அந்தக் குளிரான இரவு வேளையில் எங்கும் பனி மழை பெய்துக் கொண்டிருந்தது சில்லென்ற காற்று உடலைத் துளைக்க அந்த அறையின் பால்கனியில் நின்று கடந்து போகும் மனிதர்களைப் பார்த்திருந்தாள் அலக்நந்தா.
அவள் இடையை சுற்றி வளைத்தது வலிமையான அந்தக் கரங்கள், அவள் விழிகள் தானே மூடிக்கொள்ள “இந்தக் குடைக்குள் எனக்கு இடம் கிடைக்குமா” என்றான் அவள் நேத்திரங்களில் இதழ் பதித்து.
செம்மை படர்ந்த அவள் கன்னத்தில் இதழ் பதித்தவனின் “அழகி…” என்ற ஆழ்ந்த அழைப்பில் சட்டென்று விழித்துக்கொண்டாள் அலக்நந்தா.
மொத்தமாக வியர்த்து வழிந்தது நேரம் அதிகாலை நான்கை கடந்து கொண்டிருந்தது “காலையில வரக் கனவு பலிக்கும் சொல்லுவாங்களே??”.
“இப்போ நடக்கணுமா வேண்டாமா உனக்கு” என்றது அவள் மனது.
“கடவுளே என்ன இது ஏன் இப்படி எல்லாம் தோணுது, வேண்டாம் தப்பு தப்பு” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவள் பரீட்சைக்கு படிப்பதை கூட மறந்து மீண்டும் உறங்க முயற்சி செய்தாள்.
கடந்த சில நாட்களாக யோசனையில் இருந்த வானதி ஒரு நாள் காலை வேளையில் பாரிவேந்தனின் அறைக்குக் கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்தவன் அவளை எதிர் பார்த்த பாவத்தை முகத்தில் காட்டினான் “வாங்க அண்ணி” என்று அவளுக்குச் சோபாவை காட்டினான்.
அமர்ந்தவள் தன் விரல்களில் பார்வை பதித்து வெகுநேரம் ஒன்றும் பேசாமல் இருந்தாள் எதுவானாலும் அவளே சொல்லட்டும் என்று அவனும் இருக்க “ஒரு விதத்துல நீங்கச் சொன்னது உண்மைதான் பாரி, எனக்கு இந்த வீட்ல எந்த உரிமையும் இல்லை”.
“நான் இங்கேயிருந்து எப்போவோ போயிருக்கணும் இப்போ சரியா முடிவெடுக்கலாம்னு இருக்கேன், இத்தனை வர்ஷம் என் அப்பாவுக்குத் தண்டனை குடுத்தது போதும், ஒரு தகப்பனா அவர் என்னோட சந்தோஷம் முக்கியம்னு நெனச்சுருக்கார் என்னால அவருக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை நானே தான் சரி பண்ணனும்”.
“ரொம்ப தேங்க்ஸ்… ஒருவேளை நீங்க அப்படி பேசியிருக்கலானா இப்போவும் நான்தான் சரின்னு இருந்திருப்பேன்” என்றவளை பார்த்தவன்.
“இங்க யாருமே சரினு கிடையாது அண்ணி, இந்த வீட்டுக்குள்ள இருந்து நீங்க உங்க இயல்ப தொலைச்சுடீங்க இது நீங்கக் கிடையாது, மத்தவங்க பாத்து பரிதாப படுற எடத்துல நீங்க இல்ல அண்ணி”.
“செய்யறது தப்புனு தெரிஞ்சே செஞ்சுட்டு அதப்பத்தி வருந்தாம என் வாழ்க்கை எனக்கு முக்கியம்னு வாழறவன நினைச்சு நீங்க உங்க லைப எதுக்காக அழிச்சுக்குறீங்க”.
“கல்யாணம் மட்டுமே நமக்கான அடையாளம் இல்ல இந்த நாலு சுவத்துக்குள்ள இருந்து வெளில வாங்க பிடிச்ச விஷயம் ஏதாவது செய்யுங்க, ஜஸ்ட் மூவ் ஆன், எங்க எந்த ஹெல்ப் வேணும்னாலும் நான் இருப்பேன் யு கேன் டிரஸ்ட் மீ”.
