆனால் இரவில் அங்கே உறங்க முடியவில்லை குழந்தைகளால்.

சிறிய பிள்ளை அந்த வீட்டின் புழுக்கம் தாங்காமல் அழுதுகொண்டே இருந்தது, மனைவி குழந்தைகளை அங்கே விட்டுவிட்டு சச்சியாலும் உறங்க முடியவில்லை.

பாதி இரவில் மாமியார் வீட்டில் வந்து நின்றான், ராஜசேகர் புரிந்துகொண்டு மித்ராவையும் குழந்தைகளையும் சச்சியுடன் அனுப்பிவைத்தார்.

அவர்கள் பாரிவேந்தனின் வீட்டிலே தங்கிக்கொண்டனர், நந்தாவின் வீட்டிலிருந்து வெளியேறியவன் எங்குச் சென்றான் என்ற எந்த விவரமும் இல்லை.

மனைவி பிள்ளைகளை வீட்டில் விட்டுச் சம்பத்துடன் இரவெல்லாம் தேடியும் அவனைப் பார்க்கமுடியவில்லை, இரு தினங்களுக்குப் பிறகு வந்து சேர்ந்தான்.

தன்னுடைய அறைக்குள் நுழைந்தவன் அரைமணி நேரத்தில் புறப்பட்டுவிட்டான் “பாத்துக்கோடா அவளை” என்றான் சம்பத்திடம்.

அதுதான் அவன் இறுதியாகப் பேசிச் சென்றது இன்றுவரை யாருக்கும் அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை.

அவனுடைய உழைப்பில் படங்கள் மட்டும் வந்துகொண்டிருக்கிறது எந்த அழைப்பையும் எடுப்பதில்லை, இருமுறை சச்சியும் சம்பத்தும் சென்றும் பார்க்க மறுத்துவிட்டான்.

எப்படி இருக்கிறான் என்று கூட வீட்டினருக்கு தெரியவில்லை, ஒவ்வொரு முறை சச்சி மற்றும் சம்பத்தை  பார்க்கும்போது அவனைப் பற்றி ஏதேனும் கூறிவிட மாட்டார்களா என்று தவிப்போடு அவள் விழிகள் அலைபாயும்.

அவன் சென்ற பிறகான இரண்டு வாரங்கள் பலமுறை தற்கொலைபற்றி எல்லாம் யோசித்திருக்கிறாள், அதை நிறைவேற்றத் தைரியம் வரவில்லை.

அதோடு அவனுடன் வாழ வேண்டும் என்ற ஆசை நெஞ்சை முட்ட இருக்கும்போது அந்த எண்ணத்தை மெல்ல கடந்து வந்துவிட்டாள்.

இறுதி தேர்வுகளை நன்றாகவே எழுதி முடித்தாள், பெரிதாக இல்லை என்றாலும் நல்ல ஒரு கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்துவிட்டாள்.

மூன்றுபேர் முட்டிமோதிக் கஷ்டப்பட்டு கிடைத்ததை விட இருமடங்கு சம்பளம் அவள் ஒருத்திக்கே கிடைத்தது, சாரதா மட்டும் அவர் செய்துகொண்டிருந்த சமயல் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார், அவள் ஏதும் தடை சொல்லவில்லை.

ஆறு மாதத்தில் நல்ல ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டாள்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டாள், மித்ராவும் குழந்தைகளும் அடிக்கடி வரத்தொடங்கினர், சாரதா மித்ராவுடன் இப்பொழுதும் பேசுவதில்லை பிள்ளைகளை மட்டும் நன்றாகப் பார்த்துக்கொள்ளுவார்.

அவளும் தாயுடன் பேசுவதில்லை முதலில் தங்கள் தவறுக்கு மன்னிப்பை வேண்டினாள் சாராதாவிடம் எந்த எதிர்வினையும் இல்லை, அதன் பிறகு நந்தாவிற்காகப் பலமுறை பேசியும் சாரதா மனம் மாறாததால் பேச்சை நிறுத்திக்கொண்டாள்.

நந்தா எப்பொழுதும்போலத் தாயுடன் பேசிக்கொண்டிருந்தாள், சுமதி அவளைக் கோவிலில் வைத்துப் பார்ப்பார் மகனுக்குப் பிடித்தது பிடிக்காதது என்று அவர் பேச்சு மொத்தமும் பாரிவேந்தனை பற்றியே.

சுமதி அலக்நந்தாவை பார்ப்பதை அறிந்த சாரதா அதற்கும் ஒரு பெரிய பிரச்னையைக் கிளப்பினார் “உங்க பையனைப் பத்தி அவகிட்ட சொல்லிகிட்டே இருந்தா அவ எப்படி அவனை மறப்பா, நீங்க யாரும் இனிமே அவளைப் பாக்க வரக் கூடாது, மூணு வருஷம் அவனைப் பத்தி யாரும் அவகிட்ட பேசக் கூடாது” என்று ஆடித்தீர்த்துவிட்டார்.

