“சம்பத் வாப்பா வா வா, எப்படி இருக்க எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து, ப்ரியாவையும் கொழந்தையையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல, அவங்க எப்படி இருக்காங்க” என்ற சுமதி அவனின் கைப்பிடித்து அழைத்துச் சென்று சோபாவில் அமர்த்தினார்.
“சுமதி அவனைக் கொஞ்சம் பேசவிடு நீ கேள்வியா கேட்டுட்டு இருந்தா அவன் என்ன பண்ணுவான்” என்ற மகேந்திரன் “குடிக்க ஏதாவது கொண்டுவா” என்றார்.
“ஐயோ மறந்துட்டேன் இரு வரேன்” என்று உள்ளே ஓடிய மனைவியைப் பார்த்த மகேந்திரன் பெருமூச்சோடு “பாரி வந்து எவ்ளோ நாள் ஆகுது” என்க.
“பத்து நாள் ஆகுது அங்கிள், என்னோட புது படத்துல அவன்தான் அனிமேஷன் பண்ணியிருக்கான்” என்க.
“ஹ்ம்ம் கேள்விப்பட்டேன் வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சா??” என்றார் அவர்.
“முடிஞ்சுச்சுது அங்கிள் அடுத்த வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆகுது, நாளைக்கு பிரிவியூ உங்களையும் ஆன்ட்டியையும் இன்வைட் பண்ண வந்தேன்” என்றான் சம்பத்.
“ரொம்ப சந்தோசம் பெஸ்ட் விஷ்சஸ், வர முயற்சி பன்றோம்” என்றார்.
சுமதி ஜூஸ் எடுத்து வந்தார் சம்பத் அவரிடமும் கூற அவர் “கடவுள் அருளால எல்லாம் நல்ல படியா நடக்கட்டும்” என்றவர் “வர முடிஞ்சா கண்டிப்பா வரோம்” என்றார்.
“பாரி வந்திருக்கான்மா” என்ற சம்பத்தை பார்த்தவர் கொஞ்சம் நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தார்.
“பறவைக்குச் சிறகு வந்தவுடனே பறந்திடுது, பசங்களும் ஒரு வயசுக்கு அப்புறம் அவங்க பாதையைப் பார்த்துப் போக விட்டுரனும் போல, அப்படி விட முடியாம என்ன மாதிரி சில பேர் மிச்சமிருக்கோம்” என்றார் வருத்தம் தேய்ந்த குரலில்.
“அப்படி இல்ல ஆண்ட்டி ரொம்ப வேல அவனுக்கு, அவன் சரியா தூங்கியே ரொம்ப நாள் ஆகுது” என்றான் சம்பத் நண்பனைத் தாங்கி.
“இப்படி ஓடி ஓடி யாருக்காகச் சம்பாதிக்கிறான், பிரச்சனை பண்ண அவளே வேற கல்யாணம் பண்ணி போய்ட்டா இவன் பிடி குடுக்காம இப்படியே இருக்கான்”.
“அவனைப் பாத்துக்க ஒருத்தி வந்துட்டா நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்” என்றவறின் வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்தது, ஆனால் இப்பொழுது அலக்நந்தாவை பற்றி ஒன்றும் கூற இயலாது.
“இன்னும் ரெண்டு மூணு நாள்ல வருவான் ஆண்ட்டி, நீங்களும் அங்க வந்து ரொம்ப நாள் ஆச்சே இந்தச் சண்டே வீட்டுக்கு வாங்க” என்று அழைத்துவிட்டு சென்றான்.
இத்தனை பேச்சுக்கள் நடக்கும்போதும் பத்மா அங்கே உணவு மேசையில் அமர்ந்திருந்தாள், சம்பத் அவளிடம் பேசவும் இல்லை அவளை அழைக்கவும் இல்லை.
அவனுக்கும் பத்மாவின் பேச்சும் நடவடிக்கையும் பிடிப்பதில்லை, சம்பத் சென்ற சிறிது நேரத்திலே சுமதியிடம் சொல்லிக்கொண்டு தன் அன்னையை காண சென்றுவிட்டாள் பத்மா.