“என்னுடைய மனைவியா உங்க தங்கச்சி இருந்தபோ பெருசா தெரியாத பல விஷயங்களும் நாளைக்கு எனக்கு மனைவியா வேற பெண் வரும்போது தெரியலாம், நீங்கக் காயப்படலாம் எல்லாத்தையும் யோசிச்சுதான் சொன்னேன்” என்க மெல்ல தலை அசைத்தவள்.
“புரியுது இது எதையும் நான் யோசிக்கல, ஒரு சின்ன வட்டத்திலே இருந்துட்டேன் நான் எங்க வீட்டுக்குப் போறேன் பாரி, இனிமே அமையிற வாழ்க்கை உங்களுக்கு எல்லா சந்தோஷத்தையும் தரட்டும்” என்று வாழ்த்தி விடைபெற்றாள்.
சுமதிக்கு மிகவும் மனவருத்தமாக இருந்தது, வாழ வந்த இரண்டு பெண்களும் அதும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி மனவேதனையோடு போகும் நிலை வந்ததே என்று அதிலும் வானதிக்கு நியாயம் செய்யவில்லை, மகன் ஒரு மன்னிப்பை கூட அவளிடம் கேட்கவில்லையே என்று.
வானதியை அவளின் வீட்டில் கொண்டு விட்டனர், இரண்டு பக்கமும் தவறுகள் இருக்க அங்குப் பேச்சுக்கள் இல்லாமல் போனது, அனைவருமே அமைதியாக இருந்தனர்.
“மன்னிச்சுடுடா” என்று நண்பனின் கையைப் பிடித்து நின்ற மகேந்திரனை வெறுமையாகப் பார்த்து நின்றாள் வானதி.
வானதியை அவள் வீட்டில் விடச் செல்வதாகக் கூற, அவளை வழியனுப்ப வந்திருந்தனர் பார்வதியும் மகள் பத்மாவும் உடன் அவளின் கணவன் மனோஜும் அவர்கள் அந்தப் பக்கம் போனதும் இவர்களின் மாநாடு தொடங்கியது.
“ஏண்டி சொன்ன வேலைய ஒழுங்கா செஞ்சிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும், இப்போ பாரு போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்” என்று மகளைத் திட்டிக்கொண்டிருந்தார் பத்மாவின் தாய் பார்வதி.
“மா… சரியாதான் செஞ்சேன், நாம பிளான் பண்ணினமாதிரி தான் செஞ்சேன் எல்லாமே சொதப்பிருச்சு, இல்லனா வானதி கருவைக் கலச்ச மாதிரி இதுவும் கலைஞ்சிருக்கும்”, என்று அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள் பத்மா.
இந்தச் சொத்துக்களை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற பேராசையில் மகளிடம் மகேந்திரன் குடும்பத்தில் வாரிசு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கூறி அவள் மனதில் அதை நன்றாகப் பதிய வைத்திருந்தார் பத்மா.
திருமணம் வேண்டாம் என்று சச்சிதானதான் சுற்றியபோது இருவரும் மிகவும் மகிழிந்தனர், அந்தச் சந்தோசம் நீடிக்காமல் அவன் வானதியை திருமணம் செய்துகொண்டான்.
வானதி கர்ப்பம் தரித்தவுடன் அவள் உணவில் கருச்சிதைவு மாத்திரையைச் சேர்த்து உண்ண கொடுத்தாள், கச்சிதமாக முடிந்துவிட்டதாக நிம்மதியாக இருந்தனர்.
அதன் பிறகு வானதிக்கும் சச்சிக்கும் பிரச்சனை என்பது வரை தெரிந்துகொண்ட பத்மாவுக்கு மித்ரா அவனின் வாழ்வில் நுழைந்தது தெரியாது.
பாரிவேந்தன் அன்று கோவிலில் இருவரையும் பார்த்துவிட்டு வந்து வீட்டில் பிரச்சனை செய்த பிறகே பார்வதியும் மகளும் விஷயத்தை அறிந்தனர்.