அன்றிலிருந்து அவள் யாரையும் சந்திப்பதில்லை அவனைப் பற்றி அறிய முற்படுவதில்லை, அவனோடு பேசமுடியா வார்த்தைகள் எல்லாம் உள்ளுக்குள்ளே அமுங்கி ரணமாக வலித்தது, இரவெல்லாம் அவன் அருகாமைக்கு ஏங்கி எரிந்தடங்கியது.

சாரதா அறியாத ஒரு விஷயம், நந்தாவின் இரவு அடக்குவதும் விடியல் தொடங்குவதும் அவன் வீட்டின் பால்கனியை பார்த்துக்கொண்டே என்பதை அவள் தாய் இன்றுவரை அறியவில்லை.

அவனுடைய வீடு எங்கு என்று சாரதாவிற்கு தெரியாது, ஆகையால் அவனுடைய வீட்டைப் பார்க்கும்படி இருக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவள் வாடகைக்கு வந்ததை அவர் பெரிதாகக் கருதவில்லை.

அந்தக் கதவு திறந்து அவன் அங்கு வந்து நிற்கும் நாளுக்காகத் தவம் கிடந்தாள் அலக்நந்தா.

காலை உணவு மதிய உணவு இரண்டையும் அவளே செய்துவிடுவாள், சாரதா சில சமயங்களில் உதவுவார் காலை எட்டு மணிக்குச் செல்பவள் மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவாள்.

இரவு உணவைத் தாத்தாவும் பேத்தியும் சேர்ந்து செய்வர், எட்டு மணிக்கு ராஜசேகர் உறங்கச் சென்றுவிட அவள் அவளுடைய அலுவலக பணியைச் சிறிது நேரம் செய்வாள்.

உறங்குவதற்கு முன் எப்பொழுதும் பால்கனியில் விழிமூடி படுத்துக் கிடப்பவளின் அருகில் மெல்லிய சத்தத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

உன்னை சேரும் அந்த
நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்ச தாலி மின்ன
மெட்டி கேலி பண்ண
பக்கத்தில் நான் கிடப்பேன்

 கண்ணில் மீனை வச்சு
புத்தம் புது தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளதனம் இல்லா
உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நானல்லவா
உலகமே காலடியில்
கரைந்ததே ஒர் நொடியில்
உன்னருகே நான் இருந்தால்
தினம் உன்னருகே நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே

அவளுடன் அந்த அறையில் உறங்கும் தாய்க்கு அது புரிந்தாலும் அதைக் கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

இரண்டு மூன்று வரன்களை கொண்டுவந்துவிட்டார் மகளுக்காகத் தாயிடம் சண்டை இடவில்லை வந்தவர்களிடம் விருப்பம் இல்லை என்று நேரடியாகக் கூறினாள்.

இன்று தன்னையே அவர் பார்த்து நிற்பதற்கு காரணம் தெரியும் அவளுக்குப் புதிய வரன் ஒன்றை கொண்டுவந்திருக்கிறார் இந்த இரண்டரை ஆண்டுகளில் அவள் மனதை மாற்றப் பல வழிகளும் முயன்றுவிட்டார்.

தந்தை பற்றிப் பேசி, தாங்கள் அடைந்த துன்பத்தைப் பற்றிப் பேசி… வெளிநாட்டில் வசிக்கும் ஒருவன், முன்பே திருமணம் ஆனவன் அங்கு நிச்சயம் பல பெண்களுடன் தொடர்பிருக்கும் போதை பழக்கம் இருக்கும் உன்னிடம் நடிக்கிறான்.

அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா முதல் பொண்டாட்டி எப்படி இருந்தாலோ அப்படிதான் நீயும் இருப்ப, நிம்மதி இருக்காது என்று அனுதினமும் அவனைப் பற்றிய மோசமான பிம்பத்தை அவள் மனதில் பதியவைக்க முயன்றார்.

அவர் பேசும் ஒவ்வொரு முறையும் அவனின் “அழகி” என்ற அழைப்பும் இறுதியாகத் தன் மேல் விழுந்து தெறித்த விழிநீரும் மட்டுமே நினைவுகளில் நின்றாடியது.

அவன்மீது அவள் கொண்ட காதல் உண்மையானது நிச்சயம் தன்னை தேடி வருவான், தன் நேசமும் காத்திருப்பும்  பொய்யாகாது என்ற திடமான நம்பிக்கை அனுதினமும் வளர்ந்துகொண்டே சென்றது.

நாட்கள் போகப் போக அவனுக்கான காத்திருப்பு ஒரு தவம் போல் மாறிவிட்டது அலக்நந்தாவிற்கு.