“மா இந்தப் பாரி ஊருக்கு வந்து பத்து நாள் ஆகுதுமா யாருக்குமே தெரியல”.
“அவனைப்பத்தி இப்போ என்ன?? நம்மள அவன் எப்போவுமே மதிக்கமாட்டான், வீனா அவனைப்பத்தி என்ன பேச்சு”
“அதும் சரி தான், இந்தச் சம்பத்…. நான் அங்கேயே அவன் கண் முன்னாடியே இருக்கேன் ஒரு வார்த்தை கூடப் பேசல, என்னைப் படம் பாக்க கூப்பிடவும் இல்லை” என்றாள் வெறுப்போடு.
“ஆமா பெரிய படம் எடுத்துக் கிழிச்சான், அந்தத் திமிர் புடிச்சவன் பிரென்ட் தானே அவனை மாதிரிதான் இருப்பான்”.
“நீ சச்சிய பத்தி சொல்லு அந்தக் குட்டி பிசாசை உன் வழிக்குக் கொண்டுவந்தியே என்ன ஆச்சு”.
“ஆமாமா எல்லாம் நாம நெனச்ச மாதிரி நடக்குதுன்னு நெனச்சேன், ஆனா இப்போ நாலுநாளா நான் அங்க போனா மித்ரா அங்க இருக்கறதில்ல”.
“ஒரு நாள் ஹாஸ்பிடல்ல இருக்கேன்னு சொன்னா, அடுத்தநாள் ஷாப்பிங், நேத்து சச்சிகூட அவன் ஆபிஸ்ல இருக்கேன் சொல்றா”.
“ஒரு வாரம் முன்னாடி நான் போனபோது அத்வைத் அங்க இல்ல, கேட்டப்போ அவனை அவளோட தங்கச்சி கூட்டிட்டு போயிருக்கானு சொன்னா, ஒருவேளை அவகிட்ட ஏதாவது சொல்லியிருப்பானோ” என்றாள் பத்மா அன்னையிடம்.
“என்னடி சொல்ற இதுவும் போச்சா” என்றார் அவர்.
“எனக்கு ஒன்னும் புரியல மா” என்று தலையைப் பிடித்து அமர்ந்துவிட்டாள் பத்மா.
மித்ராவின் வீட்டிலிருந்து வேகமாக வெளியேறிய நந்தா அந்த வழியே வந்த ஆட்டோவில் ஏறிவிட்டாள்.
கொஞ்சம் தூரம் சென்று சிக்னலில் வண்டி நின்றபோது அருகில் ஒரு தாய் ஸ்கூட்டியின் முன்னாள் நின்றிருந்த சிறிய பிள்ளையிடம் “உனக்கு ஐஸ் கிரீம் ஒத்துக்காது தெரியும்ல அப்புறமும் அடம் புடிச்சா என்ன அர்த்தம்?? நான் வாங்கித்தர மாட்டேன்” என்று அவனைக் கண்டித்துக் கொண்டிருந்தார்.
இவளுக்குச் சட்டென்று மூலையில் மின்னல் வெட்டியது “ஐயோ பத்மா” என்று தலையில் அடித்துக்கொண்டவள் “அண்ணா திரும்ப அந்த வீட்டுக்கே போங்க” என்றாள்.
மீண்டும் வந்து நின்றவளை சச்சியும் மித்ராவும் ஆச்சர்யமாகப் பார்த்தனர், அத்வைதிற்கு மாலை சிற்றுண்டி கொடுத்துக்கொண்டிருந்தான் சச்சி, இருவரையும் வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தாள் மித்ரா.
அனைவரும் வீட்டின் முன் இருந்த கார்டனில் இருந்தனர், வேகமாக உள்ளே நுழைந்தவள் அவர்களின் அருகில் சென்று “அத்துக்குட்டி சித்தியோட பர்ஸ் காணும் உன்னோட பேகுல இருக்கா பாரு” என்க அவன் “சரி” என்று தலையாட்டி உள்ளே ஓடினான்.