அதன் பிறகு மித்ராவை நெருங்க முயற்சி செய்தாள் பத்மா, அத்தனை எளிதாக நெருங்க முடியவில்லை, மெல்ல மெல்ல நெருங்கத் தொடங்கிய சமயம் வீணா பாரிவேந்தன் திருமணம் நடந்தது.
இருவருக்குமே பெரிதாக இதில் விருப்பம் இல்லை திருமணத்திற்கு பிறகுகூட இருவருக்கும் இடையில் சாதாரண பேச்சுக்கள் கூடக் கிடையாது, வீணாவிற்கு மனதில் ஒரு நெருடல் இருந்தது சச்சியை நினைத்து அதைச் சரியான விதத்தில் பத்மா பயன்படுத்திக்கொண்டாள்.
“இங்கேயே வளர்ந்த சச்சியே இப்படியொரு காரியம் செய்து வைத்திருக்கிறான் அப்படினா அமெரிக்காவிலே ரொம்ப வருஷமா இருக்குற பாரி எப்படி இருப்பான்???”
“அவனுக்கு அங்க நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் இருக்காங்களாம்!”.
“ரெண்டு மூணு பொண்ணுங்க கூட லிவ்வின் ரிலேஷன்ல இருக்கானாம்”.
“நீ அவனை இழுத்து புடிக்குனும், நேரத்துக்கு வீட்டுக்கு வரணும் சொல்லு அவன் போன் எல்லாம் செக் பண்ணு”.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லி அவளைக் குழம்பினாள் பத்மா, அது வீணா விஷயத்தில் நன்றாக வேலை செய்தது, முன்பே குழப்பத்தில் இருந்தவள் தன்னை மேலும் மேலும் குழப்பிக்கொண்டாள்.
தினம் தினம் அவனுடன் ஏதேனும் ஒன்றை சொல்லிச் சண்டை இட்டாள், அமெரிக்கன் கலாச்சாரத்திற்கு ஒருவிதம் பழக்கப்பட்டவன், பெண்களுடன் பழகுவது நண்பர்களாக இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.
வீணா வந்தபிறகு அவனின் சுதந்திரம் பறிபோவதாக எண்ணினான், அவனுடைய நிம்மதி மொத்தமாகத் தொலைந்து போனது, மூன்று மாதங்கள் எப்படியோ ஓட்டியவன் அவளை அழைத்துக்கொண்டு இந்தியா வந்துவிட்டான்.
அவளும் அவனுடன் சேர்ந்து வாழ இயலாது என்று பிடிவாதமாக நிற்க இருவர் பிரிவும் நிரந்தரமானது.
சச்சிதானந்தன் பிசினெஸ் ட்ரிப் போனதை பயன்படுத்திக்கொள்ள எண்ணிய பத்மா தினமும் சச்சியின் வீட்டிற்கு வந்துசென்றாள், கர்ப்பகால பிரச்சனைகளில் எழவே முடியாமல் கிடந்த மித்ராவால் மகனை அதிகம் கவனிக்க முடியவில்லை.
குழந்தைக்குத் தினமும் ஐஸ்கிரீம் ஜூஸ் என்று வாங்கிக்கொடுத்து அவன் உடல்நிலையை கெடுத்தாள், மித்ராவிற்கான மருந்தை உணவில் யாருக்கும் தெரியாமல் கலந்தாலும் மித்ராவின் நல்ல நேரம் அவளால் மருந்து கலந்த எந்த உணவையும் உன்ன முடியாமல் கஞ்சி பழரசம் என்று நாட்கள் சென்றது.
“இப்போ என்னடி பண்றது மாப்ள நீங்க ஏதாவது சொல்லுங்க” என்றார் பார்வதி பத்மாவின் கணவன் மனோஜிடம்.
என்னும் நிலையாக ஒருவித தவிப்பில் அல்லாடினாள் அலக்நந்தா, அவனை ஒரு முறை காண விழிகள் காத்துக்கிடந்தது சரி தவறு, வேண்டும் வேண்டாம் என்று முட்டிமோதித் தளர்ந்திருந்தாள்.
மருத்துவமனையிலிருந்து வந்தபிறகு அவனைக் காணவில்லை இங்கு இருக்கிறானா என்று கூடத் தெரியவில்லை.
