மறுநாள் காலையே வந்துவிட்டாள் அத்துவை அழைத்துச்செல்ல, இரவு வீட்டில் இதைப் பற்றிப் பேசினாள் தாயிடமும் தாத்தாவிடமும், சாரதா ஒன்றும் கூறவில்லை முகம் மட்டும் கடுமையாக இருந்தது.
அவரால் மித்ராவை மன்னிக்க முடியாது எப்பொழுதும், தன் கணவனின் மரணத்திற்கு மித்ராவின் காதலே காரணம் என்று அவர் திடமாக நம்பினார்.
நந்தா கூறியதற்கு எதிர்த்தும் ஒன்றும் கூறவில்லை அந்த நம்பிக்கையில் காலையில் சென்று அழைத்து வந்துவிட்டாள், வாசலில் வந்து நின்ற குழந்தையை விழி எடுக்காமல் பார்த்திருந்தார் சாரதா.
மித்ராவின் எந்தச் சாயலும் அவனிடம் இல்லை தந்தையை போல் இருக்கிறான் போல என்று எண்ணம் ஓடியது, தங்கள் குடும்பத்தின் முதல் பேரக்குழந்தை… பார்த்ததும் இல்லை, ஆசையாக அள்ளி அணைத்ததும் இல்லை.
எப்படி வளர வேண்டிய பிள்ளை! உறவுகள் இருந்தும் தெரியாமல் இப்படி நிற்க நேர்ந்துவிட்டதே… “அம்மா” என்ற அலக்நந்தாவின் அழைப்பில் சிந்தனை களைந்து பார்க்க, நந்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான் அத்வைத்.
அவர் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்றுவிட ராஜசேகர் அவன் அருகில் வந்து “வாங்க ராசா” என்று அவனைக் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றார் “நான் உங்க பெரிய தாத்தா, அது உங்க பாட்டி” என்று சாரதாவை காண்பிக்க அவர் விழிகள் அவனைப் பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தது.
“சித்தி நீ ஏன் இவ்ளோ சின்ன வீட்ல இருக்க” என்றான் அத்வைத்.
மெல்ல புன்னகைத்தவள் “அது, சித்தி இப்போதான் படிக்கிறேன் படிச்சு முடிச்சு வேலை கிடைச்சதும் நல்ல பெரிய வீட்டுக்குப் போயிடுவோம்” என்க.
நந்தா அடுக்கலைக்குள் செல்ல, பேரனுக்கென்று அவனுக்குப் பிடித்த ஆப்பிள் ஜூஸ் அடித்து வைத்திருந்தார் சாரதா, அவரைப் பார்த்துச் சிரித்தவள் “குழந்தை மேல என்னமா கோவம், வாங்க… பேசுங்க…” என்று அழைக்க.
“இல்ல வேண்டாம்” என்று அங்கேயே நின்றுகொண்டார்.
சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு அவனைச் சம்பத்தின் வீட்டிற்கு அழைத்துச்சென்றாள் நந்தா, அங்குச் சம்பத்தின் மகன் சூர்யா இருக்கிறானே, அந்த வீடு அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
முதலில் சூர்யாவிடம் ஒதுங்கி நின்றவன், மெல்ல மெல்ல விளையாடத் தொடங்கி விட்டான், அன்று முழுதும் அங்கேயே இருந்தார்கள், யார் யார் என்ன உறவு என்று அவனுக்குப் புரியவைத்தாள்.
அங்கிருந்த பார்க்கில் குழந்தைகள் அனைவரும் மாலை விளையாட அதில் தம்பி தங்கை என்று விளையாடிய குழந்தைகளின் அருகில் அத்துவை அழைத்துச்சென்றாள் குழந்தைகள் அவர்களின் தம்பி தங்கையுடன் விளையாடுவதை காண்பித்தாள்.
விளையாட்டு நேரம் முடிந்து பிள்ளைகள் அவர்கள் வீடுகளுக்குச் செல்ல “சித்தி அந்தப் பாப்பாவை நாம கூட்டிட்டு போலாம்” என்றான் சூர்யாவை காண்பித்து.
“அது எப்படி முடியும் அத்து, அவன் அவனோட வீட்டுக்குத் தானே போவான், நம்ம தம்பியா இருந்தா நம்ம வீட்டிலேயே வெச்சுக்கலாம், விளையாடலாம்” என்க சிறிது நேரம் யோசித்தவன்.
“வேண்டாம் நான் மட்டும் தான் இருக்கணும், வேற யாரும் வேண்டாம் அப்புறம் என் பொம்மை, கார், ஏரோபிளேன் சாக்லேட் எல்லாம் அவனுக்குக் குடுத்துடுவீங்க, அம்மாவும் அவன் கூட மட்டும் தான் தூங்குவாங்க, அவனுக்குச் சாப்பாடு குடுப்பாங்க என்ன பாதுக்கமாட்டாங்க” என்று பிடிவாதமாகக் கூற.