“உங்க குடும்பத்துல நடந்த நடக்குற எல்லா பிரச்சனைக்கும் அவங்கதான் காரணம், அத்துக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு, இப்போ அவன் இப்படி நடக்குறதுக்கு எல்லாமே” என்க.
இருவருக்குமே அதிர்ச்சி, எப்படி ஆறுதலாக அன்பாகத் தன்னிடமும் அத்துவிடமும் நடந்து கொள்வாள் அவளா இப்படி!! என்று மித்ராவால் நம்பாவே முடியவில்லை.
“சித்தி என் பேகுல இல்ல” என்று அத்து வந்து நிற்க “சரி குட்டி நான் வீட்ல போய்ப் பாக்குறேன்” என்றவள் இருவரையும் ஒருமுறை அர்த்தத்தோடு பார்த்துவிட்டுச் சென்றாள்.
பத்மாவிடம் உடனடியாக அப்படி பேச முடியவில்லை அவர்களால், குடும்பம் உறவுகள் அனைவரும் ஒதுங்கி நிற்கிறார்கள், தாங்கள் இப்பொழுது என்ன சொன்னாலும் அதைத் தங்களுக்கு எதிராகவே திருப்பிவிடுவாள்.
சண்டை இடும் மனநிலையில் இல்லை இருவருமே, அவர்கள் ஒதுங்கிப் போக நினைத்தனர் அதோடு மகனை அவள் நெருங்காமல் பார்த்துக்கொண்டனர்.
அவளைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டாள் மித்ரா, முன்பு இருந்ததை போல எப்பொழுதும் வீட்டிலே அடைந்து கிடக்காமல் சச்சியுடன் அவன் அலுவலகம் சென்றாள் அதிக நேரத்தை அத்துவுடன் இருவரும் செலவு செய்தனர்.
சூர்யப்பிரியா மிகுந்த டென்ஷனில் இருந்தாள் கணவனின் படம் வெளியாகிறது, எத்தனை படங்கள் வந்தாலும் ஒவ்வொரு முறையும் முதல் முறை போன்றே பதட்டம் இருக்குமே.
உள்ளே நுழைந்த நந்தாவை பார்த்தவள் வேகமாகச் சென்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள் “கொஞ்சம் டென்ஷனா இருக்கு” என்று.
“நிச்சயமா நல்லா இருக்கும் நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க” என்ற நந்தா அவளுடனே நின்றுகொண்டாள்.
அனைவரும் வந்துவிட பிரிவியூ ஷோ தொடங்க ஏற்பாடாகியது, அவர்களுடன் அமர வந்த நந்தாவிடம் “உனக்கு இங்க இல்லமா வா” என்று அழைத்துச் சென்றான் சம்பத்.
“நம்மள தனியா ஒக்கார வெச்சுடுவாங்க போல, இங்க பெரிய ஆளுங்கதான் இருக்கணுமா” என்று ஒருநொடி அவள் மனம் வேதனை கொண்டது.
தனியாக அறைபோல இருந்த இடத்தில அமரச்சொன்னவன் “இங்கேயே இரு நந்தா, உன் சீட் இங்கதான்” என்க.
“நான் இங்க எப்படி தனியா, பரவா இல்லண்ணா நான் கிளம்புறேன்” என்றாள்.
“நீ தனியா இல்ல நந்தா, உனக்கான துணை உன்ன தேடி வரும்” என்றான்.
அவன் கூற்றின் அர்த்தம் புரியவில்லை சென்று அமர்ந்துவிட்டாள், அரங்கில் இருள் சூழ திரை ஒளிர்ந்தது, அதில் அவளின் கவனம் பதிய, அழுத்தமான காலடி சத்தம் செவிகளை நிறைத்தது.
வருவது யார் என்று தெரியும், நான்கு மாதமாக உள்ளுக்குள்ளே இருந்து உயிரை உருக்குபவன், ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்று ஏங்க வைத்தவன்.