சம்பத்தும் சூர்யாபிரியாவும் அவனைப் பற்றி ஒருவார்த்தையும் பேசுவதில்லை, இவளாக அவர்களிடம் கேட்கவும் முடியவில்லை.
“எங்குச் சென்றான் என்று தெரியவேண்டாமா” என்றது மனது.
“நீ என்ன அவனுக்குப் பொண்டாட்டியா போகும் இடம் எல்லாம் சொல்லிச்செல்ல, இப்படியே இருந்தால் பரிட்சையில் கோட்டை விட்டுவிடுவாய் வருடங்களாகக் கஷ்டப்பட்டதெல்லாம் வீணாகப் போகும்”.
“இல்லை நிச்சயம் நன்றாக எழுதுவேன் அவனை ஒருமுறை பார்த்தல் போதும் வேறு ஒன்றும் நினைக்கமாட்டேன்” என்று இரண்டுக்கும் இடையில் போராடிக்கொண்டிருக்க அலக்நந்தாவை காண சம்பத்தின் வீட்டிற்கு வந்திருந்தான் சச்சி.
அந்தக் காலை நேரத்தில் அவனைச் சம்பத் மற்றும் சூர்யப்பிரியாகூட எதிர்ப்பார்க்க வில்லை “அதிலும் நந்தாவை காண வேண்டும்” என்க இவளுக்கு மனது அடித்துக் கொண்டது.
அவனைப் பற்றிப் பேச வந்திருப்பாரோ என்று சச்சியின் அருகில் செல்வதற்குள் கற்பனைகள் முளைவிட்டுச் செடியாகி மரமாகி கிளைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது.
அவன் அருகில் சென்று நிற்க “என்கூட வரமுடியுமா” என்றான் எடுத்தவுடனே “என்ன!” என்று தெரியாமல் அவள் விழிக்க.
“சாரி” என்றவன் “மித்ராக்கு உடம்பு சரி இல்ல அவ உன்னைப் பாக்கணும் சொல்றா, ப்ளீஸ்” என்க இப்பொழுது என்ன? என்றுதான் தோன்றியது.
“கர்ப்பமாக இருக்கிறாள் ஏதேனும் பிரச்னையாக இருக்குமோ” என்று எண்ணியவள் உடனே அவனுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.
மித்ரா அவர்கள் வீட்டிலேயே ரெஸ்டில் இருந்தாள், இவள் அறைக்குள் நுழையக் கை நீட்டி அவளை அருகில் அழைத்துத் தன் அருகில் அமர்த்திக்கொண்டாள் மிகவும் சோர்ந்திருந்தாள்.
“என்னால முடியல நந்தா இதுதான் சரினு நெனச்சு நான் செஞ்ச பாவம் இப்போ என் நிம்மதிய அழிச்சுட்டு இருக்கு, என் பையன எனக்கு மீட்டு குடு நந்தா” என்ற தமக்கையை குழப்பமான முகத்தோடு பார்த்திருந்தாள் அலக்நந்தா.
“போதும் மித்ரா வயித்துல இருக்குற குழந்தைக்கு ஆபத்துன்னு டாக்டர் சொன்னாங்கல்ல, உன்னோட பிளட் பிரஷர் மோசமா இருக்கு” என்றவன் நந்தாவின் கையில் டீக்கப்பை வைத்தான்.
அவள் மருத்துக்கூற வரும் முன் “ப்ளீஸ் கொஞ்சம் சீரியாஸா பேசணும்” என்றவுடன் மனதில் பயம் படரத் தொடங்கியது.
“அத்து கொஞ்சம் மோசமா நடந்துக்குறான் கொஞ்ச நாளா, மித்ராவால அவனைப் பாத்துக்க முடியல, இந்தத் தடவ ப்ரெக்னென்சி அவளை ரொம்ப படுத்துது, முதல்ல அவன் வயசுக்கு பிடிவாதம் பிடிக்குறானு நினைச்சோம் ஆனா இப்போ ரொம்ப மோசமா இருக்கு”.