அவளுக்கு ஆயாசமாக இருந்தது “எப்படி எல்லாம் கூறி ஒரு குழந்தையின் மனதை குழப்பி விட்டு இருக்கிறார்கள், யாராக இருக்கும்” என்று அவளுக்கு மனதை அரித்தது, அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டாள்.
மறுநாள் வி.ஜி.பி அழைத்துச் சென்றாள் அவனை விளையாடவிட்டு “எப்படி பேச என்ன சொல்ல” என்ற யோசனையில் அமர்ந்திருந்தாள்.
கார்டில் கொஞ்சமாகவே பணம் போட்டிருந்தாள், வேகமாக விளையாட்டு முடிந்துவிட்டது “பசிக்குதா அத்து சாப்பிடலாமா” என்க “சரி” என்றான்.
அவனுக்குப் பிரைட்ரைஸ் வாங்கியவள் தனக்கு வெஜிடபிள் ரைஸ் வாங்கிக்கொண்டாள், உணவு ஏனோ உள்ளே இறங்கவில்லை அவன் சாப்பிடுவதை பார்த்திருந்தவள்.
“அத்து உங்களுக்கும் அம்மாவுக்கும் உடம்பு சரி இல்லாதப்போ உங்களுக்கு மருந்து குடுத்து சாப்பாடு குடுத்து பக்கத்துலே இருந்து யார் பாத்துக்கிட்டா?”.
“நீ தான் சித்தி”.
“சரி உனக்கு ஊசி போட்டு வலிக்கும்போதும், நைட் தூக்கம் வராதபோதும் தோள்ல போட்டுத் தட்டிட்டே இருந்தது யாரு”.
“சித்தப்பா”.
“சித்தியும் சித்தப்பாவும் யாருனு தெரியுமா” என்க குழந்தை புரியாமல் பார்த்தது.
“உன்ன மாதிரி சின்ன வயசா உங்க அம்மா இருந்தப்போ சித்தி பாட்டி வயித்துல குட்டி பாப்பாவா இருந்தேன், அதே மாதிரி உங்க அப்பா ஸ்கூல் படிக்கும்போது இன்னொரு பாட்டி வயித்துல சித்தப்பா குட்டிபாப்பாவா இருந்தாங்க”.
“நானும் உன் அம்மாவும் நெறையா விளையாடுவோம் எல்லாத்தையும் ஷேர் பண்ணி சாப்பிடுவோம், ஒண்ணா ஸ்கூல் போவோம் ஒரே மாதிரி டிரஸ் போடுவோம் ஒண்ணா தூங்குவோம், ரொம்ப ஜாலியா இருக்கும்”.
“உங்களுக்கு ஐஸ்கிரீம் ஜூஸ் எல்லாம் வாங்கி தந்தவங்க பேட், அத சாப்பிட்டா உனக்கு உடம்பு சரி இல்லாம போய்டும் தெரிஞ்சே வாங்கி தந்துருக்காங்க, பாரு டாக்டர் ஊசி போட்டப்போ உனக்குத் தானே வலிச்சது” என்க.
“ஆமாம்” என்றான் அத்து.
“ஹ்ம்ம்… அப்புறம் அவங்க உன்ன பாக்க வந்தாங்களா உன் கூட இருந்தாங்களா ?” என்க.
அவன் அமைதியாக அவளைப் பார்த்திருந்தான் “சித்திய நம்ப மாட்டீங்களா அத்து” என்க.
“நம்புறேன்” என்று தலை ஆசைதான், அவளுக்குப் புது நம்பிக்கை பிறந்தது.
அவன் கையைப் பிடித்தவள் “அத்துக்குட்டி சித்திகிட்ட சொல்லுங்க இந்த மாதிரி பேட் எல்லாம் யார் உங்களுக்குச் சொல்லித் தந்தா, அத்துவ எங்க எல்லார்க்கும் ரொம்ப பிடிக்கும் எப்போவுமே அம்மா அப்பா உங்கள ரொம்ப லவ் பண்றாங்க, இனிமேலும் லவ் பண்ணுவாங்க, வி ஆல்வேஸ் லவ் யு அத்து” என்க.
அவளுக்கு அது யார் என்று தெரியவில்லை, சச்சியின் குடும்பத்தைப் பற்றி இவளுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது, அந்தப் பேச்சை அதோடு விட்டுவிட்டாள்.
சதி செய்தவரின் பெயர் தெரிந்துவிட்டது, இனி கவனமாக இருக்க சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.
மறுநாள் அவனை அவனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள், கிளம்புவதற்கு முன் வீட்டில் வைத்து “அத்து அம்மா பாவம் உனக்கு உடம்பு சரியில்லாதப்போ எவ்ளோ அழுதாங்க, உனக்குச் சீக்கிரம் சரி ஆகணும்னு சாமிகிட்ட வேண்டிக்கிட்டாங்க”.