இரண்டு வரன்களை அவள் வேண்டாம் என்று கூறிய கோபம் சேர்ந்துகொள்ள, இரவில் அவள் கேட்க்கும் பாடலுக்குத் தடை விதித்துவிட்டார்.

“என்னால நிம்மதியா தூங்கமுடியல, என்ன இது எப்போ பாத்தாலும் இந்த மாதிரிப் பாட்டு கேக்கறது” என்று, அன்றிலிருந்து அதைக் கேட்பதில்லை ஆறு மாதமாகிறது.

அதோடு அவனுடன் தொடர்புடைய அனைத்தையும் அவள் அருகிலிருந்து நீக்கியாயிற்று ஆகையால் பெரிதாக அவனைப் பற்றி மகளுக்கு நினைப்பு  இல்லை என்று எண்ணிவிட்டார் சாரதா.

கண்ணில் படாதது கருத்தில் பதியாது என்று அவர் நினைத்திருக்க, அனுதினமும் அவன் அணைப்பில் உறங்குவதாகச் சங்கல்பம் செய்து வாழந்து கொண்டிருப்பவள் எப்படி மறப்பாள்.

இரண்டு முறை நந்தாவிடம் கேட்காமல் பெண் பார்க்க அழைத்துவிட்டார், இரண்டுமுறையும் விருப்பம் இல்லை என்று நேரடியாகக் கூறிவிட்டாள்.

ஆகையால் இந்த முறை அவளிடம் கேட்டுவிட்டு செய்யலாம் என்று நினைத்து அடுக்கலைக்குள் வந்து நின்றார் சாரதா.

“இன்னைக்கு மாப்பிள வீட்ல இருந்து வரச் சொல்றேன்” என்றவரை நிமிர்ந்து பார்த்தவள் “எந்த மாப்பிள” என்றாள்.

“போன வாரம் சொன்னேனே, பையன் யு.எஸ்.ல வேலை பாக்குறான்”.

“யு.எஸ்” என்றவுடன் ஒரு நொடி செய்துகொண்டிருந்த வேலையில் தடுமாற்றம் வந்தது.

“வீட்டுக்கு ஒரே பையன் நல்ல வேலை நல்ல சம்பளம், அப்பா அம்மாகூட ரொம்ப நல்லவிதமான இருக்காங்க, கல்யாணம் அப்புறம் உன்னையும் அமேரிக்கா கொண்டு போய்டுவாராம்” என்றவுடன் அடுப்பை அப்படியே அணைத்துவிட்டு ஓடிச்சென்று தன் அறைக்குள் நுழைந்து கதைவடைதாள்.

கால்களை மடக்கி அப்படியே அமர்ந்துவிட்டாள், அன்றொரு நாள் கனவில் கண்ட காட்சி மனதில் முட்டிமோதியது “எங்க இருக்கீங்க வேந்தரே வந்துடுங்க என்கிட்ட” என்றவள் வேண்டுதல் அவனைச் சென்று சேர்ந்ததா தெரியவில்லை.

சிறிது நேரத்தில் தன்னை சமன்செய்துகொண்டு வேலைக்குச் செல்லத் தயாராகி வெளியில் வந்தாள், சமையல் பாதியிலே நின்றது.

அவளைப் பார்த்து நின்ற ராஜசேகர் “நீ போடா நான் பாத்துக்குறேன், நீ ஆபிஸ்ல சாப்பிடு” என்றவர் “நந்தா… பிரச்சனைகள் வரும் போகும், அதுக்கு வயித்த காயப்போடக் கூடாது கண்டிப்பா சாப்பிடணும்” என்க சம்மதமாகத் தலை ஆட்டியவள் கதவின் அருகில் சென்றாள்.

“நந்தா” என்ற சாரதாவின் அழைப்பு அவளைத் தடுத்து நிறுத்தியது, “அவங்கள இன்னைக்கு வரச்சொல்றேன் நீ ஒன்னும் பதில் சொல்லாம போற” என்றார் கோபமாக.

“யாரும் வர வேண்டாம் எனக்குப் பிடிக்கல”.

“பிடிக்கலைன்னா என்ன அர்த்தம், எவ்ளோ நாள் இப்படியே இருக்கப்போற” என்றவரை திரும்பிப் பார்த்தவள்.

“அவர் வர வரைக்கும்…… “.

“இன்னும் சரியா எழுபத்தியஞ்சு நாள்… கண்டிப்பா வந்துடுவார் கண்டிப்பா வந்துடுவார்” என்று கூறிக்கொண்டே வெளியேறிய மகளை அதிர்ச்சியாகப் பார்த்திருந்தார் சாரதா.

வேலையில் கவனம் பதியவில்லை, முயன்று பார்த்தவள் விடுமுறை எடுத்துக்கொண்டு தமக்கையின் வீட்டிற்கு சென்றாள்.