“பொருள் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறான் ஸ்கூல்ல ஒரு பையன் மண்டைய உடைச்சுட்டான், நம்ம வீட்ல வேலை செய்ற அக்காவைக் காயப்படுத்திட்டான், சாப்பிடறதில்லை படிக்கறதில்லை ரொம்ப… எப்படி சொல்ல” என்று நிறுத்தினான் சச்சி.
“ஏன் என்ன ஆச்சு” என்ற நந்தாவை பார்த்தவன் “தெரியல டாக்டர் கிட்ட காட்டினோம், அவன் மனசுல அடுத்ததா ஒரு குழந்தை வந்தா இவனுக்குக் குடுக்குற முக்கியத்துவம் போய்டுமுன்னு ஒரு பயம் வந்துருச்சு, அதோட வெளிப்பாடுனு சொல்றாங்க”.
“ஆமா அப்படிதான் நாங்களும் நெனச்சோம், மித்ராவை அவன் படில இருந்து தள்ளிவிடப் பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும்” என்றவுடன் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள் அலக்நந்தா.
“எங்களுக்கு ஒண்ணுமே புரியல, டாக்டர் கவுன்சிலிங் குடுக்க சொல்றாங்க, யார் இப்படிலாம் அவனுக்குச் சொல்லிக் குடுக்குறாங்கனு தெரியல, ஒரு ஆறு வயசு குழந்தைக்கு இவ்ளோலாம் யோசிக்க முடியுமா அதும் இவ்ளோ பிடிவாதமா?”.
“டாக்டர் முடியும்னு சொல்றாங்க யாரையுமே அவன் பக்கத்துல விடமாட்டறான், அடிச்சோ திட்டியோ அவனை மாத்த முடியாது, அது அவன் மனநிலையை இன்னும் பாதிக்கும், மித்ராவை அவன் பக்கத்துலயே விட மாட்றான்”.
“இந்தப் பாப்பாவை எங்கேயாவது விட்டுட்டு வா இல்லனா என் பக்கத்துல வராதா சொல்றான், நானும் இவளுக்குச் சப்போர்ட்டா இருக்கேன்னு என்மேலேயும் கோவம், உன்னால அவனை நெருங்க முடியுமா கொஞ்சம் பாரு ப்ளீஸ்” என்றபோது மனம் பதறியது, என்ன நடக்கிறது தன்னால் என்ன செய்ய இயலும்.
அத்துவின் அறைக்குள் சென்றபோது அவனுக்குப் பிடித்த டைனோசர் படம் ஓடிக்கொண்டிருந்தது, அவனுக்கு வழங்கப்பட்ட மாலை சிற்றுண்டி சாப்பிட படாமல் அப்படியே இருந்தது.
முதலில் தன்னை நிலைப்படுத்தியவள் “அத்து” என்று உள்ளே நுழைய, அவளைத் திரும்பி ஒரு நொடி பார்த்தவன் “எனக்கு அட்வைஸ் பண்ண சொல்லி உன்ன கூப்பிடங்களா அம்மா” என்றான்.
ஒரு அடி அவள் அறியாமல் பின்னே சென்றாள் நந்தா, என்ன நிலையில் இருக்கிறான் இவன் “அட்வைஸா அத்துக்கு எதுக்கு அது” என்று புன்னகைமுகமாக அவன் அருகில் சென்று அமர்ந்தவள்.
“சித்தியோட காலேஜில வி.ஜி.பி போற பாஸ் குடுத்தாங்க, எனக்கு வேற எந்தக் குட்டியையும் தெரியாதே என் அத்துவ தவற, அதான் நீ வரியான்னு கேட்கலாம்னு வந்தேன், நெறய விளையாட இருக்குமாமே நான் இதுவரைக்கும் பாத்ததே இல்ல” என்று அவள் கூற.
“அங்க ரொம்ப சூப்பரா இருக்கும் நான் போயிருக்கேன், எப்போ போறோம்” என்றான் ஆவலாக.
“நாளைக்கு காலைலயே வரேன் ரெடியா இரு” என்றவள் மித்ராவிடம் “ஒரு ரெண்டு மூணு நாள் என்கூட இருக்கட்டும்” என்றுவிட்டு சச்சியை பார்த்து “முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன்” என்று வெளியேறினாள்.