“அப்பா வேலை எல்லாம் விட்டுட்டு உனக்காக ஊர்ல இருந்து வந்தார், அவங்க மேல கோவப்பட கூடாது, நீ ஹாப்பியா இருந்தாதான் அவங்களும் சிரிப்பாங்க, அப்பா அம்மா கிட்ட பேசு சரியா” என்று சொல்லி அழைத்துச் சென்றாள்.
வீட்டிற்குள் சென்றவன் மித்ராவை சில நொடிகள் பார்த்து நின்றான் “அத்து கண்ணா அம்மா கிட்ட பேசுடா” என்ற அவளின் குரலில் அவளின் அருகில் சென்றவன் அவள் வயிற்றோடு அணைத்துக்கொண்டு “சாரி மா, இனிமே இப்படி பண்ண மாட்டேன்” என்று கண்ணீர் விடச் சச்சி தளர்ந்து போய்ச் சோபாவில் அமர்ந்தான்.
அவன் விழிகளில் ஈரம் படர்ந்தது மகனை இழந்துவிடுவோமோ என்ற பயம் இத்தனை நாட்களாக மனதில் பாறாங்கல்லாக அழுத்திக் கொண்டிருந்தது.
“அத்து கண்ணா உங்க ரூம்க்கு போய் டிரஸ் மாத்திட்டு வாங்க அம்மா அப்பா கூடச் சாப்பிடலாம்” என்றாள் நந்தா புன்னகையோடு, தலையாட்டியவன் தந்தையின் அருகில் சென்று “சாரிப்பா” என்க அவனை அப்படியே அனைத்துக் கொண்டான் சச்சி.
உடைமாற்ற அவனின் அறைக்குச் செல்ல, “நந்தா” என்ற தமக்கையின் அழைப்பில் அவளைப் பார்த்தவள், அவளின் கலங்கிய விழிகளைப் பார்த்து “உங்க நன்றிக்காக இத நான் செய்யல, அத்துக்குக்காகச் செஞ்சேன்”.
“பத்துநாள் உன் புள்ள உன்கிட்ட பேசாம இருந்தது வலிக்குதுல, வருஷக்கணக்கா இந்த வலியோடவே வாழறாங்க சிலர்” என்றவள் பேச்சில் பெரிதாக அடிவாங்கினர் இருவருமே.
அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்காமல் உடனே வெளியேறிவிட்டாள்.
ஒரு வாரத்திற்கு பிறகு, காலைச் சமயல் செய்து கொண்டிருந்த நந்தாவின் அருகில் வந்த சம்பத் “நந்தா… என்னோட புது படம் ரிலீஸ் ஆகுது” என்க.
“சூப்பர்ண்ணா வாழ்த்துக்கள்” என்றாள் மனம் றைந்த சந்தோஷத்துடன்.
அவள் கையில் பிரிவியூ ஷோவுக்கான டிக்கெட்டை வைத்தவன், “நாளைக்கு மதியம் மூணு மணிக்கு ஷோ, கண்டிப்பா நீ வரணும் நான் வண்டி அனுப்புறேன்” என்க.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, தியேட்டர் சென்று படம் பார்த்த நினைவுகள் எல்லாம் அவளுக்குச் சிறு வயதிலே மறைந்து விட்டது, அதிலும் பிரிவியூ ஷோவிற்கு தனக்கு அழைப்பா!! அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டாள்.
“நந்தா என்னாச்சு” என்று சூர்யப்பிரியா உலுக்க, அவளைப் பார்த்து “ஒன்றும் இல்லை” என்றவள் சம்பத்திடம் “நான் எப்படின்னா? எனக்கு அங்கெல்லாம் போய்ப் பழக்கம் இல்ல, நீங்க வேற யாருக்காவது குடுங்க” என்க.
“நந்தா நீ வர, வரணும் அவ்ளோதான், இல்ல இவன் படத்துக்கெல்லாம் நான் ஏன் போகணும் அப்படி” என்று அவன் முடிப்பதற்குள்.
“ஐயோ அங்க எல்லாரும் பெரிய ஆளுங்களா இருப்பங்களே, நாம போய் என்ன பண்ண” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே வீடு சென்றாள்.
வீட்டில் உண்மையைச் சொல்லியே அனுமதி கேட்டாள், பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் இல்லை “நேரத்தோடு வந்துவிடு” என்று முடித்துவிட்டார் சாரதா.
அழகான லெமன் கிரீன் நிறத்தில் புதிய சுடிதார் வாங்கினாள், அதற்க்கு தோதான வளையல் கம்மல் அணிந்து அழகோவியமாகத் தயாராகி நின்றவள், தன் பிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்த நொடி, அவனை நாடி சென்றது மனம்.
“ஏன் இத்தனை நாட்களாக வரவில்லை, எங்கிருக்கிறான்” என்றதோடு இப்பொழுது தன்னை பார்த்தால் என்ன சொல்லுவான் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
அவனின் “அழகி” என்ற அழைப்புக்குச் செவிகள் தவம் கிடந்தது, தனியாகப் பாக்ஸ் சீட் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அழகியின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான் பாரிவேந்தன்.