காலடி சத்தம் நிலைக்க மிக அருகில் அவனின் பெர்பியூம் வாசம், அவளை நெருங்கி அமர்ந்தான், பதட்டத்தில் அவள் சட்டென்று எழப்போக அவளின் கைபிடித்து தன் அருகில் அமர்த்தினான்.
கைச்சில்லிட்டிருக்க மெல்லிய நடுக்கமும் “அழகி…..” என்று உயிரை உருக்கும் குரலோடு, அவன் இதழ்கள் அவள் செவி மடல்களைத் தீண்டியது.
அலக்நந்தாவின் கட்டுப்பாட்டையும் மீறிச் சில கண்ணீர் துளிகள் அவன் கையில் பட்டுத் தெறித்தது, இன்னும் அழுத்தமாக அவள் கையைப் பற்றியவன் தன் மார்போடு வைத்து அழுத்திக்கொண்டான்.
“இந்தப் படத்தோட வேலை நெறய இருந்தது, தூங்கி பத்து நாள் ஆச்சு அழகி, ஐ நீட் ரெஸ்ட்” என்றான் அவள் விழிநீரை துடைத்துக்கொண்டே.
நந்தா தலையைத் திருப்பிக் கொண்டாள், தன் நெஞ்சில் அழுத்திப் பிடித்த கைகளோடு அப்படியே விழிமூடினான், சில நொடிகளில் அவனிடம் சீரான மூச்சு.
இறுதிவரை திரையில் தெரிந்தது என்ன என்று அவள் பார்க்கவே இல்லை, விழிகளில் அவனை நிறைத்துக் கொண்டிருந்தாள்.
படம் முடிந்து அனைவரும் விடை பெற ஆழ்ந்த அமைதியான உறக்கம் அவனிடம், எழுப்ப மனம் வரவில்லை வெகுநேரம் சென்று அவனே விழித்துக்கொண்டான்.
திரும்பி அவளைப் பார்க்க விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள், தன் கரங்களுக்குள் இத்தனை நேரம் பொதிந்து இருந்த அவளின் கரத்தைப் பார்த்தவன் அதில் தன் இதழ்களைப் பதித்தான் அழுத்தமாக, அடிவயிற்றில் சொல்ல முடியாத உணர்வு தோன்ற இருக்கையின் கைப்பிடியை அழுத்தமாகப் பற்றினாள் அலக்நந்தா.
“போலாமா” என்றவனின் குரலில் மீண்டவள் தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்து வேகமாக வெளியேறினாள், அவளின் ஓட்டத்தைப் பார்த்தவன் அதரங்களில் கீற்றான புன்னகை.
வெளியில் வந்தவன் எந்தப் பக்கம் போக என்று தெரியாமல் நின்றவளை ரசித்துப் பார்த்திருந்தான், அவன் விழியையும் மனதையும் நிறைத்தாள் அவன் அழகி, அப்படியே அள்ளிக்கொள்ள பேராசை பிறந்தது, ஆழ மூச்செடுத்து தன்னை சமன் செய்தவன் அவள் அருகில் நெருங்கி “போலாம்” என்க.
அவனின் பின்னே கொஞ்சம் இடைவெளி விட்டு நடந்தாள், நேரே பார்க்கிங் சென்றுவிட்டான், காரின் அருகில் செல்ல அவள் அங்கேயே தேங்கி நின்றாள்.
“என்ன” என்ற அவனின் கேள்வியில் “இல்ல நான் ஆட்டோ பிடிச்சு போய்டுவேன்” என்றாள் அவள்.
அவன் முகம் இறுகியது “ஏன் என்கூட வந்தா என்ன?” என்றான் ரோஷமாக.
“இவனுக்குக் கோவப்படாம பேசவே வராதே” என்று எண்ணியவள் அவனை முறைத்து பார்க்க “ஆரம்பிச்சுட்டியா இன்னும் இந்தப் பார்வையை மாத்தலயா நீ” என்றான் அவளை முறைத்துக்கொண்டு.
“என்னமோ செய்துகொள்” என்று நினைத்தவள் நடந்து வெளியில் சென்று நின்றுகொண்டாள்.