மித்ரா சச்சியின் இரண்டாவது குழந்தை ஆத்விக் அவனுடைய பொருட்களை ஹாலில் பரப்பி விளையாடிக்கொண்டிருக்க இவளைப் பார்த்தவுடனே “சித்தி சித்தி” என்று பாய்ந்து கட்டிக்கொண்டான்.

“ஏன் ஆபிஸில் இருந்து வந்துவிட்டாய்” என்று மித்ரா கேட்கவில்லை, நந்தாவை அவர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

குழந்தையுடன் விளையாடியபிறகு மனம் கொஞ்சம் சமன் பட்டது, குழந்தைக்கு உணவு கொடுத்து உறங்க வைத்தபிறகு மித்ரா வந்து பார்க்க, ஹாலில் அப்படியே தரையில் படுத்து உறங்கி இருந்தாள் அலக்நந்தா.

அவளைத் தொல்லை செய்யாமல் மித்ராவும் ஓரமாகப் படுத்துவிட்டாள், மூன்றுமணிபோல எழுந்த மித்ரா நந்தாவை எழுப்பி அவளுக்கும் தனக்கும் உணவு எடுத்துவந்தாள்.

அமைதியாக உணவு நேரம் முடிய “அம்மா என்ன சொன்னாங்க” என்றாள் மித்ரா சரியாக.

அதற்க்கு பதில் உரைக்காத நந்தா  “அவங்க எங்க இருக்காங்க தெரியுமா” என்றாள் முதல் முறையாக.

இதுவரை யாரிடமும் அவனைப் பற்றி வாய்மொழியாகக் கேட்டதில்லை, சம்பத்தையும் சச்சிதானந்தனையும் பார்க்கும்போது அவனைப் பற்றி அறிந்துகொள்ள எழும் ஆர்வத்தை அவள் விழிகள் பிரதிபலிக்கும்.

ஒரு கட்டத்தில் அதையும் விட்டுவிட்டாள் இன்று ஏனோ மனம் துவள்கிறது காத்திருப்பின் கனத்தை தாங்க இயலவில்லை.

நாட்கள் அவளுக்கு மட்டும் ஆமையாக நகர்ந்தது, சம்பத் சூர்யப்பிரியாவின் மகன் சூர்யாவின் நான்காம் பிறந்தநாளுக்காக அவளை அழைத்திருந்தனர்.

ஏனோ எங்கும் செல்லத் தோன்றவில்லை மூன்றுவருடங்கள் நிறைவடைய இன்னும் இரு தினங்கள், சரியாக வந்துவிடுவானா எப்படி இருக்கிறான் எப்பொழுது வருவான் என்று உள்ளுக்குளே ஏதோ சொல்லமுடியாத உணர்வு.

ஒருமுறை பார்த்துவிட்டால் போதும், அனைவரும் மொட்டை மாடியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்க, கேக் கட் செய்து முடித்தவுடன் சூர்யப்பிரியாவிடம் சொல்லிக்கொண்டு தனிமையை நாடி சம்பத்தின் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

பால்கனியில் நின்றிருந்தவளின் செவிகளை அடைந்தது அவனின் நடையின் தாளம் மெல்ல அவள் நாசியை தழுகியது அவனின் மணம், உடலை யாரோ மொத்தமாக இருக்க கட்டி வைத்தபோல அவளால் அசைய முடியவில்லை கால்கள் வேரோடியது.

பார்க்கச் சொல்லி மனம் உந்த போராடி தன்னை மீட்டுக்கொண்டு திரும்பி நின்றாள் அலக்நந்தா, தொட்டுவிடும் தூரத்தில் அவன்.

அவளை நெருங்கவில்லை… முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை, மீசையும் தாடியும் அவன் அடையாளத்தை மொத்தமாக மறைத்திருந்தது, அவன் விழிகள் மட்டும் அவளிடம் ஏதோ ஒன்றை யாசித்து நின்றது.

விழியிலே ஒரு கீறலே…
விழுந்ததே தெரியாமலே…
தரையிலே நிழல் வேகுதே…
தனிமையை அறியாமலே…

நினைவுகள் விளையாடுதே…
நிஜம் அது புரியாமலே…
இதழ்களும் திறக்காமலே…
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…

போகாதே அழகே…
இனி தாங்காதே உயிரே…
எனை தோண்டாதே திமிரே…
பகல் வேஷம் போடாதே…

உன்னை தீராமல் பிடித்தேன்…
உயிரின் உள்ளே மறைத்தேன்…
வெளியில் கொஞ்சம் நடித்தேனே…

நிரா நிரா நீ என் நிரா…
திரா திரா நினைத்திரா…
நொடி சுகம் தரா…
வழி யுகம் விடா…