சில நொடிகளுக்குப் பிறகு வந்த பேருந்தில் ஏறிக்கொண்டாள், அவள் அமர்ந்த அடுத்த நொடி அவள் அருகில் நெருங்கி அமர்ந்துகொண்டான் பாரிவேந்தன்.
“ஏன் நான் இதுல ஏறக்கூடாதுனு அவர் சொன்னாரா” என்றான் ஓட்டுனரை காண்பித்து.
“மச்… ஏன் இப்படி”.
“எப்படி” என்றான் இன்னும் அவளை நெருங்கி, அவளுக்குப் பெரும் அவஸ்தையாக இருந்தது, தன்னோடு வருகிறானா!! இந்த நாற்பது நிமிடங்களும் தன்னோடு ஒன்றாகப் பயணம் செய்வானா என்று மனம் குதூகலித்தது.
அவனுக்குப் பேருந்துப் பயணம் புதியது அவன் நினைவுகளில் பேருந்தில் அவன் பயணம் செய்ததில்லை, பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்துக்கொண்டு, அந்த மாலை மயங்கும் வேளையில் மனம் கவர்ந்தவளுடன் ஒரு பயணம்.
அவளைத் தழுவித் தன்னை அனைத்துக்கொள்ளும் காற்றை சுவாசித்து தன் அருகாமை அவளில் ஏற்படுத்திய குறுகுறுப்பில் அழகாகச் சிவந்திருந்த அவளின் வதனங்களை ரசித்துக்கொண்டு ஒருவித உல்லாச மனநிலையில் இருந்தான்.
நடத்துனர் வந்தவுடன் இருவருக்கும் சேர்த்தே டிக்கெட் எடுத்துக்கொண்டாள், மீண்டும் அவனைப் பார்த்து “இப்போ எதுக்கு என்கூட வரீங்க”.
“வேற ஏதாவது கேளு”.
“திரும்பி எப்படி போவீங்க உங்க வண்டி அங்க இருக்கே ?”, அந்தக் கேள்வி அவளுக்கே அபத்தமாகத் தோன்றியது, அவனுக்கு வேளை செய்ய ஆட்கள் வரிசையில் நிற்கிறார்களே.
இப்பொழுது அழைத்துச் சொன்னால் கூட வண்டியோடு ஒருவர் இந்தப் பேருந்தின் பின்னேயே வரக்கூடும் அனால் செய்யமாட்டான்.
“ஹ்ம்ம் நடந்து போய் என் வண்டிய எடுத்துட்டு திரும்ப அண்ணா நகர்ல இருக்குற என் வீட்டுக்குப் போவேன், கூப்டா வரமாட்டேன் சொல்லிட்டல அப்புறம் உனக்கு என்ன கவலை?” என்றான்.
“இவன்கிட்ட கேட்டென்பாரு” என்று மீண்டும் ஜன்னலின் புறம் திரும்பிக்கொண்டாள், அவனின் அழகியின் கரங்களை மீண்டும் அழுத்தமாகக் கோர்த்துக்கொண்டான், அவள் கையை இழுத்துக்கொள்ள பார்க்க.
“சும்மா இரு அழகி… இல்ல கிஸ் அடிச்சுருவேன், நீ வேற ரொம்ப டெம்ப்ட் பண்ற” என்றான்.
பட்டென்று அவள் திரும்பி அவன் முகத்தைப் பார்க்க, மெலிதான புன்னகையோடு தலை கோதிக்கொண்டான், சிவந்து விட்ட முகத்தை அவனுக்குக் காண்பிக்காமல் ஜன்னலின் புறம் திரும்பிக் கொண்டாள்.
இருவரின் மனமும் நிறைந்து இருந்தது, அங்கு வார்த்தைகள் தேவைப் படவில்லை, மிக அமைதியான அந்தப் பயணம் அவர்களை வண்டலூர் நோக்கி அழைத்துச் சென்றது.
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே
பிரிவென்று ஏதும் இல்லை
உயிரென்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை
நானே நானே தானே